Thursday, August 28, 2008

அய்யனாருக்குப் பகிரங்கப் பின்னூட்டம்

முதலிலேயே டிஸ்கி
நண்பர்களே, இந்தப் பதிவு சற்று தீவிர ஆனால் சுவாரஸ்யமான இலக்கியத்தைப் பற்றி பேசும். எனக்கு லக்கி மற்றும் பரிசலின் சுண்டியிழுக்கும் ஆற்றல் இல்லாததால் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன் 'இது உங்களுக்கு அலுப்பைத் தரலாம்'. ஆதலினால் நீங்கள் இப்போதேயோ, ஐந்தாறு வரிகளுக்குப் பின்னாலோ தாராளமாக விலகலாம். இத்தகைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்து முழுதும் படித்து, நிருபணமாக பின்னூட்டமும் அளிப்பவர்களுக்கு சமீபத்தில் (கி.பி.2015) வெளிவர இருக்கும் எனது கவிதைப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

இனி உங்கள் விதி.

சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்...

பார்க்க:http://ayyanaarv.blogspot.com/2008/08/blog-post_21.html

Magical Realism

முதலில் படித்து விட்டு தலை சுற்றியது. பேசாமல் 'சிறப்பு அல்லது நன்று' சொல்லிவிட்டு நகர்ந்தோடி பரிசல்/லக்கி பதிவுகளில் கும்மி அடிக்கலாமென்று நினைத்தேன். ஒண்ணுமே புரியல அய்ஸ். வசந்த் மொழியில் சொல்லவேண்டுமென்றால் 'I sway boss!'.

உள்ளுக்குள் ஒரு குரல் (பின் தொடரும்) 'இன்னிக்குத் தப்பிக்கலாம்; இன்னும் போகப்போக என்ன செய்வதாக உத்தேசம்?; இல்ல ஆ.வி./ஜு.வி. என்று செட்டில் ஆகிவிட எண்ணமா?' என்று வினவியது. தன்மானம் என்ற ஒன்று வேறு அவ்வப்போது எட்டிப் பார்த்தது. சரி பின்னூட்டத்திலாவது ஏதாவது clue கிடைக்குமென்று பார்த்தால் ஆளாளுக்கு என்னென்னவோ எழுதி இரவில் தூக்கம் போயே போச்சு. அண்ணாச்சி எழுதியது மட்டும் புரிந்தது/பிடித்தது.
(“வாசித்துக் கிழித்தேன் டவுசரை; மெதுவாய், மிக மெதுவாய், மிக மிக மெதுவாய்,, கிழிந்த டவுசரைத் தைக்க முடியாமல் உறைந்து போனேன்”).

ஒரு வழியாக, தேர்வை எதிர்கொள்ளும் மாணவனின் தீவிரத்துடன், வலையில் மேய்ந்தேன். மாஜிக்கல் ரியலிசம் என்பதற்கு 'மாய யதார்த்தம்' என்று பெயர் சூட்டினேன் (இதுவும் எங்கோ இலக்கியப்பக்கங்களிலிருந்து சுட்டது தான்). யதார்த்தத்தையும் மாயத்தையும் ஒரு புள்ளியில் சேர்ப்பது; மனித வாழ்வின் புற காரணிகளுடன் அக ஆழங்களைக் கலப்பது; அறிவியல் சார்ந்த இயல்பிய உண்மைகளுடன் உளவியல் சார்ந்த மானுட உண்மைகளின் சேர்க்கை; இவ்வகை இலக்கியங்களில் வாசகியின் பங்கு மகத்தானது. படிக்கும் வாசகியானவள் (உங்கள் கதைசொல்லி போல் ஆணாதிக்கவாதி இல்லை நான்) தான் அதுவரையறிந்த யதார்த்தத்திலிருந்து, கதைசொல்லியின் யதார்த்த நிலையைத் தழுவி நிற்பது; அஃது அவளுக்கு கதையை, அதன் நுட்பத்தைக் கட்டவிழ்க்க உதவும். இது வாசகியின் 'பரிணாமக் கடமை' எனக் கொள்ளலாம். (லேகா/கிருத்திகா : மனதில் கொள்க)

மா.ய. படைப்புகளின் இன்னபிற குணாதிசயங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்:

1) மாற்றுக் கருத்து ('other' perspective)
2) ஒரு குறிப்பிட்ட நாகரிக/வரலாற்று/பூகோளப் பின்னணியில் கதை
இருத்தல்
3) கனவுகளும் கற்பனைகளும் கதையினூடே இருத்தல்
4) சுதந்திர, பின் நவீனத்துவ (ஆஹா, கிளம்பிட்டாங்கையா!) பாணி எழுத்து
5) விளக்கவியலாத நிகழ்வுகள் மிகச் சாதாரண சூழலில் நடப்பதும் மற்றும் கதைமாந்தர்கள் அத்தகைய தர்க்கத்தை மீறும் நிகழ்வுகளை சட்டை செய்யாதிருப்பது

மேலும் உயர்கற்பனைகள் கதையின் பின்புல தளத்தையே கேள்விக்குறி ஆக்குதல்; வினையும், விளைவும் தலைகீழாதல் (சோக நிகழ்விற்கு முன்பே கதை மாந்தர் விசனப்படுதல்); காலத்தை உருமாற்றல் அல்லது சுருக்குதல் என்று அனைத்து தகிடு தத்தங்களும் செய்யலாம், மிக வசிகரமாக. முடிவாக அழகிய நீதி (poetic justice) வெளிப்படும்.

இந்த அனைத்தையும் ஓரளவு உள்வாங்கிக்கொண்டு மீண்டும் இருமுறை படித்தேன் அய்யனார். Simply awesome. மேற்கூறிய அம்சங்களில், உங்கள் படைப்பில் பெரும்பான்மையான அம்சங்கள் இருந்தது உள்ளங்கை நெல்லிக்கனி. இப்போது சொல்கிறேன் சட்டைக் காலரை நிமிர்த்தியபடி 'நன்று / சிறப்பு'.

பின் குத்து 1 : வளர்/ஜமாலன் போன்றோர் உங்கள் 'சாரா மற்றும் ஜோ'வை பிரித்து மேய்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். உங்கள் நலத்திற்குதான்; வானத்திலிருந்து தரையிறங்கலாம்.

பின் குத்து 2 : நட்பின் உரிமையில் பரிசல் மற்றும் லக்கி பற்றி எழுதியுள்ளேன். அவர்கள் கொடுக்கும் வாசிப்பின்பம் என்னளவில் மிக மிக அதிகமே.

Wednesday, August 27, 2008

பாராமுகம்


அவ்வப்போது
பார்த்திருந்த அவளை
இருமுறை பார்த்தேன்
சென்ற திங்களில்
வெண்மையும் பச்சையும்
இழைந்த ஆடையில்;
இலேசாக சலனம் கொண்டேன்
என்னைப்பார்க்கவில்லை என்றாலும்;
செய்தித் தாள்களின்
வன்முறைப் பக்கங்களில்
சிக்கிக் கொள்ளாதவரை
அவள் நலம்தான் என்று
ஆறுதல் கொண்டேன்
பிறகு எப்போதும்
அவளைக் காணாவிடினும்

Thursday, August 21, 2008

கவிதையல்லாத பதிவு...(Blogging Friends Forever Award)


வலையுலகில் நெருங்கிய நண்பர் வட்டம் இல்லாதவன் நான். பின்னூட்டங்களில் பங்கேற்பதும், பின்னூட்டங்களுக்கு நன்றி நவில்வது தவிர்த்து வேறு ஒன்றும் அறியாதவன். பிடித்த கவிதை மற்றும் கட்டுரை தளங்களுக்குச் சென்று பின்னூட்டம் அளித்தவர்களில் அருணாவும் ஒருவர். அவர் அறிமுகமானது நான் எழுதிய மழைக் கவிதைக்கு அவர் அளித்த பின்னூட்டம் மூலம்.

ஆனால் திடீரென்று இன்ப அதிர்ச்சி என்ற பெயரில் அன்புடன் அருணா "Blogging Friends Forever Award".... என்ற ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்..மிக்க நன்றி அருணா... நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு. நன்றி மழைக்கும்.
அடுத்து இன்னொரு பொறுப்பையும் என்னிடம் கொடுத்துருக்காங்க,விதிமுறைகளோட...அந்த விதிமுறைகள் என்னென்ன...அப்படின்னா.. (copy paste பண்ணியாச்சி)
1) நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..(சத்தியமா இந்த விளையாட்ட நான் தொடங்கல..)
2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..(என் தளத்திற்கு எல்லாருமே புதுசுதான்.. ஆரம்பிக்குது விதியின் விளையாட்டு. தொடர்ந்து படிப்பது நான் மற்றும் நான் மட்டுமே. நாலு பேரா? ரூம் போட்டு தான் யோசிக்கணும். தப்பாக நினைக்க வேண்டாம் தோழர்/ழிகளே! பின்னூட்டம் போட வந்தா 'நண்பன்' என்று சொந்தம் கொண்டாடும் இவனை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று உங்களுக்கு கோவம் வரும். இருந்தாலும் விதியின் விளையாட்டு ஹ்ம்ம். மன்னிக்கவும் விளையாட்டின் விதிகள் அப்படி)
3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்..(அருணா தானே! அது கொடுத்திரலாம்..)
இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்.. இவர்களை நண்பர்கள் என்பதில் எனக்கு மிக்க சந்தோஷமே..
ஸ்பெயின் நாட்டில் இருந்துகொண்டு எனக்கு இட்லி மஞ்சுரியன் செய்முறை பற்றி விளக்கும் நண்பன், எவ்வளவு கேவலமாய் எழுதினாலும் உடன் வந்து 'சூப்பர்' சொல்லும்
முகுந்த். இவன் பையன் கேஷவும் எனக்கு நெருங்கிய நண்பன். இந்த பதிவை எழுதுவற்குள் இந்தியா வந்துவிட்ட முகுந்த் கொஞ்ச நாட்கள் ஓரளவு free என்பதால் பதிவு போட முடியும் என்று நினைக்கிறேன்.

மிக ஆழமான கருத்துக்களை தெளிவாக விளக்கும் பல கட்டுரைகளை எழுதும் விக்கி எனும் விக்னேஷ்வரன் தான் எனது இன்னொரு நண்பன். பதிவு எழுதும் பெரும்பாலானவர்களை சிரமம் பாராது ஊக்குவிப்பதில் சிறந்தவன். மலேசியாவில் வசிக்கும் நண்பன்.

bee.morgan எனும் பாலமுருகன் தான் எனது அடுத்த நண்பன். சிறியவயதில் நுட்பமான கருத்துக்கள் செறிந்த கவிதைகள் மற்றும் கதை எழுதுபவன். தகுந்த guidance (தமிழில் சரியான வார்த்தை என்ன?) கிட்டினால் பெரிய எழுத்தாளன் ஆகும் சாத்தியங்கள் நிறைய உண்டு.

எனது ஹைகூக்களை விரும்பிப் படிக்கும் இனியவள் புனிதா எனது அடுத்த தோழி. இவரது வலைத்தளம் அழகானது. அழகிய பாடல்கள் இசையுடன் தேர்வு செய்து பதிவு செய்யும் நேர்த்தி சொல்லிவிடும், இது நிச்சயம் ஒரு பெண்ணின் வலைத்தளம் என்று.

விதிகளின் படி, புதிதாய் என் பதிவுக்கு வருகை தந்த என் மதிற்பிற்குரிய சகோதரி திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் தான் ஐந்தாவது தோழி. (சகோதரி தோழியாகவும் இருக்கலாம்). இவரது பதிவுலக அனுபவம் பெரிது. பல தளங்களிலும் (புகைப்படம் மற்றும் கவிதைகள் இவரது சிறப்பு) செயலாற்றுபவர். என் போன்ற புதியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாராட்டும் மனப்பாங்கு கொண்டவர்.

அப்புறம் கடைசியாக என்னை நண்பனாகத் தேர்ந்தெடுத்த அருணாவுக்கு நன்றிகள் பல. Really appreciate your gesture.
பின்குறிப்பு: எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சென்ஷீ, வளர்மதி, பெருந்தேவி போன்றோருடன் நெருங்கிய நட்பு மலரவேண்டும் என்ற ஆசை உண்டு. அவர்கள் எல்லாம் வலையுலகின் ரஜினி,கமல்,விஜய்,அஜித், த்ரிஷா போன்றவர்கள். தூரத்திலிருந்து ரசிக்கலாம்.

Saturday, August 16, 2008

சுதந்திர நாள்


இன்று முக்கியமான நாள்
இதற்காகக் காத்திருத்தலுடன்
நிறைய திட்டமிடலும்
அவசியமாயிருந்தது;
விடுமுறை என்பதால்
நண்பர்களுக்கு அழைப்பு
பிடித்த திரவங்கள்
பட்டியலிட்டு முன்தினமே
வாங்கிவைத்த முன்யோசனை
ஐந்து சானல்களில் பத்து
'திரைக்கு வந்து
சில வாரங்களே ஆன'
திரைப்படங்கள்.
அத்தனையும் இருந்த
இரண்டே தொ.கா.பெட்டிகளில்
பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்
மாலையில் சீட்டுகட்டுடன்
பிடித்த நடிகையின்
அறிவார்ந்த நேர்காணல்
இனிதே கழிந்த இத்திருநாளை
காலைக்கடன்களுடன்
கொடியேற்றி, தேசியகீதம் பாடி
மிட்டாய் விநியோகித்துக்
கொண்டாடிவிட்டோம்
அறுபத்திரண்டாம் முறையாக

Tuesday, August 12, 2008

சிக்னல் சிந்தனைகள்



அரைக்கம்பத்தில் தொங்கியபடி
'நில் கவனி செல்' என்று
மாறி மாறி அதிகாரம்
முழுக்கம்ப உச்சியில்
அனைத்தும் அறியும் ஒளி

**************************************

நிறப்பிரிகை

அவன் அழகாயிருந்தான்
கவர்ச்சியாகவும் தான்;
என்னையும் அவன்
அப்படித்தான்
பார்த்திருக்க வேண்டும்.
ஒருமாதிரி கண்டதும் கா...
பச்சை விழுந்ததால்
விர்ரென்று பிரிந்தோம்
அவரவர் வேலையில்

Monday, August 4, 2008

இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து

**********************************
பொறியில் சிக்கிய எலி
புறக்கணிக்கப்பட்ட வடை

**********************************
பின்னிரவுகளில் தேர்வுக்காக
விழித்திருந்ததில் கற்றது
நாய்களின் இரவு மொழி

**********************************
சோப்பு விற்பவன் சொன்னான்
'எல்லாக் கறையும் நீங்கும்'
கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்
கரை வேட்டிகள் அதிகம் புரளுமே

**********************************
விற்கப்பட்ட இருபதில்
சொள்ளமாடனுக்கு மூணு,
பக்ரீதுக்கு மூணு என்று
ஆறு ஆடுகள் மட்டும்
புண்ணியம் செய்திருந்தன

**********************************