Thursday, February 26, 2009

பதிவு கடத்தப்பட்டது - ரகசிய சந்திப்பு விவரங்கள்

இப்போ எல்லாம் வலைபூக்கள் நிறைய கடத்தப் படுவது பற்றி நல்ல பதிவுகள் எழுதும் பலர் நடுக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. நமக்கு இந்த மாதிரி கவலைகள் ஏதும் இல்லை. ஏதாவது ஒரு பதிவையாவது கடத்த முடியுமா என்று ஆராய்ந்தேன். ஒரு முக்கியப் பதிவர், ஒரு ரகசியப் பதிவை எழுதி இன்னும் பதிவேற்றாமல் இருப்பது தெரிய வந்தது.

அவர் பதிவேற்றும் முன், நாம செய்துடலாம்னு பதிவேற்றிவிட்டேன். ஆனா பாருங்க, எனக்கு இதுல ஒண்ணும் புரியல. எல்லாமே சங்கேத வார்த்தைகளா இருக்கு. உங்களுக்கு ஏதாவது புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.


நகரின் பிரதான இடத்தில் அதிகம் அலட்டிக்கொள்ளாத வெளிச் சுவர். உள்ளே வந்தால், பரபரப்பு நகரம் தொலைந்து விட்டிருந்தது. ஆட்டோவில் வந்தவரை செக்யூரிட்டி நிறுத்தி விசாரிக்க, அவர் யாரைப் பார்க்க வந்தாரோ அவரை அவசரமாக அலைபேசியில் அழைத்து 'ஹல்லோ, நான் இப்ப இங்க' என்று தடுமாறினார்.

"ஹல்லோ, சார், நீங்கதான் ஆட்டோவில வந்ததா? இறங்கிடுங்க. இதோ நாங்க மரத்தடியில்தான் இருக்கோம்"

"ம்ம், ஜீன்ஸ், டி-ஷர்ட் எல்லாம் யூத்தா தான் இருக்கு. பாப்பம்"

"நாம வேற மாதிரி இருப்பாருன்னு நெனச்சோம்ல"

"ஹை கைய்ஸ் - எப்பிடி இருக்கீங்க"

"நல்லா இருக்கோம் சார். நீங்க?"

ஐயாம் பைன். ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? மத்தவங்க இன்னும் வரலியா?

மரத்தடி இருவரில் ஒருவர் நல்ல உயரம். இளைஞர். எப்போதும் சிரிப்பு.

இன்னொருத்தர் செம யூத். ஊருக்குப் போகும் பையை படையப்பா ஸ்டைலில் பினனால் போட்டுக் கொண்டிருந்தார். இந்தப் பூனையும் ...என்பது போல் உட்கார்ந்தாலும், ஆழ்ந்த அவதானிப்பு நடந்துகொண்டே இருந்தது. ஆட்டோவில் வந்த யூத்துக்கு இந்த யூத்திடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தன.

உயர இளைஞருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. "எங்க? வேளச்சேரி கேட் தானே? அங்கியே இருங்க. வேணாம், நடக்க வேண்டாம். நானே பைக்குல வந்து பிக் அப் பண்ணுறேன்

இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் அவருக்கே ஒரு குறுஞ்செய்தி. "அவரோட மொபைல் ஏதோ தகராறு. பேட்டரி ப்ராபளம் போல" என்றார். அப்புறம், "சார் நீங்க என்னோட வாங்க - நீ இங்கியே இரு சகா. மத்தவங்க வந்தா, கஜேந்திரா சர்கிளுக்குக் கூட்டிக்கிட்டு வந்திடு. நான் இவர இந்த மொபைல் தகராறு ஆசாமி கிட்ட ஏறக்கிவுட்டு, வேளச்சேரி பார்ட்டிய பிக் அப் பண்ணிக்கிட்டு வரேன். பெருங்குடி மைனர் பைக்குல வந்திடுவார். தல கொஞ்சம் லேட்டாகும்னாறு. கிளம்பிட்டாரு" என்று சொல்லிக்கொண்டே பைக்கை உதைத்தார்.

பினனால் தொற்றிக்கொண்டு ஆட்டோ யூத் போக, அப்சல்யூட் யூத் இங்கி பிங்கி போட்டுப் பார்த்து, புதிய காதலியை அலைபேசியில் கலாய்க்கத் துவங்கினார்.

கஜேந்திரா சர்க்கிளில் இறக்கிவிடப்பட்ட யூத் அங்கு செல்லமாக ஒரு தொப்பையுடன் நின்றுகொண்டிருந்த ஐ.டி. நண்பனைக் கண்டார். அவரும் இவரைக்கண்டு புளகாங்கிதம் அடைந்தார். யூத் "ஆபீஸில் ஆணி அதிகமா? ரொம்ப நாளா பதிவே வரல"

"இல்லையே. லாஸ்டு இரண்டு வாரத்தில் மூணு பதிவு போட்டு, மூணுமே மெகா ஹிட்டு"

"இருந்தாலும் உன்னோட அறிவியல் கதைகள் போல வராது. அது மாதிரி நிறைய எழுது" என்று ஐஸ் வைத்தார் யூத். ஐ.டி. அதைக் கண்டுகொள்ளாமல், 'என்ன ஆனாலும் உங்க கவித புரியவே மாட்டேங்குது' என்று புலம்பத் துவங்கினார். யூத் இலேசாக நடுங்கத் தொடங்கினார். இன்னிக்கு மீடிங்குல ரவுண்டு கட்டி கவிதைக்குப் பொழிப்புரை கேப்பாங்களோ என்று பயத்தில் வியர்க்கத் தொடங்கினார்.

"உங்களுக்கு எது சொந்த ஊர்?" ஐ.டி.

'எந்த ஊர் என்றவனே..இருந்த ஊரைச் சொல்லவா' என்று பாடினால் வயதைக் கூட்டிவிடும் அபாயம் இருந்ததால், நம்ம யூத் 'சிங்காரச் சென்னை' என்று நிறுத்திக் கொண்டார்.

'சென்னையா? அதுக்கு முன்னாடி?'

'நா பொறக்கவே இல்ல'

ஐ.டி.யின் கொலைவெறி அதிகமாகும் முன், ஒரு கருநீல மாருதி சத்தமே இல்லாமல் வந்து நின்றது. விடுவித்துக்கொண்டு இறங்கியவர் முகத்தில் எப்போதும் தவழும் புன்முறுவல். திரைப்படத்துறை என்பதால் கண்களால் காட்சிப்பொருளைச் சில நொடிகளில் அளந்து விடும் திறமை. நாம கேட்காமலே 'நான் கடவுள் வசூல் ரீதியில் ஆப்பு' என்றார். அதே மூச்சில் 'படம் நல்ல படம' என்றும் சொன்னார். அவரிடம் உள்ள வசீகரமே அந்த மந்தகாசமும், திரைப்பட உலகு பற்றிய prejudice இல்லாத கண்ணோட்டமும்தான். பெண்களைப் பற்றி ஆர்வத்துடனும், சுவாரஸ்யமாகவும் பேசினார் அந்த இயக்குனர். பெரிய காதல் மன்னனாக இருப்பார் போல என்று யூத் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

அதே சமயம் வேளச்சேரி கேட் அன்பரும், அப்சல்யூட் யூத்தும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் மெல்ல மெல்ல அரட்டை உருவம் பெற்றது. உயரமான, விருந்தோம்பல் இளைஞரும் வந்து சேர்ந்து, எல்லோரையும் டிபானி உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். யூத் நடுசென்டரில் உட்கார வைக்கப்பட்டார்.

எல்லோருக்கும் ஒரு பொதுக் குறை இந்த யூத் ஒரு பெண் என்று எல்லோரும் முதலில் எண்ணியது. இந்தப் பெயரை எப்படி, ஏன் வெச்சுக்கிட்டீங்க என்று நதிமூலம் தேடினார்கள். யூத் உண்மையைச் சொல்லி ஓரளவு தப்பித்துக்கொண்டார். ஆனாலும், விவாதம் களைகட்டாமல் இருந்தது. இவுங்க நிச்சயமா நம்ம கவிதைய அக்கு வேற ஆணி வேறயா அலசி கிழிக்கப் போறாங்களோ என்ற பயத்தில் யூத்தும், எங்கே ஏதாவது கேள்வி கேட்டால் கவிதை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் மற்றவர்களும் நெளிந்துகொண்டு இருந்தார்கள்.

அப்சல்யூட் மட்டும் பதிவுலகத்தை அசால்டாக அலசினார். தமிலிஷ் உரிமையாளர் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. நம்ம யூத்துக்கு இது எல்லாம் கண்ணக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்திருக்க வேண்டும். 'நீங்க தான் தமிலிஷ் ஓனர்' என்றாலும் ஏறக்குறைய ஒப்புக்கொண்டிருப்பார். எல்லோரும் இனிப்பு, பூரி, காப்பி என்று பிசியானார்கள். திடிரென்று ஒரு சலசலப்பு. பெருங்குடி மைனர் வந்துகொண்டிருந்தார். வந்தேவிட்டார். புகைப்படத்தின் வசீகர மேக்கப் (கறுப்புக் கண்ணாடி, க்ளீன் ஷேவ் இத்யாதி) இல்லாவிட்டாலும், நேரில் இன்னும் இளமையாக இருந்ததை நம்ம யூத் சொல்லியேவிட்டார்.

வந்தவுடன் அவரும் skc யில் பிசியாகி, உடனே தனது பிரத்தியேகத் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். காமிரா (இது அவர் பேரோட ரைம் ஆகுதுல்ல!) கையில் வைத்துக்கொண்டு கோணங்கள் பார்க்க ஆரம்பித்தார். யூத்தும் முகத்தில் எப்பாடுபட்டாவது இளமையைக் கொண்டுவந்துவிட முயற்சி செய்தார். யூத் எதிர்பாராத நேரங்களில், கோணங்களில் படபடவென்று சுட்டுத் தள்ளினார் பெருங்குடி.

உயர இளைஞர் மீண்டும் பரபரப்புடன் யூத்திடம் "உங்களுக்காகவே 'அண்ணே' அவர்கள் சேலத்திலிருந்து நேராக வருகிறார்" என்றார். இப்படிப் போய்க்கொண்டிருந்த அந்தச் சந்திப்பு திடீரென்று பரபரப்பானது. ஒரு முன்னணி நடிகர், அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களுடன் விறுவிறுவென்று ஸ்டைலாக வந்தார். யூத்துக்கு இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்த அந்த ஸ்டாருக்கு ஏனோ திருப்தியில்லை. அதனால் எதிர் வரிசையில் அமர்ந்து யூத்தை உற்று கவனிக்கத் தொடங்கினார். படு இயல்பாகப் பேச ஆரம்பித்தார் அந்த கார்பரேட் கம்பர். யூத்துக்கும் மகிழ்ச்சி. கடைசியில் நம்ம ரேஞ்சுக்கு ஒத்தரு வந்தார் என்று.

அப்சல்யூட் யூத் ஹைதை செல்கையில் சக பயணியை (இளம்பெண்தான்) கலாய்த்த கதையை graphic details உடன் விவரிக்க ஹால் திடிரென்று பெருமூச்சுகளால் உஷ்ணம் ஏறியது. 'இதெல்லாம் என்ன ஜுஜுபி' என்ற மந்தகாசப் புன்னகையில் இயக்குனர் மட்டும் கண்ணாடியினூடே தெரிந்தார். ஏற்கனேவே ஸ்டார் வந்ததில் 'லைட்ஸ் ஆன்' ஆக, இப்போது காமிராவும் ஆன் செய்யப்பட்டது. அப்புறமென்ன ஆக்சன்தான். பலவித கோணங்களில் தன்னைப் புகைப்படம் பிடிக்குமாறு ஸ்டார் ஆணையிட்டார். காமிராவும் அவ்வாறே செய்ய, மற்றவர்கள் ஷூட்டிங் பார்த்தார்கள்.

இலங்கை, இந்திய, மலேசிய (ச்சே, கோபால் பல்பொடி போல இருக்கு) விஷயங்கள் பேசப்பட்டன.

அப்சல்யூட் யூத் திடீரென்று 'நீங்க இந்தக் கவிதைகளை எப்போ எழுதினீங்க' என்றார்.

யூத் 'ஒரு மூணு நாலு மாசம் முன்னால'

'நான் எப்போ பதிவு போட்டீங்கன்னு கேக்கல; எப்போ எழுதுனீங்க?'

'நான் உண்மையாவே இப்போதான், சமீபத்தில் தான் எழுதினேன்'

'சமீபம்' என்ற வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டது.

இப்போ கம்பர் 'இதோ பாருங்க. அவன் என்ன கேக்குரான்னா.. அதாகப்பட்டது எந்த ஒரு மனுஷனுக்கும் ஒரு இருபது முதல் இருபத்தஞ்சு வயசுல காதல் வரும். வரணும். வந்தே தீரணும் (இப்போது நம்ம யூத் உடல் நடுக்கம் கண்டது). அது சில பேருக்கு துரதிர்ஷ்ட வசமாக கைகூடி கலியாணத்தில் முடியும். அதிர்ஷ்டசாலி பலபேர் கவிதை எழுதுவார்கள். நீங்க எப்படி?"

"நான் அந்த து.அதிர்ஷ்டசாலி வகை"

"அப்படியா. அப்போ இப்பதான் கவித எழுதத் துவங்கினேன்னு சொல்றீங்க. கவிதை படித்தால் தெரியுது" என்றதும், அவையில் எல்லோரும் தலையாட்டி ஆமோதித்தனர். யூத் ஒரு உபரி தகவலாக தனக்கு ஹிந்தி சிறிதும் தெரியாது என்றதும் அதனை மொழிப்பற்றின் உச்ச உணர்ச்சியாக எல்லோரும் பாவித்து, அடுத்த பல பதிவுகளுக்கு தலா ஐந்து பின்னூட்டம் தமிழிலேயே போடுவதாக யூத்திடம் சொன்னார்கள்.

காமிரா ஆசாமி மட்டும் பழக்கப்பட்ட மூன்றாம் கண் மூலம் யூத்தை அளந்து கொண்டிருந்தார். உதடுகள் 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று முணுமுணுப்பது தெரிந்தது.

அப்போது ஜீன்ஸ், பளீர் வெள்ளை சட்டையில் ஒரு கனவான் வர, எல்லோரும் 'அண்ணே' என்றனர். யூத்தும் அண்ணேவும் ஆரத் தழுவினர். பின்ன சும்மாவா? ஒன்றாகப் பதிவுலகில் காலடி வைத்தவர்கள். ஒரே குருப்பாகச் செயல்படுபவர்கள் என்றெல்லாம் அறியப்பட்டவர்கள். அண்ணே களைப்புடன் காணப்பட்டார். சேலம்-சென்னை நான்-ஸ்டாப் பயணம். உங்களைப் பாக்கத்தான் இவ்வளவு அவசரமா வந்தேன் என்று அண்ணே சொன்னதும் யூத் நெகிழ்ந்தார்.

இதற்கு இடையில் மருத்துவரும் வந்திருந்தார். செம்ம ஸ்மார்ட். அவரும் அண்ணேவும் அளவளாவினர். நம்ம host இளைஞர், யூத்திடம் 'கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தீங்கன்னா பதிவர் சந்திப்பே வெச்சுருக்கலாம்' என்றார். யூத் நல்லவேளை தப்பித்தேன் என்று எண்ணியபடி 'அடுத்த முறை முன்னாடியே சொல்றேன்' என்றார்.

அப்சொல்யூட் ஹைதைக்கு ஏற்கனேவே யூத் நிமித்தம் ட்ரைன் டிக்கெட் கான்செல் செய்து பேருந்தில் செல்ல புக் செய்திருந்தார். 8.45 க்கு பஸ் கிளம்பிவிடும். கோயம்பேடு செல்ல வேண்டும். கம்பரிடம் எதோ பேசி, தாஜா செய்து, அவரை ட்ராப் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் கிளம்பிப் போக, கூட்டம் ஒருவாறு கலைந்து கீழே வந்தது.

அப்போது இன்னொரு அலைபேசி நம்ம உயர இளைஞருக்கு. "இருக்கோம் தல. வாங்க" என்று சொல்லிவிட்டு, யூத்தைப் பார்த்து, "இன்னிக்கு நீங்க நரி முகத்திலேதான் முழிச்சிருக்கீங்க. அதிர்ஷ்டமும், அவர் சகாவான இப்போ அடல்ஸ் ஒன்லி எழுதும் அதிரடிப் பதிவரும் வராங்க" என்றார். யூத் நம்பவே இல்லை. இரண்டு நிமிடங்களில், பரபரப்பாக பதிவுலகை கலக்கும் அந்த இருவர் வந்தனர். மீண்டும் மேலே ஏறி சென்று காபி கடை ஆரம்பித்தது.

கூட்டம் மூன்று குழுவாக அமர்ந்தது. முதல் குழுவில் பதிவுலக சூப்பர் ஸ்டார், அண்ணே, மருத்துவர் மற்றும் ஐ.டி.நண்பர் பேசினார்கள். அதாவது, சூப்பர் ஸ்டார் சொல்வதை ஆர்வமாகக் கேட்டார்கள்.

யூத்துக்குப் பக்கத்தில் அமர்ந்த அதகள பதிவர் 'நீங்க மொதல்ல ஒரு பெண் என்று நினைத்து... ஒரு மெயில் கூட அனுப்பலாம்னு இருந்தேன்' என்றார். தான் பெண்ணாகப் பிறக்காததின் பெருமையை யூத் உணரத் துவங்கினார். பிறகு "உங்கள வேறமாதிரி கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். இப்படி இருக்கீங்களே' என்றார். யூத் 'ஞே'.

உயர இளைஞர் கொஞ்சம் உதவிக்கு வந்தார். திரைப்பட இயக்குனரும் சேர்ந்துகொண்டார். பலகோணங்களில் யூத்தை அலச ஆரம்பித்தனர். இயக்குனரின் படத்தில் யூத்துக்கு 'அப்பா' வேடம் தரலாம் என்று சொல்லப்பட்டது. ஏமாற்றம் அடைந்த யூத்தை இளைஞர் தேற்றி 'அண்ணன் வேடம் - பணக்கார அண்ணன் வேடம் தரலாம்' என்றார். இயக்குனரும் தன் பங்குக்குத் தந்தை வேடத்தின் சலுகைகளை விலாவாரியாக விளக்கத் தொடங்க, அதை பிரசுரித்தால் இந்தப் பதிவுக்கு 'U' certificate கிட்டாமல் போகும் அபாயம் உள்ளதால் எடிட் செய்துவிடலாம்.

அதிரடிப் பதிவர், அவ்வளவு இளமை என்றாலும், பிரமிக்கத்தக்க புரிதல்கள் பல விடயங்களில். நிச்சயம் ஹாலிவுட் தர இயக்குனர் ஆகிவிடுவார் என்றே தோன்றுகிறது. ஆபீஸில் மடிக்கணினி தராததுடன், பதிவுகளைப் பார்வையிடும் சலுகைகளும் தருவதில்லை என்று நொந்து கொண்டார். என்ன அநியாயம்! அதிலும் திருப்பூர்காரருக்கு ஒரு மடிக்கணினி யோகம். இவருக்கு இந்த மாதிரி டார்ச்சர். யூத்தும் அதியும் ரொம்ப நேரம் தனியாகப் பேசினார்கள். பெரும்பாலும் அதி எடுக்கும் படத்தில் சில பாடல்கள் யூத்துக்குக் கிடைக்கும் என்று தோன்றுகிறது. யூதத்தின் வாசிப்பு இன்னும் விரிவடைந்தால், வசனம் கூட கிடைக்கலாம். இதற்கு இடையே இயக்குனர், அதியை துணை இயக்குனராக தன்னிடம் பணிபுரியும்படி வற்புறுத்தினார்.

யூத் நடுநடுவே சூப்பர் ஸ்டார் பேசுவதை அவதானித்துக்கொண்டு இருந்தார். அரசியலை இவ்வளவு கூலாக பேசி யூத் பார்த்ததில்லை. அவ்வளவு தூய தமிழில், மேடைப்பேச்சுத் தமிழில் சூப்பர் ஸ்டார் பேசிக்கொண்டிருந்தார். மற்ற மூவரும், கேட்டுக்கொண்டு இருந்தனர்.

மீணடும், சினிமா பற்றி ஆராய்ச்சி செய்யும் அந்த உயர இளைஞர், தனது இன்னொரு பரிமாணத்தை காட்டினார். அதாவது கிரிக்கெட். அப்போது, அதி தான் ஒரு வேகப் பந்து வீச்சாளர் என்றும் தற்போது காலில் அடிப்பட்டு இருப்பதால் ஓய்வு எடுப்பதற்கு அலுவலகம் ஒழுங்காகச் செல்வதாகவும் குறிப்பிட்டார். சினிமா ஆர்வலர் தான் கிரிக்கெட் விளையாட்டிலும் மிகுந்த ஆராய்ச்சி செய்து, ஐ.பி.எல். வருவதற்கு சுமார் இருபது வருடங்கள் முன்பே உலகின் சிறந்த வீரர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து மேய்ந்ததை (தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில்) விவரித்தார். லலித் மோடி உங்கள் வேலையில் சற்று உஷாராக இருங்கள். உண்மையிலேயே படு சுவாரஸ்யம். கார்ப்.கம்பர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர் எனவும் மாவட்ட அளவில் விளையாடி இருப்பதாகவும் யூத் அறிந்தார். தானும் (யாரு விசாரிக்கப் போகிறார்கள்) தனது அலுவலகம், லீக் மேட்ச், தெரு, வீடு, புக் கிரிக்கெட் என்று பெரிய பிளேயர் என்று பறைசாற்றிக்கொண்டார்.

வேளச்சேரி இளைஞர், கடைசி வரை ஒன்றுமே பேசாமல், திருவிழா பார்க்கும் சிறுவனின் ஆர்வத்துடன் வலம் வந்தார். 'அத்தி' பூ போல் எப்போதாவது சில வார்த்தைகள் பேசினார். மணி இரவு ஒன்பதை நெருங்க, பிரியும் நேரம் வந்தது. யூத் பார்த்த அனைவரையும் (IIT விடுதி மாணவியையும் விட்டுவைக்கவில்லை) மும்பை வரும்படி கேட்டுக்கொண்டார்.

அண்ணே போலவே காமிரா பதிவரும் யூத் காதருகில் வந்து 'ரொம்ப முக்கியமான வேலைய பாதில விட்டு விட்டு உங்களுக்காக வந்தேன்' என்றதும் உண்மையிலேயே யூத் கொஞ்சம் ஆடிப் போயிட்டார்.

அவரவர் கிடைத்த வண்டியில் தொற்றிக்கொள்ள, யூத், இயக்குனர் மற்றும் மருத்துவருடன் மாருதியில் பயணித்து வீடு வந்து சேர்ந்தார். இடையில் ஒரு இடத்தில் சூப்பர் ஸ்டார் மற்றும் அதி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த இயக்குனர், வண்டியை நிறுத்தினார். அங்கு இருந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். சூடான விவாதங்கள். மருத்துவர் செம்ம பார்ம்ல இருந்தார். கிட்டத் தட்ட ஒன்றரை மணிநேரம். அதைப் பற்றி பேசினால் இன்னொரு பதிவே போட வேண்டும்.

இன்னொரு விஷயம். அந்த இரு டாப் பதிவர்களும் நம்ப முடியா எளிமை. உண்மையிலேயே அந்தக் கடையில் அவரை அடையாளம் கண்டுகொண்ட படு இளம் பதிவர்கள் மூவர் (வயது ஒரு இருபது இருக்கலாம்) 'பதிவர் சந்திப்பா' என்று அருகில் வந்து ஆட்டோகிராப் கேட்கும் வரை வந்துவிட்டனர். யூத்தும் குஷியில், கையெழுத்துப் போட பேனா வெளியில் எடுத்தார். பையன்களில் ஒருவன் "உங்களுக்கு ஆட்டோகிராப் கிடைச்சுதா அங்கிள்' என்று கேட்டதும் ஒரு பலூன் சுருங்கி, வீடு போய் சேர்ந்தது.


இது அந்தப் பதிவருடைய 50 வது பதிவு. ஆதலால் கொஞ்சம் பாத்து ஆதரவு கொடுங்கள்.

Wednesday, February 25, 2009

காக்கைக் கூட்டம்



உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;
சூட்டிகைகள் சில
தேர்ந்த அலகுகளால்
பெருந்துண்டுகளை
வானில் கவ்வி மறைந்தன,
மதிப்பெண்களின் சூட்சுமம்
அறிந்த முன்னிருக்கை
மாணாக்கர் போல்;
நொறுங்கிய துகள்களை
மணலுடன் உண்ட மற்றவை
தொங்கிய தலையுடன்
மண்சோறு உண்ட
அக்காளை நினைவுறுத்தின.
கசக்கி வீசப்பட்ட
அலுமினியத் தாளை
தேடிப்பிடித்து உண்டன
இதுவரை இரை கிட்டாத
இரண்டு காகங்கள்;
வீசப்பட்ட தாளின் நிறம்
பத்தாவப்புடன் நிறுத்திக்கொண்ட
இஸ்திரி வண்டி பழனியின்
சட்டைப்பையில் இருந்த
லாட்டரிச் சீட்டின் நீலந்தான்
நெடுஞ்சாலையில் நிறுத்தி
கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்



(உயிரோசை 22.12.08 மின்னிதழில் பிரசுரமானது)

Saturday, February 14, 2009

உலகின் மிகச்சிறந்த காதல் வரிகள்



இந்த யூத்தா இருப்பதின் சோகங்கள்தான் எத்தனை!

பாருங்க இந்தத் திங்கள் கிழமையிலிருந்தே வானம் இலேசாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தத் சனிக்கிழமை அருகில் வர வர, முழு உலகுமே கொஞ்சங்கொஞ்சமாய் ரோஜா நிறத்திற்குத் தாவிக்கொண்டிருந்தது. என்னது, ஒண்ணும் புரியவில்லையா? இதுக்குத்தான் உங்கள மாதிரி பெருசுங்களோடப் பேசக் கூடாதென்பது! இருந்தாலும், வந்துட்டீங்க, விளக்கமா சொல்றேன்.

அதாகப் பட்டது இன்று பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி. காதலர் தினம். காதலின் நிறம் தெரியுமா? ம்ம், கேட்டிருக்கக்கூடாது, அது பிங்க் என்று ஆங்கிலத்திலும், ரோஜா நிறம் என்று அழகு தமிழிலும் சொல்வோம்.

பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே ஆணும், பெண்ணும் நிறவாரியாகப் பிரிக்கப் படுகிறோம். பிங்க் ஸ்கேர்ட், பிங்க் கவுன், பிங்க் ரிப்பன்/ஹெட் பேண்ட், பிங்க் வாட்ச், வளையல், பிங்க் சைக்கிள், பிங்க் காலணிகள், பிங்க் இடுப்புக் கச்சை (அதாங்க பெல்ட்) என்று சகலமும் பிங்க் பெண் குழந்தைகளுக்கு.

நமக்கு மஞ்சள் டிரௌசருக்கு ஆரஞ்சு கலர் சட்டை. பச்சை வண்ணத்தில் பூட்ஸ், சிகப்பு நிறத்தில் தொப்பி என்று மாடர்ன் ஆர்ட் போடமுடியாத குறையினை நம் மூலம் தீர்த்துக்கொள்ளும் பெற்றோர். எனக்கு சிறுவயதில் பிங்க் நிறத்தில் ஷூ போட்டுக்கொள்ள ஆசையாக இருந்தது முறியடிக்கப்பட்டது இந்தக் காரணங்களால்.

காதலர் தினம் பிங்க் வண்ணத்தில் நிரம்பித் தளும்புவதின் நுண்ணரசியல் இப்போது புரிகிறதா? எப்போதுமே தோற்கும் ஆண்வர்க்கம், உச்சக்கட்டமாகக்  காலில் சாஷ்டாங்கமாக விழும் நாளுக்கு 'காதலர் தினம்' என்று இப்போது பெயர் சூடப்பட்டிருக்கிறது.


நீங்கள் மணமானவரா? வருத்தங்கள். காதல் திருமணமில்லையே? தப்பித்தீர்கள். என்னது, ஆமா? ஐயோ பாவம், அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

முன்னமே சொன்ன திங்கட் கிழமையிலிருந்து சமிக்ஞைகள் துவங்கின. முதலில் இந்த சானல்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். டேய், எப்பவுமே சனிக்கிழமை ஏதாவது ஒரு பாடாவதி காதல் படம் போடுவது வழக்கம்தானே. அது என்ன 'காதலர் தினத்தை முன்னிட்டு' என்று ஒரே ரோஜா நிற இதயங்கள் பின்னணியில் ஒரு அட்டகாச அறிவிப்பு! சும்மா இருக்கும் மனைவியை உசுப்பி விடும் அறிவிப்புகள்!


நான் கேட்கும் முன்னரே, "இந்த ரோஜாப்பு கொடுக்கும் காதலர்கள்/கணவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு பிற்போக்கா இருக்காங்க" என்றாள். அப்பா, ஒரு வழியாக இந்தக் காதலர் தினம் நமக்கு ஒரு கவலையும் இல்லாமல் வந்து போகப் போகிறது என்ற எண்ணத்தில் மண். ‘ஒரு இன்வெஸ்ட்மென்டா கொஞ்சம் (!) தங்கமோ, வைரமோ வாங்கலாம். இப்பெல்லாம், அது கூட பாஷன் இல்ல. பிளாடினம் வாங்கலாம்’ என்ற கமெண்ட் அடுத்து வந்தது. இலேசாக வயிற்றைப் புரட்டியது. ஏற்கெனவே மாதாமாதம் பெஸ்டிவல் அட்வான்ஸ் (சிவராத்திரிக்கெல்லாம் பண்டிகை கொண்டாட பத்தாயிரம் வாங்கிய ஆள் நான் மட்டும்தான் இருப்பேன்) வாங்குபவன் என்ற அவப்பெயர்.

அலுவலக ஆடிட் மற்றும் அப்ரைசல் உபாதைகளுக்குக்கூட நான் இவ்வளவு பயந்ததில்லை. ஒரு பயப்பந்து வயிற்றில் மையம் கொண்டு, அவ்வப்போது ஆட்டம் காட்டியது. இப்படி அடுத்த மூன்று நாட்கள் ஊர்ந்து போக, மனைவி அவ்வப்போது மேலதிகாரியின் மிடுக்கில், பார்வையாலேயே 'என்ன மேன், இந்த வருடம் என்ன செய்யப் போற?' என்ற தொனியில் பார்த்து விட்டு நகர்ந்தாள்.

தள்ளிக்கொண்டே போன வேலை, கடைசியில் வேலை போகும் நிலையில் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோமே, அதே மாதிரி வெள்ளிக்கிழமை மாலை எனக்கு இலேசாக ஜன்னி வந்துவிட்டது. நாளை கா.தினம். என்ன செய்வது?

திடீர்னு ஒரு போன். அவள் தான். 'ம்ம், எப்படி இருக்கீங்க' என்றாள், எதோ பத்து வருடம் முன் பிரிந்த காதலியைப் போல. 'ரொம்ப வேலை. ரொம்ப முக்கியம் உன்னோட குசல விசாரிப்பு இப்ப' என்று எண்ணிக்கொண்டே "என்னம்மா கண்ணு! என்ன அபூர்வமா இந்த நேரத்துல போன்" என்று வழிந்தேன். 'உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இருந்தாலும்... நாளைக்கு என்ன நாள் தெரியுமில்ல.. ' என்று நிறுத்தினாள். சரியான கிழமையில் தான் இந்த முறை வருகிறது. "தெரியாமலா.. ஞாபகம் இருக்கு" என்று பல்லைக் கடித்தேன்.

"நா உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கியிருக்கேன். சோ கியுட்" என்றாள். அவள் இப்படிச் சிலாகித்துச் சொன்னால் பெரும்பாலும் கிலுகிலுப்பை அல்லது கை தட்டிக்கொண்டே தலையாட்டும் (கொஞ்சம் யோசித்தால் நானும் அதுதான்) பொம்மை போன்றவைகளே இருக்கும். "அப்படியா" என்றேன். "ஹம். அப்புறம், நீங்க எனக்காக எதுவும் காஸ்ட்லியா வாங்காதீங்க" என்றாள். தீர்ந்தது. இதற்கு உண்மையான அர்த்தம் இதுவரை ஆதங்கத்துடன் படிக்கும் உங்களுக்கும் புரிந்திருக்கும்.

"நிஜமாத்தான் சொல்றேன். தங்கம், வைரம்னு சும்மா தண்ட செலவு (இதோடா!) பண்ண வேண்டாம்"

"அப்ப ப்ளுடோனியமா"

"என்னது?"

"சாரி, ப்ளாடினமா?"

"இல்ல இல்ல. பணத்தில என்ன இருக்கு. இந்த வருடம் ஏதாவது வித்தியாசமான முறையில், காதல் பரிசு கொடுக்க ட்ரை பண்ணுங்களேன்"

சந்தோஷத்துல மிதந்தாலும் காட்டிக்கொள்ளாமல், "நீ என்ன சொல்ல வர" என்றேன்.

"எங்க லேடிஸ் க்ளப்ல இந்த வருஷம் 'சிறந்த காதல் பரிசுக்கு' ஒரு பரிசு கொடுக்கப் போறாங்க. நாம்ப காதலிச்சது (காண்க: இறந்த காலம்) எல்லாருக்கும் தெரியும். அதுனால, உங்க மூளைய யோசிச்சு புது மாதிரி எனக்கு ஒரு பரிசு கொடுங்க பார்க்கலாம். உலகமே புதுசா தெரியணும். பார்க்கணும். அப்படி இருக்கணும்"

எவ்வளவோ யோசிச்சும் ஒண்ணும் தட்டுப் படவில்லை. இரவு பத்து ஆகிவிட்டதால் வீடு போய் சேர்ந்து, சோர்ந்து படுத்துத் தூங்கி விட்டேன். காலையில் முழித்ததுமே வித்தியாசமாய் உணர்ந்தேன். இது என்ன வானம், பூமி, மரம், அதன் இலைகள் எல்லாமே பிங்க் நிறம்! அவளும் (எப்போதுமே அப்படித்தான்!). என்னோட வெள்ளக் கலர் டி-ஷர்ட் கூட ரோஜா வண்ணத்தில். எப்படி என்கிறீர்களா.. அப்புறம் சொல்றேன்.

நான் எழுந்தேன். பல் தேய்த்து, நிதானமாக காபி (அது கூட இலேசாக பழுப்பு-பிங்கில்) குடித்தேன். யதேற்சையாகப் கைகளைப் பின்பக்கம் கட்டிக்கொண்டதில் ஆவலாக "பின்னாடி என்ன கிப்ட்" என்றாள்.

நான் கணினி ஆன் செய்து நம்ம ப்ளாக் சென்று "இப்ப பாரு" என்றேன்.

அது சொன்னது இதுதான்.

"அனு,


உன்னுடன் நான் கழித்த


நொடிகளைத்தான்


உருக்கி வார்த்து


உலகம் கொண்டாடுகிறது


காதலர் தினமென...




நிறைய நீ;


கொஞ்சம் நானென


இன்னும் வாழ்கின்றன


காதலர் தினங்கள்..



உன் தொலைப்பேசி


முத்தங்களுக்கெல்லாம்


மௌனமே காக்கிறேன்


பரிசுகளாக திருப்பித்தர


காதலர் தினத்தை
எதிர்பார்த்து...

இப்படியெல்லாம் கவிதை எழுதி சொல்லலாம். நான் கேட்காமலேயே என் தங்கை இந்தக் கவிதைகள் நமக்காகவே எழுதி இருக்கா.

ஆனாலும், நான் உனக்காக மட்டும் எழுதும் வரிகள் இது தான்..

"
உன்னை எப்படிக் காதலித்தேனோ,
அப்படியே இன்னும் காதலிக்கறேன்
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்
இன்னும் பன்மடங்கு அதிகமாவும்
வரும் தினங்களில் காதலிப்பேன்"

எனக்குத் தெரிஞ்ச பிங்க் கலர்ல இந்த பதிவு முழுதும் தீட்டி விட்டேன். சப்தமே இல்லை. அபாய கட்டத்தை நெருங்கி விட்டோமோ என்று அஞ்சியபடி திரும்பினால், கண்களில் நீர்த்திரை. அழுதுகொண்டே, "தேங்க் யூ டா" என்றாள்.

இதுக்குப் பேர்தான் ஜாக்பாட். அதுக்கு அப்புறம் என்ன? ஒரே ராஜ மரியாதை தான்.

கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும் கேட்டேன். "ஏய் கிறுக்கு, இது கவிதை கூட இல்லை. சராசரிக்கும் கீழான உரைநடை; இதுக்கு போயி இவ்வளோவ் பீலிங்க்ஸா"

"இது கவிதை இல்ல தான். ஆனா, உண்மை இருக்கு. அழகு ஆடைகள் போர்த்தாமல், நிர்வாணமா இருந்தாலும், இது தான் நிதர்சனம். இதுதான் உண்மையான காதல்' என்றாள். தல கிறுகிறுன்னு சுத்தி, அவள் மடியில் சாய்ந்தேன்.

அப்புறம், அவள் இல்லாத போது திரும்ப படிச்சா, அவள் சொன்னதும் உண்மைதான் என்று தோன்றியது. மாலையில் நாங்கள் இருவரும் பேசும்போது பரஸ்பர பரிசுகளைப் பற்றி பேசினோம்.

"ஆமா, உலகமே வியந்து பார்க்கணும்னு சொன்னேனே? நீங்க எழுதினது எனக்கு நல்லா இருக்கு. ஆனாலும்..."

"அசடு, இந்தப் பதிவை உலகத்தில இருக்குற நிறைய தமிழர்கள் படிக்கிறாங்க. சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க"

"உங்களுக்கு எப்படித் தெரியும் அவங்க வந்து புகழுவாங்கன்னு"

இப்படி ஆரம்பித்தது அவளுக்கு பதிவுலகம், பின்னூட்டம், பரஸ்பர புகழ், கும்மி போன்றவற்றின் பால பாடம். பதிவுலக அரசியல்... நமக்கே இன்னும் புரியல; ஆள வுடுங்க பாஸ்.

அப்புறம், எனக்குக் கிடைத்த பரிசு ஒரு தோசைக்கல் அளவில் வெய்யில் கண்ணாடி. ஆம், பிங்க் கலரில். அவளிடம் கேட்டேன் 'ஏய் என்ன இது"

"நல்லா இருக்குல்ல.. எம்.ஜி.ஆர். போடுவார்.. அதே மாதிரி"

"எம்.ஜி.ஆரா? - எந்தப் படத்துல? "

"இதயக்கனி"

சரியான பரிசுதான்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வந்த அழகிய கவிதையும், பொருத்தமான புகைப்படமும் பிரியமான தங்கை ஸ்ரீமதி பதிவிலிருந்து, அவர் (!) அனுமதி இல்லாமல் பதிவிட்டது. வந்து கோபித்துக் கொண்டால் "இலவசமாக விளம்பரம் கொடுத்தால் தவறா?" என்று சமாளிக்க உத்தேசம். நன்றி ஸ்ரீ.

Tuesday, February 10, 2009

மரணத்தின் பிரதிபலிப்பு


சமீப காலங்களில்
எங்களுக்குள் இந்த ஊடல்;
எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!
என்னை அழகு என்று எப்பொழுதும்
சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே
எவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும்
மணமான பின்னும் தொடர்ந்த காதலில்
இப்போதெல்லாம் பிணக்குதான்;
அருகே செல்லவே பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி அலுத்துவிட்டது -
இருவருக்கும்தான்.
வாழ்க்கையின் சுவையும் ரசமும்
போயே விட்டதாக உணர்ந்தோம்.
தனியே ஒரு நாள் சந்தித்தோம்
நிறைய பேசினோம்
தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது
இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை
என்றெல்லாம் சொல்லியபோது
பெரிதாய் சட்டை செய்யவில்லை
தற்கொலைவரை போகும்
என்று எண்ணவில்லை
அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்

(நவீன விருட்சம் இதழில் வெளியானது)

Wednesday, February 4, 2009

ஏதாவது செய்யணும் பாசு

ஏதாவது செய்யணும் பாஸ். இந்தக் கட்டுரையின் தலைப்பை முதலில் நர்சிம் பதிவில் பார்த்தபோது 'இளைஞரின் ஆர்வக் கோளாறு' என்று 'அனுபவ பெருசு' போல (என்னதான் நான் யூத் என்றாலும்!) எண்ணிக் கொண்டேன். பதிவு படிச்சு முடிச்சதும் அவர் மேல் மரியாதை வந்தது ம் சாரி .. மிகுந்தது.

பிறகு பரிசல், லக்கி, கோவி என்று பிரபலங்கள் போட்டதும் "சரிதான், இவர்கள் பிரபலத்தின் இரகசியம் இதுதான் போலும். எல்லாவற்றிலும் சொல்வதற்கு, பங்கிடுவதற்கு இவர்களுக்கு விஷயம் இருக்கிறது. நமக்கு மட்டும் ஏன் எப்பவும் 'வரும் ஆனா வராது' என்ற 'என்னாத்த கன்னையா' நெலம" என்று யோசித்து, சுய பச்சாதாபத்துடன் சுந்தர் கவிதைகளையும், கழிவிரக்கத்துடன் அய்யனார் கவிதைகளையும் படிக்கச் சென்று விட்டேன்.

அதெல்லாம் மறந்திருந்து, சகஜ நிலை அடைந்து வருகையில் சத்யம், முத்துக்குமார், நாகேஷ் என்று நிறைய உலுக்கும் நிகழ்வுகள். இதெல்லாம் 'சூறாவளி, சுனாமி' சமாசாரம். ஏதாவது சொல்லப் போயி எக்குத்தப்பா ஆகிடப் போகுது. பேசாம பின்னூட்டங்களே கதின்னு நரசிம்ம ராவ் (நம்ம நர்சிம் இல்லீங்கோவ்) வேகத்துல முடிவு எடுத்து, என் கடமையை மிகுந்த ஆற்றலுடன் செயல் படுத்தி வருகிறேன். அங்கேயும் சில நாட்களாக இலேசான உராய்வுகள்; சிராய்ப்புகள்; ஒத்தரு நம்மள 'முட்டாளாயா நீ?' என்கிறார். இன்னொருத்தர் 'உனக்கேன் இந்த அக்கறை - நீ என்ன கலாசார காவலனா?' என்கிறார். அதுக்குள்ளே சில நண்பர்கள் 'கோவிச்சுக்காதீங்க' என்ற போதுதான் 'சரி இதுக்குக் கொவிச்சக்கணும் போல இருக்கு' என்று புரிந்துகொண்டு பாவ்லாவும் காட்டி விட்டேன். ரௌத்ரம் அவ்வப்போதாவது பழகாவிட்டால் ஒரு ஈ காக்கா கூட மதிக்காது என்று புரியவைக்கப் பட்டது.

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன் இல்ல? என்னோட இந்த non-linear எழுத்தின் இரகசியம் சாரு ஆன்லைன் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

ஆதள கீர்த்தனாம்பரத்தில.. மீண்டும் 'எதாச்சும் செய்யணும் பாசு'. இன்னிக்கு மீண்டும் நர்சிம் பதிவு. இது என்னடா 'விடாது கருப்பா' தொடருதேன்னு கார்க்கி காக்டெயில் அடிப்போம்னு போனா அங்கேயும் இதே பேயி 'ஜிங்கு ஜிங்குனு' ஆடுது. அங்க ஜோசப் வேற வழக்கம் போல அசத்தல் பின்னூட்டம். அவரே இந்த 'ஏதாவது' மேளாவில் ஐக்கியமாகி, ஒரு சூப்பர் பதிவு (சஞ்சய் கூட ஜாயின் பண்ணி என்று ஞாபகம்) போட்டிருந்தார். 'டேய் என்னாங்கடா - அடங்க மாட்டீங்களா' என்று வெறுத்துப் போய், "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே" என்று பாடிக்கொண்டே திரு.அனுஜன்யா (இவரு ரொம்ப நாளா பெண் பதிவர் என்று நினைத்திருந்தேன்!) அவர்களின் கவிதைச் சோலைக்குள் சென்று புகுந்துகொண்டு, நெருப்புக் கோழியாகப் புதைந்து விட்டேன்.

ஒழுங்கா வரிகளை மடக்கி எழுதி, 'கவிதை' செய்துகொண்டு நார்மலா இருந்த மனுஷன்.. என்ன கொடும சார் இது.. அவரும் 'ஏதாவது செய்யணும் பாசு' என்கிறார். என்னத்த சொல்ல. மேல அவரு என்ன சொல்றாருன்னு நீங்களே படிங்க.

பல்பு எண் ஒன்று:

எஸ்ரா அவர்களின் இணைய தளத்தில் படித்தது. நகரத்துக்கு வருபவர்களுக்கு குளிக்கும், குளித்து உடை மாற்றிக் கொள்ளும் பிரச்சனை மிகப் பெரியது. நிறைய சிறு, பெருநகரங்களுக்கு நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு நாள் வேலை நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும். பெரும்பாலான புண்ணியத் தலங்களும் அவ்வகையே. விடிகாலையில் அந்த ஊருக்கு வந்து சேருவோம். குளித்து, உடை மாற்றிக் கொண்டதும், நேராக ஒரு அலுவலகமோ, கருத்தரங்கோ, மலைமேல் சாமியோ பார்த்து விட்டு, ஹோட்டல் ஒன்றில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்ட் சென்று, நம்ம ஊருக்குச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதுதான் வேலை.

இதுல லாட்ஜ் ஒன்றைப் பிடித்து, ரூம் இருக்கான்னு பாக்கணும். அப்பப் பார்த்து 'சார், ஒரே ஒரு ரூம்பு தான் இருக்குது; நான்-ஏசி இல்ல. ஏசி தான் சார். எண்ணூறு ரூவா வாடகை. ரெண்டு நாள் அட்வான்ஸ் கொடுக்கணும். செக் அவுட் போது அட்ஜஸ்ட் செய்துக்கலாம்' னு ஒரு குண்டு போடுவார்.

"சார், ஜஸ்ட் குளிச்சுட்டு, டிரஸ் மாத்தணும் சார். இப்போ வெளியே போனா, அப்பிடியே ஊரப் பாக்கப் போயிடுவேன். இதுக்கு எதுக்கு சார் ஒரு நாள் ரூம்பு வாடகை. கொஞ்சம் நூறு-நூத்தம்பதுல... " என்று நாம் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவர் நம் மேல் சுவாரஸ்யம் குறைந்து, நம் எதிரிலேயே தந்தி பத்திரிகைக்குள் முழுகிவிடுவார்.

எவ்வளவு பேரால் இந்தத் தண்ட செலவு செய்ய முடியும். எவ்வளவு ஊர்களில் நம்மைக் கண்டு மிரளாத நண்பர்கள் தங்கள் வீட்டு குளியல் அறைகளைத் திறந்து விடுவார்கள். (ஏனென்றால், குளித்த பின் மெதுவாக 'ஜஸ்ட் நாலு இட்லி, கெட்டி சட்னி இருந்தால் போதும்' என்று விருந்தாளியாகும் கலை நம் அனைவருக்கும் இலகுவான சங்கதி அல்லவா!)

இதற்கு ஒவ்வொரு சிறு நகரத்திலும் மற்றும் புண்ணியத் தலங்களிலும் குளிக்கவும், உடை மாற்றவும் வசதி பொருந்திய 'குளியல் நிலையங்கள்' கட்டப்பட வேண்டும். தற்போது பெருநகரங்களில் இருக்கும் 'கட்டணக் கழிப்பறை' போல் அல்லாது, இன்னும் சற்று சுத்தத்துடன், ஒரு ஹோட்டலுக்கு உரிய இலட்சணங்களுடன் (ஒரு சுற்றுச் சுவர், கேட், ஒரு கட்டடம் இத்யாதி) மத்திய தர மக்கள் வரத் தயங்காத அளவில் அவை இருப்பது அவசியம்.
கட்டணம் ஐம்பது (ஒரு நபர்) முதல் நூற்றைம்பது (ஒரு நான்கு-ஐந்து பேர் கொண்ட குடும்பம்) வரை வசூலிக்கல்லாம். நகராட்சி அல்லது ஊராட்சி என்றில்லாமல் தனியார் கூட இவ்வாறு வசதிகள் செய்ய முயலலாம்.

நீங்க இன்ன சொல்றீங்க! (கார்க்கி, நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உனக்குக் குளிப்பதற்கு காசு கொடுத்தாலே ... இதுல நீ எங்க கட்டணம் செலுத்தி ..)

இதுக்கு ஒழுங்காகப் பின்னூட்டங்கள் வந்தால், அடுத்த பல்பு எரியும். ஆட்டோ வந்தால்.. பழையபடி கவுஜதான். அப்புறம் என்னைக் குறை சொல்லவேண்டாம்.