Thursday, February 26, 2009

பதிவு கடத்தப்பட்டது - ரகசிய சந்திப்பு விவரங்கள்

இப்போ எல்லாம் வலைபூக்கள் நிறைய கடத்தப் படுவது பற்றி நல்ல பதிவுகள் எழுதும் பலர் நடுக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. நமக்கு இந்த மாதிரி கவலைகள் ஏதும் இல்லை. ஏதாவது ஒரு பதிவையாவது கடத்த முடியுமா என்று ஆராய்ந்தேன். ஒரு முக்கியப் பதிவர், ஒரு ரகசியப் பதிவை எழுதி இன்னும் பதிவேற்றாமல் இருப்பது தெரிய வந்தது.

அவர் பதிவேற்றும் முன், நாம செய்துடலாம்னு பதிவேற்றிவிட்டேன். ஆனா பாருங்க, எனக்கு இதுல ஒண்ணும் புரியல. எல்லாமே சங்கேத வார்த்தைகளா இருக்கு. உங்களுக்கு ஏதாவது புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.


நகரின் பிரதான இடத்தில் அதிகம் அலட்டிக்கொள்ளாத வெளிச் சுவர். உள்ளே வந்தால், பரபரப்பு நகரம் தொலைந்து விட்டிருந்தது. ஆட்டோவில் வந்தவரை செக்யூரிட்டி நிறுத்தி விசாரிக்க, அவர் யாரைப் பார்க்க வந்தாரோ அவரை அவசரமாக அலைபேசியில் அழைத்து 'ஹல்லோ, நான் இப்ப இங்க' என்று தடுமாறினார்.

"ஹல்லோ, சார், நீங்கதான் ஆட்டோவில வந்ததா? இறங்கிடுங்க. இதோ நாங்க மரத்தடியில்தான் இருக்கோம்"

"ம்ம், ஜீன்ஸ், டி-ஷர்ட் எல்லாம் யூத்தா தான் இருக்கு. பாப்பம்"

"நாம வேற மாதிரி இருப்பாருன்னு நெனச்சோம்ல"

"ஹை கைய்ஸ் - எப்பிடி இருக்கீங்க"

"நல்லா இருக்கோம் சார். நீங்க?"

ஐயாம் பைன். ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? மத்தவங்க இன்னும் வரலியா?

மரத்தடி இருவரில் ஒருவர் நல்ல உயரம். இளைஞர். எப்போதும் சிரிப்பு.

இன்னொருத்தர் செம யூத். ஊருக்குப் போகும் பையை படையப்பா ஸ்டைலில் பினனால் போட்டுக் கொண்டிருந்தார். இந்தப் பூனையும் ...என்பது போல் உட்கார்ந்தாலும், ஆழ்ந்த அவதானிப்பு நடந்துகொண்டே இருந்தது. ஆட்டோவில் வந்த யூத்துக்கு இந்த யூத்திடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தன.

உயர இளைஞருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. "எங்க? வேளச்சேரி கேட் தானே? அங்கியே இருங்க. வேணாம், நடக்க வேண்டாம். நானே பைக்குல வந்து பிக் அப் பண்ணுறேன்

இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் அவருக்கே ஒரு குறுஞ்செய்தி. "அவரோட மொபைல் ஏதோ தகராறு. பேட்டரி ப்ராபளம் போல" என்றார். அப்புறம், "சார் நீங்க என்னோட வாங்க - நீ இங்கியே இரு சகா. மத்தவங்க வந்தா, கஜேந்திரா சர்கிளுக்குக் கூட்டிக்கிட்டு வந்திடு. நான் இவர இந்த மொபைல் தகராறு ஆசாமி கிட்ட ஏறக்கிவுட்டு, வேளச்சேரி பார்ட்டிய பிக் அப் பண்ணிக்கிட்டு வரேன். பெருங்குடி மைனர் பைக்குல வந்திடுவார். தல கொஞ்சம் லேட்டாகும்னாறு. கிளம்பிட்டாரு" என்று சொல்லிக்கொண்டே பைக்கை உதைத்தார்.

பினனால் தொற்றிக்கொண்டு ஆட்டோ யூத் போக, அப்சல்யூட் யூத் இங்கி பிங்கி போட்டுப் பார்த்து, புதிய காதலியை அலைபேசியில் கலாய்க்கத் துவங்கினார்.

கஜேந்திரா சர்க்கிளில் இறக்கிவிடப்பட்ட யூத் அங்கு செல்லமாக ஒரு தொப்பையுடன் நின்றுகொண்டிருந்த ஐ.டி. நண்பனைக் கண்டார். அவரும் இவரைக்கண்டு புளகாங்கிதம் அடைந்தார். யூத் "ஆபீஸில் ஆணி அதிகமா? ரொம்ப நாளா பதிவே வரல"

"இல்லையே. லாஸ்டு இரண்டு வாரத்தில் மூணு பதிவு போட்டு, மூணுமே மெகா ஹிட்டு"

"இருந்தாலும் உன்னோட அறிவியல் கதைகள் போல வராது. அது மாதிரி நிறைய எழுது" என்று ஐஸ் வைத்தார் யூத். ஐ.டி. அதைக் கண்டுகொள்ளாமல், 'என்ன ஆனாலும் உங்க கவித புரியவே மாட்டேங்குது' என்று புலம்பத் துவங்கினார். யூத் இலேசாக நடுங்கத் தொடங்கினார். இன்னிக்கு மீடிங்குல ரவுண்டு கட்டி கவிதைக்குப் பொழிப்புரை கேப்பாங்களோ என்று பயத்தில் வியர்க்கத் தொடங்கினார்.

"உங்களுக்கு எது சொந்த ஊர்?" ஐ.டி.

'எந்த ஊர் என்றவனே..இருந்த ஊரைச் சொல்லவா' என்று பாடினால் வயதைக் கூட்டிவிடும் அபாயம் இருந்ததால், நம்ம யூத் 'சிங்காரச் சென்னை' என்று நிறுத்திக் கொண்டார்.

'சென்னையா? அதுக்கு முன்னாடி?'

'நா பொறக்கவே இல்ல'

ஐ.டி.யின் கொலைவெறி அதிகமாகும் முன், ஒரு கருநீல மாருதி சத்தமே இல்லாமல் வந்து நின்றது. விடுவித்துக்கொண்டு இறங்கியவர் முகத்தில் எப்போதும் தவழும் புன்முறுவல். திரைப்படத்துறை என்பதால் கண்களால் காட்சிப்பொருளைச் சில நொடிகளில் அளந்து விடும் திறமை. நாம கேட்காமலே 'நான் கடவுள் வசூல் ரீதியில் ஆப்பு' என்றார். அதே மூச்சில் 'படம் நல்ல படம' என்றும் சொன்னார். அவரிடம் உள்ள வசீகரமே அந்த மந்தகாசமும், திரைப்பட உலகு பற்றிய prejudice இல்லாத கண்ணோட்டமும்தான். பெண்களைப் பற்றி ஆர்வத்துடனும், சுவாரஸ்யமாகவும் பேசினார் அந்த இயக்குனர். பெரிய காதல் மன்னனாக இருப்பார் போல என்று யூத் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

அதே சமயம் வேளச்சேரி கேட் அன்பரும், அப்சல்யூட் யூத்தும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் மெல்ல மெல்ல அரட்டை உருவம் பெற்றது. உயரமான, விருந்தோம்பல் இளைஞரும் வந்து சேர்ந்து, எல்லோரையும் டிபானி உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். யூத் நடுசென்டரில் உட்கார வைக்கப்பட்டார்.

எல்லோருக்கும் ஒரு பொதுக் குறை இந்த யூத் ஒரு பெண் என்று எல்லோரும் முதலில் எண்ணியது. இந்தப் பெயரை எப்படி, ஏன் வெச்சுக்கிட்டீங்க என்று நதிமூலம் தேடினார்கள். யூத் உண்மையைச் சொல்லி ஓரளவு தப்பித்துக்கொண்டார். ஆனாலும், விவாதம் களைகட்டாமல் இருந்தது. இவுங்க நிச்சயமா நம்ம கவிதைய அக்கு வேற ஆணி வேறயா அலசி கிழிக்கப் போறாங்களோ என்ற பயத்தில் யூத்தும், எங்கே ஏதாவது கேள்வி கேட்டால் கவிதை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் மற்றவர்களும் நெளிந்துகொண்டு இருந்தார்கள்.

அப்சல்யூட் மட்டும் பதிவுலகத்தை அசால்டாக அலசினார். தமிலிஷ் உரிமையாளர் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. நம்ம யூத்துக்கு இது எல்லாம் கண்ணக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்திருக்க வேண்டும். 'நீங்க தான் தமிலிஷ் ஓனர்' என்றாலும் ஏறக்குறைய ஒப்புக்கொண்டிருப்பார். எல்லோரும் இனிப்பு, பூரி, காப்பி என்று பிசியானார்கள். திடிரென்று ஒரு சலசலப்பு. பெருங்குடி மைனர் வந்துகொண்டிருந்தார். வந்தேவிட்டார். புகைப்படத்தின் வசீகர மேக்கப் (கறுப்புக் கண்ணாடி, க்ளீன் ஷேவ் இத்யாதி) இல்லாவிட்டாலும், நேரில் இன்னும் இளமையாக இருந்ததை நம்ம யூத் சொல்லியேவிட்டார்.

வந்தவுடன் அவரும் skc யில் பிசியாகி, உடனே தனது பிரத்தியேகத் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். காமிரா (இது அவர் பேரோட ரைம் ஆகுதுல்ல!) கையில் வைத்துக்கொண்டு கோணங்கள் பார்க்க ஆரம்பித்தார். யூத்தும் முகத்தில் எப்பாடுபட்டாவது இளமையைக் கொண்டுவந்துவிட முயற்சி செய்தார். யூத் எதிர்பாராத நேரங்களில், கோணங்களில் படபடவென்று சுட்டுத் தள்ளினார் பெருங்குடி.

உயர இளைஞர் மீண்டும் பரபரப்புடன் யூத்திடம் "உங்களுக்காகவே 'அண்ணே' அவர்கள் சேலத்திலிருந்து நேராக வருகிறார்" என்றார். இப்படிப் போய்க்கொண்டிருந்த அந்தச் சந்திப்பு திடீரென்று பரபரப்பானது. ஒரு முன்னணி நடிகர், அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களுடன் விறுவிறுவென்று ஸ்டைலாக வந்தார். யூத்துக்கு இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்த அந்த ஸ்டாருக்கு ஏனோ திருப்தியில்லை. அதனால் எதிர் வரிசையில் அமர்ந்து யூத்தை உற்று கவனிக்கத் தொடங்கினார். படு இயல்பாகப் பேச ஆரம்பித்தார் அந்த கார்பரேட் கம்பர். யூத்துக்கும் மகிழ்ச்சி. கடைசியில் நம்ம ரேஞ்சுக்கு ஒத்தரு வந்தார் என்று.

அப்சல்யூட் யூத் ஹைதை செல்கையில் சக பயணியை (இளம்பெண்தான்) கலாய்த்த கதையை graphic details உடன் விவரிக்க ஹால் திடிரென்று பெருமூச்சுகளால் உஷ்ணம் ஏறியது. 'இதெல்லாம் என்ன ஜுஜுபி' என்ற மந்தகாசப் புன்னகையில் இயக்குனர் மட்டும் கண்ணாடியினூடே தெரிந்தார். ஏற்கனேவே ஸ்டார் வந்ததில் 'லைட்ஸ் ஆன்' ஆக, இப்போது காமிராவும் ஆன் செய்யப்பட்டது. அப்புறமென்ன ஆக்சன்தான். பலவித கோணங்களில் தன்னைப் புகைப்படம் பிடிக்குமாறு ஸ்டார் ஆணையிட்டார். காமிராவும் அவ்வாறே செய்ய, மற்றவர்கள் ஷூட்டிங் பார்த்தார்கள்.

இலங்கை, இந்திய, மலேசிய (ச்சே, கோபால் பல்பொடி போல இருக்கு) விஷயங்கள் பேசப்பட்டன.

அப்சல்யூட் யூத் திடீரென்று 'நீங்க இந்தக் கவிதைகளை எப்போ எழுதினீங்க' என்றார்.

யூத் 'ஒரு மூணு நாலு மாசம் முன்னால'

'நான் எப்போ பதிவு போட்டீங்கன்னு கேக்கல; எப்போ எழுதுனீங்க?'

'நான் உண்மையாவே இப்போதான், சமீபத்தில் தான் எழுதினேன்'

'சமீபம்' என்ற வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டது.

இப்போ கம்பர் 'இதோ பாருங்க. அவன் என்ன கேக்குரான்னா.. அதாகப்பட்டது எந்த ஒரு மனுஷனுக்கும் ஒரு இருபது முதல் இருபத்தஞ்சு வயசுல காதல் வரும். வரணும். வந்தே தீரணும் (இப்போது நம்ம யூத் உடல் நடுக்கம் கண்டது). அது சில பேருக்கு துரதிர்ஷ்ட வசமாக கைகூடி கலியாணத்தில் முடியும். அதிர்ஷ்டசாலி பலபேர் கவிதை எழுதுவார்கள். நீங்க எப்படி?"

"நான் அந்த து.அதிர்ஷ்டசாலி வகை"

"அப்படியா. அப்போ இப்பதான் கவித எழுதத் துவங்கினேன்னு சொல்றீங்க. கவிதை படித்தால் தெரியுது" என்றதும், அவையில் எல்லோரும் தலையாட்டி ஆமோதித்தனர். யூத் ஒரு உபரி தகவலாக தனக்கு ஹிந்தி சிறிதும் தெரியாது என்றதும் அதனை மொழிப்பற்றின் உச்ச உணர்ச்சியாக எல்லோரும் பாவித்து, அடுத்த பல பதிவுகளுக்கு தலா ஐந்து பின்னூட்டம் தமிழிலேயே போடுவதாக யூத்திடம் சொன்னார்கள்.

காமிரா ஆசாமி மட்டும் பழக்கப்பட்ட மூன்றாம் கண் மூலம் யூத்தை அளந்து கொண்டிருந்தார். உதடுகள் 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று முணுமுணுப்பது தெரிந்தது.

அப்போது ஜீன்ஸ், பளீர் வெள்ளை சட்டையில் ஒரு கனவான் வர, எல்லோரும் 'அண்ணே' என்றனர். யூத்தும் அண்ணேவும் ஆரத் தழுவினர். பின்ன சும்மாவா? ஒன்றாகப் பதிவுலகில் காலடி வைத்தவர்கள். ஒரே குருப்பாகச் செயல்படுபவர்கள் என்றெல்லாம் அறியப்பட்டவர்கள். அண்ணே களைப்புடன் காணப்பட்டார். சேலம்-சென்னை நான்-ஸ்டாப் பயணம். உங்களைப் பாக்கத்தான் இவ்வளவு அவசரமா வந்தேன் என்று அண்ணே சொன்னதும் யூத் நெகிழ்ந்தார்.

இதற்கு இடையில் மருத்துவரும் வந்திருந்தார். செம்ம ஸ்மார்ட். அவரும் அண்ணேவும் அளவளாவினர். நம்ம host இளைஞர், யூத்திடம் 'கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தீங்கன்னா பதிவர் சந்திப்பே வெச்சுருக்கலாம்' என்றார். யூத் நல்லவேளை தப்பித்தேன் என்று எண்ணியபடி 'அடுத்த முறை முன்னாடியே சொல்றேன்' என்றார்.

அப்சொல்யூட் ஹைதைக்கு ஏற்கனேவே யூத் நிமித்தம் ட்ரைன் டிக்கெட் கான்செல் செய்து பேருந்தில் செல்ல புக் செய்திருந்தார். 8.45 க்கு பஸ் கிளம்பிவிடும். கோயம்பேடு செல்ல வேண்டும். கம்பரிடம் எதோ பேசி, தாஜா செய்து, அவரை ட்ராப் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் கிளம்பிப் போக, கூட்டம் ஒருவாறு கலைந்து கீழே வந்தது.

அப்போது இன்னொரு அலைபேசி நம்ம உயர இளைஞருக்கு. "இருக்கோம் தல. வாங்க" என்று சொல்லிவிட்டு, யூத்தைப் பார்த்து, "இன்னிக்கு நீங்க நரி முகத்திலேதான் முழிச்சிருக்கீங்க. அதிர்ஷ்டமும், அவர் சகாவான இப்போ அடல்ஸ் ஒன்லி எழுதும் அதிரடிப் பதிவரும் வராங்க" என்றார். யூத் நம்பவே இல்லை. இரண்டு நிமிடங்களில், பரபரப்பாக பதிவுலகை கலக்கும் அந்த இருவர் வந்தனர். மீண்டும் மேலே ஏறி சென்று காபி கடை ஆரம்பித்தது.

கூட்டம் மூன்று குழுவாக அமர்ந்தது. முதல் குழுவில் பதிவுலக சூப்பர் ஸ்டார், அண்ணே, மருத்துவர் மற்றும் ஐ.டி.நண்பர் பேசினார்கள். அதாவது, சூப்பர் ஸ்டார் சொல்வதை ஆர்வமாகக் கேட்டார்கள்.

யூத்துக்குப் பக்கத்தில் அமர்ந்த அதகள பதிவர் 'நீங்க மொதல்ல ஒரு பெண் என்று நினைத்து... ஒரு மெயில் கூட அனுப்பலாம்னு இருந்தேன்' என்றார். தான் பெண்ணாகப் பிறக்காததின் பெருமையை யூத் உணரத் துவங்கினார். பிறகு "உங்கள வேறமாதிரி கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். இப்படி இருக்கீங்களே' என்றார். யூத் 'ஞே'.

உயர இளைஞர் கொஞ்சம் உதவிக்கு வந்தார். திரைப்பட இயக்குனரும் சேர்ந்துகொண்டார். பலகோணங்களில் யூத்தை அலச ஆரம்பித்தனர். இயக்குனரின் படத்தில் யூத்துக்கு 'அப்பா' வேடம் தரலாம் என்று சொல்லப்பட்டது. ஏமாற்றம் அடைந்த யூத்தை இளைஞர் தேற்றி 'அண்ணன் வேடம் - பணக்கார அண்ணன் வேடம் தரலாம்' என்றார். இயக்குனரும் தன் பங்குக்குத் தந்தை வேடத்தின் சலுகைகளை விலாவாரியாக விளக்கத் தொடங்க, அதை பிரசுரித்தால் இந்தப் பதிவுக்கு 'U' certificate கிட்டாமல் போகும் அபாயம் உள்ளதால் எடிட் செய்துவிடலாம்.

அதிரடிப் பதிவர், அவ்வளவு இளமை என்றாலும், பிரமிக்கத்தக்க புரிதல்கள் பல விடயங்களில். நிச்சயம் ஹாலிவுட் தர இயக்குனர் ஆகிவிடுவார் என்றே தோன்றுகிறது. ஆபீஸில் மடிக்கணினி தராததுடன், பதிவுகளைப் பார்வையிடும் சலுகைகளும் தருவதில்லை என்று நொந்து கொண்டார். என்ன அநியாயம்! அதிலும் திருப்பூர்காரருக்கு ஒரு மடிக்கணினி யோகம். இவருக்கு இந்த மாதிரி டார்ச்சர். யூத்தும் அதியும் ரொம்ப நேரம் தனியாகப் பேசினார்கள். பெரும்பாலும் அதி எடுக்கும் படத்தில் சில பாடல்கள் யூத்துக்குக் கிடைக்கும் என்று தோன்றுகிறது. யூதத்தின் வாசிப்பு இன்னும் விரிவடைந்தால், வசனம் கூட கிடைக்கலாம். இதற்கு இடையே இயக்குனர், அதியை துணை இயக்குனராக தன்னிடம் பணிபுரியும்படி வற்புறுத்தினார்.

யூத் நடுநடுவே சூப்பர் ஸ்டார் பேசுவதை அவதானித்துக்கொண்டு இருந்தார். அரசியலை இவ்வளவு கூலாக பேசி யூத் பார்த்ததில்லை. அவ்வளவு தூய தமிழில், மேடைப்பேச்சுத் தமிழில் சூப்பர் ஸ்டார் பேசிக்கொண்டிருந்தார். மற்ற மூவரும், கேட்டுக்கொண்டு இருந்தனர்.

மீணடும், சினிமா பற்றி ஆராய்ச்சி செய்யும் அந்த உயர இளைஞர், தனது இன்னொரு பரிமாணத்தை காட்டினார். அதாவது கிரிக்கெட். அப்போது, அதி தான் ஒரு வேகப் பந்து வீச்சாளர் என்றும் தற்போது காலில் அடிப்பட்டு இருப்பதால் ஓய்வு எடுப்பதற்கு அலுவலகம் ஒழுங்காகச் செல்வதாகவும் குறிப்பிட்டார். சினிமா ஆர்வலர் தான் கிரிக்கெட் விளையாட்டிலும் மிகுந்த ஆராய்ச்சி செய்து, ஐ.பி.எல். வருவதற்கு சுமார் இருபது வருடங்கள் முன்பே உலகின் சிறந்த வீரர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து மேய்ந்ததை (தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில்) விவரித்தார். லலித் மோடி உங்கள் வேலையில் சற்று உஷாராக இருங்கள். உண்மையிலேயே படு சுவாரஸ்யம். கார்ப்.கம்பர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர் எனவும் மாவட்ட அளவில் விளையாடி இருப்பதாகவும் யூத் அறிந்தார். தானும் (யாரு விசாரிக்கப் போகிறார்கள்) தனது அலுவலகம், லீக் மேட்ச், தெரு, வீடு, புக் கிரிக்கெட் என்று பெரிய பிளேயர் என்று பறைசாற்றிக்கொண்டார்.

வேளச்சேரி இளைஞர், கடைசி வரை ஒன்றுமே பேசாமல், திருவிழா பார்க்கும் சிறுவனின் ஆர்வத்துடன் வலம் வந்தார். 'அத்தி' பூ போல் எப்போதாவது சில வார்த்தைகள் பேசினார். மணி இரவு ஒன்பதை நெருங்க, பிரியும் நேரம் வந்தது. யூத் பார்த்த அனைவரையும் (IIT விடுதி மாணவியையும் விட்டுவைக்கவில்லை) மும்பை வரும்படி கேட்டுக்கொண்டார்.

அண்ணே போலவே காமிரா பதிவரும் யூத் காதருகில் வந்து 'ரொம்ப முக்கியமான வேலைய பாதில விட்டு விட்டு உங்களுக்காக வந்தேன்' என்றதும் உண்மையிலேயே யூத் கொஞ்சம் ஆடிப் போயிட்டார்.

அவரவர் கிடைத்த வண்டியில் தொற்றிக்கொள்ள, யூத், இயக்குனர் மற்றும் மருத்துவருடன் மாருதியில் பயணித்து வீடு வந்து சேர்ந்தார். இடையில் ஒரு இடத்தில் சூப்பர் ஸ்டார் மற்றும் அதி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த இயக்குனர், வண்டியை நிறுத்தினார். அங்கு இருந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். சூடான விவாதங்கள். மருத்துவர் செம்ம பார்ம்ல இருந்தார். கிட்டத் தட்ட ஒன்றரை மணிநேரம். அதைப் பற்றி பேசினால் இன்னொரு பதிவே போட வேண்டும்.

இன்னொரு விஷயம். அந்த இரு டாப் பதிவர்களும் நம்ப முடியா எளிமை. உண்மையிலேயே அந்தக் கடையில் அவரை அடையாளம் கண்டுகொண்ட படு இளம் பதிவர்கள் மூவர் (வயது ஒரு இருபது இருக்கலாம்) 'பதிவர் சந்திப்பா' என்று அருகில் வந்து ஆட்டோகிராப் கேட்கும் வரை வந்துவிட்டனர். யூத்தும் குஷியில், கையெழுத்துப் போட பேனா வெளியில் எடுத்தார். பையன்களில் ஒருவன் "உங்களுக்கு ஆட்டோகிராப் கிடைச்சுதா அங்கிள்' என்று கேட்டதும் ஒரு பலூன் சுருங்கி, வீடு போய் சேர்ந்தது.


இது அந்தப் பதிவருடைய 50 வது பதிவு. ஆதலால் கொஞ்சம் பாத்து ஆதரவு கொடுங்கள்.

38 comments:

முரளிகண்ணன் said...

அசத்தலான பதிவு. கண் முன்னே விரியச் செய்து விட்டீர்கள்.

முரளிகண்ணன் said...

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பொன்விழாவுக்கு பொன்னான பதிவு

na.jothi said...

வாழ்த்துக்கள் அண்ணா
50 வது பதிவுக்கு
கிசுகிசு பாணியில் சூப்பரா இருக்கு
உங்களுடைய சென்னை விசிட்

Anonymous said...

ஏதோ நல்லாருக்குது. மகிழ்ச்சியா இருந்தீங்கனும் தெரியுது. ஆனா, பதிவு புரிஞ்சா மாதிரியும் இருக்குது. புரியாத மாதிரியும் இருக்குது.

Karthikeyan G said...

Congrats!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நர்சிம், லக்கி லுக், அதிஷா, முரளி கண்ணன், கார்க்கி... என யாரையும் கண்டே பிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன், உங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை :) நல்லா எழுதறாங்கய்யா ரகசியத்தை :)

குசும்பன் said...

//ஏதோ நல்லாருக்குது. மகிழ்ச்சியா இருந்தீங்கனும் தெரியுது. ஆனா, பதிவு புரிஞ்சா மாதிரியும் இருக்குது. புரியாத மாதிரியும் இருக்குது.//


சென்னைக்கு போய்

மக்களை சந்திச்சுட்டு வந்ததை பின்நவீனத்துவ வாதி சொன்னா இப்படிதான்:))))

நர்சிம்
அப்துல்லா
கார்கி
முரளிகண்ணன்
தாமிரா
வெண்பூ
ஆகியோரை:))

பரிசல்காரன் said...

பதிவு ரொம்ப சின்னதா இருக்கு. உங்ககிட்டேர்ந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன்!

:-))

(ஸ்மைலி போட்டிருக்கேன் சார்!)

பரிசல்காரன் said...

நடுநடுவுல யூத்து யூத்துன்னு சொல்லிருக்கீங்களே? அப்ப நீங்க போகலியா சென்னைக்கு?

கார்க்கிபவா said...

தல..

எவ்ளோ நேரமாச்சு இத எழுத? சான்சே இல்ல. கவிதை எழுதரத நிறுத்திட்டு அவியல் துவையல்னு ஏதாவ்து எழுதி கல்லா கட்டுற வேலையை பாருங்க..

அதுவும் அப்சல்யூட் யூத்துக்கு உங்கள ரொம்பவே புடிச்சு போச்சாமே? பேச நேரமில்லனு எங்கிட்ட கூட சொன்னாரு. மும்பைக்கு வந்தாலும் வருவாரு. ‘நல்லா’ கவனிச்சு அனுப்புங்க.

KARTHIK said...

// பதிவருடைய 50 வது பதிவு.//

வாழ்துக்கள்.

மணிகண்டன் said...

யூத் கிட்ட இவ்வளவு இளமையா இருக்கீங்களே ! உங்க பேரனுக்கு எவ்வளவு வயசு ஆகுதுன்னு கேக்கலையா ?

மணிகண்டன் said...

***
யூத் ஒரு உபரி தகவலாக தனக்கு ஹிந்தி சிறிதும் தெரியாது என்றதும் அதனை மொழிப்பற்றின் உச்ச உணர்ச்சியாக எல்லோரும் பாவித்து, அடுத்த பல பதிவுகளுக்கு தலா ஐந்து பின்னூட்டம் தமிழிலேயே போடுவதாக யூத்திடம் சொன்னார்கள்.
***

ஆனாலும் ரொம்பவே ஓவர் நக்கல் அனுஜன்யா உங்களுக்கு !

அத்திரி said...

அதகளம் பண்ணிட்டீங்க. சரி அது என்ன யூத் யூத் யூத்..யாருங்க அந்த யூத்

ரௌத்ரன் said...

வாழ்த்துக்கள் அனுஜன்யா...அதகளமாக இருக்கிறது பதிவு..தொடரட்டும் 'யூத்' தின் அட்டூழியங்கள்....

Unknown said...

படிக்க ஆரம்பிச்சதுமே தெரிஞ்சு போச்சு யார் யார்ன்னு.. இருந்தாலும் மூணு நாள் சென்னைல டேக்கா போட்டுட்டு தங்கைய பார்க்காம போனதுக்காக பாதி பதிவோட வெளிநடப்பு செய்யறேன்... பை..!!

வால்பையன் said...

வெண்பூ
கார்க்கி
கேபிள் சங்கர் அல்லது முரளி கண்ணன்
தாமிரா
தாமிராவின் நண்பர்

சம்பந்த பட்டிருப்பது தெரிகிறது.

ஆனாலும் கண்டுபிடிக்க தாவூ தீருது

எம்.எம்.அப்துல்லா said...

//ஆனா, பதிவு புரிஞ்சா மாதிரியும் இருக்குது. புரியாத மாதிரியும் இருக்குது //

அடப்பாவமே...அப்படி இருந்தாத்தான் அது அனுஜன்யா அண்ணன் பதிவுன்னு உங்களுக்குத் தெரியாதா வெய்யிலான் :)

Anonymous said...

//எந்த ஊர் என்றவனே..இருந்த ஊரைச் சொல்லவா' என்று பாடினால் வயதைக் கூட்டிவிடும் அபாயம் இருந்ததால், நம்ம யூத் 'சிங்காரச் சென்னை' என்று நிறுத்திக் கொண்டார்.//

கூட்டிவிடும் இல்லீங்க காட்டிவிடும்.

நீங்களும் என்னவோ அஜால் குஜால் வேலை பண்ணி யூத்துன்னு நிலை நிறுத்தப் பாக்குறீங்க. ஹீம் பாச்சா பலிக்கல.

மார்ச் 16 உங்களுக்கு இருக்கு கச்சேரி :-)))))

மண்குதிரை said...

ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!

narsim said...

50க்கு வாழ்த்துக்கள்..

அனுஜன்யா..

மிகமிகமிகமிகமிக ரசித்த பதிவு இது.. இது போன்ற பத்தி எழுத்துக்களில் நீங்கள் கலக்குகிறீர்கள்.. தொடருங்கள்..

பை தி வே.. சென்னை வந்தீங்க போல??

Cable சங்கர் said...

யூத்தின் பதிவை கடத்தியதற்காக அன்பாக கண்டிக்கிறேன். நீங்க இன்னொரு யூத்தை கவனிக்க மறந்துட்டீங்க. எனக்கு எப்பவுமே தற்புகழ்ச்சி பிடிக்காது.

சூப்பர் பதிவுசார். 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பாலராஜன்கீதா said...

50 ஆகிவிட்டதா ?
இடுகைகளைத்தான் கேட்கிறேன். .....தை அல்ல.
:-)

மாசற்ற கொடி said...

Half செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். Go for it !!!

அன்புடன்
மாசற்ற கொடி

வெண்பூ said...

எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா இந்த ஆட்டோவில் வந்த யூத்து புது கேரக்டரா இருக்கே... அப்படி யாரையும் பாத்ததா நினைவில்லையே... தாமிரா, சங்கர், அப்துல்லா, முரளி, நர்சிம், லக்கி, அதிஷா, அத்திரி, கார்க்கி, புருனோ.. உங்க யாருக்காவது ஞாபகம் வருதா??? என்னவோ போங்க.. ஆட்டோவில் வந்த யூத்து மாதிரின்னு சொன்னா கரெக்டா இருக்கும் :))))

சின்னப் பையன் said...

வாய்ப்பே இல்லே... புகுந்து விளையாடியிருக்கீங்க...

அசத்தல் பதிவர் சந்திப்பு...

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு எந்த ரகசியமும் புரியலை யூத் அங்கிள்...:)

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

KarthigaVasudevan said...

வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கு .

மாதவராஜ் said...

அனுஜன்யா!

யார் யார்னு எனக்கு ஒண்ணும் தெரியல. அதனால அனுபவிச்சு ரசிக்க முடியல.

நேற்று சிவகாசியில் வேலனோடு பெல் ஓட்டலில் டீ குடிச்சுட்டு இருக்கும்போது ஒங்க பதிவைப் பத்திச் சொன்னார்.

வாழ்த்துக்கள் யூத்தின் ஐம்பதாவது பதிவுக்கு.

புருனோ Bruno said...

// பையன்களில் ஒருவன் "உங்களுக்கு ஆட்டோகிராப் கிடைச்சுதா அங்கிள்' என்று கேட்டதும் ஒரு பலூன் சுருங்கி, வீடு போய் சேர்ந்தது.//

ஹி ஹி ஹி :)

ராமலக்ஷ்மி said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். முடிவுதான் ரொம்ப அற்புதம்:))! ஐம்பத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுஜன்யா!

Kumky said...

சுவாரஸ்யமாக இருக்கிறது...யூத்தின்(வயது பற்றிய) சந்தேக புலம்பல்களைத்தான் தாங்க முடியவில்லை.

Thamira said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நர்சிம், லக்கி லுக், அதிஷா, முரளி கண்ணன், கார்க்கி... என யாரையும் கண்டே பிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன், உங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை :) நல்லா எழுதறாங்கய்யா ரகசியத்தை :)//

ROTFL.. கலக்கல் கமெண்ட்..

அந்த யூத் பதிவர் யாரென கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் என் பதிவில் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளேன்.. நண்பர்களே.!

pudugaithendral said...

50 க்கு வாழ்த்துக்கள்

anujanya said...

@ முரளி

நன்றி முரளி. உங்க hospitality அபாரம்.

@ புன்னகை

நன்றி.

@ வெயிலான்

ஜ்யோவ் கமெண்டு படிங்க. நல்லா புரியும் :)

@ கார்த்திகேயன்

நன்றி

@ ஜ்யோவ்

பூடகமா எழுத இன்னும் வரல தல.

@ குசும்பன்

குசும்பா, பிடிக்கலைன்னா நேரா சொல்லு. பி.ந.வாதி அப்புடின்னு கேட்ட வார்த்தையில் திட்டாதே :)

@ பரிசல்

நக்கலு? ரசித்தேன்.

@ கார்க்கி

நன்றி சகா. 'அவியல்/காக்டெயில்/கதம்பம்' எல்லாம் பெரிய தலைங்க விஷயம்.

எனக்கும் அப்சல்யூட் யூத்த ரொம்ப பிடிச்சிருச்சு. மும்பை எப்போ வேணாலும் வரவும். 'கவனிக்கப்'படும்.

@ கார்த்திக்

நன்றி

@ மணிகண்டன்

மணி, உன்ன தனியா கவனிக்கணும்.

@ அத்திரி

நன்றி. நானும் நீயுந்தான்.

@ ரௌத்ரன்

நன்றி ரௌத்ரன்

@ ஸ்ரீ

நீ சென்னையா? நா பெண்களூர்னு நினச்சேன் :)

@ வால்பையன்

என்ன குரு, எல்லாமே உங்க தோஸ்துங்க. இது என்ன கவிதையா, தாவு தீர?

@ அப்துல்லா

உன்ன தனியா கவனிக்கறேன் அப்துல் :)

@ வேலன்

உங்க ஐ-டெஸ்டு பண்ணனும். மார்ச் 16? சரி, சரி நேரா பேசி தீத்துக்குவோம்.

@ மண்குதிரை

நன்றி

@ நர்சிம்

நன்றி நர்சிம். வரணும்னு இருந்தேன். லாஸ்டு மினிட்ல என்னோட அண்ணனை அனுப்பி விட்டேன் :)

@ கேபிள்

வாங்க யூத். உங்க முதல் வருகை. நன்றி.

@ பாலராஜன்

கவுத்துப்புட்டியே பாசு! நன்றி.

@ மாசற்ற கொடி

நன்றி.

@ வெண்பூ

உனக்கு இலேசா மாலைக் கண் நோய் என்று கேள்விப்பட்டேன் :)

@ ச்சின்னப் பையன்

வாங்க. உங்கள் முதல் வருகை. ஆமாம், செம்ம ஜாலியா இருந்தது. நன்றி.

@ தமிழன்

ஜ்யோவ் கமெண்டு படிங்க தல. நன்றி.

@ மிசஸ்.டவுட்

ஆஹா, உங்கள் முதல் வருகை. நன்றி.

@ மாதவராஜ்

நன்றி மாதவ். வேலன் சொல்றத நம்பாதீங்க.

@ புருனோ

அடப்பாவி, நல்லாத்தானே எழுதினேன் உங்களைப் பத்தி. மொத்தப் பதிவுல ரசித்தது இதுதானா? நல்லா இருங்க. நன்றி புருனோ :)

@ ராமலக்ஷ்மி

நன்றி 'ஜெய் ஹோ'. உங்களுக்கும் 'முடிவு' தான் பிடிச்சுதா? என்ன ஒரு குரூர திருப்தி?

@ கும்க்கி

நன்றி கும்க்கி. முடிந்தபோது வாங்களேன் - என் வலைப்பூவுக்கும், மும்பைக்கும்.

@ தாமிரா

நன்றி தாமிரா. நீங்க புகைப்படம் எடுத்ததைப் பற்றி ஒரு தனிப்ப் பதிவே போடலாம்.

உங்க பதிவில் யூத் போட்டோ அட்டகாசம் என்று நானே சொல்லிக்கொள்ளுகிறேன் :)

@ புதுகைத் தென்றல்

நன்றி சகோதரி. உங்கள் முதல் வருகை?

அனுஜன்யா

கணினி தேசம் said...

ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!

anujanya said...

@ கணினி தேசம்

நன்றி வாழ்த்துக்கும், 'பின் தொடர்வதற்கும்' :)

அனுஜன்யா