Saturday, February 14, 2009

உலகின் மிகச்சிறந்த காதல் வரிகள்



இந்த யூத்தா இருப்பதின் சோகங்கள்தான் எத்தனை!

பாருங்க இந்தத் திங்கள் கிழமையிலிருந்தே வானம் இலேசாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தத் சனிக்கிழமை அருகில் வர வர, முழு உலகுமே கொஞ்சங்கொஞ்சமாய் ரோஜா நிறத்திற்குத் தாவிக்கொண்டிருந்தது. என்னது, ஒண்ணும் புரியவில்லையா? இதுக்குத்தான் உங்கள மாதிரி பெருசுங்களோடப் பேசக் கூடாதென்பது! இருந்தாலும், வந்துட்டீங்க, விளக்கமா சொல்றேன்.

அதாகப் பட்டது இன்று பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி. காதலர் தினம். காதலின் நிறம் தெரியுமா? ம்ம், கேட்டிருக்கக்கூடாது, அது பிங்க் என்று ஆங்கிலத்திலும், ரோஜா நிறம் என்று அழகு தமிழிலும் சொல்வோம்.

பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே ஆணும், பெண்ணும் நிறவாரியாகப் பிரிக்கப் படுகிறோம். பிங்க் ஸ்கேர்ட், பிங்க் கவுன், பிங்க் ரிப்பன்/ஹெட் பேண்ட், பிங்க் வாட்ச், வளையல், பிங்க் சைக்கிள், பிங்க் காலணிகள், பிங்க் இடுப்புக் கச்சை (அதாங்க பெல்ட்) என்று சகலமும் பிங்க் பெண் குழந்தைகளுக்கு.

நமக்கு மஞ்சள் டிரௌசருக்கு ஆரஞ்சு கலர் சட்டை. பச்சை வண்ணத்தில் பூட்ஸ், சிகப்பு நிறத்தில் தொப்பி என்று மாடர்ன் ஆர்ட் போடமுடியாத குறையினை நம் மூலம் தீர்த்துக்கொள்ளும் பெற்றோர். எனக்கு சிறுவயதில் பிங்க் நிறத்தில் ஷூ போட்டுக்கொள்ள ஆசையாக இருந்தது முறியடிக்கப்பட்டது இந்தக் காரணங்களால்.

காதலர் தினம் பிங்க் வண்ணத்தில் நிரம்பித் தளும்புவதின் நுண்ணரசியல் இப்போது புரிகிறதா? எப்போதுமே தோற்கும் ஆண்வர்க்கம், உச்சக்கட்டமாகக்  காலில் சாஷ்டாங்கமாக விழும் நாளுக்கு 'காதலர் தினம்' என்று இப்போது பெயர் சூடப்பட்டிருக்கிறது.


நீங்கள் மணமானவரா? வருத்தங்கள். காதல் திருமணமில்லையே? தப்பித்தீர்கள். என்னது, ஆமா? ஐயோ பாவம், அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

முன்னமே சொன்ன திங்கட் கிழமையிலிருந்து சமிக்ஞைகள் துவங்கின. முதலில் இந்த சானல்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். டேய், எப்பவுமே சனிக்கிழமை ஏதாவது ஒரு பாடாவதி காதல் படம் போடுவது வழக்கம்தானே. அது என்ன 'காதலர் தினத்தை முன்னிட்டு' என்று ஒரே ரோஜா நிற இதயங்கள் பின்னணியில் ஒரு அட்டகாச அறிவிப்பு! சும்மா இருக்கும் மனைவியை உசுப்பி விடும் அறிவிப்புகள்!


நான் கேட்கும் முன்னரே, "இந்த ரோஜாப்பு கொடுக்கும் காதலர்கள்/கணவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு பிற்போக்கா இருக்காங்க" என்றாள். அப்பா, ஒரு வழியாக இந்தக் காதலர் தினம் நமக்கு ஒரு கவலையும் இல்லாமல் வந்து போகப் போகிறது என்ற எண்ணத்தில் மண். ‘ஒரு இன்வெஸ்ட்மென்டா கொஞ்சம் (!) தங்கமோ, வைரமோ வாங்கலாம். இப்பெல்லாம், அது கூட பாஷன் இல்ல. பிளாடினம் வாங்கலாம்’ என்ற கமெண்ட் அடுத்து வந்தது. இலேசாக வயிற்றைப் புரட்டியது. ஏற்கெனவே மாதாமாதம் பெஸ்டிவல் அட்வான்ஸ் (சிவராத்திரிக்கெல்லாம் பண்டிகை கொண்டாட பத்தாயிரம் வாங்கிய ஆள் நான் மட்டும்தான் இருப்பேன்) வாங்குபவன் என்ற அவப்பெயர்.

அலுவலக ஆடிட் மற்றும் அப்ரைசல் உபாதைகளுக்குக்கூட நான் இவ்வளவு பயந்ததில்லை. ஒரு பயப்பந்து வயிற்றில் மையம் கொண்டு, அவ்வப்போது ஆட்டம் காட்டியது. இப்படி அடுத்த மூன்று நாட்கள் ஊர்ந்து போக, மனைவி அவ்வப்போது மேலதிகாரியின் மிடுக்கில், பார்வையாலேயே 'என்ன மேன், இந்த வருடம் என்ன செய்யப் போற?' என்ற தொனியில் பார்த்து விட்டு நகர்ந்தாள்.

தள்ளிக்கொண்டே போன வேலை, கடைசியில் வேலை போகும் நிலையில் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோமே, அதே மாதிரி வெள்ளிக்கிழமை மாலை எனக்கு இலேசாக ஜன்னி வந்துவிட்டது. நாளை கா.தினம். என்ன செய்வது?

திடீர்னு ஒரு போன். அவள் தான். 'ம்ம், எப்படி இருக்கீங்க' என்றாள், எதோ பத்து வருடம் முன் பிரிந்த காதலியைப் போல. 'ரொம்ப வேலை. ரொம்ப முக்கியம் உன்னோட குசல விசாரிப்பு இப்ப' என்று எண்ணிக்கொண்டே "என்னம்மா கண்ணு! என்ன அபூர்வமா இந்த நேரத்துல போன்" என்று வழிந்தேன். 'உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இருந்தாலும்... நாளைக்கு என்ன நாள் தெரியுமில்ல.. ' என்று நிறுத்தினாள். சரியான கிழமையில் தான் இந்த முறை வருகிறது. "தெரியாமலா.. ஞாபகம் இருக்கு" என்று பல்லைக் கடித்தேன்.

"நா உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கியிருக்கேன். சோ கியுட்" என்றாள். அவள் இப்படிச் சிலாகித்துச் சொன்னால் பெரும்பாலும் கிலுகிலுப்பை அல்லது கை தட்டிக்கொண்டே தலையாட்டும் (கொஞ்சம் யோசித்தால் நானும் அதுதான்) பொம்மை போன்றவைகளே இருக்கும். "அப்படியா" என்றேன். "ஹம். அப்புறம், நீங்க எனக்காக எதுவும் காஸ்ட்லியா வாங்காதீங்க" என்றாள். தீர்ந்தது. இதற்கு உண்மையான அர்த்தம் இதுவரை ஆதங்கத்துடன் படிக்கும் உங்களுக்கும் புரிந்திருக்கும்.

"நிஜமாத்தான் சொல்றேன். தங்கம், வைரம்னு சும்மா தண்ட செலவு (இதோடா!) பண்ண வேண்டாம்"

"அப்ப ப்ளுடோனியமா"

"என்னது?"

"சாரி, ப்ளாடினமா?"

"இல்ல இல்ல. பணத்தில என்ன இருக்கு. இந்த வருடம் ஏதாவது வித்தியாசமான முறையில், காதல் பரிசு கொடுக்க ட்ரை பண்ணுங்களேன்"

சந்தோஷத்துல மிதந்தாலும் காட்டிக்கொள்ளாமல், "நீ என்ன சொல்ல வர" என்றேன்.

"எங்க லேடிஸ் க்ளப்ல இந்த வருஷம் 'சிறந்த காதல் பரிசுக்கு' ஒரு பரிசு கொடுக்கப் போறாங்க. நாம்ப காதலிச்சது (காண்க: இறந்த காலம்) எல்லாருக்கும் தெரியும். அதுனால, உங்க மூளைய யோசிச்சு புது மாதிரி எனக்கு ஒரு பரிசு கொடுங்க பார்க்கலாம். உலகமே புதுசா தெரியணும். பார்க்கணும். அப்படி இருக்கணும்"

எவ்வளவோ யோசிச்சும் ஒண்ணும் தட்டுப் படவில்லை. இரவு பத்து ஆகிவிட்டதால் வீடு போய் சேர்ந்து, சோர்ந்து படுத்துத் தூங்கி விட்டேன். காலையில் முழித்ததுமே வித்தியாசமாய் உணர்ந்தேன். இது என்ன வானம், பூமி, மரம், அதன் இலைகள் எல்லாமே பிங்க் நிறம்! அவளும் (எப்போதுமே அப்படித்தான்!). என்னோட வெள்ளக் கலர் டி-ஷர்ட் கூட ரோஜா வண்ணத்தில். எப்படி என்கிறீர்களா.. அப்புறம் சொல்றேன்.

நான் எழுந்தேன். பல் தேய்த்து, நிதானமாக காபி (அது கூட இலேசாக பழுப்பு-பிங்கில்) குடித்தேன். யதேற்சையாகப் கைகளைப் பின்பக்கம் கட்டிக்கொண்டதில் ஆவலாக "பின்னாடி என்ன கிப்ட்" என்றாள்.

நான் கணினி ஆன் செய்து நம்ம ப்ளாக் சென்று "இப்ப பாரு" என்றேன்.

அது சொன்னது இதுதான்.

"அனு,


உன்னுடன் நான் கழித்த


நொடிகளைத்தான்


உருக்கி வார்த்து


உலகம் கொண்டாடுகிறது


காதலர் தினமென...




நிறைய நீ;


கொஞ்சம் நானென


இன்னும் வாழ்கின்றன


காதலர் தினங்கள்..



உன் தொலைப்பேசி


முத்தங்களுக்கெல்லாம்


மௌனமே காக்கிறேன்


பரிசுகளாக திருப்பித்தர


காதலர் தினத்தை
எதிர்பார்த்து...

இப்படியெல்லாம் கவிதை எழுதி சொல்லலாம். நான் கேட்காமலேயே என் தங்கை இந்தக் கவிதைகள் நமக்காகவே எழுதி இருக்கா.

ஆனாலும், நான் உனக்காக மட்டும் எழுதும் வரிகள் இது தான்..

"
உன்னை எப்படிக் காதலித்தேனோ,
அப்படியே இன்னும் காதலிக்கறேன்
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்
இன்னும் பன்மடங்கு அதிகமாவும்
வரும் தினங்களில் காதலிப்பேன்"

எனக்குத் தெரிஞ்ச பிங்க் கலர்ல இந்த பதிவு முழுதும் தீட்டி விட்டேன். சப்தமே இல்லை. அபாய கட்டத்தை நெருங்கி விட்டோமோ என்று அஞ்சியபடி திரும்பினால், கண்களில் நீர்த்திரை. அழுதுகொண்டே, "தேங்க் யூ டா" என்றாள்.

இதுக்குப் பேர்தான் ஜாக்பாட். அதுக்கு அப்புறம் என்ன? ஒரே ராஜ மரியாதை தான்.

கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும் கேட்டேன். "ஏய் கிறுக்கு, இது கவிதை கூட இல்லை. சராசரிக்கும் கீழான உரைநடை; இதுக்கு போயி இவ்வளோவ் பீலிங்க்ஸா"

"இது கவிதை இல்ல தான். ஆனா, உண்மை இருக்கு. அழகு ஆடைகள் போர்த்தாமல், நிர்வாணமா இருந்தாலும், இது தான் நிதர்சனம். இதுதான் உண்மையான காதல்' என்றாள். தல கிறுகிறுன்னு சுத்தி, அவள் மடியில் சாய்ந்தேன்.

அப்புறம், அவள் இல்லாத போது திரும்ப படிச்சா, அவள் சொன்னதும் உண்மைதான் என்று தோன்றியது. மாலையில் நாங்கள் இருவரும் பேசும்போது பரஸ்பர பரிசுகளைப் பற்றி பேசினோம்.

"ஆமா, உலகமே வியந்து பார்க்கணும்னு சொன்னேனே? நீங்க எழுதினது எனக்கு நல்லா இருக்கு. ஆனாலும்..."

"அசடு, இந்தப் பதிவை உலகத்தில இருக்குற நிறைய தமிழர்கள் படிக்கிறாங்க. சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க"

"உங்களுக்கு எப்படித் தெரியும் அவங்க வந்து புகழுவாங்கன்னு"

இப்படி ஆரம்பித்தது அவளுக்கு பதிவுலகம், பின்னூட்டம், பரஸ்பர புகழ், கும்மி போன்றவற்றின் பால பாடம். பதிவுலக அரசியல்... நமக்கே இன்னும் புரியல; ஆள வுடுங்க பாஸ்.

அப்புறம், எனக்குக் கிடைத்த பரிசு ஒரு தோசைக்கல் அளவில் வெய்யில் கண்ணாடி. ஆம், பிங்க் கலரில். அவளிடம் கேட்டேன் 'ஏய் என்ன இது"

"நல்லா இருக்குல்ல.. எம்.ஜி.ஆர். போடுவார்.. அதே மாதிரி"

"எம்.ஜி.ஆரா? - எந்தப் படத்துல? "

"இதயக்கனி"

சரியான பரிசுதான்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வந்த அழகிய கவிதையும், பொருத்தமான புகைப்படமும் பிரியமான தங்கை ஸ்ரீமதி பதிவிலிருந்து, அவர் (!) அனுமதி இல்லாமல் பதிவிட்டது. வந்து கோபித்துக் கொண்டால் "இலவசமாக விளம்பரம் கொடுத்தால் தவறா?" என்று சமாளிக்க உத்தேசம். நன்றி ஸ்ரீ.

Tuesday, February 10, 2009

மரணத்தின் பிரதிபலிப்பு


சமீப காலங்களில்
எங்களுக்குள் இந்த ஊடல்;
எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!
என்னை அழகு என்று எப்பொழுதும்
சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே
எவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும்
மணமான பின்னும் தொடர்ந்த காதலில்
இப்போதெல்லாம் பிணக்குதான்;
அருகே செல்லவே பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி அலுத்துவிட்டது -
இருவருக்கும்தான்.
வாழ்க்கையின் சுவையும் ரசமும்
போயே விட்டதாக உணர்ந்தோம்.
தனியே ஒரு நாள் சந்தித்தோம்
நிறைய பேசினோம்
தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது
இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை
என்றெல்லாம் சொல்லியபோது
பெரிதாய் சட்டை செய்யவில்லை
தற்கொலைவரை போகும்
என்று எண்ணவில்லை
அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்

(நவீன விருட்சம் இதழில் வெளியானது)

Wednesday, February 4, 2009

ஏதாவது செய்யணும் பாசு

ஏதாவது செய்யணும் பாஸ். இந்தக் கட்டுரையின் தலைப்பை முதலில் நர்சிம் பதிவில் பார்த்தபோது 'இளைஞரின் ஆர்வக் கோளாறு' என்று 'அனுபவ பெருசு' போல (என்னதான் நான் யூத் என்றாலும்!) எண்ணிக் கொண்டேன். பதிவு படிச்சு முடிச்சதும் அவர் மேல் மரியாதை வந்தது ம் சாரி .. மிகுந்தது.

பிறகு பரிசல், லக்கி, கோவி என்று பிரபலங்கள் போட்டதும் "சரிதான், இவர்கள் பிரபலத்தின் இரகசியம் இதுதான் போலும். எல்லாவற்றிலும் சொல்வதற்கு, பங்கிடுவதற்கு இவர்களுக்கு விஷயம் இருக்கிறது. நமக்கு மட்டும் ஏன் எப்பவும் 'வரும் ஆனா வராது' என்ற 'என்னாத்த கன்னையா' நெலம" என்று யோசித்து, சுய பச்சாதாபத்துடன் சுந்தர் கவிதைகளையும், கழிவிரக்கத்துடன் அய்யனார் கவிதைகளையும் படிக்கச் சென்று விட்டேன்.

அதெல்லாம் மறந்திருந்து, சகஜ நிலை அடைந்து வருகையில் சத்யம், முத்துக்குமார், நாகேஷ் என்று நிறைய உலுக்கும் நிகழ்வுகள். இதெல்லாம் 'சூறாவளி, சுனாமி' சமாசாரம். ஏதாவது சொல்லப் போயி எக்குத்தப்பா ஆகிடப் போகுது. பேசாம பின்னூட்டங்களே கதின்னு நரசிம்ம ராவ் (நம்ம நர்சிம் இல்லீங்கோவ்) வேகத்துல முடிவு எடுத்து, என் கடமையை மிகுந்த ஆற்றலுடன் செயல் படுத்தி வருகிறேன். அங்கேயும் சில நாட்களாக இலேசான உராய்வுகள்; சிராய்ப்புகள்; ஒத்தரு நம்மள 'முட்டாளாயா நீ?' என்கிறார். இன்னொருத்தர் 'உனக்கேன் இந்த அக்கறை - நீ என்ன கலாசார காவலனா?' என்கிறார். அதுக்குள்ளே சில நண்பர்கள் 'கோவிச்சுக்காதீங்க' என்ற போதுதான் 'சரி இதுக்குக் கொவிச்சக்கணும் போல இருக்கு' என்று புரிந்துகொண்டு பாவ்லாவும் காட்டி விட்டேன். ரௌத்ரம் அவ்வப்போதாவது பழகாவிட்டால் ஒரு ஈ காக்கா கூட மதிக்காது என்று புரியவைக்கப் பட்டது.

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன் இல்ல? என்னோட இந்த non-linear எழுத்தின் இரகசியம் சாரு ஆன்லைன் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

ஆதள கீர்த்தனாம்பரத்தில.. மீண்டும் 'எதாச்சும் செய்யணும் பாசு'. இன்னிக்கு மீண்டும் நர்சிம் பதிவு. இது என்னடா 'விடாது கருப்பா' தொடருதேன்னு கார்க்கி காக்டெயில் அடிப்போம்னு போனா அங்கேயும் இதே பேயி 'ஜிங்கு ஜிங்குனு' ஆடுது. அங்க ஜோசப் வேற வழக்கம் போல அசத்தல் பின்னூட்டம். அவரே இந்த 'ஏதாவது' மேளாவில் ஐக்கியமாகி, ஒரு சூப்பர் பதிவு (சஞ்சய் கூட ஜாயின் பண்ணி என்று ஞாபகம்) போட்டிருந்தார். 'டேய் என்னாங்கடா - அடங்க மாட்டீங்களா' என்று வெறுத்துப் போய், "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே" என்று பாடிக்கொண்டே திரு.அனுஜன்யா (இவரு ரொம்ப நாளா பெண் பதிவர் என்று நினைத்திருந்தேன்!) அவர்களின் கவிதைச் சோலைக்குள் சென்று புகுந்துகொண்டு, நெருப்புக் கோழியாகப் புதைந்து விட்டேன்.

ஒழுங்கா வரிகளை மடக்கி எழுதி, 'கவிதை' செய்துகொண்டு நார்மலா இருந்த மனுஷன்.. என்ன கொடும சார் இது.. அவரும் 'ஏதாவது செய்யணும் பாசு' என்கிறார். என்னத்த சொல்ல. மேல அவரு என்ன சொல்றாருன்னு நீங்களே படிங்க.

பல்பு எண் ஒன்று:

எஸ்ரா அவர்களின் இணைய தளத்தில் படித்தது. நகரத்துக்கு வருபவர்களுக்கு குளிக்கும், குளித்து உடை மாற்றிக் கொள்ளும் பிரச்சனை மிகப் பெரியது. நிறைய சிறு, பெருநகரங்களுக்கு நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு நாள் வேலை நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும். பெரும்பாலான புண்ணியத் தலங்களும் அவ்வகையே. விடிகாலையில் அந்த ஊருக்கு வந்து சேருவோம். குளித்து, உடை மாற்றிக் கொண்டதும், நேராக ஒரு அலுவலகமோ, கருத்தரங்கோ, மலைமேல் சாமியோ பார்த்து விட்டு, ஹோட்டல் ஒன்றில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்ட் சென்று, நம்ம ஊருக்குச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதுதான் வேலை.

இதுல லாட்ஜ் ஒன்றைப் பிடித்து, ரூம் இருக்கான்னு பாக்கணும். அப்பப் பார்த்து 'சார், ஒரே ஒரு ரூம்பு தான் இருக்குது; நான்-ஏசி இல்ல. ஏசி தான் சார். எண்ணூறு ரூவா வாடகை. ரெண்டு நாள் அட்வான்ஸ் கொடுக்கணும். செக் அவுட் போது அட்ஜஸ்ட் செய்துக்கலாம்' னு ஒரு குண்டு போடுவார்.

"சார், ஜஸ்ட் குளிச்சுட்டு, டிரஸ் மாத்தணும் சார். இப்போ வெளியே போனா, அப்பிடியே ஊரப் பாக்கப் போயிடுவேன். இதுக்கு எதுக்கு சார் ஒரு நாள் ரூம்பு வாடகை. கொஞ்சம் நூறு-நூத்தம்பதுல... " என்று நாம் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவர் நம் மேல் சுவாரஸ்யம் குறைந்து, நம் எதிரிலேயே தந்தி பத்திரிகைக்குள் முழுகிவிடுவார்.

எவ்வளவு பேரால் இந்தத் தண்ட செலவு செய்ய முடியும். எவ்வளவு ஊர்களில் நம்மைக் கண்டு மிரளாத நண்பர்கள் தங்கள் வீட்டு குளியல் அறைகளைத் திறந்து விடுவார்கள். (ஏனென்றால், குளித்த பின் மெதுவாக 'ஜஸ்ட் நாலு இட்லி, கெட்டி சட்னி இருந்தால் போதும்' என்று விருந்தாளியாகும் கலை நம் அனைவருக்கும் இலகுவான சங்கதி அல்லவா!)

இதற்கு ஒவ்வொரு சிறு நகரத்திலும் மற்றும் புண்ணியத் தலங்களிலும் குளிக்கவும், உடை மாற்றவும் வசதி பொருந்திய 'குளியல் நிலையங்கள்' கட்டப்பட வேண்டும். தற்போது பெருநகரங்களில் இருக்கும் 'கட்டணக் கழிப்பறை' போல் அல்லாது, இன்னும் சற்று சுத்தத்துடன், ஒரு ஹோட்டலுக்கு உரிய இலட்சணங்களுடன் (ஒரு சுற்றுச் சுவர், கேட், ஒரு கட்டடம் இத்யாதி) மத்திய தர மக்கள் வரத் தயங்காத அளவில் அவை இருப்பது அவசியம்.
கட்டணம் ஐம்பது (ஒரு நபர்) முதல் நூற்றைம்பது (ஒரு நான்கு-ஐந்து பேர் கொண்ட குடும்பம்) வரை வசூலிக்கல்லாம். நகராட்சி அல்லது ஊராட்சி என்றில்லாமல் தனியார் கூட இவ்வாறு வசதிகள் செய்ய முயலலாம்.

நீங்க இன்ன சொல்றீங்க! (கார்க்கி, நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உனக்குக் குளிப்பதற்கு காசு கொடுத்தாலே ... இதுல நீ எங்க கட்டணம் செலுத்தி ..)

இதுக்கு ஒழுங்காகப் பின்னூட்டங்கள் வந்தால், அடுத்த பல்பு எரியும். ஆட்டோ வந்தால்.. பழையபடி கவுஜதான். அப்புறம் என்னைக் குறை சொல்லவேண்டாம்.

Tuesday, January 27, 2009

மண் மகள்


சேற்றுப் பிரதேசத்தில்
வாலறுந்த
குதிகாலணியை
வீசி எறிந்தாள்
என்னிடம் மீதிச்
சில்லறை வாங்காமல்
சென்றவளின் வாயிலிருந்து
தேசத்தின் சுகாதாரம்
தூற்றப்பட்டது.
அவள் வசிக்கும் தூரதேசம்
போற்றப்பட்டது
பிறிதொரு நாளில்
கீரைக்குப் பேரம் பேசுகையில்
உதட்டின்மேல் இரு விரலிட்டு
சேற்றில் சங்கமித்த
உமிழ்நீரைப் பீய்ச்சியவள்
வெளிநாட்டில் வேலையிழந்த
அவளாகத்தான் இருக்க வேண்டும்
(கீற்று இதழில் பிரசுரமானது)

Friday, January 16, 2009

போனஸ்



கிருஷ்ணாவின் முறை வந்தது.

கண்ணாடிக்கு அந்தப் பக்கம் 'எப்படி வேண்டும்' என்றாள்.

'ஐநூறாவே கொடும்மா'

புத்தம் புதுசாகவும் இல்லாமல், கசங்கியும் இல்லாமல் மிதமான ஐந்நூறு கட்டு ஒன்று அவன் கைகளில் இப்போது. பதட்டத்துடன் பேன்ட் பேக்கட்டில் வைத்துக்கொண்டு, அதன் மேல் கைகுட்டையால் போர்த்தி விட்டான்.

கொஞ்ச நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த போனஸ் இன்று தரப்படும் என்று அரச புரசலாகத் தெரிந்தது. கிருஷ்ணா இருபது அல்லது இருபத்தைந்து வருமென்று நினைத்திருந்தான். ஐம்பது ஆச்சரியம். கொஞ்சம் அதிர்ச்சியும் கூட.

வேக வண்டியைப் பிடிக்காமல், ஸ்லோ லோக்கல் பிடித்து, ஜன்னலோரம் உட்கார்ந்தான். ஜன்னல் பக்க பாக்கெட்டில் பணம் இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டான் ஏழாவது முறையாக.

மல்லிகா என்னவெல்லாம் பேசுவாள் என கற்பனை செய்யலாம் என்று தோன்றியது.

"எப்பிடீங்க! ஒண்ணுமே இந்த வருஷம் கெடைக்காதுனீங்க"

"அப்ப LCD டிவி வாங்கிடலாங்க"

"பழனி கிட்ட அர கிரௌண்டு வாங்கிப் போடலாங்க"

"அப்படியே அஞ்சு பவுன் வளையல் வாங்கிடலாம்"

மத்திய தரத்தின் எம்பும் எத்தனங்களைப் பற்றி இந்த மாதிரி தருணங்களில் எட்ட நின்று அவதானிப்பதும் சுவாரஸ்யம்தான்.

மனம் கொண்டாட்டமில்லாது, மிக அமைதியாக இருந்தது. ஜெமோ சொன்ன 'பெரிய வேட்டையின் பின் வரும் ஏமாற்றம்' நினைவுக்கு வந்தது.

வண்டி பரேல் தாண்டி இருந்தது. மல்லிகா காப்பித்தூள் வாங்கி வரச் சொன்னது ஞாபகம் வந்தது. மாதுங்காவில் இறங்கினால் மைசூர் கன்சென் சென்று வாங்கலாம். கூட்டத்தில் கவனமாக இறங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டான்.

மாதுங்கா ரயில் நிலையத்திற்கு வெளியே மந்த ஒளி கசிந்து கொண்டிருந்த மின் கம்பங்கள். அவற்றின் கீழே ஒரு மூன்று வயது குழந்தை. ஆண். ஒரு அழுகிய வாழைப்பழத்தை குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்த அவனுடைய அக்காவுக்கு ஐந்து இருக்கலாம். குழந்தை உடம்பில் ஒன்றுமில்லை. அக்கா மேல்சட்டை போடாமல் இருந்தாள். அடுத்த கம்பத்தருகில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு பெரிய சட்டியில் இருந்த சாதத்தைப் பொதுவாக வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். குழம்பு சற்று ஊசிப் போன வாசனை வந்தது. அவ்வப்போது கையிலிருந்த வெங்காயத்தைக் கடித்துக் கொண்டனர்.

தார்பாலின் தயவில் ஒரு கூரை. கூரைக்கடியில் ஒரு பக்கம் பாத்திரங்கள். ஒரு டிரங்குப் பெட்டி. அதன் மேல் இரண்டு சிறு பெட்டிகள். புடவை, லுங்கி, பாவாடை, துண்டு என்று கதம்பமாக ஒரு நைலான் கயிற்றில் தொங்கிய மொத்த சம்சாரம்.

நகரின் பாதாள சாக்கடை நீர் பக்கத்தில் கசிந்து கொண்டிருந்தது. குழந்தைகள் சட்டை செய்யாமல், அந்தத் தண்ணீரில் குதித்து விளையாடினர். ஒரு கிழவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தான்.

கிருஷ்ணா மனம் மிகவும் சஞ்சலமானது. முகம் சுளித்துக் கொண்டே மார்க்கெட் சென்று, காப்பித்தூள், மல்லிகைப் பூ, இனிப்பு, ஆனந்த விகடன், “சேவல்” என்று பை முழுதும் 'நான் தமிழன்' என்ற அடையாளங்களைத் திணித்துக் கொண்டிருந்தான். காப்பித்தூள் கடையில் முதலாளி, "சார், காலங் கெட்டுக்கெடக்கு. ரூவாய ரெண்டா பிரிச்சு தனித் தனியா வெய்யுங்க" என்றதில் பயந்து இரண்டு பாக்கெட்டிலும் பணத்தை வைத்துக் கொண்டு மிரண்டு போயிருந்தான்.

முற்றிலும் மறந்து போயிருந்த அவர்களை திரும்பி வருகையில் மீண்டும் பார்த்தான். விளையாடிய குழந்தைகள் உறங்கி விட்டிருந்தன. பெண்கள் தார்பாலின் அடியில் தஞ்சமடைந்து, கால்களை மடக்கிப் படுத்திருந்தனர். கிழவன் இருமத் துவங்கியிருந்தான். அந்த ஆண் மட்டும், மூன்று வயதை தோளில் சாய்த்து, ஐந்து வயதுப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

மனதை என்னவோ செய்தது. மனம் தர்க்கம் செய்யுமுன் இடது பாக்கெட்டில் இருந்த பணத்தை இலேசாகத் தவறவிட்டான். யாரும் பார்க்கவில்லை. திரும்பிப் பார்க்காமல் நடந்தான். பத்து அடி எடுத்து விட்டு, திரும்பிப் பார்த்தான். அந்தச் சிறுமி அப்பாவிடம் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணா பார்ப்பதைக் கவனித்துவிட்ட அவன், மும்பைக்காரர்களுக்கே உரித்தான சங்கேத மொழியில் இவனை அழைத்தான். வேறு வழி இல்லாமல், கிருஷ்ணா அருகில் சென்றான்.

"இந்தப் பணம் உங்களுடையதா"

எங்கிருந்து துணிச்சல் மற்றும் சொல்ல முடியாத உணர்வு வந்தது என்று தெரியவில்லை. "இல்லையே. நிறைய பணமா?"

சில வினாடிகள் உற்றுப் பார்த்தபின் 'ஒன்றும் இல்லை. நீங்கள் போகலாம்' என்று அவன் வேறு திசையில் நடக்க ஆரம்பித்தான்.

கிருஷ்ணாவுக்கு மூச்சு நின்று, சீராக சில நிமிடங்கள் ஆயின. மாதுங்காவில் வண்டி ஏறி, அந்தேரி செல்லும் வரை அவன் செய்தது சரியா என்று யோசித்தான். அதன் பின், மல்லிகாவுக்குப் பதிலாக, பின்மாலையில் கண்ட இந்த குடும்பத்துக்குள் இந்த நேரத்திலும், இன்னும் சில நாட்களுக்கும் நடக்கப்போகும் உரையாடல்கள் பற்றி கற்பனை செய்ய ஆரம்பித்தான். மாலையின் பதட்டம் விலகி, ஒரு மந்தகாசம் தோன்றியது.

மல்லிகா "இருபத்தைந்துக்கே இவ்வளவு சிரிப்பா" என்றாள்.



(உயிரோசை 29.12.2008 இதழில் பிரசுரம் ஆனது)

Friday, January 9, 2009

பூவாகி, காயாகி


பூக்கவேயில்லை என்றும்
காய்க்க வாய்ப்புமில்லை என்றும்
பெருமர நிழலில்
காற்று வாங்கியபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த
சாயம் போயிருந்த பட்டங்களைப்
பார்த்து முறுவலித்தது
மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம்.