Friday, January 16, 2009

போனஸ்



கிருஷ்ணாவின் முறை வந்தது.

கண்ணாடிக்கு அந்தப் பக்கம் 'எப்படி வேண்டும்' என்றாள்.

'ஐநூறாவே கொடும்மா'

புத்தம் புதுசாகவும் இல்லாமல், கசங்கியும் இல்லாமல் மிதமான ஐந்நூறு கட்டு ஒன்று அவன் கைகளில் இப்போது. பதட்டத்துடன் பேன்ட் பேக்கட்டில் வைத்துக்கொண்டு, அதன் மேல் கைகுட்டையால் போர்த்தி விட்டான்.

கொஞ்ச நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த போனஸ் இன்று தரப்படும் என்று அரச புரசலாகத் தெரிந்தது. கிருஷ்ணா இருபது அல்லது இருபத்தைந்து வருமென்று நினைத்திருந்தான். ஐம்பது ஆச்சரியம். கொஞ்சம் அதிர்ச்சியும் கூட.

வேக வண்டியைப் பிடிக்காமல், ஸ்லோ லோக்கல் பிடித்து, ஜன்னலோரம் உட்கார்ந்தான். ஜன்னல் பக்க பாக்கெட்டில் பணம் இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டான் ஏழாவது முறையாக.

மல்லிகா என்னவெல்லாம் பேசுவாள் என கற்பனை செய்யலாம் என்று தோன்றியது.

"எப்பிடீங்க! ஒண்ணுமே இந்த வருஷம் கெடைக்காதுனீங்க"

"அப்ப LCD டிவி வாங்கிடலாங்க"

"பழனி கிட்ட அர கிரௌண்டு வாங்கிப் போடலாங்க"

"அப்படியே அஞ்சு பவுன் வளையல் வாங்கிடலாம்"

மத்திய தரத்தின் எம்பும் எத்தனங்களைப் பற்றி இந்த மாதிரி தருணங்களில் எட்ட நின்று அவதானிப்பதும் சுவாரஸ்யம்தான்.

மனம் கொண்டாட்டமில்லாது, மிக அமைதியாக இருந்தது. ஜெமோ சொன்ன 'பெரிய வேட்டையின் பின் வரும் ஏமாற்றம்' நினைவுக்கு வந்தது.

வண்டி பரேல் தாண்டி இருந்தது. மல்லிகா காப்பித்தூள் வாங்கி வரச் சொன்னது ஞாபகம் வந்தது. மாதுங்காவில் இறங்கினால் மைசூர் கன்சென் சென்று வாங்கலாம். கூட்டத்தில் கவனமாக இறங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டான்.

மாதுங்கா ரயில் நிலையத்திற்கு வெளியே மந்த ஒளி கசிந்து கொண்டிருந்த மின் கம்பங்கள். அவற்றின் கீழே ஒரு மூன்று வயது குழந்தை. ஆண். ஒரு அழுகிய வாழைப்பழத்தை குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்த அவனுடைய அக்காவுக்கு ஐந்து இருக்கலாம். குழந்தை உடம்பில் ஒன்றுமில்லை. அக்கா மேல்சட்டை போடாமல் இருந்தாள். அடுத்த கம்பத்தருகில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு பெரிய சட்டியில் இருந்த சாதத்தைப் பொதுவாக வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். குழம்பு சற்று ஊசிப் போன வாசனை வந்தது. அவ்வப்போது கையிலிருந்த வெங்காயத்தைக் கடித்துக் கொண்டனர்.

தார்பாலின் தயவில் ஒரு கூரை. கூரைக்கடியில் ஒரு பக்கம் பாத்திரங்கள். ஒரு டிரங்குப் பெட்டி. அதன் மேல் இரண்டு சிறு பெட்டிகள். புடவை, லுங்கி, பாவாடை, துண்டு என்று கதம்பமாக ஒரு நைலான் கயிற்றில் தொங்கிய மொத்த சம்சாரம்.

நகரின் பாதாள சாக்கடை நீர் பக்கத்தில் கசிந்து கொண்டிருந்தது. குழந்தைகள் சட்டை செய்யாமல், அந்தத் தண்ணீரில் குதித்து விளையாடினர். ஒரு கிழவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தான்.

கிருஷ்ணா மனம் மிகவும் சஞ்சலமானது. முகம் சுளித்துக் கொண்டே மார்க்கெட் சென்று, காப்பித்தூள், மல்லிகைப் பூ, இனிப்பு, ஆனந்த விகடன், “சேவல்” என்று பை முழுதும் 'நான் தமிழன்' என்ற அடையாளங்களைத் திணித்துக் கொண்டிருந்தான். காப்பித்தூள் கடையில் முதலாளி, "சார், காலங் கெட்டுக்கெடக்கு. ரூவாய ரெண்டா பிரிச்சு தனித் தனியா வெய்யுங்க" என்றதில் பயந்து இரண்டு பாக்கெட்டிலும் பணத்தை வைத்துக் கொண்டு மிரண்டு போயிருந்தான்.

முற்றிலும் மறந்து போயிருந்த அவர்களை திரும்பி வருகையில் மீண்டும் பார்த்தான். விளையாடிய குழந்தைகள் உறங்கி விட்டிருந்தன. பெண்கள் தார்பாலின் அடியில் தஞ்சமடைந்து, கால்களை மடக்கிப் படுத்திருந்தனர். கிழவன் இருமத் துவங்கியிருந்தான். அந்த ஆண் மட்டும், மூன்று வயதை தோளில் சாய்த்து, ஐந்து வயதுப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

மனதை என்னவோ செய்தது. மனம் தர்க்கம் செய்யுமுன் இடது பாக்கெட்டில் இருந்த பணத்தை இலேசாகத் தவறவிட்டான். யாரும் பார்க்கவில்லை. திரும்பிப் பார்க்காமல் நடந்தான். பத்து அடி எடுத்து விட்டு, திரும்பிப் பார்த்தான். அந்தச் சிறுமி அப்பாவிடம் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணா பார்ப்பதைக் கவனித்துவிட்ட அவன், மும்பைக்காரர்களுக்கே உரித்தான சங்கேத மொழியில் இவனை அழைத்தான். வேறு வழி இல்லாமல், கிருஷ்ணா அருகில் சென்றான்.

"இந்தப் பணம் உங்களுடையதா"

எங்கிருந்து துணிச்சல் மற்றும் சொல்ல முடியாத உணர்வு வந்தது என்று தெரியவில்லை. "இல்லையே. நிறைய பணமா?"

சில வினாடிகள் உற்றுப் பார்த்தபின் 'ஒன்றும் இல்லை. நீங்கள் போகலாம்' என்று அவன் வேறு திசையில் நடக்க ஆரம்பித்தான்.

கிருஷ்ணாவுக்கு மூச்சு நின்று, சீராக சில நிமிடங்கள் ஆயின. மாதுங்காவில் வண்டி ஏறி, அந்தேரி செல்லும் வரை அவன் செய்தது சரியா என்று யோசித்தான். அதன் பின், மல்லிகாவுக்குப் பதிலாக, பின்மாலையில் கண்ட இந்த குடும்பத்துக்குள் இந்த நேரத்திலும், இன்னும் சில நாட்களுக்கும் நடக்கப்போகும் உரையாடல்கள் பற்றி கற்பனை செய்ய ஆரம்பித்தான். மாலையின் பதட்டம் விலகி, ஒரு மந்தகாசம் தோன்றியது.

மல்லிகா "இருபத்தைந்துக்கே இவ்வளவு சிரிப்பா" என்றாள்.



(உயிரோசை 29.12.2008 இதழில் பிரசுரம் ஆனது)

46 comments:

புதியவன் said...

கதை அருமை...
மனித உணர்வுகளைப்
படம் பிடித்தது போல் இருக்கிறது வார்த்தைகள்
வாழ்த்துக்கள் அனுஜன்யா...

முரளிகண்ணன் said...

மனதை தொட்ட கதை. நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளையும், என்ன ஆனாலும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரத்தையும் அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்

Unknown said...

சூப்பர் கதை... :))) நான் ஏற்கனவே படிச்சிட்டேன் அண்ணா.. ;)))))

வெண்பூ said...

நல்ல கதை அனுஜன்யா.. முடிவும் அழகாக இருந்தது. அந்த பணம் அதன்பின் என்ன ஆனது என்பதை சொல்லாமல் விட்டிருக்கும் சஸ்பென்ஸ் அருமை.

//
மனம் கொண்டாட்டமில்லாது, மிக அமைதியாக இருந்தது. ஜெமோ சொன்ன 'பெரிய வேட்டையின் பின் வரும் ஏமாற்றம்' நினைவுக்கு வந்தது.
//
ரசித்தேன்.. சரியான இடத்தில் சரியான உவமானம்..

தமிழன்-கறுப்பி... said...

இருக்கத்தான் செய்கிறார்கள்... மனிதர்கள்..!

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...

கார்க்கிபவா said...

அருமை தல.

narsim said...

உயிரோசையில் படித்தேன்.. மிக நல்ல நடை தல‌

Anonymous said...

நல்ல நேரேட்டிவ் எழுத்து அனுஜன்யா. ரசித்தேன்.

கடைசி வரி தேவையில்லை என்பது என் எண்ணம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ம், நல்லா எழுதியிருக்கீங்க.

Anonymous said...

good justification anu..!
- rvc

மேவி... said...

ஆ ஆஹா...... கதை நல்ல இருக்குங்க அனுஜன்யா. கடைசி வரி.... நச்சு. கதையோட ஹிக்ளிக்த்ட் தட் ஒன்லி.
எல்லா மனுஷன் கிடவும் ஏதோ பெயர் அளவில் மனிதம் இருக்குன்னு காட்டுது....

மாதவராஜ் said...

அனுஜன்யா!

அந்தக் குழந்தைகளை சித்திரமாக்கிய எழுத்துக்கள் சிறப்பு.
'கிருஷ்ணா' க்களும் எல்லோருக்குள்ளும் இருக்கவேச் செய்கிறார்கள்..
அவர்களை வெளியேக் கொண்டு வந்து நமக்கே அடையாளம் காண்பிக்க வேண்டியது இருக்கிறது என்பது இந்தக் கதை சொல்லாமல் சொல்லும் சோகம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

கதை சிறப்பாக உள்ளது... வாழ்த்துகள்...

anujanya said...

@ புதியவன்

நன்றி. இங்க அடக்கம். உங்க தளத்தில் அதகளம் :)

@ முரளிகண்ணன்

வாங்க தல. நன்றி.

@ ஸ்ரீமதி

அப்படியா? நன்றி.

@ வெண்பூ

நன்றி பிரதர். நுணுக்கமாகப் படிக்கிறாய். ஆமா, எப்ப எழுதுவதாக உத்தேசம்?

@ தமிழன்-கறுப்பி

நன்றி. பாருங்க நீங்க கேட்டவுடன் ஒரு புதுப் பதிவு :)

@ கார்க்கி

நன்றி சகா. எல்லாம் நீ காட்டிய வழி (நான் நான் தான்)

@ நர்சிம்

நன்றி நர்சிம்.

@ வேலன்

நன்றி வேலன். அப்படியா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

@ சுந்தர்

'ஹம்' சொல்லும் செய்தியைப் பெற்றுக்கொண்டேன் :)

@ rvc

சந்திரா, நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும். கவிதை எப்போ எழுதப்போறீங்க. Really missing it.

@ MayVee

நன்றி MayVee.

@ மாதவராஜ்

உங்கள் பாராட்டுக்கும், புரிதலுக்கும் நன்றி மாதவ். சேகுவேரா நிதானமாக முழுதும் படிக்க வேண்டும். அதனால் இன்னும் பின்னூட்டம் தரவில்லை. மிக முக்கியமான பதிவுகள் அவை.

@ விக்னேஸ்வரன்

நன்றி விக்கி.

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் அருமை.

அன்புடன் அருணா said...

//கிருஷ்ணாவுக்கு மூச்சு நின்று, சீராக சில நிமிடங்கள் ஆயின//

எனக்கும்தான்...கதை மனம் தொட்டது...
அன்புடன் அருணா

PPattian said...

அழகு. ஆனால் இப்படி மனிதர்கள் இருப்பார்களா என ஒரு உறுத்தல்.. சத்தியமாக என்னால் முடியாது..

na.jothi said...

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்


இந்த கதையில் வரும் கிருஷ்ணாவை போல்
இன்றைய அரசாங்கங்கள் செயல் படுகின்றன
இலவசம் என்ற பெயரில்
இந்த செயல்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு
பயன்படும் என்பதை அறிந்தும்

கதை நல்லா இருக்கு

TamilBloggersUnit said...

கதை அருமை...

ச.முத்துவேல் said...

MURALI KANNAN SAID,

/மனதை தொட்ட கதை. நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளையும், என்ன ஆனாலும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரத்தையும் அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்/

REPEAT...

anujanya said...

@ அமிர்தவர்ஷணி அம்மா (அ.அ)

உங்கள் முதல் வருகை மற்றும் பின்னூட்டம்! நன்றி சகோதரி.

@ அன்புடன் அருணா (இன்னொரு அ.அ.)

நன்றி அருணா.

@ புபட்டியன்

சீனியர் வருகை! நான் பதிவு எழுத வந்த புதிதில் உங்கள் பெயரை அடிக்கடி பார்த்த ஞாபகம். அப்புறம் ஆபீசோ/தொழிலோ - ரொம்ப பிசியாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். Anyways, welcome back.

நீங்கள் சொல்வதும் சரிதான். நானும் கூட இப்படி இருப்பேனா என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை :). நன்றி உங்கள் பாராட்டுக்கு.

@ smile

நீங்கள் சொல்வதும் வாஸ்தவம். நன்றி.

@ TamilBloggersUnit

நன்றி

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்.

அனுஜன்யா

மாசற்ற கொடி said...

Very nice. Though haven't read Jemo, it is very true that after a great result, the interest level goes down ! Wish v all have the courage like the protagnist to enjoy the absolute bliss.

MSK / Saravana said...

நல்ல நடை.. அழகா இருக்கு..

அந்த பணம் அதன்பின் என்ன ஆனது என்பதை சொல்லாமல் விட்டிருக்கும் சஸ்பென்ஸ் அருமை. :)

முகுந்தன் said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அனுஜன்யா...

மேவி... said...

அனுஜன்யா தொடர் பதிவுக்கு உங்களை அழைத்து இருந்க்கேன். கலந்து கொள்ளுங்க.

Anonymous said...

பட்டாம் பூச்சி விருதுக்கு உங்களை அழைக்க வந்த்தா ஏற்கனவே விருது வாங்கீட்டிங்க. வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

anujanya said...

@ Massattra Kodi

நன்றி.

@ சரவணன்

நன்றி சரா.

@ முகுந்தன்

இடைவெளிக்குப்பின் மீண்டும் வந்த முகுந்தனுக்கு நல்வரவு. நன்றிபா.

@ MayVee

அப்படியா, பார்க்கிறேன் :). 'தொடர்' எல்லாம் என் போன்ற சோம்பல் பேர்வழிகளுக்கு ஒத்து வராது நண்பா :)

@ வேலன்

நன்றி வேலன். நல்ல வேளை தப்பித்தேன் :)

@ தேவன்மயம்

நன்றி. வருகிறேன்.

அனுஜன்யா

இராம்/Raam said...

அருமை.... :)

ராமலக்ஷ்மி said...

உயிரோசையில் முன்னரே படித்தேன். பிறருக்கு உதவ முன் வரும் உள்ளம் அமைவதே வாழ்க்கை நமக்களிக்கும் மாபெரும் 'போனஸ்’ என்பதை உணர்த்திய விதம் கண்டு அசந்தேன். பொங்கல் வேலையில் நீங்கள் இதைப் பதிவிட்டது தெரியாமலும் சற்று அசந்துதான் விட்டேன்:)!

குடந்தை அன்புமணி said...

போனஸ் வாங்கிய போது அவன் மனம் மகிழ்ந்ததுபோல், கதையை படித்ததும் எங்கள் மனம் மகிழ்ந்தது.

TKB காந்தி said...

ரொம்ப நல்லா இருக்குது அனுஜன்யா கதை. உயிரோசைக்கு வாழ்த்துக்கள். நீங்க உயிரோசைல ஒரு columnist-ஆ ங்கற doubt எனக்கு அடிக்கடி வரும் :)

anujanya said...

@ இராம்

நன்றி இராம் உங்கள் தொடர் ஊக்கத்திற்கு

@ ராமலக்ஷ்மி

என்னடா, சகோதரி வரவில்லையே என்று நினைத்தேன் :)
தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

@ அன்புமணி

உங்கள் முதல் வருகை என்று எண்ணுகிறேன். பாராட்டுக்கு நன்றி

@ காந்தி

எங்கப்பா ஆளையே காணோம்! ஆம்ஸ்டர்டாம்?

//நீங்க உயிரோசைல ஒரு columnist-ஆ ங்கற doubt எனக்கு அடிக்கடி வரும் :)//

அடப்பாவி, அதனால்தான் கவிதை பிரசுரம் ஆகிறது என்று அர்த்தமா? கிர்ர்ர்.

அனுஜன்யா

TKB காந்தி said...

அமாங்க அனுஜன்யா ஒரு சின்ன europe டூர் போயிருந்தோம், Amsterdamமும் பார்த்தோம். ரொம்ப அழகாயிருந்தது.

நான் அப்படி mean பண்ணல :) உங்களோட அநேக படைப்புகள் உயிரோசையில் பிரசுரமாகுதுங்கறதுனால அப்படிச்சொன்னேன்.

உங்க கவிதைங்க மற்ற உயிரோசை கவிதைகளைவிட தனியா அழகா இருக்கும், நீங்க எழுத்தாளர்களின் சிற்றிதழ்களில் எழுதணும்னு நெனைக்கறேன்.

Itsdifferent said...

Good story.
I believe, each and everyone of us has a potential to help others. But how many of us do?
Have a target to spend money on improving others lives, and do it regularly.
There are so many organizations these days, who can use any help.

கார்க்கிபவா said...

//@ கார்க்கி

நன்றி சகா. எல்லாம் நீ காட்டிய வழி (நான் நான் தான்)//

இப்பதான் பார்த்தேன்.. இது கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருந்தாலும், எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தருது தல.. அந்த கதை உங்களுக்கு எந்த அள்வு பிடிச்சிருக்குதுன்னு புரியுது..

மீண்டும்.. நன்றி..(ஞாபகமிருக்கா, ஒரு கதையை பாராட்டி பல பின்னூட்டங்கள் போட்ட பெருமை உங்களுக்கும், கிடைத்த பெருமை எனக்கும். இப்போ அந்த கணக்குல இன்னொன்று)

காஞ்சனை said...

அனுஜன்யா,
கதை ரொம்ப பிடிச்சிருக்கு. கதையின் முடிவுக்கு பாராட்டுக்கள்.

//மத்திய தரத்தின் எம்பும் எத்தனங்களைப் பற்றி இந்த மாதிரி தருணங்களில் எட்ட நின்று அவதானிப்பதும் சுவாரஸ்யம்தான்//

நிச்சயம் சுவாரஸ்யம் தருவதாக இருக்கும். அடிக்கடி இதை நினைத்துக் கொள்வதும் உண்டு

உயிரோடை said...

உயிரோசையிலே படித்தேன். கதாநாயகன் இவ்வளவு நல்லவனா இருக்கான்?

anujanya said...

@ காந்தி

ரொம்பவே குளிர வெச்சுட்டப்பா. ஐரோப்பா புகைப்படங்களைப் போடலாமே, உன் கவிதைகளுடன் :)

@ Itsdifferent

உங்கள் பாராட்டுக்கு நன்றி . நீங்கள் சொல்வது நல்ல யோசனை. எனக்குத் தெரிந்து பலபேர் CRY போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். என்ன, யானைப் பசிக்கு சோளப்பொறி போல.

@ கார்க்கி

:))

@ சகாரா தென்றல்

நன்றி சகாரா.

@ மின்னல்

லொள்ளு? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அனுஜன்யா

மதன் said...

நல்ல கதை தல.. வாழ்த்துக்கள்..!

anujanya said...

@ மதன்

நன்றி மதன்.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

WOW!


Veettula Poi thamiz fontla virivaa pinnoottaRen!!!

anujanya said...

@ பரிசல்

நன்றி கே.கே.

அனுஜன்யா

Muthaiya said...

Very nice, inspirational story!!!

anujanya said...

@ Muthaiya

Thanks very much.

Anujanya