Friday, December 26, 2008

ரகசியங்கள்


ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே;
எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென சுழல்வதை
என்னுடைய தொடர் சாகசமாகவும்
அவள் மேலுள்ள அக்கறையாகவும்
நீங்கள் கொள்ளலாம்,
அவளுக்கு அது
சூன்ய உணர்வைத் தந்தாலும்


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

Friday, December 19, 2008

அழைப்பு மணி


அழைப்பு மணி ஓசை
பால் வந்து விட்டது
பேப்பர் போடப்படுகிறது
பணிப்பெண் வந்தாயிற்று
அடுத்தத் தெரு கலா
கியாஸ் சிலிண்டர்
அலுவலகத்திலிருந்து கணவன்
என்றெல்லாம் துல்லியமாகக்
கண்டுபிடித்து விடுவாள்.
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது

Friday, December 12, 2008

(ஆ!) சுவாசம்


ஆருயிர் நண்பனை
ஆசுபத்திரியில் கண்டேன்
படுக்கையிலிருந்த
எலும்புக்கூடுக்கு
அடுத்த மாதம் கெடு
எக்ஸ்-ரேயில் தெரிந்தது
நுரையீரல் துகள்கள்;
பதைபதைத்த மனம்;
வெளியே வந்தபின்னும்
படபடத்த உடல்;
பெட்டிக் கடையில்
ஒரு சிகரட்டுக்குப்பின்
எல்லாம் அடங்கியது.
என் நுரையீரலின்
'நு' வெளியே மிதந்தது


(ஜ்யோவின் "ஒரே மருத்துவரும் அதே பழக்கமும்" கவிதை இப்போது படித்தவுடன், முன்பே எழுதி வைத்த ஒரு கவிதையை தூசி தட்டி பதிவு செய்து விட்டேன்)

Friday, December 5, 2008

பிசுபிசுப்பு


மழைக்கு முன்பான காற்றில்
படபடத்த நோட்டுப்புத்தகத்தின்
ஏழாம் தாள் நிரம்பவே சலனித்து
கவனமீர்த்தது.
உரையாடவும் தொடங்கிற்று.
எவ்வளவு காற்று! மழையும் பெய்யுமிப்போ
என்னைக் கிழித்து மடி
ராக்கெட் செய்து பறக்கவிடு
கத்திக்கப்பல் செய்து மிதக்கவிடு
எப்படியாவது என்னை
விடுவித்துவிடு என்றது
மரங்களைப் பற்றியெல்லாம்
கவலைப்படுமென்னிடம்
முற்பிறப்பில் மரமாயிருந்தாலும்
இலையாய்ப் பறக்கத்தான்
ஆசையுற்றேன் - விடுவி என்றது
அரைமனதுடன் கிழித்த தாளை
எண்ணையில் தோய்த்து
விளக்கடியில் தூக்கிலிட்ட
என் மனைவி சொன்னது
'ஈசல் தொல்லை தாங்கவில்லை'
பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.


(உயிரோசை 01.12.08 மின்னிதழில் பிரசுரமானது)