Wednesday, November 18, 2009

ஒரு கவிதையின் கதை

பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பும்போது பிரசுரம் ஆனால் போதும் என்ற மனநிலையே ஆரம்ப நிலை படைப்பாளிகளுக்கு இருக்கும். பத்திரிகை ஆசிரியர்களுக்குப் படைப்பின் தரத்துடன் நேர்த்தி, வடிவமைப்பு, வாசகர்களின் ரசனை அளவு போன்ற அளவுகோல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால், படைப்பில் சில மாற்றங்கள் செய்வது அவர்கள் உரிமை மற்றும் தேவையும் கூட என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



பொதுவாகக் கவிஞர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். மென்மையானவர்கள். உத்வேகம் மிகுந்தவர்கள். தம் படைப்பில் ஆழ்ந்த பெருமை உடையவர்கள் என்பது என் எண்ணம். நிச்சயமாக உரைநடை அளவு கவிதை எழுதுவது எளிதில்லை. எனக்குப் பிடித்த கவிதாயினி பெருந்தேவி சொல்வது போல கவிதை என்பது 'மொழியின் கொதிநிலை'.


எதற்கு இத்தனை பீடிகை என்றால்...நான் ஒரு கவிதை 'உன்னதம்' என்னும் சிற்றிதழுக்கு அனுப்பி இருந்தேன். அந்தக் கவிதை பிரசுரம் ஆனது எனக்கு நண்பர் பொன்.வாசுதேவன் (அகநாழிகை) சொல்லித்தான் தெரிய வந்தது. பிறகு பத்திரிக்கை கையில் வந்ததும் பெருமையுடன் பிரித்துப் பார்த்தால் கவிதை உருமாற்றம் அடைந்திருந்தது. உண்மையில் அது 'கவிதை' ஆகியிருந்தது. பிரசுரமான கவிதை, நான் அனுப்பிய கவிதை முயற்சி இரண்டையும் கீழே தருகிறேன். அப்போது உங்களுக்குப் புரியும் - பத்திரிகை ஆசிரியர்களின் அன்றாடச் சிரமங்கள் எவ்வளவு என்று.


சில நாட்கள் முன் 'உன்னதம்' ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் அவர்களுடன் பேசும்போது அவரே 'சில மாற்றங்கள் செய்தேன். பரவாயில்லை தானே' என்று பரிவாகக் கேட்டார். நமக்கு நம்ம பேர் அச்சில் வரணும். அதுவும் நிசமாலுமே ஒரு கவிதையின் எதிரில் என்றால் கசக்குமா? 'தாராளமாகச் செய்யுங்கள்' என்றேன். பிறகு யோசித்தேன். மற்ற கவிஞர்கள்/படைப்பாளிகள் எப்படி உணருவார்கள் என்று. உதாரணத்திற்கு, நண்பன் சேரல் நான் அவதானித்த அளவில் தன் படைப்புகளில் நியாயமான பெருமை உடையவர். சமயங்களில் சில பின்னூட்டங்கள் 'இந்த வரி இப்படி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் சொற்சிக்கனம் தேவை' என்ற தொனியில் வந்தால், 'இருக்கலாம். ஆனால் இது என் கவிதை; என் குழந்தை; இப்படியே இருக்கட்டும்; அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று சொல்வதைக் கவனித்து இருக்கிறேன். அதை மமதை, கர்வம் என்று கொள்ளாமல் நியாயமான, இயல்பான தன்னம்பிக்கை என்றே பொருள்கொள்ள வேண்டும்.


அதே சமயம், நண்பன் முத்துவேல் ஒரு முறை ஹரன் பிரசன்னாவின் இரு வரிக் கவிதையைப் பார்த்து, நான் பலவரிகளில் சொல்லியதை இவ்வளவு அழகாக, சிக்கனமாகச் சொல்ல முடியுமா என்று வியந்த அடக்கத்தையும் குறிப்பிட வேண்டும்.


‘உன்னதம்’ உருமாற்றிய கவிதையில் சொல்லப்படுவதற்கும், நான் சொல்ல வந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்ததால் இதை எழுதுகிறேன். நான் சராசரி மனிதனின் அல்ப ஆசைகளை சற்று அங்கதமாக சொல்ல முயன்றேன். பிரசுரம் ஆகிய கவிதை இன்னும் சற்று ஆழமாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கிறது. இவ்வளவு பீடிகை போதும். இனி கவிதைகள்:

முதலில் நான் அனுப்பிய கவிதை



மனக்கணக்கு


குளிரைப் போக்கிட


விசிறியை நிறுத்தினேன்


வட்டப் படலமாய்த்


தொங்கிச் சுழன்ற


மின்விசிறி இறக்கைகள்


மூன்றாகப் பிரிந்து


ஒன்றை ஒன்று


துரத்தத் துவங்கியதில்


சாயம் போயிருந்த


ஒரு இறக்கை


என்னைக் கடப்பதை


எண்ணத் தொடங்கினேன்


ஒவ்வொரு சுற்றிலும்


என் மீத வருடங்கள்


ஏறிக் கொண்டிருந்தன


ப ன் னி ரெ ண் டி ல்


பதட்டமாகி


மீண்டும் தட்டிவிட்டேன்,


அடுத்த முறை


ஊதிய உயர்வோ, காதலிகளோ


மட்டுமே எண்ணவேண்டும்


என்ற முடிவோடு






இப்போது பிரசுரம் ஆகிய கவிதை






வெக்கை


வெந்து புழுங்கியத்தில்


விசிறியை ஓடவிட்டேன்






வட்டப் படலமாய்த்


தொங்கிச் சுழன்ற


மின்விசிறி இறக்கைகள்


மூன்றாகப் பிரிந்து


ஒன்றை ஒன்று


துரத்தத் துவங்கியதில்


சாயம் போயிருந்த


அந்த இறக்கைகள்


என்னைக் கடப்பதை


எண்ணத் தொடங்கியது காலம்






என்னைச் சூழ அடர்ந்த காற்று


காதோரங்களில் நரை ஏற்றியதில்


பதட்டமாகி விசிறியை நிறுத்தினேன்






வெந்து புழுங்கியது வெளி




Sunday, November 15, 2009

நம்ம ஊரு சிங்காரம் சிங்கப்பூரு போனானாம்





சென்ற வாரம் திடீரென்று ஆபீஸில் சிங்கப்பூர் சென்று (ஒழுங்காக வேலையை முடித்தால் மட்டும் திரும்பி) வா என்றார்கள். முன்பே சில முறை சென்றிருக்கிறேன் என்றாலும் எனக்கு அயல் நாட்டுப் பயணம் என்றாலே அடிவயிறு ஆட்டம் காணும். அதுவும் தனியாகப் போகணும்னா...ஆள விடுங்க பாஸ் என்று கெஞ்சுவேன். நம்ம இஷ்டப் படியா எல்லாம் நடக்கும். அதுவும் ஆபீஸில்? கிங் ஃபிஷர் விமானத்தில் இரவுப் பயணம். சீட் பெல்ட் எல்லாம் இறுகக் கட்டிக்கொண்டு, ரன்வேயில் ஓஓஓடி விமானம் வானம் ஏறி 'சீட் பெல்ட் சைன் ஃஆப்' வரும்வரை வயிற்றில் இருந்த பயப்பந்து மதபேதம் பாராமல் எல்லாக் கடவுள்களையும் உதட்டில் வரவழைத்தது. பெரியார் பேரைக்கூட சொன்னேன் என்றால் பாருங்களேன். என்னது? இல்லை இல்லை நித்யானந்தரைக் கூப்பிடவில்லை.





உடனே திரையில் விஜய் மல்யா தோன்றி 'உணவு என் ஆசை; குடி என் தொழில்; என்ஜாய் மாடி' என்று மந்தகாசப் புன்னகையுடன் சொன்னார். சிவப்பு ஆடையில் மிதந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகள் வெல்கம் ட்ரின்க் என்று ஒரு ட்ராலியில் மிக அழகான சீசாக்களில் பல்வேறு வண்ணங்களில், அடர்த்தியில் திரவங்களைக் கொண்டு வந்தார்கள். நான் வெறும் ஆரஞ்சுப் பழச்சாறு மட்டுமே கேட்டு வாங்கிப் பருகினேன் என்று எழுதுவதற்கு மூன்று காரணங்கள்:



1.விமானம் இறங்கி இரண்டு மணிநேரத்தில் ஒரு பவர் பாயிண்ட் சமாசாரம் செய்ய வேண்டிய கட்டாயம்.


2. என் கவிதைகள் தவிர்த்து பொதுவாக என் மற்ற இடுகைகளை என் மனைவி படிப்பாள்


3. சில நேரங்களில் நான் அப்பட்டமான உண்மையும் பேசுவேன். (கொஞ்சம் யோசித்தால் நீங்கள் 'உண்மையும்' என்பதற்குப் பதிலாக 'பொய்யும்' என்றும் மாற்றிக்கொள்ளலாம்.)



உணவு உண்டபடி திரையில் டில்லி 6 பார்த்தேன். எனக்கு அபிஷேக் பச்சன் பிடிக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ளாத பேர்வழி. இரண்டு ஐகான்களை சமாளிக்கும் மனுஷன். அனில் கபூரின் பெண் சோனல் கபூர் (இப்போது புரிகிறது சுரேஷ் கண்ணன்) டிவைன். படம் ஓகே. மசக்கலி பாட்டை மட்டும் மூன்று-நான்கு முறை ஓட விட்டேன். அப்புறம் தூங்கி விட்டேன்.




இம்மிக்ரேஷனில் சாக்லேட் கொடுத்தாலும் அழகான சீனக் கண்களில் நிறைய சந்தேகம் இருக்கிறது. நாம என்னதான் அஜித் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டாலும் தானாகவே இயல்பு நிலையில் வையாபுரி போல மாறிவிடுகிறது. ஏர்போர்ட் லாபி அவ்வளவு நேர்த்தி. சுத்தம். வெளியே டாக்ஸி (ஆஹா, இங்க ஹோண்டா அக்கார்ட் எல்லாம் டாக்சியா !) ஏறி போகவேண்டிய ஹோட்டல் (Ascott) பெயர் சொன்னேன். அப்படி ஒரு இடமே இல்லை என்றார். பிறகு முன்பதிவு பேப்பரை காண்பித்தேன். "ஓ, இதுவா!" என்று சொல்லி ஒரு சிறிய பாடலைப் பாடினார். பிறகு புரிந்தது - அவர் ஹோட்டல் பெயரைச் சொன்னார் என்று. டிராபிக் இன்று அதிகம் என்று காலியாக இருந்த சாலையைப் பார்த்து அலுத்துக் கொண்டார். இதே எட்டரை மணிக்கு இவரை இப்படியே தூக்கிக்கொண்டு போய் மும்பை அந்தேரி-சாண்டாக்ருஸ் ஹைவேயில் இறக்கி விட்டால் என்ன செய்வார் என்று யோசித்தேன்.



ஹோட்டல் இருக்கும் இடம் Central Business District என்று சொல்லப்படும் வணிக வளாகங்கள் இருக்கும் பகுதி என்று நினைக்கிறேன். Raffles Place. கேள்வி கேட்காமல் ஐம்பது-அறுபது மாடி கட்டிவிடுகிறார்கள். நான் தங்கிய ஹோட்டல் பாவம் குடிசை. வெறும் பத்து மாடி என்று நினைக்கிறேன். அந்தக் காலத்து ஹோட்டல். உள்ளே எல்லாம் சௌகரியமாக இருக்கிறது. தூக்கம் தூக்கமாக வந்தது. நிசமாலுமே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் மணி பத்து. பத்தரைக்கு பவர் பாயிண்ட். இப்போது அவ்வை ஷண்முகி கமலை கொஞ்சம் ஞாபகத்துக்கு கொண்டு வரவும். அத்தனை வேகத்தில், சரியாக இருபத்தைந்து நிமிடங்களில் ஹோட்டல் லாபியில் வந்து என் ஆபிஸ் இருக்குமிடத்தைச் சொல்லி, எப்படிப் போகவேண்டுமென்று கேட்டால், சற்று குனிந்து, கண்ணாடி வழியே எதிர்ப்பக்கம் காண்பித்தாள்.



அட, இதுதானா என்று பார்த்தால், கழுத்து வலித்தது. உள்ளே செல்ல ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகள். லிப்ட் ஒரு டீக்கடை அளவு இருக்கிறது. நிறைய சீன, கொஞ்சம் ஆங்கில ஆசாமிகளுடன் நானும் சென்றேன். ஆபீஸில் முதல் நாள் என்பதால், சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு மட்டும் இட்டுவிட்டு மாலை போடுவது எல்லாம் நாளை என்றார்கள். நாளை மறுநாள் அறுவா வரும் என்று புரிந்தது. எல்லோரும் படு ரிலக்ஸ்டா இருக்கிறார்கள். மறக்காமல் பன்னிரண்டரை மணிக்குப் பசியுடன் கீழே பாய்கிறார்கள். சிங்கப்பூர் வானம் மதியம் பசி எடுக்கும் போது மூச்சா போகிறது. மழைப் பருவம் என்றெல்லாம் கிடையாதாம். தினமும் மழை பெய்யக்கூடும் சாத்தியக்கூறுகள் (ஏதோ கவிதையின் முதல் வரி மாதிரி இல்ல?) 365 நாட்களும் உண்டு என்று பெருமையுடன் சலித்துக் கொள்கிறார்கள். நிறைய கட்டடங்கள் எழுகின்றன. துறைமுகம் சுறுசுறுப்பாக இயங்குவது கண்ணாடி வழியே தெரிந்தது. ஒரு மூன்று கோபுர கட்டிடத்தின் கீழ் தளத்தில் பெரிய காசினோ வருவதாகச் சொன்னார்கள். சிங்கை பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைவது தெரிகிறது.



ஆறு மணிக்கு ஆபிஸ் அமானுஷ்யம். என் வரவை முன்னிட்டு ஒரு ஏழெட்டு பேர் சாலை ஓர pub இல் பியர் அருந்தினார்கள்/அருந்தினோம். அட விடுங்கப்பா. பியர் அருந்தப்பட்டது. வெகு சிலரைத் தவிர, நிறைய பேர் MRT என்னும் மெட்ரோ ரயிலில் பெரிய வீடோ சின்ன வீடோ போய்ச் சேருகிறார்கள். காலையில் ஒன்றும் சாப்பிடாமல், மதியம் சாண்ட்விச் சாப்பிட்டு ஒப்பேத்தி விட்டாலும், வயிறு 'செல்லாது. செல்லாது. இட்லி, தோசை அல்லது ஒரு ரவுண்டு கட்டி சாப்பாடு தேவை' என்றது. நல்ல வேளையாக மும்பையிலிருந்து இங்கு வந்திருக்கும் ஆபிஸ் நண்பர் அருகில் தான் சாராவானா பாவான் (அப்படித்தான் சொன்னார்) இருக்கிறது என்று வழி காண்பித்து எஸ்கேப் ஆனார். மடிக்கணினியை ஹோட்டல் பெட்டில் தூர வீசி, டி-ஷர்ட் போட்டு யூத்தாகி, சா.பா. நோக்கிப் படையெடுத்தேன்.



சரவண பவனைக் கண்டுபிடிக்கச் சிரமப்படவில்லை. எல்லாம் இருந்தது. வட இந்திய உணவும். நம்ம ஊர் ஃபுல் மீல்ஸ் ஒரு பிடி பிடித்ததும் தான் மீண்டும் தமிழனான உணர்வு வந்தது. மென்பொருள் ஆண்களும், அவர்களை ஆட்டுவிக்கும் பெண்களுமாய் களையாக இருந்தது. வெளியே வந்தவுடன் மழை. கொஞ்ச நேரம் ஜாலியாக நனைந்தேன். இதற்கு முன் வேண்டுமென்றே மழையில் எப்போது நனைந்தேன் என்று யோசித்தேன். பழைய காதலிகளும் சென்னை, பெங்களூர்த் தெருக்களும் நினைவில் வந்தார்கள். மழை எல்லா ஊரையும் அழகாக மாற்றி விடுகிறது. சிங்கையும், பெங்களூரும் (தொண்ணூறுகளில்) அது இல்லாமலும் அழகு என்றாலும். பசித்துப் புசித்தபின், மெல்லிய மழையில் மொபைல் போனில் 'ஹசிலி ஃபிஸிலி ரசமணி' கேட்டுக்கொண்டே நனைந்தது புத்துணர்வூட்டிய அனுபவம்.



சிங்கையில் வேலை பார்க்கும் பல பெண்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பழச்சாறுகள் என்று சகட்டு மேனிக்கு வாங்கித் தள்ளுகிறார்கள். துரியன் ரொம்ப ஃபேமஸ் என்றாலும் யாரும் வாங்கவில்லை. கொரியா நாட்டுப் பழ வகைகள் வித்தியாசமாக, வசீகரமாக இருந்தாலும் வாங்கும் தைரியம் வரவில்லை. டிராகன் பழம் என்று ஒன்று சிகப்புக் கலரில் மிரட்டியது. பப்பாளிப் பழம் ஒரு ப்ளேட் (வெட்டி வைக்கப்பட்டது) சிங்கை டாலர் மூன்று என்றார்கள். நம்ம சிக்கன புத்தி வேகமாக இந்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் என்று கணக்குப்போட்டு, கடையை விட்டு ஓட்டம் விட்டேன்.



மூன்றாம் நாள் அரைநாளில் "பரவாயில்லை. இந்த முறை தப்பித்து விட்டாய். என்ஜாய்" என்று அனுப்பி விட்டார்கள். சிங்கையில் வேலை பார்க்கும் என்னுடைய கசின், எதேச்சையாக பிசினஸ் நிமித்தம் சிங்கை வந்த என் சகோதரி கணவர் என்று ஒன்று கூடி கசின் வீட்டுக்குச் சென்றோம். அருகில் இருந்த மாலில் மாலையைச் செலவழித்தேன். சிங்கையின் சுத்தம், நேர்த்தி, சிரித்த முக மக்கள் எல்லாம் நம்பமுடியாமல், ஏறக்குறைய அலுக்கும் அளவு இருக்கிறது. ‘மணமான அன்று இரவே ஹோட்டல் உயரத்தில் இருந்து குதித்து மாண்ட கணவன்’, பக்கத்துக்கு இந்தோனேஷியாவில் நடந்த ‘கணவனைக் கொன்ற கள்ளக்காதலனுக்கு எதிராக சாட்சி சொன்ன மனைவி/காதலி’ என்ற தலைப்புச் செய்திகள் மட்டும் இந்தியாவை நினைவுறுத்தின.



அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) திரும்ப கிங் ஃபிஷர் பிடித்து மும்பை.



கிளம்பியதில் இருந்து திரும்ப வரும்வரை உறுத்திய விஷயங்கள்:



கோவி கண்ணன், மஹேஷ், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, குழலி, அகரம் அமுதா, இராம்/Raam போன்ற நண்பர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டும், சற்றும் ஒத்து வராத பயண/அலுவல் சூழ்நிலை.



வார இறுதியாக இருந்தால் இவர்களுடன் மற்ற சிங்கை பதிவர் நண்பர்களையும் சந்தித்து இருக்கலாம். செந்தில்நாதனை இவர்களுடன் சென்று பார்க்கவேண்டும் என்று கூட கூடுதல் ஆசை இருந்தது. (எனக்குத் தெரிந்த பதிவர்கள் பெயர்கள் இவை. இன்னும் பலர் இருக்கலாம்.)



மாதங்கி என்னும் கவிதாயினி (என் ஆரம்ப கவிதைகளைப் படித்து ஊக்கமூட்டியவர்) கூட சிங்கை என்றுதான் நினைக்கிறேன். அட் லீஸ்ட் தொலைபேசியில் பேசியிருக்கலாம்.



நண்பர்களே, உள்ளுக்குள் உங்களுக்கு நிம்மதியாக இருந்தாலும், வெளியில் என்னை மன்னித்து விடுங்கள்.



Tuesday, November 3, 2009

எப்போதும்



அந்தரத்தில் மிதந்த


தேனுண்ட மலர்களுக்கு

ரெக்கைகளில் ஆயிரம்

நிறங்களும்

எட்டுத் திக்கும்

கண்காணிக்கும்

கண்களும்

வேக வாகனங்களில்

மோதிச் சரிந்தாலும்

மோட்சம் மறுத்து

அலையும் ஆன்மாக்கள்

பலரின் நெஞ்சுக்குள்

காதல் வேளைகளிலும்

சிலரின் வயிற்றுக்குள்

தேர்வுக் காலங்களிலும்

வண்ணத்துப் பூச்சிகளாகவே

வாழ்கின்றன எப்போதும்



(உயிரோசை மின்னிதழில் பிரசுரம் ஆனது)

Friday, October 30, 2009

முன்னார் - சில புகைப்படங்கள்

வெயிலான் நண்பர்களுடன் நீலகிரிக் காடுகளுக்குள் சென்ற நேரம். யார் அந்த நண்பர்கள்? செல்வா, சமவெளி மானாகிய அடர்கானகப் புலி மற்றும் உமா கதிர். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஜ்யோவ், வால்பையன், லதானந்த் இவர்களும் அதே மலைத்தொடர்களின் இன்னொரு பகுதியில் என்று இருந்த நேரம். எனக்கும் ஆபீஸில் off-site என்று சொல்லப்படும் அலுவலகமில்லாத இடத்தில் கலந்தாலோசனை என்று முடிவாக, ஆபிஸ் பெரிய தலைகளுடன் கொச்சி வழியாக முன்னார் சென்றேன்.


வெயிலான் போல அழகாக எழுத வரவில்லை. அதனால் பரிசல் எப்போதும் போல ஆரம்பித்து வைத்த ட்ரெண்டை, வழக்கம் போல ஆதி தொடர, நானும் என்னால் முடிந்ததை....


இந்தப் புகைப்படங்கள் எதுவும் நான் எடுக்கவில்லை. என்னிடம் மொபைல் காமிரா தவிர்த்து வேறு நல்ல காமிரா இல்லை. அன்பளிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் எப்போதும் போல்.

ஆதலால், புகைப்படங்கள் நன்றாக இருந்தால், அது எடுக்கப்பட்ட இடத்தின் பெருமையாக இருக்கலாமென்றும், நன்றாக இல்லையென்றால் காமிரா/எடுத்தவர் சரியில்லை என்றும் கொள்க.



கொச்சி



தேயிலைத் தோட்டம் - தூரத்து ஏரி மற்றும் மேகங்கள்



நீர்வீழ்ச்சி?

 
அருவி?

    

குளிக்க முடிந்தால் அருவி
பயமாக இருந்தால் நீர்வீழ்ச்சி



பச்சை நிறமே பச்சை நிறமே

   
என் ஜன்னலுக்கு வெளியே


மலைராணி முந்தானை


நீர்வீழ்ச்சி தீமூட்டுதே


இயற்கையென்னும் இளைய கன்னி


மீண்டும் மீண்டும்
 தண்ணீர் தண்ணீர்

 




அடர்கானகப் புலிகள் இருக்கலாம்



சமவெளி மான்களும் தென்படலாம்

Wednesday, October 28, 2009

யானை, புலி மற்றும் அலைபேசி

சஷி தரூர் - தற்போதைய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர். முன்னாள் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி - ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய வேலை பார்த்து, UN-Secretary General பதவிக்கு ஆசைப்பட்டு, நிறைவேறாமல் போனதைக் கடந்து வந்தவர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் –

the Elephant, the Tiger & the Cellphone என்ற தலைப்பில்

சென்ற வாரம் பரோடாவிலிருந்து வேலை மாறி சென்னை சென்ற என் nephew (மருமகன் என்றால் என்னோட யூத் இமேஜ் என்னாவது?) விமானத்தில் எடை அதிகமாவதைப் பற்றி கவலைப்பட்ட போது, என்னாலான சிறிய உதவி என்று இந்தப் புத்தகத்தை அவனிடமிருந்து ...அதென்ன...லபக்கிவிட்டேன். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியா பற்றிய சிந்தனை என்று பொத்தாம் பொதுவாக இந்தப் புத்தகத்தைப் பற்றி (படிக்காமலேயே) சொல்லலாம் என்று நினைக்கிறேன். சஷி தரூரின் பல காலக் கட்டுரைகளால் நிரம்பிய இந்தப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது சிலவற்றை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இதில் நிறைய அனுகூலங்கள்: பதிவெழுத மேட்டர் கிடைக்கிறது; கற்பனை வறட்சி பற்றி கவலைப்பட வேண்டாம்; எதிர் வினைகள் வந்தால், 'அதானே, இது என் கருத்து இல்லை சார்/மேடம்' என்று சொல்லி நழுவலாம்; 'மொழியாக்கம்' ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டு போட்டுக்கொள்ளலாம்.

இனி Over to Mr.Sashi.

முன்னுரை: ஏன் இந்தியா முக்கியமாகிறது?

2007 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவுக்கு அறுபது வயதானது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவுக்கு என்ன வாய்ப்புகள் தரவிருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் ஏன் அவசியமாகிறது?

பிரித்தானிய வரலாற்றாளர் E.P.தாம்சன் அவர்களின் கூற்றுப்படி "இந்தியா, எதிர்கால உலகின் மிக முக்கியமான நாடாகும்". நான் இத்தகைய தீர்ப்பைச் சொல்ல முடியாவிடினும் பத்து வருடங்கள் முன்னர் எனது 'இந்தியா - நள்ளிரவிலிருந்து நூற்றாண்டு வரை' என்ற புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான விவாதங்களின் நாற்சந்திகளில் இந்தியர்கள் நிற்பதைக் கண்டேன்.


உணவா - விடுதலையா என்ற விவாதம்: ஜனநாயகம் ஏழ்மையைப் போக்கும் சாதனங்களைத் தர வல்லதா அல்லது அதன் கட்டுவிக்கப்பட்ட திறமையின்மைகள் வேகமான வளர்ச்சியைத் தடை செய்கிறதா? ஒரு வளரும் நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத, தற்காலிக கூட்டணியாட்சி முறை ஒத்து வருமா? இன்றைய தலைமுறை பொருளீட்டுவதில் மட்டும் நாட்டம் கொள்ளும் சூழலில், அரசியல் சுதந்திரம் ஒரு தேவையற்ற கவனச் சிதறல் எனலாமா?

மையக்கட்டுப்பாடா மாநில சுயாட்சியா விவாதம்: நாளைய இந்தியா ஒரு வலுவான மைய அரசால் - மொழி, சாதி, பிராந்திய விடயங்களால் துண்டாகும் போக்கினைக் கட்டுப்படுத்தும் ஆளுமையுடைய அரசால் - ஆளப்பட வேண்டுமா அல்லது மையக்கட்டுப்பாடு இல்லாத அரசே சிறந்ததா? ஆண்டிப்பட்டியையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் பாதிக்கும் ஒவ்வொரு முடிவும் டில்லியில் தான் எடுக்கப்பட வேண்டுமா?

பன்முகமா, அடிப்படைவாதமா என்னும் விவாதம்: பல இனக்குடிகள் இருக்கும் நாட்டில் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட (மேற்கத்திய நாடுகளின் கவர்ச்சியில் ஏற்பட்டது என்று தாக்கப்படும்) மதற்சார்பின்மை இன்றியமையாததா அல்லது இந்தியா, மற்ற பல மூன்றாம் உலக நாடுகள் போல, ஏறக்குறைய நம் எல்லா அண்டைநாடுகள் போல, நம்முடைய பிரத்யேக மத அடையாளத்துடன் திகழ்வதில் நாட்டம் செலுத்த வேண்டுமா?

கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா சுயச்சார்மையா விவாதம்: நாற்பது ஆண்டுகளாக தன்-நிறைவு என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்த இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு தன் கதவுகளை இன்னும் திறக்க வேண்டுமா அல்லது மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் அதன் ஊடே, அனுமதிக்கவே தகாத சீரழிவுகளை இந்திய சமுதாயத்தில் கொணருமா?
MTV யின் கேடுவிளைவிக்கும் மோகவலையில் இருந்து நம் இளைஞர்களைப் பாதுகாக்க, வேலிகளை உயர்த்த வேண்டுமா?

நான் என்னுடைய புத்தகத்தில் சொல்லாத ஐந்தாம் விவாதமும் இருக்கிறது. என்னுடைய அப்போதைய எஜமானர்களான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளித்து அதை எழுதவில்லை. துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவாதம்: தேசப்பாதுகாப்பு செலவா அல்லது வளர்ச்சிக்கான நிதியா என்னும் விவாதம். பயங்கரவாதத்தின் புது அச்சுறுத்தல்களுடனும் புதுப்பிக்கப்படும் அணு ஆயுதப் போரின் சாத்தியங்களிலும் தொடங்கிய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தற்போது இராணுவப் பாதுகாப்பு (அயல் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது)அவசியம் என்பவர்களுக்கும் மனிதப் பாதுகாப்பே (பசிப்பிணியிலிருந்தும், வாழ்வில் நம்பிக்கை இழந்த நிலையிலிருந்தும் விடுதலை) அத்தியாவசியம் என்னும் குழுவினருக்கும் கொள்கைப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு நாடு தன்னிச்சையாக வளர்ச்சி காண முடியாது என்னும் வாதத்தை மறுக்க முடியாது எனினும் வளர்ச்சி இல்லாத நாட்டுக்கு எதற்கு பாதுகாப்பு என்னும் வாதத்தையும் மறுக்க இயலாது.

மேற்கூறிய அனைத்தும் வெறும் அறிவுஜீவித் தனமான விவாதங்களல்ல. இவை தேசிய, உலக அரங்குகளில் அரங்கேற்றப்படுபவை. நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எத்தகைய இந்தியாவை நம் குழந்தைகள் சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நிர்ணயிக்கும். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியர்கள் உலக மக்கட் தொகையில் ஆறில் ஒரு பங்கு இருந்ததால், இந்த முடிவுகள் உலகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

இப்ப மீண்டும் நான். என்ன? மண்டை காயுதா? முன்னுரை கொஞ்சம் இறுக்கமான மொழியில் தான் இருக்கிறது. போகப் போக ..... நீங்கள் இந்த மொழிக்குப் பழகி விடுவீர்கள். எவ்வளவு பதிவுகள் நமீதா இடுப்பு, சச்சின் கவர் டிரைவ், அனுஜன்யா கவிதைகள், தமன்னா ஸ்டில்ஸ் என்று அதி முக்கிய விஷயங்கள் படிக்கிறோம். கொஞ்சம் ஓய்வெடுக்க இந்த மாதிரியும் படிக்கலாமேன்னு.....

இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?

Saturday, October 24, 2009

பற்றியும் பற்றாமலும் - காங்கிரஸின் ஏறுமுகம்-சிவசேனையின் வீழ்ச்சி மற்றும் சில

ஒரு வழியாக மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. காங்கிரசுக்கு இப்போது சுக்கிர தசை. செல்லுமிடமெல்லாம் வெல்லுகிறது. பூவோடு நாராக பவாரின் கட்சியும் மணக்கிறது. சிவசேனைக்கு பெருத்த பின்னடைவு. பி.ஜெ.பி. கேட்கவே வேண்டாம். சிவசேனை/பி.ஜெ.பி. கூட்டணியின் வாய்ப்புகளை (சுமார் 44 தொகுதிகளில்) ராஜ் தாக்கரேயின் MNS கட்சி பாதித்து இருக்கிறது. முதல் முறை பங்கேற்ற இந்தத் தேர்தலில் 13 இடங்கள்; அதிலும் மும்பையில் ஆறு இடங்கள் என்று அமர்க்கள அறிமுகம் அந்தக் கட்சிக்கு. பொதுவாக வேறு மாநில மக்களுக்கும், குறிப்பாக உ.பி./பீகார் மக்களுக்கும் இது சற்று பீதி தரும் செய்தி. அறுபதுகளில் திராவிட இயக்கங்களின் தீவிரம் ராஜ் தாக்கரேவிடம் காணலாம். போலவே, பதவி சுகம் கிடைத்ததும் நீர்த்துப் போய்விடும் என்றும் நம்பலாம். ஆந்திராவிலிருந்து இருபது வருடங்கள் முன்பு வந்து மும்பையில் வாழ்க்கை அமைத்துக் கொண்ட மூர்த்தி என்னும் நண்பர் "இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி ஒரு குறுகலான சிந்தனையா" என்று ராஜ் தாக்கரே பற்றி கவலைப்பட்டார். நம் தமிழ் இணையத்தில் காணக்கிடைக்கும் தமிழ் jingoism பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாததால் அவர் இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறது.

“சார், எத்தனை தடவ சொல்லுறது - அரசியல் பேசாதீங்கன்னு” என்று டீக்கடைக்காரர் விரட்டுவதால்....

******************************************************

SAP என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தின் தலைவரான ரன்ஜன் தாஸ் என்னும் 42 வயது இளைஞர், உடற்பயிற்சி செய்து முடிந்ததும், பலமான மாரடைப்பால் உடனே மரணமடைந்த செய்தி, தினம் அலுவலகம்-வீடு-அலுவலகம் என்று சுழலும் பலரை கொஞ்ச நேரமாவது கவலைப்பட வைத்தது. குவஹாத்தியில் பிறந்து, அமெரிக்காவில் MIT/Horward என்று அமர்க்களம் செய்த அவருக்கு குடி/புகைப்பிடித்தல் போன்ற எந்தப் பழக்கங்களும் இல்லை என்பது ஆச்சரியத் தகவல். இந்திய மென்பொருள் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான Nasscom ன் தலைவராக இருந்த தேவாங் மேத்தா தன் 40 வயதுக்குச் சில மாதங்கள் முன் சிட்னி மருத்துவமனையில் இறந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். கொஞ்ச நாட்களாகவே 'இந்தியர்களுக்கு மற்ற இன மக்களைக் காட்டிலும் இதய நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று பல அறிக்கைகள் வருவது நினைவுக்கு வந்தது. இந்த பயங்களாலேயே நம்ம நண்பர் தேவன்மாயம் உடல் நலம்/நோய் அறிகுறிகள் பற்றி எழுதி வரும் பல இடுகைகளை படிக்காமலே நகர்ந்து விட்டேன். கொஞ்ச நாட்கள் முன்பு துவங்கியிருந்த காலை மென்-ஓட்டத்தை சோம்பல் நிமித்தம் நிறுத்தி இருந்தவனைக் கடிந்துகொண்ட (ச்சும்மா) மனைவியிடம் 'ரொம்ப எக்சசைஸ் செய்தாலும் ஆபத்து' என்று செய்தித்தாளைக் காண்பித்தேன். மொக்கை எழுதி பரஸ்பரம் சொறிந்துகொள்ளும் பிரபலங்களை ஈனமாகப் பார்க்கும் அறிவுஜீவி போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு 'இது தேறாத கேஸ்' என்று நகர்ந்து விட்டாள்.

******************************************************

நீங்கள் எல்லாம் எப்படியோ தெரியாது. எனக்கு அறிவியல் என்றாலே .....உங்களுக்கு நான் எழுதும் கவிதை போல. கன்னா பின்னா அலர்ஜி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, இரண்டு வருட இயல்பியல் வகுப்பில் நான் ஊன்றி கவனித்த ஒரே விடயம் எங்கள் ஆசிரியைக்கு இருந்த இலேசான மீசை தான். அப்படிப் பட்ட ஆசாமிக்கு கணினி, அலைபேசி, அட சாதரண தொலைக்காட்சிப்பெட்டி போன்ற வஸ்துகள் தரும் தினசரி தொழில்நுட்பத் தொந்தரவுகள் சொல்லி மாளாது.

ஒரு முறை கார்க்கியிடம் 'டேய், என்னோட ப்ளாகை யாராவது ஹேக் பண்ணிவிட்டால், நீ தான் சரி செய்யணும்' என்றேன். அரை நிமிடம் மௌனம். பிறகு முழுதாக மூன்று நிமிடங்கள் வெடிச்சிரிப்பு சிரித்தான். 'தல...உங்க ப்ளாக...ஹேக் ....சரி சரி அப்படி ஒரு நல்லது நடந்தால், செய்தவருக்கு என் செலவில் பார்ட்டி தருவேன்' என்கிறான். எவ்வளவு பொறாமை பிடித்த மனிதர்கள்!

ரொம்ப நாட்களாகவே காயசண்டிகை வயிறு போல என் அலைபேசியின் பாட்டரி மின்சாரத்தை எந்நேரமும் உண்டபடி இருந்தது. ஆபீஸில் ஒரு geek, 'ஹலோ, ப்ளூ டூத் ஆன்லியே இருக்கு சார். யூஸ் செய்யாத போது ஆஃப் செய்துவிடுங்கள்; வைரஸ் வேறு தாக்கும்' என்றான். கேவலமாக உணர்ந்தாலும், அவனையே ஆஃப் செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். இப்படிப்பட்ட என் போன்றவர்களுக்கு மட்டுமில்லாது, கார்க்கி போன்ற 'up the curve' இளைஞர்களுக்கும் சுவாரஸ்யமான வலைப்பூ PKP அவர்களின் தளம். One of my most favourite bloggers and strongly recommended for all. சத்தமில்லாமல், சச்சரவுகள் இல்லாமல், அனாயாசமாக (450 Followers) சாதனை புரிந்துவரும் அவருக்கு என் வாழ்த்துகள்.


******************************************************
சமீப காலங்களில் என்னைக் கவர்ந்த பதிவர் வானவில் கார்த்திக். வசந்த் குமார் மூலம் இவர் பற்றி அறிந்தேன். கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார். கல்லூரியில் படிக்கும் மாணவர் (தகவல் சரிதானே?) இவ்வளவு ஆர்வத்துடன், அதுவும் கச்சிதமாக, எழுதுவது மகிழ்ச்சியான ஆச்சரியம். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் ஸ்டைல். வெங்கிராஜா, கார்த்திக் போன்றவர்கள் இன்னும் ஐந்து வருடங்களில் விஸ்வரூபம் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. செய்வார்களா?

******************************************************

ஆத்மாநாமின் கவிதைகள் சில:

எழுதுங்கள்

எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்கரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்

உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலி கூடக் கேட்கவில்லை

வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன

எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்



திரும்புதல்

சரக்கென்று
உடல்விரித்துக்
காட்டும்
கற்றாழையின்
நுனியிலிருந்து
துவங்கிற்று வானம்

எங்கெங்கோ
அலைந்து திரிந்து
திரும்பிற்று மனம்

வழக்கம் போல்

கடல் மணல் புல்தரை
சாலை வாகனங்கள்
கோணல் மாணல் மனிதர்கள்
திரும்பிக்கொண்டு
எங்கிருந்து
கப்பல்கள் காத்திருக்கின்றன
திருபிச் செல்ல

நானும் திரும்ப வேண்டும்
தினசரியைப் போல
ஒவ்வொரு நொடியாக
அடுத்த நாள் காலைவரை


******************************************************