Tuesday, March 26, 2013

ஜெமோவின் சமீப சிறுகதைகள் - பற்றியும் பற்றாமலும்


எழுதி ரொம்ப நாட்களாகி விட்டது. எதையாவது எழுதித் துவங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பல நாள்கள் கடந்து விட்டன. சமீப காலங்களில் வாசிப்பு என்று பார்த்தால் மிகவும் குறைந்து விட்டது. அலுவலகத்தில் நிறைய தளங்களுக்குத் தடை. ஐ.டி. ஆசாமி ஜெமோ ரசிகராக இருக்க வேண்டும். அவர் தளம் மட்டும் எப்போதும் தங்கு தடையில்லாமல் வருகிறது. அதுவும் சில நாள்கள் நின்று விடவே கூகிள் ரீடர்ஸ் மூலம் அவர் தளத்து எழுத்துகளை வாசித்தேன். 

ஜெமோ சிறுகதைகளாக எழுதித் தள்ளி வருகிறார். வாசகர்களுக்குக் கொண்டாட்டம் தான். இதுவரை ஐந்து கதைகள் படித்து விட்டேன். கைதிகள், அம்மையப்பம், நிலம், கிடா மற்றும் தீபம். இவற்றில் 
கிடா, தீபம் என்னைப் பொருத்தவரை முதல் மூன்று கதைகளின் வீச்சில் இல்லை. மூன்று பவுண்டரிகளுக்குப் பின் எடுக்கும் இரண்டு சிங்கிள்ஸ் போல. 


நக்சல்களைக் கண்காணிக்கும் காவல் துறை பல்சக்கரத்தின் மிகச் சிறிய மூன்று பற்களின் பார்வையில், ஒரு காவல்காரரே கதை சொல்லியாகக் கதை செல்கிறது. கதையின் தலைப்பும் முதல் சில வரிகளும் இவர்களும் கைதிகள் போலும்; சக கைதி நண்பன் ஒருவன் பிடிபட்டதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைத்தேன். அப்படி இல்லையென்றாலும் கதையின் இறுதியில் திட்டவட்டமாக அதுதான் தோன்றுகிறது. 

வேலையின் கடுமையால் எதிர் மறை உணர்வகளுடன் திரியும் பெருமாள்; ஓரளவு நியாயம் பார்க்கும் நாராயணன்; கதை சொல்லி என்பதால் அனைத்தும் அறிந்த முருகேசன் [ஜெமோவின் நிறைய கதைகள் தன்மையில் வருவதால் கதைசொல்லி மிகச் சாதாரணனாக இருந்தாலும் உணர்வுகளும் விவரணைகளும் நுட்பமாக இருப்பது பொருத்தமாக இல்லையே என்று சிலசமயம் தோன்றுகிறது) என்ற மூன்று காவல்காரர்கள் தருமபுரி காடுகளில் அடிப்படை வசதிகளற்ற சூழலில் நக்சல் இயக்க ஆட்களைக் கண்காணிக்கும் வேலையில் சலிப்புடன் இருக்கும் ஒரு இரவு.  அப்பு என்ற நக்சல் இளைஞன் பிடிபடுவதில் துவங்கி அரசு அதிகார அமைப்பு (இதை இப்படித்தான் எழுதணும் பாஸ்) எப்படி நக்சல் இயக்கத்தினரைக் கையாள்கிறது; அரசாங்கப் பல் சக்கரத்தின் சின்னஞ்சிறிய பற்களான இந்த மூன்று காவல்காரர்கள் எப்படி மேலதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்கும் இயந்திரமாக இயங்க வேண்டியிருக்கிறது என்று விவரிக்கிறது கதை. இந்த மூவரும் சமூகத்தின் அடித்தட்டு நிலைகளிலிருந்து வந்தவர்கள். ஒருவன் விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன்; மற்றொருவன் நாவிதர்கள் குடும்பம்; மூன்றாமவன் கிணறு தோண்டுபவரின் மகன். இப்படிப்பட்ட எளிய பின்புலத்துடன் அரசு வேலைக்கு வந்த இவர்களுக்கு மேலதிரிகாரிகள் செய்யும் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்க இயலாத நிலை; 

பிடிபட்டவனை என்ன செய்வார்கள் என்று முருகேசனுக்குத் தெரிந்தாலும் மனம் அல்லாடுகிறது அவனுக்கு. 

"கொல்லுறது தப்பாக்கும்" என்னும் முருகேசனிடம் "தப்பும் சரியும் பாக்கறவன் என்ன மயுத்துக்கு தொப்பிபோடவந்தே? வக்காளி, உனக்கெல்லாம் சர்க்காரு மாசாமாசம் குடுக்குத சம்பளம் தெண்டம்" என்கிறான் நாராயணன். இதையே உப-மேலதிகாரி கருப்பையா "நாம அடிச்சாத்தான் நமக்கு அடிவிளாது; தொப்பிபோட்டவன் மறுத்துபேசமுடியுமாடே?" என்கிறார். 

காட்டில் ஓடும் முயலைப் பிடித்துக் கொன்று குடலை வீசியெறிவது; உடலைத் தின்பது; குடலை ஒரு பாம்பு விழுங்குவது என்று காட்டு ராஜ்ஜியம் நடப்பதை ஒரு குறியீடாகப் பார்க்கலாம். ஒரு சிறு பறவை சப்தமிட்டுக்கொண்டே இவர்களைத் தொடர்ந்து வந்து அப்புவைக் கொன்று குழியில் தள்ளும் போதெல்லாம் தொடர்ந்து  இவர்களிடம் சப்தமிடுவது எனக்கு மானுடத்தின் மனசாட்சி தான் இது என்று தோன்றியது. எல்லாம் முடிந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் அமைதியான பறவை மீண்டும் மானுடத்தின் 'அல்லலுக்குப் பின் அமைதி இறைஞ்சும்' மனவுணர்வையே நினைவுறுத்தின. 

இறக்கும் தருணத்திலும் சரடை மேலும் இழுத்து சிரமம் தராமல் வெட்டுபவனிடம் புன்னகைத்து 'தேங்க்ஸ்' என்பவன்; தேனீர் கொடுக்கும் காவலாளியிடம் "இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்?" கேட்பவன் - இப்படி மிக மெல்லிய மனதுடன் இருப்பவனை மிகப்பெரிய அபாயமாகப் பார்க்கும் அரசு இயந்திரத்தின் தர்க்கம் புரிந்தாலும் நியாயம் புரியவில்லை. புரிந்தாலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. கதை கேட்கும் நாமும் கைதிகளாகவே நிற்கிறோம். 


ஆவி பறக்க வெளிவரும் இட்டிலிகளை கன்றுக்குட்டி பிரசவத்தில் வெளிவரும் காட்சியுடனும் முட்டை ஓட்டை உடைத்து வெள்ளைக் கோழிக் குஞ்சுகள் வெளிவரும் காட்சியுடனும் காணும் சிறுவன். கதைசொல்லியின் எளிய பாத்திரம் நுண்ணுணர்வுகளுடன் சிந்திப்பது பொருந்தவில்லை என்றே மீண்டும் தோன்றுகிறது. ஜெமோ இதற்கு ஏதேனும் விளக்கம் வைத்திருப்பார்.

' முன்பு கடுக்கன் போட்டிருந்த காதுத் துளைகளில் இரு அரளிமலர்களை செருகி வைத்திருந்த' கிறுக்கனாச்சாரி. அதே சமயம் ஞானச்செருக்கும் இருக்கும் கலைஞன். இன்னொரு ஆச்சாரியைப் பற்றி "அவன் ஆரு? ஆசாரிண்ணா தொளிலறியணும்…அவன் மரங்கொத்தியாக்குமே" என்னும் எக்காளம். 

" மனுஷனுக்குள்ள ஏளு பிசாசுண்டுண்ணுல்லா கதை?" என்று வியாக்கியானம் செய்து, அதில் ஒன்று பசி என்று சொல்லும் இடம் யதார்த்தமும் ஞானமும் ஒன்று சேருமிடம். அதே சமயம் இலவசமாக உணவு பெறுவதை மறுக்கும் 'ஆச்சரிய தர்ம' மனம். வெநதிருப்பதை உறுதி செய்ய ஒரு இட்டிலியில்  விரலால் குத்திப் பார்ப்பதால் முழி விழுந்த இட்டிலிக்கு அம்மையப்பம் என்ற பெயர். அதை அந்த காட்டில் பூத்த மலர் போன்ற யாருமறிந்திராத கலைஞன் "அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா? அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு" என்கிறான். 

சிறு பிள்ளைக்கு அம்மையப்பம் பிடிக்குமென்றால் கடவுளின் இந்தப் பிள்ளைக்கு 'அம்மையப்பன்' பிடித்திருக்கிறது. முந்தைய கதையில் வரும் காவலர்கள் கூட அவசரத்திற்கு உருவாக்கும் ஏணியை இந்த ஆச்சாரியால் கடைசி வரை செய்யவே முடிவதில்லை. மூங்கில் முழுதும் தேன்கூடு போல் ஓட்டைகள் மட்டுமே மிஞ்சுகின்றன. ஆனால் சந்தன மரப்பலகையில் ஆச்சாரி உருவாக்கும் சித்திரங்கள் மனம் பிறழ்ந்தாலும் கலை விலகுவதில்லை என்பதை சொல்கின்றன. ஜெமோ அந்தக் கலைஞனின் கலையை இப்படி விவரிக்கிறார் - 
"அந்த உளியின் நுனியில் இருந்து சிறிய நுணுக்கமான உருவங்கள் எழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முந்தைய கணம் இல்லாமலிருந்தவை. காற்றுக்கு அப்பால் ஒளிக்கு அப்பால் உள்ள ஏதோ ஓர் இடத்தில் இருந்து அவை வந்தன. காற்றை விலக்கி ஒளியை விலக்கி. மெல்லிய கொடிகள் மலர்கள் . அவற்றினூடாகத் துள்ளிய மான்களின் சரடு. துதிக்கை பிணைத்த யானைகளாலான மணிமாலை." கலை உருவாவதை ரசிக்கவும் ஒரு கலை மனது வேண்டும்தானே! 

செதுக்கிய சிவனின் நெஞ்சுக்குழியும், பிரிந்த மனைவி நெஞ்சில் ஏற்றிய ஏக்கக் குழியும், அம்மையின் விரலால் தோன்றிய அப்பக் குழியும் 'அம்மையின் அனுக்கிரகம்' என்று காணும் உன்னதக் கலைஞனின் உன்மத்த மனது ஏணியின் துளைகளைப் போடமுடியாதது ஒரு கவிதையான அநீதி. நுட்பமான கதை. 


மற்ற கதைகள் பற்றியும் எழுத ஆசை. முடியுமா என்று தெரியவில்லை. 

ஒரு கவிதை படிக்கலாமா?

லௌகீகம் 

கடலும் சுருங்கும் 
நெருப்பும் தடுமாறும் 
காற்றின் விரல்களும் 
வெறும் வெளி வீணையில் 
பேசாமல் மடங்கும்;

வானத்தில் 
பரிதியே நின்று 
கிணற்றுள் தன்  பிம்பத்தை 
பட்டம் விட்டாலும் 

குடிதண்ணீர் 
வாளி வீச்சில் 
நடுங்காது நிற்குமா?
அலைக்காமல்தான் 
அள்ள முடியுமா?

****

நல்லா இருக்குல்ல? எழுதியவர் யார் என்று சொல்லுங்களேன். 

Tuesday, September 18, 2012

மாற்றுத் திறன்


இருவருக்கு எதிரில்

தலை குனிந்து
அமர்ந்திருக்கிறான்

மனைவி கோவிலில்
மெய்மறந்திருந்தாள்

அவனுக்குப் பேசும் திறமை
குறைவாக இருக்கிறது

பூங்காவில் மகள்
ஊஞ்சலாடுகிறாள்

வாடிக்கையாளர்களிடம்
தன் நிறுவனத்தின்
அருமை பெருமைகளைப்
பேசக் கூசுகிறான்

சதுரங்கக் காய்களுடன்
காத்திருக்கிறான் நண்பன்

நிறைவேற்றும் சாத்தியங்களற்ற
பொய்களைச் சொல்ல இயலுவதில்லை

இவன் காதலை நிராகரித்தவள்
மீண்டும் வந்திருக்கிறாள்
மகப்பேறுக்காக

வெளியூர் மேலதிகாரியின்
காதல் தோல்விகளை
சாயங்கால வேளைகளில்
அவருடன் குடித்துக் கொண்டே
கேட்டிருக்கலாம்.

வேலைக்காரச் சிறுமியை வருடும்
பணக்கார விரல்களை
அடுத்த முறை கண்டால்
வெட்டிவிட வேண்டும்

கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதிலும்
நேர்மை தவறாத நிர்வாகம்
வெளியேறும் நேர்முகத்தில்
உற்பத்தித் திறன் குறைவு
என்று மட்டும் குறிப்பிட்டது
இடப்பற்றாக் குறையால்?

இப்படிப்பட்ட இரவில்
பூங்காவில் மணியடித்து
கோயிலில் ஊஞ்சலாடி
மகப்பேறுக் காதலியுடன்
சதுரங்கம் விளையாடியதில்
உற்பத்தித் திறன் உயர்ந்ததாக
அந்தச் சிறுமி சொல்லிய போது
தனது பிரத்யேக வனத்துள்
மெல்ல மெல்ல பிரவேசித்தான்


[நவீன விருட்சத்தில் பிரசுரமாகியது]

Thursday, August 9, 2012

காக்கைச் சிறகு






திடீர்னு உள்ள வரச் சொல்லி கைல கடிதம் கொடுத்தார். தார் என்ன? தான். இவனுக்கு எல்லாம் மனசாட்சியே கெடயாதா? பதிமூணு பேர்ல நான் மட்டுந்தான் மாட்னேன். இந்த வருசமும் நோ போனஸ். நோ இன்க்ரிமென்ட். என்னங்கடா? அட்வைஸ் மழை வேற. என்னவோ PIP னு ஒரு ப்ரோக்ராம்ல போடட்டுமான்னு கேக்குறான். துப்பணும் போல வந்தது. சீட்டுக்கு வந்தா எல்லாரும் கருணையா பாக்குறாங்க. கொஞ்சம் அழுகையா வருது. போனஸ்/சம்பள உயர்வு இதெல்லாம் என்னப் பொருத்தவரைக்கும் பண விஷயம் இல்லை. தரமாட்டேன்னு சொல்வதில் ஒரு புறந்தள்ளல் இருக்கு. இன்னிக்கு இது போறும்னு கடைய மூடினேன். யார் கிட்டயும் 'பை' சொல்லாம வெளிய வந்தேன். ஒரு சிகரெட் பிடிக்கலாம்னு தோணிச்சு. இப்பெல்லாம் எங்க சுதந்திரமா சிகரட் பிடிக்க முடியுது? ஆபிஸ் நோ ஸ்மோகிங் ஆபிஸ். இப்ப நோ போனஸ் ஆபிஸ். நோ இன்க்ரிமென்ட் ஆபிஸ். ஐயோ வேணாமே இந்த ஆபிஸ் எழவு!


பாந்த்ராவில் எங்கேயோ போற டபுள் டக்கரில் ஏறி, மாடி ஜன்னலில் அமர்ந்தேன். என்னது? டபுள் டக்கர் இல்லையா? டெக்கரா? அது சரி. நொந்து போயிருக்கும் போது இதையெல்லாம் கவனமா சொல்ல முடியுமா? கலா நகர் சிக்னலில் நின்றது. பக்கத்தில்தான் பால் தாக்ரே வீடு. உடம்பு சரியில்லைன்னு லீலாவதில இருக்காராம். "இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" னு சிரிக்கணும் போல இருக்கு. கண்டக்டர் 'புடே ஜா' னு எல்லாரையும் மராட்டியில் முன்னே விரட்டிக் கொண்டிருந்தான். முன்னேறி என்னடா செய்யப்போறோம்? இலேசா தூரத் தொடங்கியது. மொபைல் வெளிய எடுத்து பாட்டு கேக்க ஆரம்பிச்சேன். "மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே". வாவ். அஸ்வினி நினைவுக்கு வந்தாள். என்ன மாதிரி முகம்! உடனே ஜானுவும். ஜானு.....இப்ப எப்படி இருப்பா? என்ன விட இரண்டு வயசு தானே கம்மி அவளுக்கு? முடி நரைத்திருக்கும். அந்த சுருள்? நிச்சயமா இன்னும் அதே ஒல்லியாதான் இருப்பா. இந்தப் பாட்டு 'கல்யாணி' தெரியுமா? அவதான் சொன்னா. அதுல வீணை நாதம் வரும்போது கண்ணை மூடிக்கொள்வா. அன்னிக்கு ஜெயாவோ விஜய்யோ.. ராஜா ட்ரூப்ல ஒரு பெண் வீணை வாசிக்கும் போஸ் நல்லா இருந்தது. கால தொங்கப் போட்டுக்கொண்டு வாசித்தாள். சரஸ்வதி இப்படித்தான் அமர்ந்து வாசிப்பாளோ! அவள் அமர்ந்திருந்த பலகை ஊஞ்சலாக மாறி ஆடினால் எப்படி இருக்கும்? வீணை வாசிச்சுக்கிட்டே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டே...

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துக்குமாக.
கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?

இப்படி ஒரு ஒட்டுதலின்மையும் ஏகாந்தமும் வாய்க்கப் பெற வேண்டும். அதையும் தாண்டி பற்றற்ற நிலை வருமா? வரத்தான் வேண்டுமா? ஆமாம், ஜானு நீ ஏன் என்னைக் காதலிக்கவில்லை? அல்லது அப்படி சொல்லவாவது இல்லை? பாரு இப்படி ஆபிசில் நாறடிக்கும் போது, உன் மடியில் படுத்து அழணும் போல இருக்கு. முடியுமா? இல்ல முடியுமான்னேன்! உன் கணவன் கோவிச்சுப்பான். இல்ல கொலவெறில துரத்துவான். என்ன சிஸ்டம் இது? மனைவிக்குன்னு சில பழைய சிநேகிதர்கள் அட ஒரே ஒரு சிநேகிதனாவது இருக்கக் கூடாதா? எனக்கு மட்டும் கல்யாணம் ஆகியிருந்தா நிச்சயமா அலவ் பண்ணுவேன். பாரேன் இந்த ரோட்ல நிறைய குழிகள். அதில் நிறையும் குமிழிகள். இந்த மாதிரி என் மூஞ்சியின் குழிகள் எப்ப நிறையும் ஜானு? இந்த அம்மை முகமே நிறைய பேருக்கு அருவருப்போ எரிச்சலோ தருதோ! அதனால தான் போனஸ் தராமலும், காதலைச் சொல்லாமலும் புறக்கணிக்கிறாங்களோ !

ஆமா, ஏன் இந்த உலகம் காசு பணத்துக்கு இப்படி அலையணும்? ஜானு கைய்ய புடிச்சிகிட்டு 'தொடத் தொட மலர்ந்ததென்ன' கேட்பதை விட என்ன சுகம் இருக்க முடியும்! 'இடைவெளி தாண்டாதே; என் வசம் நானில்லை' னு கேக்கும் போதே சிலீர்னு இருக்குல்ல! பஸ் இப்ப பவாய் கிட்ட போயிட்டிருக்கு. அருமையான ஏரி. பெய்யும் மழையில் கண்ணாடித் தரை போல விரிந்து பரந்திருக்கு. ஏரிக்கு அந்தப் பக்கம் எத்தனை மரங்கள்! ஏரியில் முதலைகள் இருக்கு. அந்தப் பக்கம் நிறைய சிறுத்தைகள் கூட. பாம்புகள் கேக்கவே வேண்டாம். இதுங்களப் பார்த்து பயப்படும் மனுசப்பயலா பிறந்தேனே! இந்த மரமாவோ, இந்த நிலமாவோ இருந்தா, ஊர்ந்து செல்லும் பாம்பையும், தாவிச் சீறும் சிறுத்தையையும் சிரித்துக்கொண்டே மடியில் கொஞ்சுவேனே! ஒரு நாளு மண்ணோட மண்ணா ஆகிடுவேன். அப்பவாச்சும் குண்டும் குழியுமா இல்லாம சமவெளியா இருக்கணும். அப்பத்தான் மான்களுக்கும் என்னைப் பிடிக்கும்.

"ஒரு மரத்தடியில்
கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும்
வேர்கள் மேல் கிடக்கிறது ஒரு
மெல்லிய காக்கைச் சிறகு
அது சிறிய உடைவாளைப் போல் இருக்கிறது
அதைச் சில வினாடிகள் என் விலாப்புறத்தில் வைத்து
நானும் பறப்பதை, பகற்கனவு கண்டுகொள்கிறேன்
சட்டைப் பையில் வைத்தால் வெளியே தெரிந்து
விடும்போல் இருக்கிறது
கால் சராயில் வைத்தால் ஒடிந்துவிடுகிறது
இருப்பினும் என் பனியனில் போட்டுக்கொண்டு
திரும்புகிறேன்"

எங்கியோ சுத்தி ரூமுக்கு வந்து சேந்த போது பன்னண்டு மணி. டிவில ஒலிம்பிக்ஸ். குட்டி குட்டி பெண்கள் டென்ஷனா ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணி, தோத்தாலும், வென்றாலும் அழுதாங்க. திட காத்திர ஆண்கள் நான் ஒரு க்ளாஸ் தண்ணி குடிப்பதற்குள் நூறு மீட்டர் ஓடி, கோடீஸ்வரர்கள் ஆகியிருந்தார்கள். அப்படியே தூங்கி விட்டேன். கனவில் குண்டு குண்டு பெண்கள் வலது கழுத்தில் பொடியைப் பூசிக்கொண்டு உலக்கைக் கைகளால் இரும்பு குண்டை தூர எறிந்து கொண்டே இருந்தார்கள். புல்வெளியெங்கும் குழிகள். கடைசியாக எறிந்தவளை இப்படி அழகான புல்வெளியை குழி குழியாக செய்வது நியாயமா என்றேன். குழிகள் ஆனாலும் புல்வெளி அழகுதான் என்று சொல்லிக்கொண்டே புல்வெளியில் புரண்டாள். ஜானு தான் இப்படி கனவில் குண்டுப்பெண்ணாக வந்திருப்பதைப் புரிந்து கொண்டே தூங்கி விட்டேன்.


ஆசுபத்திரியில் தாதி என் ஆடைகளை நீக்கி
பரிசோதனை செய்தபோது - மீண்டும் உதிர்ந்தது
எனது
உடைவாள் சிறகு
மேலும் கீழும் பறந்து
அங்கும் இங்கும் அலைந்து ...
நேற்று இன்றின் இரண்டு பக்கங்களிலும்



# நன்றி பெருந்தேவி மற்றும் தேவதச்சன்

Sunday, July 8, 2012

அனுமானங்கள்









அனுமானங்கள் 

ஜன சந்தடி மிகுந்த
தெரு முனையில்
பேசிக்கொண்டிருந்தனர்
புதுக் காதலர்களா?
குறுகுறுப்பைக் காணவில்லை
மணமானவர்களா?
சலிப்பும் தென்படவில்லை
அல்லது...
இல்லை ஒரு வேளை...
பிரிந்து செல்லத் துவங்கி
தயங்கி அவன் பார்த்தபோது
திரும்பவில்லை
அவள்
திரும்பியபோது
பார்க்கவில்லை அவன்
ஹ்ம்ம்.
‘அல்லது’க்கு ஒரு கதையும்
‘ஒரு வேளை’க்கு ஒரு நிறமும்
தானாகவே சேர்கிறது இப்போது

[நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]

Monday, April 9, 2012

மோட்சப் பிரசாதம்




மோட்சப் பிரசாதம்

காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.  
ஒரு குழந்தை பிறந்ததினால் 
மதியம் கரைந்த சாக்லேட்கள் 
மேசைக்கடியில் குவிந்திருந்த 
இனிப்புத் துகள்கள்  
மாலையில் வசீகரமான 
மஞ்சள் உருண்டைகளுடன் 
வளையம் வந்த ஊழியனிடம் 
எனக்கு இரண்டு கேட்டேன் 
ஒன்றும் பேசாமல் 
மேசைக்கடியில் உருண்டைகளைப்  
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில் 
புதிதாக இறந்திருந்த 
கரப்பானின் மென் மீசை 
என் நாசியை உரசியபடி அலைந்தது    

[அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]

Monday, March 26, 2012

(எதைப்) பற்றியும் பற்றாமலும் - கல்யாணப் பரிசு - ஒரு அனுபவம்



கல்யாணப் பரிசு திரைப்படம் இரண்டு நாள்கள் முன் பார்த்தேன். விளம்பரத் தொந்தரவுகள் இல்லாத நள்ளிரவில் படத்தை ஊன்றிப் பார்க்க முடிந்தது. பொதுவாக சோகப் படங்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் பார்த்து விடுவேன்; சோகக் காட்சிகளை மட்டும் தவிர்த்து விடலாம் என்னும் யோசனையில். மன்னார் & கம்பெனி புகழ் தங்கவேலு, அவர் மனைவி வரும் காட்சிகளை ரசிக்கலாம்னு பார்க்கத் துவங்கி, படம் முழுவதும் பார்த்தேன். இன்றைய அறங்களின் படி நிறைய நெருடல்கள். பெண்ணியம், மனைவியை உதைப்பது, குழந்தையை பெட்ரோல் டேங் மேல் அபாயகரமாக உட்கார வைத்து இரவு முழுதும் நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக மோட்டார் பைக் ஓட்டுவது என்று நிறைய விமர்சிக்கலாம்.  படம் வந்தத் தருணத்தில் அமலில் இருந்த அறங்களுக்கு ஏற்ப படம் இருந்திருக்க வேண்டும். ஆனால், மொத்தத்தில் படம் முழுமையுடன் இருந்ததது. ஸ்ரீதருக்கே உண்டான நேர்த்தியுடன், புத்திசாலித்தனம் கூடிய நளினத்துடன் பட நாயகி இருந்தார். சரோஜா தேவியின் முக்கியப் படங்களுள் இதனைச் சொல்ல வேண்டும். தியாகம், அந்த முடிவுக்குக் கடைசி வரையில் நேர்மையாக இருப்பது போன்ற விசயங்களில் தெளிவு இருந்தது. தற்போதைய தமிழ் படங்களில் பெண்களுக்குத் தரப்படாத முக்கியத்துவம் தமிழ்ப் படங்களின் அபத்தத் தன்மைக்கு முக்கிய காரணம் என்றும் தோன்றுகிறது

இவ்வாறாக சிந்தனை ஓடுகையில் ஒழுங்காக ஒரு சராசரி ஆசாமியாக இருந்தவனை இந்தத் தமிழ் இணையம் எந்த அளவுக்குக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது என்ற ஆயாசமும் வந்தது. 

ஒரு ஆடவனை இரு பெண்கள் விரும்பும் (ஆண் மைய்யப் புனைவு!) படங்களை கல்யாண பரிசிலிருந்து காதல் பரிசு தாண்டி கலாபக் காதலன் வரை வந்திருக்கும் காலங்களை நினைத்துப் பார்த்தேன்.   எனக்கு இந்த மாதிரி அனுபவம் வாய்த்ததா? வாய்த்த வாய்ப்பைத் தவற விட்டேனா? என்றெல்லாம் யோசித்தேன். பள்ளியில் ஒரு அக்கா ஒரு தங்கை இருந்தார்கள். தங்கை என் வகுப்பு. அவள் பெயரும் வசந்தி (கல்யாண பரிசில் கன்னடத்துப் பைங்கிளியின் பெயரும் அஃதே என்பதை நினைவில் கொள்க). அவள் அக்கா பானுமதி ஒரு வயது மூத்தவள். வசந்தி தான் இருவரில் அதிக அழகாய் இருப்பாள். வசந்தியைக் காதலித்த பொதுக் குழுவில் நானும் ஒரு ரகசிய அங்கத்தினராக இருந்ததை நானே பல ஆண்டுகளுக்குப் பின் அறிந்து கொண்டேன். பெரும்பாலான சமயங்களில் பானுமதி, வசந்தி இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒரு முறை ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டு வசந்தியை சைட் அடிப்பதை அவள் பார்த்து விட்டாள். இலேசாக புன்னகையும் செய்தாள். அவள் என்பது நீங்கள் நினைப்பது போல் வசந்தி அல்ல. நான் பயந்தது போல் பானுமதி.    பள்ளியின் கிரிக்கெட் போட்டிகளில் என் சாகசங்களைப் பார்வையிட்டு கை தட்டிய கூட்டத்தில் வசந்தியும் இருந்தாலும் பானுமதியும் கூடவே கை தட்டியது வயிற்றில் புளியைக் கரைத்தது. வசந்தியை மட்டும் தனியே பார்த்து, பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்றெல்லாம் யோசிக்கும் சாமர்த்தியம் அற்றவனாக இருந்தேன். 

இப்படிப்பட்ட காலகட்டத்தில் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவ, வியருக்கு 'இன்பச் சுற்றுலா' என்று எங்கள் பெற்றோர் பட்ஜெட்டிற்கு இணங்க "செஞ்சி, சாத்தனூர், திருவண்ணாமலை" செல்ல முடிவு செய்து வசந்தி வருவதை உறுதி செய்த கொண்ட பின் கிட்டத்தட்ட ஒரு நாற்பது மாணவர்களும் பதிவு செய்து கொண்டோம். பெரும்பாலும் இருவர் கைகோர்த்துக் கொண்டு செல்ல வேண்டிய பள்ளி விதிகளின் படி நிறைய மாணவர்கள் சக தோழர்களுடனும்,  மாணவிகள் தத்தம் தொழியருடனும் இணை சேர்ந்திருந்த பின் வசந்தி தனித்திருந்தாள். மாணவர்களில் பலர் தங்கள் ஜோடிப் பையன்களை உதறித்தள்ளி, சிதறி, தனித்தனி ஆளாக நின்று கொண்டு வசந்தியின் கைப்பிடிக்கும் விண்ணப்பம் போடத் துவங்கினார்கள். கிட்டத் தட்ட பள்ளி மைதானத்தில் அந்தப் பேருந்தின் சமீபத்தில் ஒரு சுயம்வர சூழல் இருந்தது. என்னுடைய குல முன்னோர்கள் பலருக்கு திருமணம், அன்னதானம் என்று எல்லாம் செய்து வைத்த மாதிரி எதுவும் நான் கேள்விப் பட்டதில்லை என்றாலும் அவற்றின் சாத்தியக் கூறுகளை நம்பத் துவங்கினேன். ஆம், வசந்தி என்னருகில் வந்து சுவாதீனமாக என் கையைப் பிடித்து 'எனக்கு ஜன்னல் சீட் தருவ இல்ல' என்றாள். அந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்ப நிலை தாறுமாறாக ஏறத் துவங்கியது. ஒரு ஐம்பது தொடர் பெருமூச்சுகளின் உஷ்ணம், ஏதோ தீய்ந்து போகும் நெடி, பிற பெண்களின் அக்கினிப் பார்வை என்றெல்லாம் சூட்டைக் கிளப்பினாலும் நெஞ்சுக்குள் அடர் வனத்தின் மென்தால் குளிர் ஆதரவளித்தது. 

வசதியும், வசதியின்மையும் புலப்படாத வயதில் அவள் மேனியிலிருந்து கமழ்ந்த மணம் உண்மையிலேயே இயற்கையானது என்று திருவிளையாடல் முத்துராமன் போல நம்பினேன். அதிகாலையின் இளங்காற்றில் அவள் கூந்தலின் சில இழைகள் என் மனம் போலவே படபடத்துக் கொண்டு, அவளிடம் விலகி, நெருங்கி என்று விளையாடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாடலை மெதுவாகப் பாடினாள். ராகம் எதுவும் புலப்படாவிட்டாலும் இரம்மியமாக இருந்தது. கிஷோர் பிடிக்குமா என்றாள். பெயர் தெரிந்தாலும் முகம் தெரியாத வில்லன் மீது கோபம் பெருகுகையில் நீ இந்தி பாட்டெல்லாம் கேக்க மாட்டியா என்றாள். சமாதானமான மனதுடன்  'தில் க்யா கரே' என்று பாடினேன். மலர்ந்து சிரித்து 'நீ லம்போதர' மட்டும் தான் பாடுவேன்னு நினெச்சேன்' என்றாள். எனக்குத் தெரிந்த நாடுகள், தலை நகரங்கள், ஆறுகள் என்று மேதாவிலாசம் எல்லாம் பூந்தமல்லி  வரைகூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்து இறங்கிய போதெல்லாம் மறக்காமல் என் கையைப் பிடித்துக் கொண்டாள். செஞ்சியில் கொளுத்தும் வெய்யிலில் வரலாறு ஆசிரியை தேசிங்கு ராஜா, குதிரை என்று பேசும் போது, 'கொஞ்சம் அலக்சாண்டர் மாதிரி கதை இல்ல' என்ற வசந்தியிடம் உடனே 'ஆமாம்' என்று சொன்னாலும் பி.டி. மாஸ்டர் அலக்சாண்டருக்கும் தேசிங்கு ராஜாவுக்கும் உள்ள தொடர்பு என்ன இருக்கும் என்று மண்டையைக் குடைந்து கொண்டேன். 

சாத்தனூர் அணையில் ஏதோ ஒரு தெலுங்குப் படம் ஷூட்டிங். 'பால ராஜ பொம்மக்கடி; படலக் கடுதி' என்று ஒரே வரியை பலமுறை நாயகனும் நாயகியும் ஸ்டெப்லு ஸ்டெப்லு வாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  சரிந்த புல்வெளியில் மாணவர்கள் சாகசக் குட்டிக்கரணம் அடித்தும், மாணவிகள் எழிலுடன் அமர்ந்து சறுக்கியும் பொழுதைப் போக்குகையில் வசந்தியைப் பார்ப்பதிலேயே என் பொழுது கழிந்தது. சாத்தனூரிலிருந்து திருவண்ணாமலை வரை அவள் பஸ்ஸில் வேறு தோழியுடன் அமர்ந்து கொண்டாள். அவள் எங்கே மனம் மாறி விடுவாளோ என்ற அச்சத்தில் ஒரு தடியன் என்னருகில் அமர்ந்து கொண்டான். காரணம் புரியாமலே எனக்கும் வசந்திக்கும் ஒரு ஊடல் (இதப் பாருடா!) நடந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் எல்லாரும் சென்று வந்த பின்னும், எனக்கு அங்கிருந்து வெளியே வர மனம் வரவில்லை. அந்தக் கோயிலுக்குள் ஏதோ இருக்கணும். ஜ்யோவ் ஸ்டைலில் சொல்லனும்னா 'இதைப் பற்றி பிறகு விரிவாக எழுதணும்'. முழு வாழ்வு வாழ்ந்த ஒரு வெற்றிடம் என் மனதை ஆக்கிரமித்தது. இரவு உணவு சாப்பிட நண்பர்கள், ஆசிரியர்கள் அழைத்த போதும் கோயிலை விட்டு நான் வரவில்லை. கடைசியில் வசந்தி என்னருகில் வந்து அமர்ந்து 'எனக்கு வளையல் வாங்கித் தருவியா' என்று கேட்டபோது மோனத்தவம் கலைந்து முனிபுங்குவர் மேனகையைப் பார்த்த மாதிரி வசந்தியின் கையைப் பிடித்து வளையல் கடைப் பக்கம் சென்று கையில் இருந்த பாக்கெட் மனியில் என் இரு சகோதரிகள் மற்றும் வசந்திக்கு என்று வளையல்கள் வாங்கினேன். பிளாஸ்டிக், ரப்பர் வளைகள். கரும்பச்சை நிறத்தில், ஒளியின் ஒரு கோணத்தில் மின்னும் வளையல்கள்.  அவள் அவற்றை உடனே அணிந்து கொள்ளவில்லை. 

ஞாயிறு முடிந்து திங்கள் காலையில் வசந்தியுடன் பானுமதியைப் பார்த்தேன். கண்கள் சிரிக்க, பானுமதி என் கையைப் பிடித்து 'இந்த வளையல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு' என்றாள். அவள் கைகளில் அந்தக் கரும்பச்சை வளையல்கள் அசந்தர்ப்பமாக மின்னின. அருகில் வசந்தி காவிய மௌனத்தில் விவரிக்க முடியா உணர்ச்சியுடன் இருந்தாள். என்ன சொல்லிவிட்டு விலகினேன் என்று நினைவில்லை. என்ன சொன்னேன்? விலகினேன் என்றேன் இல்ல. ஆமாம். அதற்குப் பின் அவர்கள் இருவரையும் விட்டு விலகி விட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை வசந்தி என்னை விட வேகமாக உயர ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். 

அடுத்த வருடம் பானுமதி பள்ளி இறுதியில் இருந்தாள். பொதுத் தேர்வு முடிந்ததும் அவளுடைய புத்தகத்தில் 'கோல்டன் ஷிப், சில்வர் ஷிப், ஃபிரெண்ட் ஷிப் என்று அப்போதே கவிதை பாணியில் கிறுக்கி விட்டு எங்கே அவள் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் ஓடி விட்டேன். 

வெகு வருடங்கள் பிறகு பானுமதியை ஒரு அங்காடியில் பார்த்தேன். அவளுக்கு என் மீசை முகத்தில் என்னை அடையாளம் தெரிந்திருக்க நியாயமில்லை. மிக வசீகரமாக இருந்தாள். பக்கத்தில் ஒரு ஆடவனும் இருந்தான். மணமாகி இருந்தது. அவர்கள் கார் ஏறுகையில் இன்னொரு தடிமனான பெண் சேர்ந்து கொண்டாள். கூர்ந்து பார்த்ததில் வசந்தி. அவளுக்கும் திருமணம் ஆகி இருந்தது. நிறைய்ய்யய்ய எடை கூடியிருந்தாள்.  கொஞ்சம் சோகமாகவும் நிறைய நிம்மதியாகவும் உணர்ந்தேன். 

இப்படியாக கல்யாணம் என்பது பலருக்குப் பரிசாக விளங்குகிறது. அதாவது சிலரைக் கல்யாணம் செய்து கொள்வதில் வெகு சிலருக்குப் பரிசு. பலரைக் கல்யாணம் செய்து கொள்ளாததில் மிகப் பலருக்குப் பரிசு என்று கொள்க.