Monday, November 30, 2009

காக்கிச் சட்டை - எதைப் பற்றியும் பற்றாமலும்

என் பதின்ம வயதுகளில், "மருத்துவத்துறை, காவல்துறை' இந்த இரண்டில் மட்டும் சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னுடைய அறிவு கூர்மைக்கும், நோஞ்சான் உடல் அமைப்புக்கும் இது இரண்டுமே வாய்த்திருக்காது என்றாலும், என்னுடைய குதர்க்கமான மூளை "இருபத்து நான்கு மணி நேரமும் அசாதாரண மக்களுடன், அதாவது நோயாளிகள், குற்றவாளிகள் இவர்களுடன் வேலை பார்ப்பது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது' என்னும் வாதத்தை வைத்தது.



என்னதான் புனிதமான தொழில் என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அவசரம் என்றால் ஓடி சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு மாபெரும் அநீதி என்று தோன்றியது. பெண்களைத் தெய்வம், அகிலாண்டேஸ்வரி என்றெல்லாம் ஐஸ் வைத்து நாமெல்லாம் exploit செய்வது போலவே உலகம் இந்த பள்ளி வாத்தியார்கள் மற்றும் மருத்துவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்து, இரத்தத்தை உறிஞ்சுகிறது என்று எண்ணுவேன். பல பள்ளி ஆசிரியர்கள் மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகை போட்டு இப்போதெல்லாம் ஓரளவு சுதாரித்துக் கொண்டுவிட்டார்கள் என்றாலும், மருத்துவ சேவையில் உள்ளவர்களிடம் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் எப்போதுமே மிக அதிகம்தான்.


அது போலவே தான் காவல் துறையும். தினமும், இரவு பகல் என்றில்லாமல் குற்றவாளிகளைத் தேடுவது, பிடிப்பது, தண்டிப்பது, சந்தேகிப்பது என்று இது என்ன மாதிரியான வேலை என்று அவர்களிடம் எனக்குப் பரிதாபம் தான். ஒரு காலகட்டத்திற்குப் பின் உணர்வுகள் மரத்துப் போய் கிட்டத்தட்ட சாடிஸ்டுகள் ஆகி விடுவார்களோ என்னும் கவலையும் தோன்றும். உழவர்கள் தற்கொலைகளுக்கு அடுத்து எனக்குத் தெரிந்து நிறைய காவல்காரர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். என்ன, அதற்கு முன் தம்முடைய சகாக்கள் சிலரையும், முக்கியமாக தன் உயர் அதிகாரியையும் தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள். அந்த அளவு அவர்களுக்கு மன உளைச்சல் பணி இடத்தில் இருக்கிறது. மற்றவர்களுடன் பார்க்கையில் விமான நிலையத்துள் பணி புரியும் காவலர்கள் ஓரளவு கொடுத்து வைத்தவர்கள் என்று எண்ணுவேன். குளுகுளு ஹால்களில், விமானத்தில் பறக்கும் பெரும்பாலான கொம்பர்களை சிறு மேடையில் நிற்க வைத்து, சிவப்பு விளக்கில் ரீங்கார மூச்சு விடும், உலோகத்தை உணர்ந்தால் ஓலமிடும் வஸ்துக்களால் 'உம், கையைத் தூக்கு, கீழே போடு' என்று ட்ரில் மாஸ்டர் போல தோள் முதல் தொடை வரை சோதனையிடும் ரொம்ப தொந்தரவில்லா வேலை என்று நினைத்திருந்தேன்.


இன்னும் சில துணை அதிகாரிகள் சொகுசாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கணினியில் ஒண்ணாங்கிளாஸ் பையன் தீற்றிய வாட்டர் கலர் ஓவியம் போலத் தெரியும் பயணிகளின் பெட்டி, படுக்கை இத்யாதிகளில் அபாய சின்னங்களைத் துளாவுவதைப் பார்த்திருக்கிறேன். என் கண்ணெதிரே உயரதிகாரியிடம் செம்ம டோஸ் வாங்கிய ஒரு காவலர் கண்களில் நீர் தளும்பியது. வாட்டர் கலரைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவருக்கும் ஹிந்தியில் வசை பொழிந்தது. நேற்று விமானம் தாமதமானதால் அருகிலிருந்த அந்த காவலர்களிடம் கொஞ்சம் பேச முடிந்தது. முதலாமவர் இரண்டு மாதங்களாக நான்கு தினங்கள் விடுப்பு கேட்டு, ஒவ்வொரு முறையும் மறுக்கப் படுவதுடன் திட்டும் கிடைக்கிறது. இதில் போன மாதம் அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. இவர் ஒரிசாவைச் சேர்ந்தவர். இரண்டாமவர் ஒரு முறை ஹான்ட்-பாக்கேஜில் நகவெட்டி இருப்பதை கவனிக்காமல் அசட்டையாக இருந்ததால் உயர் அதிகாரிக்கு பசி எடுக்கும் போதெல்லாம் இவருக்கு வசை மழை பொழியுமாம்.


‘நிச்சயமாக அவனுக்கு என் கைகளில் தான் சாவு’ என்று பற்களைக் கடித்த முதலாமவர் மீது எனக்கு கவலையாக இருக்கிறது. ஓரளவு நிதானமான அவரது சகா, தங்களைத் திட்டும் உயர் அதிகாரியை விசாரித்தால் அவர் கதையிலும் சோகம் இருக்கும் என்று ஒப்புக் கொள்கிறார். சொற்ப சம்பளம், பொதுமக்கள் பாதுகாப்பு என்பதால் கடமையில் சிறிதும் கவனப் பிசகு ஏற்படக்கூடாது என்னும் பதட்டம், இரவு-பகல் பேதமின்றி எந்நேரமும் வேலை செய்ய வேண்டிய சூழல், போதிய அளவு ஆட்களை நியமிக்காத அரசு என்று நிறைய இடங்களைப் போல இவர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள். அடுத்த முறை சோதனைக்கு உட்படுகையில் இவர்களுக்கு ஒரு சாக்லெட் கொடுக்க வேண்டும் என்ற என்னால் செயல்படுத்தக்கூடிய முடிவு மட்டும் எடுத்தேன்.




மும்பையில் போன வருடம் நிகழ்ந்த பயங்கரவாதத்திற்குப் பின் 'இந்தியாவின் நுழை வாயில்' எனப்படும் வரலாற்றுச் சின்னமான கேட்வே வளாகத்தில் (தாஜ் ஹோட்டலுக்கு எதிரில்) ஆணி அடித்து, நைலான் கொடியை மாட்டி, லுங்கி,உள்ளாடைகள் என சகலத்தையும் தொங்க விட்டு, குடும்பம் நடத்தும் மகாராஷ்டிரப் போலீஸ்காரர்கள் பற்றி படித்தது வேதனையான விஷயம். இயற்கை உபாதைகளுக்கு அருகிலிருக்கும் முட்டுச் சந்தைத் தேட வேண்டும். தாஜ் ஹோட்டல் தயவில் மதிய, இரவு உணவு கிடைக்கிறது (போலிஸ் உயர் அதிகாரிகள் இதை மறுத்தாலும் இதுதான் உண்மை). சமீபத்தில் கனடா நாட்டுப் பிரதமர் கேட்வே பார்க்க வருவதாக இருந்த போது, சேரி வாழ் ஜனங்களை வெளியேற்றுவது போல், இவர்களை போலிஸ் நிர்வாகம் வெளியேறக் கோரியபோது மறுத்து விட்டார்களாம். நல்ல வேளையாக அந்த வி.ஐ.பி. நிகழ்ச்சியை ரத்து செய்ததால் விஷயம் பெரிதாகவில்லை. ஆனாலும், தண்டனையாக பதினாறு கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு விட்டு வரச் சொன்னார்களாம். இந்த இடம் ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. இதை விட மோசமான இடங்களில் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு நல்ல சம்பளம் வருகிறதே என்று சொல்லும் இருபது ஆண்டு சர்வீஸ் போட்ட இவர்களின் மாதச் சம்பளம் பதினைந்து ஆயிரத்திலிருந்து இருபது ஆயிரம் வரைக்கும். ஒரு இருபது வயது பி.பி.ஒ. நிறுவன ஊழியனின் சம்பளம்.


அடுத்த முறை திரைப்படங்களில் போலீஸ்காரர்கள் பற்றிய நகைச்சுவைக் காட்சி வரும்போது இதையும் நினைவில் வைத்திருங்கள். போலவே நம்ம பைத்தியக்காரன் போன்றோர் 'அதிகாரம்', 'ஃபூக்கோ' என்று முழங்கும் போது அது இந்த சாமானியர்களைக் குறிக்கவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

மனதை இலேசாக்க ஒரு தேவதச்சன் கவிதை :



பழைய புத்தகக் கடையில்


பழைய புத்தகக் கடையில்
என்
கவிதைப் புத்தகம்
ஓரங்கள் கிழிந்து
அங்கங்கே அரித்து -
எவ்வளவு அழகு.
புதைவிலிருந்தபடியே
வெளியே தெரியும்
கடல்செடி போல -
எவ்வளவு நிசப்தம்.
இப் புத்தகம்
உபயோகமில்லை என்று
எப்போது தெரிந்துகொண்டான்,
அவ் வாசகன்.
உதிர்ந்த இலைகளை
புலி ஒன்று
பார்த்துக் கொண்டிருப்பது போல்
என் புத்தகத்தை
இப்போது
யார்
வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

32 comments:

கே.என்.சிவராமன் said...

//நம்ம பைத்தியக்காரன் போன்றோர் 'அதிகாரம்', 'ஃபூக்கோ' என்று முழங்கும் போது அது இந்த சாமானியர்களைக் குறிக்கவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.//

வா வளரு... வந்து அடிச்சுட்டு போ...

ஏன் அனு நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா?

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடறீங்களே... :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அகல்விளக்கு said...

//காக்கிச் சட்டை - எதைப் பற்றியும் பற்றாமலும்///

மிகப் பொருத்தமான தலைப்பு...

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த பள்ளி வாத்தியார்கள் மற்றும் மருத்துவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்து, இரத்தத்தை உறிஞ்சுகிறது என்று எண்ணுவேன் //


யோவ் யூத்து,
ஊருக்குள்ள கவர்மெண்ட்டு வாத்தியெல்லாம் வட்டிக்குவிட்டு ஊருல இருக்குறவனுங்க இரத்தத்தையெல்லாம் உறுஞ்சுறது தெரியுமா உங்களுக்கு??

:))

Ashok D said...

ஆஹா.. அற்புதமான பதிவு ஜி.. நிறைவு.. தேவதச்சன் கவிதை உட்பட

ப்ரியமுடன் வசந்த் said...

//தினமும், இரவு பகல் என்றில்லாமல் குற்றவாளிகளைத் தேடுவது, பிடிப்பது, தண்டிப்பது, சந்தேகிப்பது என்று இது என்ன மாதிரியான வேலை என்று அவர்களிடம் எனக்குப் பரிதாபம் தான்//

கிகிகிகி

இதெல்லாம் பண்றாங்களா அவங்க?

நர்சிம் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.

சுடச்சுட.

சிவக்குமரன் said...

ஒவ்வொருமுறை கைப்பை சோதனையை தாண்டும்போதும் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன்.

கொஞ்ச நாள் முன்பு வரை கோவை. இப்போது சேலம்.
விற்பனை/சந்தைப் படுத்துதல் மேலாளனாய் பணிபுரிகிறேன்.

உங்களுடைய profile- லில் உங்கள் மெயில் முகவரியை காண முடியவில்லை.

Mahesh said...

சிந்திக்கத் தூண்டும் இடுகை....

சொன்னா சிரிக்கக் கூடாது.... அடுத்த இடுகை கண்டிப்பா விமானம் அல்லது விமானநிலையம் சார்ந்ததா இருக்கும்னு நினைச்சேன்.. .அதே போல எழுதிட்டீங்க... :)

Kumky said...

:-))

சாவகாசமில்லை.

Kumky said...

அந்த
நன்கு பழக்கப்படுத்தப்பட்ட,
குறைந்த கூலிக்கு வெம்பிக்கொண்டிருக்கும், மனிதர்களனைவரையும் சந்தேகக்கண்ணோடு பார்த்துக்கொண்டிருக்கும்,
மிகுந்த திறமையான,
அதிகார மையங்களுக்கெதிரான எண்ணங்களோடும்,
ஆனால் கையாலாகாத்தனத்துடனும்,
அம்மையங்களின் துணையோடு ஏதேனும் பொருளாதார பயன்களை சதா சர்வ காலமும் குறிவைத்துக்கொண்டும்,
மனித தன்மைகளை கொஞ்ச்ம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கும்,

மிருகங்களுக்கா சாக்லேட் தரப்போகின்றீர்கள்.....சாக்லேட் மீதுள்ள சந்தேகத்தின் பலன் உங்களை அவஸ்தை பட வைக்க வேண்டாமலிருப்பதாக....ஆமென்.

thamizhparavai said...

காக்கிச்சட்டைகளைப் பற்றிய எனது பார்வையும் உங்களது பழைய பார்வைதான்.. ஆனால் உங்களுக்கு மாறியது போல் எனக்குப் பார்வை மாறவில்லை..மாறும்படியான அனுபவங்கள் வாய்க்க வில்லை என்பதைவிடவும், மாறிவிடக்கூடாது என்பதற்கான் அனுபவங்கள்தான் கிடைக்கிறது... :-(

iniyavan said...

எனக்கு ரொம்ப பிடித்த பதிவு சார் இது.

Sridhar V said...

//சொற்ப சம்பளம், பொதுமக்கள் பாதுகாப்பு என்பதால் கடமையில் சிறிதும் கவனப் பிசகு ஏற்படக்கூடாது என்னும் பதட்டம், இரவு-பகல் பேதமின்றி எந்நேரமும் வேலை செய்ய வேண்டிய சூழல், போதிய அளவு ஆட்களை நியமிக்காத அரசு என்று நிறைய இடங்களைப் போல இவர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள்.//

இதையெல்லாம் விட துயரம் இது ஒரு Thankless Job என்பது. உதட்டளவில் ’நன்றி’ என்று ஒரு சொல் தரும் இதம் கூட கிடைக்காத நிலைதான் அதிகம்.

chandru / RVC said...

Nice article Anu..! Excellent flow. keep rocking :)
யோவ் யூத்து,
//ஊருக்குள்ள கவர்மெண்ட்டு வாத்தியெல்லாம் வட்டிக்குவிட்டு ஊருல இருக்குறவனுங்க இரத்தத்தையெல்லாம் உறுஞ்சுறது தெரியுமா உங்களுக்கு??//
//மிருகங்களுக்கா சாக்லேட் தரப்போகின்றீர்கள்.....சாக்லேட் மீதுள்ள சந்தேகத்தின் பலன் உங்களை அவஸ்தை பட வைக்க வேண்டாமலிருப்பதாக....ஆமென்.//
mmmm... openion differs(Courtesy:Pepsi Uma) :)

செ.சரவணக்குமார் said...

சமூக நோக்குடன் கூடிய அருமையான பதிவு. தேவதச்சனின் கவிதையோடு நிறைவு செய்தது கட்டுரைக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

அ.மு.செய்யது said...

அப்துல்லா அண்ணன் சொன்ன மாதிரி வாத்திங்க தான் இப்ப செம்ம சம்பாத்தியம்.

கேட்வே மஹாராஷ்டிர போலீஸ்காரர்களை நினைத்தால் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

கார்க்கிபவா said...

//வா வளரு... வந்து அடிச்சுட்டு போ.//

நீங்களே கூப்பிட்டா எப்படி? இருங்க. நல்லதொரு சமயத்தில் அவரா வருவாரு

கார்க்கிபவா said...

//உங்களுடைய profile- லில் உங்கள் மெயில் முகவரியை காண முடியவில்//

realyouth@gmail.com.

சரியா தல?

Anonymous said...

ஆமா அனு வருத்தமாத்தான் இருக்கு. நாளை மருநாள் வரப் போகும் கவர்னருக்குப் பாதுகாப்ப இன்றிரவிலிருந்து புளிய மரத்தடியில் காவல் காக்கும் காவலரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. குண்டு வைக்காமல் தடுக்கவாம். அதற்கு அவர் கையில் இருப்பது ஒரு லத்தி மட்டுமே. உணவு ஏற்பாடெல்லாம் சொந்தச் செலவில்.

அப்படித்தான் அந்தக் கவர்னர் செத்தால் சாகட்டுமே. மருத்துவக் கல்லூரி, பொறியியர் கல்லுரி சீட்டுகளி விர்கும் கவர்னருக்கு இப்படி ஒரு பாதுகாப்பு. பல்கலைக் கழகம் அருகில் இருப்பதால் இது அடிக்கடி நடக்கிறது. துறை சம்பந்தப் பட்ட விழா, பட்டமளிப்பு என இரு மாதங்களுக்கு ஒரு முறை கவர்னர் வருவதும், காவலர்கள் தேவுடு காப்பதுமென ஒரு துன்பவியல் நாடகம்.

குறைந்த பட்சம் ஒரு புன்னகை அவர்களுக்கு அறுதலளிப்பதைக் கண்டிருக்கிறேன்;கடைபிடிக்கிறேன்.

பா.ராஜாராம் said...

எதைப் பற்றியும் பற்றாமலும்-க்கு பெரிய ரசிகன் தல நான்.எப்பவும் போல் நிறைவு,அருமையான கவிதை உட்பட.

அமிர்தவர்ஷினி அம்மா said...

காக்கிச்சட்டை பற்றி வேறொரு கண்ணோட்டத்தில் எழுதியதற்காக ராயல் சல்யூட் பாஸ்.

சவுக்கு said...

அற்புதமான பதிவு தோழர். அருமையான நடை. ஆழ்ந்த பார்வை. பிரமாதப் படுத்தி விட்டீர்கள். காவல்துறையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சினையை நன்கு ஆராய்ந்திருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் பார்க்கும் அளவுக்கு, தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் பார்ப்பதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். அதனால்தான், நெருக்கடி முற்றுகையில், கீழ் மட்ட பணியாளினின் துப்பாக்கிக்கு இரையாகிறார்கள். அற்புதம். தொடர்ந்து எழுதங்கள்.

நேசமித்ரன் said...

காக்கியும் கவிதையும் இரண்டும் தொடர்பு கொண்டவையாக உங்களால் மட்டும் தான் பற்றியும் பற்றாமலும் எழுதமுடியும் தலைவா

அத்திரி said...

வித்தியாசமான பார்வை

Jawahar said...

சுவாரஸ்யமான பதிவு.

//உலகம் இந்த பள்ளி வாத்தியார்கள் மற்றும் மருத்துவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்து, இரத்தத்தை உறிஞ்சுகிறது என்று எண்ணுவேன்.//

இது மெல்ல மறைந்து வருகிறது. பள்ளிகள் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறையைப் பார்க்கிற போதும், அப்பா அம்மா கிராஜுவேட்டாக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதைப் பார்க்கிற போதும் ஆசிரியர் தொழில் முன் மாதிரி சவாலான சமாச்சாரமில்லை என்று தோன்றுகிறது.

மருத்துவமும் அப்படியே. ஆஸ்பத்திரிகள் ப்ராபிட் சென்டர் கான்செப்ட்டுக்கு மாறி நெடுங்காலமாகி விட்டது!

http://kgjawarlal.wordpress.com

"உழவன்" "Uzhavan" said...

காக்கிச் சட்டைகளை அலசிய விதம் அருமை.

anujanya said...

@ பை.காரன்

அப்படி இல்ல சிவா. நீங்க அதிகாரம் பற்றி பேசும்போது'எய்தவர்களைப்' பற்றி பேசுவதையும், வெறும் 'அம்புகளைப்' பற்றி அது குறிக்காது என்றும் சொல்ல வந்தேன். சரி, திரும்ப வரேன்னீங்க :)

நன்றி சிவா

@ அகல்விளக்கு

நன்றி. கவிதை நல்லா எழுதுறீங்க. ஆமாம், உங்க பேரு என்ன?

@ அப்துல்லா

//யோவ் யூத்து,
ஊருக்குள்ள கவர்மெண்ட்டு வாத்தியெல்லாம் வட்டிக்குவிட்டு ஊருல இருக்குறவனுங்க இரத்தத்தையெல்லாம் உறுஞ்சுறது தெரியுமா உங்களுக்கு??//

எல்லா இடங்களிலும் exceptions இருக்கத்தான் செய்யும். ஆசிரியர்கள் இப்போதெல்லாம் சுதாரித்துக் கொண்டு விட்டார்கள் என்று தானே எழுதியிருக்கேன். சரி, எதுக்கு அவங்க கிட்ட எல்லாம் வட்டிக்கு வாங்குற :)

நன்றி அப்துல்

@ அசோக்

வாங்க கவிஞர். நன்றி அசோக்.


அனுஜன்யா

anujanya said...

@ பிரியமுடன் வசந்த்

இப்படியெல்லாம் பேசினா, போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்துடுவேன். நன்றி வசந்த்.

@ நர்சிம்

நன்றி எழுத்தாளர்.

@ சிவக்குமரன்

நன்றி சிவா. என்னுடைய மின்னஞ்சல் முகவரி : anujanya@gmail.com. கார்க்கி சொல்லியிருக்கும் முகவரிக்கும் அனுப்பலாம். என்ன, அங்கு ஏராளமான ரசிகர்களின் மின்னஞ்சல்களில் உங்கள் அஞ்சல் தொலைந்துவிடும் அபாயம் இருக்கு :)

@ மஹேஷ்

யோவ், அடுத்த இடுகை என்ன எழுதலாம்னு அவனவன் யோசிக்கும் பொது, இவரு நான் எதைப் பற்றி எழுதுவேன்னு யோசிக்கிறாராம். நன்றி மஹேஷ். சரி, இப்ப சொல்லு, அடுத்த இடுகை (என்னுடையது) என்ன?

@ உலகநாதன்

ரொம்ப நன்றி பாஸ்.


அனுஜன்யா

anujanya said...

@ கும்க்கி

நீங்கள் சொல்லும் அனைத்தும், பல்வேறு துறைகளில் பணிபுரியும் கடை, இடை நிலை ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் - நீங்கள், நான் உட்பட. ஆனாலும், நீங்க வர வர ரொம்ப டெர்ரர் பார்ட்டியா ஆகிட்டீங்க பாஸ் :). நன்றி கும்க்கி.

@ தமிழ்ப்பறவை

உண்மைதான். எனக்கு கசப்பான சொந்த அனுபவங்கள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், ஒரு முறை அவர்கள் கோணத்தில் இருந்து பாருங்கள் என்கிறேன். நன்றி பரணி.

@ ஸ்ரீதர்

கரெக்ட் ஸ்ரீதர். Thankless job என்பதைச் சொல்ல மறந்து விட்டேன். இதற்கே சிலர் கோபப்படுகிறார்கள். நன்றி பாஸ்.

@ RVC

ஹை, சந்திரா! யோவ், பதிவர் சந்திப்புக்கெல்லாம் வர மாட்டியா? உன்னையும், வா.மணிகண்டனையும் மோதவிட்டு (இடையில் நரனை அம்பயர் ஆக்கிவிட்டு) பார்க்கலாம்னு இருந்தேன். நன்றி சந்திரா.

@ கார்க்கி

உன்னிடம் கொஞ்சங்கூட நல்ல எண்ணங்களே இல்லையா? நல்லா இரு.

@ கார்க்கி மீண்டும்

இது இது. மேல சொன்ன கம்மெண்டு வாபஸ்.

அனுஜன்யா

anujanya said...

@ சரவணகுமார்

ரொம்ப நன்றி நண்பா. உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன்.

@ செய்யது

வாத்தியார்கள் சம்பாதித்தால் நல்லதுதானே செய்யது :). நன்றி

@ ராஜாராம்

நன்றி ராஜா. நீங்க அங்க தூள் கிளப்பிக்கிட்டே இப்படி ஒரு கம்மென்ட்டா?

@ வேலன்

பரவாயில்ல, நீங்களும் நம்ம கட்சிதான்.என்ன, இப்பவெல்லாம் ரொம்ப பிசியா அண்ணாச்சி?

@ அமித்து.அம்மா

நன்றி AA

@ சவுக்கு

நன்றி பாஸ். உங்கள் முதல் வருகை?

@ நேசமித்திரன்

ரொம்ப நுட்பமான பார்வை நேசா உங்களுக்கு. சரி, கைவசம் இருக்கும் நூறு கவிதைகளில் எதை போட்டிக்கு அனுப்பப் போறீங்க? அப்படியே எனக்கும் ஒண்ணு எழுதிக் கொடுங்களேன். சீரியஸா தான் கேட்கிறேன்.

@ அத்திரி

நன்றி பாஸ். ஆமா, பதிவர் சந்திப்புக்கு என் வரல?

@ ஜவஹர்

காலம் மாறிவிட்டது தான். யாரையுமே ரொம்ப உயரத்தில் வைத்து அவர்கள் உயிரை உறிஞ்சுவது தப்புதானே. நன்றி ஜவஹர்.

@ உழவன்

நன்றி தல. உங்க தளத்துக்கு வரணும். ரொம்ப நாளாச்சு.

அனுஜன்யா

பெசொவி said...

வாத்தியார் விஷயம் என்னால கருத்து சொல்ல முடியல, டாக்டருங்க கூட தங்கள் இஷ்டம்போல்தான் சேவை செய்யறாங்க. ஆனால் இந்த போலீஸ்காரர்கள் நிச்சயம் சல்யூட் செய்யப் பட வேண்டியவர்கள்தான். உதவி கமிஷனர் லெவலில் இருந்து வேண்டுமானால் அந்த அதிகாரத்தை ருசி பார்க்கலாம், ஆனால், கான்ஸ்டபிள் ஏட்டு இன்ஸ்பெக்டர் கூட தன் குடும்பத்தை விட்டு வீதியில் டூட்டி பார்க்கும் அவலம் தொடரத் தான் செய்கிறது. உங்கள் பதிவு சூப்பர்!

anujanya said...

@ பெ.சொ.வி.

உங்கள் கருத்தே தான் என்னுடையதும். எப்ப பெயரைச் சொல்லப் போறீங்க பாஸ்?

நன்றி உங்கள் வருகைக்கு.

அனுஜன்யா