Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Saturday, April 3, 2010
அகநாழிகை - ஒரு பார்வை
முதன் முறையாக அகநாழிகை இதழ் படித்தேன். இது மூன்றாவது நாழிகை (இதழ்) என்று நினைக்கிறேன். அட்டைப்படம் சுழன்று நடனமாடும் ஒரு நங்கையின் படத்துடன் நன்றாக இருக்கிறது.
தலையங்கம் ‘விழைவின் பெருங்கனவு’ என்ற தலைப்பில் இலக்கியப் பின்புலத்தில் நிகழும் அரசியல் பற்றி வாசு எழுதியிருக்கிறார். “கவனமற்ற சொல்லாடல்கள், சிதைந்த உரையாடல்கள் நம் மூளைக்குள் தேங்கித் ததும்பி கணங்கள் தோறும் எப்படி எதைச் செய்வது என யோசித்தபடியே வழிந்து கொண்டிருக்கின்றன. இயல் நிகழ்வுகளைத் தவிர்த்து அனிச்சையான செயல் என்பதே அற்றுப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உள்மன விகாரத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுவே பலருக்கு உவகையான வாழ்க்கையாகவும் ஆகிவிட்டிருக்கிறது.” என்று எழுதுகிறார். இதில் நிறைய கசப்பு இருந்தாலும் உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை.
மனுஷ்ய புத்திரனின் நேர்காணலின் தொடர்ச்சி இந்த இதழில் இருக்கிறது. வாசுவின் தளத்தில் இது பதிவேற்றம் செய்யப்பட்டும் இருக்கிறது. ஒரு இலக்கியவாதி ஆளுமையாக வளரும் போது தவிர்க்க முடியாத அரசியல் சூழலை இந்த நேர்காணல் உணர்த்துகிறது. இலக்கிய உலகின் அரசியலைப் பற்றிய பரிச்சயமும் ஆர்வமும் குறைவாக இருப்பதால் அதைப் பற்றிப் பேச அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால் மனுஷ்ய புத்திரன் நவீன தமிழ்க் கவிதை பற்றிச் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது.
“நவீன தமிழ்க் கவிதையின் பாசாங்கான பூடகத்தையும் இறுக்கத்தையும் என் கவிதைகள் தளர்த்த முயற்சித்திருக்கின்றன. உரையாடலின் சாத்தியங்ளை அதிகமான கவிதைகளுக்குள் கொண்டு வருவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன். மேலும் பிரத்யேகமான அனுபவங்களை கவிதைக்குள் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் நாம் எதிர்கொண்டு கடந்து செல்லும் அல்லது கடந்து செல்ல முடியாமல் தத்தளிக்கும் பொதுவான அனுபவங்களை நான் கவிதைக்குள் கொண்டு வருகிறேன்.” என்கிறார். உண்மை தான். இத்தகைய கவிதைகளே பெரும்பான்மை வாசகர்களைக் கவரவும் செய்கின்றன. ஆயினும் எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்.
எனக்குப் பிரியமான கவிஞர் ரெளத்ரன் இந்த இதழில் ‘ரெஜியின் பூனை’ என்ற சிறுகதை எழுதி இருக்கிறார். இது போன்ற கதைகளை ஏற்கெனவே படித்த உணர்வு எப்படியோ வந்தது. ஒரு வேளை நிறைய படைப்பாளிகள் அலுக்கும் அளவுக்கு பூனைகள் மீது கவனம் செலுத்துவதால் வந்த ஆயாசம் என்று கொள்ளலாம். ஆனால் கதையின் நடையும், பூடகத் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்தது. பூனைகளைப் பற்றிய அவதானிப்பும் சுவாரஸ்யம். – “ நாய்களைப் போல் பூனைகளை சில ரொட்டித் துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது. பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை” – “பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல. அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன. பூனைகளின் மொழி கவிதையால் ஆனது’ என்றெல்லாம் சொல்கிறார்.
சத்யஜித்ரேயின் பெங்காலிக் கதையை ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கவிதாயினி நதியலை. ‘சஷ்மலின் வினோத இரவு’ என்னும் கதை சுவாரஸ்யம். அழகாக மொழியாக்கம் செய்திருக்கும் நதியலையைப் பாராட்ட வேண்டும்.
மற்றொரு சிறுகதை சாந்தன் எழுதிய ‘கோழை’. கதையில் இறுதியில் வரும் ‘அடி வயிற்று விம்மல்’ நாம் அனைவரும் ஒரு தினம் அனுபவித்தது அல்லது அனுபவிக்கப் போவது என்பது நடைமுறை யதார்த்தம்.
கமலாதாஸ் எழுதிய சிறுகதையை ‘பிண ஆய்வாளன்’ என்னும் தலைப்பில் தி.சு.சதாசிவம் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொழியாக்கத்தில் எதிர்ப்படும் சிக்கல்கள் இந்தக் கதையிலும் இடர்ப்படுவதை உணர்ந்தேன். எதனாலோ இந்தக் கதை மனதைக் கவரவேயில்லை.
இந்த விதத்தில் நான் எஸ்.ஷங்கர நாராயணன் மொழியாக்கம் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு மொழிபெயர்ப்புக் கதை படிக்கும் உணர்வே வருவதில்லை. அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் கதையின் தலைப்பு ‘முதல் வேலை’ என்று வருவதற்குப் பதில் ‘முதல் வேளை’ என்று வந்து விட்டதென்று நினைக்கிறேன்.
நம்ம அய்யனாரின் கட்டுரை ‘மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் : துபாய் திரைப்பட விழா’ நான் ஏற்கெனவே அவர் தளத்தில் படித்து விட்டேன். அவசியம் படிக்க வேண்டிய இடுகை.
போலவே வா.மணிகண்டன் ‘கவிஞன் ஏன் காணாமல் போகிறான்’ என்னும் கட்டுரை எழுதியிருக்கிறார். கவிதையில் நாட்டமிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
லாவண்யாவின் அகத்திணை கட்டுரையும் நல்ல வாசிப்பனுபவம்.
நூல் மதிப்புரை பகுதியில் கே.ஸ்டாலின் எழுதியிருக்கும் ‘பாழ் மண்டபமொன்றின் வரைபடம்’ என்னும் கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம் ‘மொழி’ அவர்கள் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள்.
வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது
என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு
என்ற கவிதை கவர்ந்தது.
இதழ் முழுவதும் கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் பதிவுலகுக் கவிஞர்கள் எழுதியது. நல்லா இருக்கு.
அச்சு மற்றும் தாளின் தரம் நிச்சயம் மேம்பட வேண்டும். நிதி நிலைமை தெரியாமல் விமர்சிப்பது சுலபம். மேலும் இலக்கியத்திற்கு இவை அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது.
மொத்தத்தில் நல்ல வாசிப்பனுபவம். ‘இலக்கிய சேவை’ என்று வாசு தைரியமாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
Monday, December 14, 2009
நர்சிம்மின் 'அய்யனார் கம்மா' - நூல் விமர்சனம்
நூல் விமர்சனம் எல்லாம் செய்யுமளவுக்கு பெரிய ஆளாக வரணும்னு ஆசை இன்னமும் இருக்கு. ஆனால், எதையுமே விமர்சனம்னு செய்ய அரை மனசு தான் வருது. புகழ்வது சுலபம். ஆக்கபூர்வமாக இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் செய்வது என்னால் இதுவரை இயலவில்லை. என்னுடைய பின்னூட்டங்கள் கூட பெரும்பாலும் மெல்லிய புகழ்ச்சி அல்லது நெருங்கியவர்கள் என்றால் கலாய்ப்பு என்ற தொனியிலேயே இருப்பதைக் கவனித்து இருப்பீர்கள். நாங்கள் சிறுவயதில் கிரிக்கெட் ஆடுகையில் முதல் இரண்டு பந்துகள் 'டிரையல்' போட்டுவிட்டு பிறகே 'ஆல் ரியல்ஸ்' என்று துவங்குவோம். அது போல, என்னுடைய முதல் புத்தக விமர்சனம் (ஆக்கபூர்வ எதிர்மறை விமர்சனங்களுடன்) துவங்க எழுத்தாள நண்பன் நர்சிம்மை விடவோ, பதிப்பிக்கும் நண்பன் வாசுவை விடவோ 'டிரையல்' இடம் கிடைக்காது. பீடிகை போதும். Here we go.
'அய்யனார் கம்மா' - அருமையான பெயர். புத்தகத்தின் தலைப்புக்கு முதலில் ஒரு சபாஷ்.
முகப்பு புகைப்படம். அட்டகாசம். மிக அழகாக இருக்கிறது. பின் அட்டை புகைப்பட அழகு பற்றி எழுத்தாளரின் துணைவியாரிடம் கருத்து கேட்பது உசிதம். உண்மையான விமர்சனம் வெளிவரக்கூடும்.
இதில் உள்ள பெரும்பாலான கதைகளை வாசித்து இருக்கிறேன். அதனால், புத்தகத்தை சற்று அசுவாரஸ்யமாகவே பிரித்தேன். அய்யனார் கம்மா கதையும் படித்த கதை. ஆனால், நம்புவது உங்கள் இஷ்டம். புத்தக வடிவில், அச்சு வடிவில், இந்தக் கதை வேறு மாதிரி இருந்தது. சுண்டி உள்ளே இழுத்துக் கொண்டே சென்றது கதை. இலாடம் அடிப்பது பற்றி, இந்த 'ஹசிலி பிசிலி' யுகத்தில் இவ்வளவு துல்லிய விவரணைகளுடன் சொல்வது, சொல்வதை இத்தனை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு நிறைய திறமை வேண்டும். மாட்டைப் படுக்க வைப்பது; முகத்தைப் பார்க்கவே கூடாது என்னும் எச்சரிக்கை செய்வது; துள்ளி எழுந்து நின்றாலும், நடக்கத் தயங்கும் என்னும் அவதானிப்பு; சரியான தகவல்கள் இருந்தாலே பாதி கதை தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது என்று புரிய வைக்கிறார்.
கதையின் முடிவு எதிர்பார்க்கவே முடியாததாக இல்லை என்றாலும் கச்சிதம். வர்ணனைகள் இவரின் மிகப்பெரிய பலம். தெற்குப் பகுதியின் வட்டார மொழியும் இவருக்கு இலகுவில் வருவதால் மாறுபட்ட களங்களில் இவரால் எழுத முடிகிறது; முடியும்.
அடுத்து தந்தையுமானவன். உலுக்கி விடும் கதை. நிறைய உணர்வுகளை உந்தும் வாய்ப்பு கிடைத்தும், அடக்கி வாசித்து முடிவில் நம்மை கனமாக அனுப்பும் உத்தியை கையாண்டிருக்கிறார்.
திகட்டத் திகட்டக் காதல் - எனக்குப் பிடித்தது. சரளமான, அதே சமயம் மிகத் துள்ளலுடன் செல்லாத கதை. நெடுஞ்சாலையில் ஸ்டெடியாக நூறு கி.மீ. வேகத்தில் செல்கையில் ஒரு cool confidence வருமே. அந்த உணர்வு இதில் வருகிறது. இந்தக் கதையிலும் மதுரை வட்டார, பதிண்ம பருவத்தினரின் கேலி, கிண்டல், ரவுசு எல்லாம் ரவுண்டு கட்டி வருகிறது.
இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை 'செம்பட்டைக் கிழவி'. பிரமாதமான வர்ணனைகள். கிராம மக்களின் எளிய வாழ்க்கை பற்றி 'இருபது இருபத்தைந்து கிலோமீட்டர் சுற்றளவில் பெரு வாழ்க்கை வாழ்ந்து விடும் கிராம மக்கள்' என்கிறார். கிணற்றுக் குளியலின் சூட்சுமங்களை விவரிக்கிறார். வளர்ப்பு மாட்டுடன் பேசும் கருத்தபாண்டி நமக்கும் நெருக்கமாகிறான். மந்தை பற்றிய வர்ணனை, இளந்தாரிக் கல் (முதல் மரியாதை ஞாபகம் வருகிறதா?) பற்றிய விவரம் என்று அதகளம். இந்தக் கதை பிடித்திருப்பதற்கு காரணம், நேரிடையாக பெரிதாகச் சொல்லாமல், நாம் சொல்ல முடியாத உணர்வுகளைத் தூண்டி விடுவதே. ஒரு பாட்டிக்கும், பேரனுக்கும் இருக்கும் உறவை, நட்பை இதற்கு முன் நாஞ்சில் நாடனின் 'என்பிலதனை வெய்யில் காயும்' புத்தகத்தில் படித்த நினைவு.
'ஞாபகமாய் ஒரு உதவி' - 'நச்' போட்டிக்குச் செல்ல வேண்டிய கதை. வெகுஜனக் கதையின் எல்லா சாமுத்ரீகா இலட்சணங்களுடன் பகீர் முடிவுடனான கதை.
மரணம் - மெல்லச் சாகும் ஒருவனின், அவன் நண்பனின் சூழலை மெல்லிய வலியுடன் சொல்லும் கதை. எதிர் பாராத திருப்பங்கள் என்று எதுவும் முயலாமல் யதார்த்தம் காட்டிய நல்ல கதை. ஒரு குறுநாவலுக்குண்டான விஷயம் சிறுகதைக்குள் அடைக்கையில் உள்ள சிக்கல் இதிலும் இருக்கிறது.
சந்தர்ப்ப வதம் கதையை 'நச்' ரகத்தில் மட்டும் தள்ளி விட முடியாது. Hypocracy மட்டுமில்லாது ஆணாதிக்கம் பற்றி மெல்லச் சொல்கிறது. ஆயினும் கச்சித வெகுஜனக் கதை.
தலைவர்கள் கதை பதிவில் படித்து மறந்து விட்டதால், இது அரசியல் நிலையைச் சாடும் ஒரு கதை என்று எண்ணி படித்தேன். பள்ளிப் பருவத்தில் நடந்த நகைச் சுவையை அங்கதமாகச் சொல்லியிருக்கும் கதை. இது கதையா என்று கேட்கலாம். அல்லது நகைச்சுவைப் பிரியர்கள் என்றால் கேள்வி கேட்காமல் ரசித்து விட்டும் போகலாம்.
மனக்குரங்கு, தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப் பெட்டி போன்ற பல கதைகளை சலிக்கும் வரை ஆ.வி., குமுதம், கல்கியில் படித்து முடித்தாயிற்று. அத்துடன், சிறுகதை என்பது இலக்கியத்திற்கு நல்ல வடிவம். கூடிய வரை வார்த்தை விளையாட்டுகளைத் தவிர்ப்பது (நான் செய்வேனா என்று கேட்கக் கூடாது) நலம். குறிப்பாகத் தலைப்புகளில். ம'ரணம்', சந்தர்ப்ப 'வதம்', மா'நரகம்' என்றெல்லாம் தலைப்பு வைத்து வாசகர்களின் புரிதலைக் குறைத்து அளவிட வேண்டாம். மாநகரம் என்று வைத்திருந்தால் நீங்கள் சொல்ல வந்த கோபம் இன்னும் காட்டமாக இருந்திருக்கும்.
'அன்பின்' ஒரு ஆச்சரியம். எழுதும் முன் ஆசிரியர் வண்ண நிலவன் படித்திருப்பார் என்று ஐயப்படும் நடை. தவிர்த்து பிரமாதமாக இல்லை.
மொத்தத்தில் கடைசி ஆறு-ஏழு கதைகள், முதல் ஆறு கதைகளின் தளத்தில் இல்லை என்பது தெளிவு. போலவே, வர்ணனைகள் ஆசிரியரின் ஆகப்பெரும் பலம் என்றாலும், கதையின் போக்கிற்கு அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இல்லாவிடில் ஆசிரியர் தன மேதமையைக் காட்டிக்கொள்ள முயலும் தோற்றம் கிடைக்கும்.
சிறுகதை என்பது குறைந்தது ஐந்து/ஆறு பக்கங்களாவது இருந்தால் தான் தேவைப்பட்ட ஆழத்தைத் தொட முடியும். சிறு ஓடைகளில் கப்பல்கள் மிதப்பதோ, பேருந்து நிறுத்தங்களில் விமானங்களோ வந்திறங்க முடியாதல்லவா.
ஆயினும், முதல் தொகுப்பு என்னும் கோணத்தில் சிறந்த துவக்கம் என்றே சொல்ல வேண்டும். நிறைய பேரைச் சென்றடையாத எழுத்து, அது நல்ல இலக்கியமாகவே இருந்தாலும், அதிக பயனில்லை. அதே சமயம், வெகுஜனம் என்ற போர்வையில் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது பெரிய குற்றம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இடம் எல்லோருக்கும் இலகுவில் வராது. அதைப் பிடிக்க முயலுங்கள் நர்சிம். அதுதான் உங்கள் இடம். ஆனால் அது அத்தனை எளிதல்ல. கருப்பொருள், கதை சொல்லும் திறன், நடை இவற்றுடன் வடிவத்தில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். செய்வீர்களா?
பதிவுலகிலிருந்து வெளியுலகிற்கு செல்லும் உங்களைக் கறாராக விமர்சிப்பது உங்கள் நன்மைக்கு தான்.
நூல் :அய்யனார் கம்மா (சிறுகதைகள்)
ஆசிரியர் : நர்சிம்
பக்கங்கள் : 72
விலை : ரூ.40
வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010
'அய்யனார் கம்மா' - அருமையான பெயர். புத்தகத்தின் தலைப்புக்கு முதலில் ஒரு சபாஷ்.
முகப்பு புகைப்படம். அட்டகாசம். மிக அழகாக இருக்கிறது. பின் அட்டை புகைப்பட அழகு பற்றி எழுத்தாளரின் துணைவியாரிடம் கருத்து கேட்பது உசிதம். உண்மையான விமர்சனம் வெளிவரக்கூடும்.
இதில் உள்ள பெரும்பாலான கதைகளை வாசித்து இருக்கிறேன். அதனால், புத்தகத்தை சற்று அசுவாரஸ்யமாகவே பிரித்தேன். அய்யனார் கம்மா கதையும் படித்த கதை. ஆனால், நம்புவது உங்கள் இஷ்டம். புத்தக வடிவில், அச்சு வடிவில், இந்தக் கதை வேறு மாதிரி இருந்தது. சுண்டி உள்ளே இழுத்துக் கொண்டே சென்றது கதை. இலாடம் அடிப்பது பற்றி, இந்த 'ஹசிலி பிசிலி' யுகத்தில் இவ்வளவு துல்லிய விவரணைகளுடன் சொல்வது, சொல்வதை இத்தனை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு நிறைய திறமை வேண்டும். மாட்டைப் படுக்க வைப்பது; முகத்தைப் பார்க்கவே கூடாது என்னும் எச்சரிக்கை செய்வது; துள்ளி எழுந்து நின்றாலும், நடக்கத் தயங்கும் என்னும் அவதானிப்பு; சரியான தகவல்கள் இருந்தாலே பாதி கதை தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது என்று புரிய வைக்கிறார்.
கதையின் முடிவு எதிர்பார்க்கவே முடியாததாக இல்லை என்றாலும் கச்சிதம். வர்ணனைகள் இவரின் மிகப்பெரிய பலம். தெற்குப் பகுதியின் வட்டார மொழியும் இவருக்கு இலகுவில் வருவதால் மாறுபட்ட களங்களில் இவரால் எழுத முடிகிறது; முடியும்.
அடுத்து தந்தையுமானவன். உலுக்கி விடும் கதை. நிறைய உணர்வுகளை உந்தும் வாய்ப்பு கிடைத்தும், அடக்கி வாசித்து முடிவில் நம்மை கனமாக அனுப்பும் உத்தியை கையாண்டிருக்கிறார்.
திகட்டத் திகட்டக் காதல் - எனக்குப் பிடித்தது. சரளமான, அதே சமயம் மிகத் துள்ளலுடன் செல்லாத கதை. நெடுஞ்சாலையில் ஸ்டெடியாக நூறு கி.மீ. வேகத்தில் செல்கையில் ஒரு cool confidence வருமே. அந்த உணர்வு இதில் வருகிறது. இந்தக் கதையிலும் மதுரை வட்டார, பதிண்ம பருவத்தினரின் கேலி, கிண்டல், ரவுசு எல்லாம் ரவுண்டு கட்டி வருகிறது.
இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை 'செம்பட்டைக் கிழவி'. பிரமாதமான வர்ணனைகள். கிராம மக்களின் எளிய வாழ்க்கை பற்றி 'இருபது இருபத்தைந்து கிலோமீட்டர் சுற்றளவில் பெரு வாழ்க்கை வாழ்ந்து விடும் கிராம மக்கள்' என்கிறார். கிணற்றுக் குளியலின் சூட்சுமங்களை விவரிக்கிறார். வளர்ப்பு மாட்டுடன் பேசும் கருத்தபாண்டி நமக்கும் நெருக்கமாகிறான். மந்தை பற்றிய வர்ணனை, இளந்தாரிக் கல் (முதல் மரியாதை ஞாபகம் வருகிறதா?) பற்றிய விவரம் என்று அதகளம். இந்தக் கதை பிடித்திருப்பதற்கு காரணம், நேரிடையாக பெரிதாகச் சொல்லாமல், நாம் சொல்ல முடியாத உணர்வுகளைத் தூண்டி விடுவதே. ஒரு பாட்டிக்கும், பேரனுக்கும் இருக்கும் உறவை, நட்பை இதற்கு முன் நாஞ்சில் நாடனின் 'என்பிலதனை வெய்யில் காயும்' புத்தகத்தில் படித்த நினைவு.
'ஞாபகமாய் ஒரு உதவி' - 'நச்' போட்டிக்குச் செல்ல வேண்டிய கதை. வெகுஜனக் கதையின் எல்லா சாமுத்ரீகா இலட்சணங்களுடன் பகீர் முடிவுடனான கதை.
மரணம் - மெல்லச் சாகும் ஒருவனின், அவன் நண்பனின் சூழலை மெல்லிய வலியுடன் சொல்லும் கதை. எதிர் பாராத திருப்பங்கள் என்று எதுவும் முயலாமல் யதார்த்தம் காட்டிய நல்ல கதை. ஒரு குறுநாவலுக்குண்டான விஷயம் சிறுகதைக்குள் அடைக்கையில் உள்ள சிக்கல் இதிலும் இருக்கிறது.
சந்தர்ப்ப வதம் கதையை 'நச்' ரகத்தில் மட்டும் தள்ளி விட முடியாது. Hypocracy மட்டுமில்லாது ஆணாதிக்கம் பற்றி மெல்லச் சொல்கிறது. ஆயினும் கச்சித வெகுஜனக் கதை.
தலைவர்கள் கதை பதிவில் படித்து மறந்து விட்டதால், இது அரசியல் நிலையைச் சாடும் ஒரு கதை என்று எண்ணி படித்தேன். பள்ளிப் பருவத்தில் நடந்த நகைச் சுவையை அங்கதமாகச் சொல்லியிருக்கும் கதை. இது கதையா என்று கேட்கலாம். அல்லது நகைச்சுவைப் பிரியர்கள் என்றால் கேள்வி கேட்காமல் ரசித்து விட்டும் போகலாம்.
மனக்குரங்கு, தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப் பெட்டி போன்ற பல கதைகளை சலிக்கும் வரை ஆ.வி., குமுதம், கல்கியில் படித்து முடித்தாயிற்று. அத்துடன், சிறுகதை என்பது இலக்கியத்திற்கு நல்ல வடிவம். கூடிய வரை வார்த்தை விளையாட்டுகளைத் தவிர்ப்பது (நான் செய்வேனா என்று கேட்கக் கூடாது) நலம். குறிப்பாகத் தலைப்புகளில். ம'ரணம்', சந்தர்ப்ப 'வதம்', மா'நரகம்' என்றெல்லாம் தலைப்பு வைத்து வாசகர்களின் புரிதலைக் குறைத்து அளவிட வேண்டாம். மாநகரம் என்று வைத்திருந்தால் நீங்கள் சொல்ல வந்த கோபம் இன்னும் காட்டமாக இருந்திருக்கும்.
'அன்பின்' ஒரு ஆச்சரியம். எழுதும் முன் ஆசிரியர் வண்ண நிலவன் படித்திருப்பார் என்று ஐயப்படும் நடை. தவிர்த்து பிரமாதமாக இல்லை.
மொத்தத்தில் கடைசி ஆறு-ஏழு கதைகள், முதல் ஆறு கதைகளின் தளத்தில் இல்லை என்பது தெளிவு. போலவே, வர்ணனைகள் ஆசிரியரின் ஆகப்பெரும் பலம் என்றாலும், கதையின் போக்கிற்கு அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இல்லாவிடில் ஆசிரியர் தன மேதமையைக் காட்டிக்கொள்ள முயலும் தோற்றம் கிடைக்கும்.
சிறுகதை என்பது குறைந்தது ஐந்து/ஆறு பக்கங்களாவது இருந்தால் தான் தேவைப்பட்ட ஆழத்தைத் தொட முடியும். சிறு ஓடைகளில் கப்பல்கள் மிதப்பதோ, பேருந்து நிறுத்தங்களில் விமானங்களோ வந்திறங்க முடியாதல்லவா.
ஆயினும், முதல் தொகுப்பு என்னும் கோணத்தில் சிறந்த துவக்கம் என்றே சொல்ல வேண்டும். நிறைய பேரைச் சென்றடையாத எழுத்து, அது நல்ல இலக்கியமாகவே இருந்தாலும், அதிக பயனில்லை. அதே சமயம், வெகுஜனம் என்ற போர்வையில் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது பெரிய குற்றம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இடம் எல்லோருக்கும் இலகுவில் வராது. அதைப் பிடிக்க முயலுங்கள் நர்சிம். அதுதான் உங்கள் இடம். ஆனால் அது அத்தனை எளிதல்ல. கருப்பொருள், கதை சொல்லும் திறன், நடை இவற்றுடன் வடிவத்தில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். செய்வீர்களா?
பதிவுலகிலிருந்து வெளியுலகிற்கு செல்லும் உங்களைக் கறாராக விமர்சிப்பது உங்கள் நன்மைக்கு தான்.
நூல் :அய்யனார் கம்மா (சிறுகதைகள்)
ஆசிரியர் : நர்சிம்
பக்கங்கள் : 72
விலை : ரூ.40
வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010
Subscribe to:
Posts (Atom)