Sunday, November 30, 2008

மும்பை பயங்கரம் - சூசன் ஜார்ஜ்



சூசன் ஜார்ஜ்


அவள் வருகிறாள் என்று ஒரு வாரம் முன்பே தெரியும். டோரோண்டோவிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் பிரத்யேகமாக மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ஆனாலும், சனி, ஞாயிறின் கொண்டாட்டங்களில் எல்லாவற்றையும் தொலைத்து, மறந்து, திங்கள் காலையைப் படைத்த ஆசாமியை கெட்ட வார்த்தைகளில் சபித்து, ஏழு மணிமுதல் வீட்டில் கலவரம் செய்து, ஒருவழியாக ஆபிஸ் சேர்ந்தாயிற்று.. அப்பாடா, இன்றைய சம்பளம் நியாயமானதுதான் என்று காபி குடிக்கையில் லவினா தொலைபேசியில், '9.30 ஆகிவிட்டது. கான்பரன்ஸ் ரூம் செல்லவும். சூசன் வந்தாயிற்று. மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள். ஓஹ், இன்று இந்தக் கிராதகி வந்தாயிற்றா? இந்த வாரம் குருபெயர்ச்சியில் ராசிபலன் பார்க்க வேண்டும்.

'ஹாய் சூசன் - ஹலோ கைஸ்'

'ஹாய் ராகவ், சோ நைஸ். நண்பர்களே, ராகவ் என்னும் தலையில் கொம்பு முளைத்த அரிய பிராணியைச் சந்தியுங்கள். நமது ஒரு வார நிகழ்ச்சி நிரலில் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிக்கு வர இசைந்த ராகவுக்கு, இந்த சிறிய வரவேற்பு' என்று மஹாபலேஷ்வர் தோட்டத்து ரோஜாப் பூங்கொத்துக்களை என்னிடம் அளித்து கை தட்ட, கூட்டமும் தட்டியது.

மரியாதை நிமித்த முதுகு சொறிதல்களுக்குப் பின், நான் சில உண்மைகள் சொல்ல, அவள் இன்னும் பல, பெரிய உண்மைகள் பேச, கலவரம் நிகழும் முன், எச்சரிக்கையுடன் சிரித்து முடித்துக்கொண்டோம். இப்போதைக்கு அவ்வளவுதான். இனி நாளை இரவுதான் அவளுடன் விருந்து என்ற நிம்மதியில் அலுவலக வேலைக்கிடையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல கவிதை முயற்சியில் இறங்கித் தோற்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் சூசனை விவரிப்பதற்கு சிறிது அவகாசம் கிடைக்கிறது. முழுப் பெயர் சூசன் ஜார்ஜ். சிகப்பி. உயரி. அழகி. வயது முப்பத்தி இரண்டு என்று ஞாபகம். அவர்கள் 25-38 வரை கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் வயதை துல்லியமாகக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. டொரோண்டோ அருகில் உள்ள ஹாமில்டன் என்னும் சிறு நகரம் அவள் பிறந்து வளர்ந்து, அழகான இடம். கால்கரியில் பட்டம் முடித்து, டோரோண்டோவில் மேற்படிப்பு... இல்லை “யேல் எம்.பி.ஏ” என்றாளே. என்னவோ போங்க சார், இந்தப் கல்வி பற்றிய தகவல்கள் மட்டும் மூளைக்குள் நுழைய மாட்டேங்குது. எங்கப் படிச்சா நமக்கென்ன.

செவ்வாய் மதியம் கூப்பிட்டு, ‘நமது இரவு விருந்தை நாளை இரவுக்கு மாற்றட்டுமா’ என்றாள். 'நோ இஷ்யுஸ்' என்று சொல்லிவிட்டு மகிழ்ந்தேன். புதன் மாலை. 'பெரிய ஹோட்டல் சாப்பாடு அலுக்கிறது. நல்ல உணவகம் இருந்தால் சொல்லு. அங்கே போகலாம்' என்றாள். வொர்லியில் (வீட்டுக்குச் செல்லும் வழி. நேரம் மிச்சம்) 'ஜ்வெல் ஆப் இந்தியா' என்னும் உணவகம் சென்று இடம் பிடித்து அடுத்த மூன்று மணிநேர அறுவைக்குத் தயாரானேன்.

சட்டென்று அடையாளம் தெரியாத வெளிர் நீல சூடிதார் உடையில் வந்தாள். ஆபீஸில் மெதுவாகக் கைகுலுக்கும் சூசன் இப்போது ஆரத் தழுவினாள். சில பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் நமக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று 'அட இருந்துட்டுப் போகட்டுமே. சும்மா தொந்தரவு செய்யாதே' என்று சோம்பேறித்தனம் காட்டும். அப்போதெல்லாம் ஒரு படபடப்பு, உத்வேகம், இத்யாதிகள் வருவதில்லை. ஒரு கசின் சிஸ்டரைப் பார்க்கும் உணர்வே மிஞ்சும். எனக்கு அப்படித்தான் இப்போது இருந்தது.

யோக்கியனாக நடிக்க முயன்ற என்னை சட்டை செய்யாமல் எனக்கு பியரும் அவளுக்கு 'ஜின்' என்னும் பெண்கள் அருந்தும் மதுவும் ஆர்டர் செய்தாள். 'இன்னைக்கு நமக்கு சரியான பூசைதான் விட்டுல' என்று அப்போதே வெளிறத் துவங்கினேன். முகத்தைச் சரியாகப் படித்தவள் போல, 'அனு கிட்ட நான் பேசிக்கறேன். பயப்படாமல் ஒரு கிளாஸ் பியர் குடி. அதற்கு மேல் நீ கேட்டாலும் கிடையாது' என்றதில் சிறிது ஆசுவாசம் ஆனேன்.

'இதோ பார் ராகவ், ஆபிஸ் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது. நீயும் நானும், கொஞ்சம் சிடுமூஞ்சிகள் ஆனாலும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சோ..'

'ஆகச் சரி குரங்கே'

என் மேல் தெறித்த கால் டம்ப்ளர் ஜின்னில் என் சட்டை ஈரமானதுடன், எங்கள் இறுக்கமும் காணாமல் போனது.

முதலில் தன்னை பற்றி நிறைய சொன்னாள். உயர் மத்யம குடும்பம். கல்வி. விளையாட்டு (ஐஸ் ஹாக்கி ரொம்ப பிடிக்கும்). கல்லூரி காதல் இரண்டு ஆண்டுகள். பிறகு மேற்படிப்பு. வேலை. பதவி உயர்வு. மேலும் அதிக வேலை. இடையில் ஹார்மிசன் என்னும் அழகான வாலிபனின் பிரவேசம். வாழ்வு மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்கடியது. இன்னும் ஏறக்குறைய அவ்வாறே செல்லும் வாழ்க்கை என்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.

'நானே பேசிக்கொண்டு இருக்கிறேன். நீ சொல்லு இப்போ'

'பெருசா ஒண்ணும் இல்ல'

'ஆபிஸ் சொற்பொழிவு போல் போலியாக இருக்காதே. ஓபன் அவுட் யு டாக்'

நானும் நிறைய பேசினேன். எல்லோரோடும் போட்டி போட்டு, அரைகுறை வெற்றி பெற்று, கிடைத்த வேலையை வாங்கிக்கொண்டு, வேண்டிய வேலையை அதன் மாயக் கவர்ச்சி போனபின் பெற்று, எல்லா சராரசி ஆண்கள் போல் நான்கு பெண்களைப் பார்த்து, மூவரைக் குறிவைத்து, இருவரைத் தேர்வு செய்து, ஏமாந்த ஒருத்தியைக் காதலித்து, ஆச்சரியமாக அவளையே திருமணமும் செய்ததுவரை எல்லாம் சொன்னேன்.

"உன் வாழ்க்கை பிரமாதமாக இருக்கிறது. ஜிக் ஜாக் என்று மேலும் கீழும், மாயமும், சிறு சிறு ஏமாற்றங்களும். நீ விவரித்த விதம் இன்னும் சுவாரஸ்யம். இந்தியாவைப் பற்றி பேசேன். எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் நாட்டை"

"உங்கள் நாட்டுக்கு 300-400 வயது. பொருளாதார முறையில் செதுக்கப்பட்ட, ஓரளவு தட்டையான கலாசாரம். நான் சொல்வதை தவறாக எண்ணாதே. இந்தியா மிகப் பழமையானது. தொன்மை வாய்ந்தது"

"எனக்கும் தெரியும். மூவாயிரம் ஆண்டுகள் முந்தைய கலாசாரம். ரைட்? "

"வெளியில் சொல்லாதே. ஒரு பொதுக்கூட்டமே உன்னை அடிக்க ஓடி வரும். காஷ்மிரிலிருந்து கன்யாகுமரி வரை யாரைக் கேட்டாலும், இந்தியாவுக்கு சராசரி வயது ஒரு பத்தாயிரமாவது இருக்கும்"

"சும்மா விளையாடாதே"

"நெசமாலுந்தான் புள்ள. தெற்கே செல்லச் செல்ல, குமரி மாவட்ட ஆசாமிக மூழ்கிப்போன குமரிக் கண்டத்த கணக்கில எடுத்தா, ஒரு இலட்சம் வருஷ கலாச்சாரம்னு சொல்லுவாங்க"

"இதுல எவ்வளோ கட்டுக்கதை? எவ்வளோ வரலாற்று உண்மைகள்?"

"யாரு சொல்றாங்க என்பதைப் பொறுத்தே கதையா அல்லது வரலாறா என்று முடிவு செய்யப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை - உங்கள் மேற்கத்திய வரலாற்று உண்மைகள் உட்பட"

எல்லாம் பேசி முடித்த போது மணி ஒன்பது. மீண்டும் ஆரத்தழுவிய சூசன் என் தங்கையை நினைவு படுத்தினாள்.

"ஒரு உர்ரான்குட்டானுக்குள்ள இவ்வளவு மென்மையான ஆசாமி ஒளிந்திருப்பானு நினைக்கல. நல்லது. நாளை காலை பார்ப்போம். போரைத் தொடர்வோம்" என்று சொல்லி டாக்சியில் ஏறி ஹோட்டலைச் சென்றடைந்தாள்.

நான் இளம் ஏப்பத்துடன், இளையராஜாவைக் கேட்டுக்கொண்டு, வீடு சேர்ந்தபோது பத்து. வழக்கம் போல வடிவேலு பார்க்காமல் தூக்கம் வராது என்பதால், அனுவுடன் அமர்ந்தேன். விளம்பர இடைவேளையில், சேனல் தாவுகையில், டைம்ஸ் நவ்வில் "தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நுழைவு" என்ற Breaking News.

முதலில் உரைக்கவில்லை. கடவுளே, சூசன் தங்கியிருப்பது ஓபராய் அல்லவா!

சுசனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். மொபைல், மற்றும் ப்ளாக்பெர்ரி இரண்டுமே உயிர் போயிருந்தது. ஹோட்டல் நம்பர் சிலமுறை 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை'; பலமுறை சுடுகாட்டு மௌனம். ச்சே, என்ன உவமை.

அனு, 'வண்டி எடுங்கள், போய் பார்த்துவிடலாம்' என்றாள்.

Pant போடும்போதே, நிகழ்ச்சிகளின் தீவிரம் புரியத் தொடங்கியது. நாங்கள், அந்தேரி தாண்டுகையில், இடையில் மறித்த கும்பல் ஒன்று "பார்லாவில் குண்டு போட்டு, ஒரு டாக்சி சுக்குநூறு, மேலே போகாதீர்கள்" என்றது. ஆயினும் குருட்டு தைரியத்திலும், சூசன் பற்றிய பயங்களிலும் காரை மேலும் ஓட்டினேன். ஒரு கூட்டம் வழியில் நின்றதால், வேறு வழியின்றி காரை நிறுத்தி ..'ஒ என்ன கோரம்! ஒரு தலை மட்டும் ரோட்டின் ஓரத்தில், கழுத்தில் ரத்தக்கூழுடன்'. அதற்கு மேல் முடியவில்லை இருவருக்கும். பேசாமல் திரும்பிவிட்டோம்.

முடிந்த வரை விழித்திருந்து இருவரும் தொலைக்காட்சி பார்த்தோம். NDTV, TIMES NOW, CNN IBN என்று எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பில் TRP ஏற்றிக்கொண்டிருந்தன. மூன்று மணியளவில் அசதியில் கண்ணயர்ந்துவிட்டோம். காலை ஆறு மணிக்கே புறப்பட்டேன். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது.

சாலை முழுதும் வெறிச்சோடி இருந்தது. மரின் டிரைவ் மும்பையின் கிரிடங்களில் ஒன்று. பெடெர் சாலையிலிருந்து மரின் டிரைவ் திரும்பியதுமே, தூரத்தில் எழும்பிய ஓபராய் ஹோட்டல். அதனுள் பதினாறாம் அடுக்கில் … சூசன்?

'இல்லை. அவள் அங்கு இல்லை. அந்தக் கிறுக்கு, பெரிய வாக்கிங் சென்று, ஹோட்டலுக்குள் நுழைய முடியாமல் முழித்துக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியானால் போன் பண்ணுவாளே. ஐயோ, மூளையே, கொஞ்சம் நேரம் தர்க்கரீதியாக சிந்திக்காமல் இரேன்'.

மரின் பிளாசா என்ற ஹோட்டல் அருகிலேயே காரை நிறுத்திவிட்டார்கள். ஏகப்பட்ட கெடுபிடி. என்னைபோன்ற பலர் உறவினர், நண்பர்களை ஒபராயில் தொலைத்துவிட்டு, கையறு நிலையில் முழித்துக்கொண்டு இருந்தோம். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உதவி செய்யவும் யாருமில்லை. ஆபிஸ் P.R.O. வும் வந்துவிட்டு இருந்தார். எனக்கு 'இதெல்லாம் சகஜமப்பா' பாணியில் காக்கியில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த மகாராஷ்டிர போலீஸ் மீது நம்பிக்கை சிறிதும் இல்லை. சிறிது நேரத்தில் என்.எஸ்.ஜி. வந்தது.

யாருக்கும் ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சேனல்கள் தங்கள் அனுமானங்களை, வழக்கம் போல், செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தன.

அப்புறம், ஒரு D.G.P. பரிந்துரையில், ஹோட்டல் அருகில் செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு மிக சூடாகவும், புகையினால் தொண்டை எரிச்சலும் இருந்தது. ஓபராயின் பெண் ஒருத்தி, ஒரு ராணுவ வீரருடன் அமர்ந்து விருந்தினர் பட்டியலைக் கலந்தாலோசித்து, உறவினர்/நண்பர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல, மெல்ல, அச்சத்துடன் அவளை அணுகி 'சூசன் ஜார்ஜ்; ரூம் நம்பர் 1617 ' என்றேன். என் வாழ்வின் மிக மிக அதிகமான இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு, உதட்டைப் பிதுக்கி, சற்று சோகத்துடன் 'அவள் மேலே இருக்கிறாள்' என்றாள்.

'இஸ் ஷி அலைவ்?'

'டொன்னோ. நிறைய பேரை கொன்று விட்டார்கள். பல பேர் பணயக்கைதிகளாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறோம்'

'எப்படி மீட்கப் போகிறீர்கள்?'

'என்.எஸ்.ஜி.யை நம்புங்கள். நிச்சயம் நாங்கள் செய்வோம்' என்றார் இராணுவம்.

இதற்குள் சில உடல்களை வெளியே கொண்டு வந்தார்கள். சிலருக்கு உயிரும் இருந்தது. ஒரு அம்புலன்சின் மூடும் கதவில், கடைசியாக சூசனின் வெளிர் நீலச் சூடிதார் தெரிய, விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். ஜெ.ஜெ.ஹாஸ்பெடல் சென்றடைந்து, அவர்களை பிடிக்கையில், சூசன் எங்கோ உள்ளே கொண்டு செல்லப்பட்டிருந்தாள். விசாரித்ததில், 'நிலைமை மிக மோசம் என்றும், பிழைக்க வாய்ப்பு இருபது விழுக்காடு' என்றும் சொன்னார்கள். ஆயினும், அந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ஆற்றிய பணியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இது அல்லவா சேவை. பிறகு வாழ்வில் அரிய கணங்களில் ஒன்றாக பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினேன்.

சூசனின் தந்தைக்கும், அவளின் ஆதர்ச கணவனுக்கும் (ஹர்மிசன்) தொலைபேசியில் "ஒன்றும் கவலைப்பட வேண்டாம்" என்று சொன்னதற்கு, மற்றவர்கள் திட்டினார்கள். இப்படியே கழிந்த அடுத்த பதினெட்டு மணி நேரங்களுக்குப் பின் ஜெ.ஜெ.வின் ஐ.சி.யு. வழியே ஒரு நல்ல செய்தி 'அவள் பிழைத்துவிட்டாள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்.'

அவள் நுரையீரலை ஒரு தோட்டா காற்றிழக்கச் செய்து, கிழித்துவிட்டிருந்தது. 'நிறைய இரத்த இழப்புடன் சேர்க்கப்பட்ட அவள் பிழைத்தது ஒரு மருத்துவ விந்தை மற்றும் அவளுடைய வாழ்வின் மீதான பிடிப்பு' என்று அவர்கள் கூறினார்கள்.

இன்று காலை சென்றபோது அவளுக்கு சுய நினைவு திரும்பியிருந்தது. மிகச் சோர்வுடன் என் கைகளைப் பிடித்தவள் கைகளில் என் முகத்தை புதைத்து .....வேண்டாம், ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லக்கூடாது என்பது ஒரு வினோத நியதி.

இப்போது பார்க்கிறேன் குருபெயர்ச்சி பலன்கள்: "மகர ராசிக் காரர்களுக்கு மேற்கில் இருந்து வரும் விருந்தாளிகளால் மிகுந்த மனக் கிலேசமும், அலைச்சலும் அமையும். உங்கள் உதவும் மனப்பான்மையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாலும், கடவுள் பக்தி மிகுந்த (!) உங்களுக்கு தன்வந்திரி யோகம் இருப்பதால் இந்தக் கவலையிலிருந்து சீக்கிரமே மீள்வீர்கள். புதிதான உறவுகள் பிறக்கும்'.

எப்போதும் ஜோசியத்தில் ஆர்வமுடைய அனு, 'ஐயோ, மிகச் சரியாகத்தான் போட்டிருக்கிறார்கள்.' என்றாள்.

32 comments:

Anonymous said...

உங்களுக்கு சூசன் மீதிருந்த அதே பரிதவிப்பும், கவலையும் உங்கள் மீதிருந்தது எனக்கும், வெயிலானுக்கும், பரிசலுக்கும். உங்கள் மொபைல் ரீச்சாகாத சமயங்களில் ஏதோதோ விபரீத கற்பனை. அனுப்பிய குறுஞ்செய்திக்கு உங்களிடமிருந்து மிகத்தாமதமாக வந்த பதில் குறுஞ்செய்திக்குப் பிறகுதான் சிறிது ஆசுவாசமாகியது.

சூசன் உயிர் பிழைத்தது குறித்து மகிழ்ச்சி.

வாழ்க்கையில் இது போன்ற தருணங்களில்தான் நிலையாமை பற்றிய எண்ணங்களும் கடவுள் மீதிருக்கும் அபிப்பிராயமும் பரிசோதனைக்குட்படுத்தப்படும்.

வெண்பூ said...

அட அனுஜன்யா.. இது என்ன சொந்த அனுபவமா? லேபிளில் சிறுகதை என்று வேறு போட்டிருக்கிறீர்கள்.. கதை என்றால் அருமை, அற்புதம்..
உண்மையென்றால்... என்ன சொல்வதென்று தெரியவில்லை.. :(

பரிசல்காரன் said...

பதிவை மிக அருமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள். இதை சும்மா புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. சமீபத்தில் படித்ததிலேயே, குடும்பம், சஸ்பென்ஸ், நட்பு என்று எல்லாம் கலந்த மிக அற்புதமான நடையிலான பதிவு இதுதான்.

அன்றைக்குப் பேசும்போது, 90% பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதாய் பேசிக்கொண்டிருந்தோம். அதனால் இதைப் படிக்கையில் நெஞ்சம் திக் திக் என அடித்துக் கொண்டதை உணர முடிந்தது. அவர் பிழைத்ததில் உங்கள் தூய நட்பும் ஒரு முக்கியப் பங்கு வகித்ததை மறந்துவிட முடியாது.

அப்புறம்..

எனக்கும் ஜோசிய, ஜாதகங்களில் நம்பிக்கை அவ்வளவாய் இல்லை. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் நமது ராசி என்றறிகையில் ஒரு மகிழ்ச்சி பொங்குவதை மறைக்கமுடியவில்லை.

na.jothi said...

அண்ணா உங்கள் தோழி பரிபூர்ணமாக
குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

anujanya said...

@ வேலன்

உங்களின் 'தவற விடப்பட்ட' அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் உடனே படிக்க முடியாமல் (ஹோட்டல் அருகே 'ஜாம்' செய்யப்பட்டிருந்தது) போனது. என் மனைவியும் தவித்துப் போனாள். பரிசலுடன் பேசியது அன்று கூடுதல் போனஸ். நிலையாமை, கடவுள் பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வெயிலானுக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.

@ வெண்பூ

இதில் சுமார் 70-80% நிஜம். மற்றவை சுவாரஸ்யம் கருதி புனைவு செய்தது. (அந்த பீர் அருந்துவது, சிடுமூஞ்சி பட்டம் போன்ற பொய்கள் :) நம்பிவிடுவாய் என்று நினைக்கவில்லை. உனக்கு உன்னுடைய பின்னூட்டத்தின் மதிப்பு தெரியாது. I really value it. நீ எழுதும் கதைகளைப் பார்த்து வியக்கும் எனக்கு உன்னிடம் ஒரு பாராட்டு என்பது நிஜமாவே ஒரு டானிக். தேங்க்ஸ் மச்சி.

@ பரிசல்

முதலாவதாக ஒரு சந்தேகம். வயசு போட்டோவில் தெரியவில்லை. 28 சொல்லலாமென்றால், குரல் கேட்டால், ஒரு 22 வயசு சொல்லலாம். பெண்களே ஏமாறாதீர்கள் :))

வேலனுக்கும், உங்களுக்கும் மட்டுமே அவள் பற்றிய விஷயங்கள் தெரியும். Nice of you to have talked that day. Really appreciate it.

நடை உங்களுக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. எழுதுகையில் உங்கள் ஞாபகம் இரண்டு மூன்று வரை வந்தது நிஜம். ராசி -- அப்ப நாம்ப 'ராசி' ஆகிடோம்னு சொல்லுங்க. நன்றி கே.கே. ஒரு பிரபலம் புகழ்வது என்பது பெருமையாகத்தான் இருக்கு.

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

விசயம் அழுத்தம் தருவதாக இருந்தாலும் அதனை உணர்வோடு சொல்கிற கலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை ..

சூசனை கேட்டதாகவும் அவள் நலனுக்கு வாழ்த்துவதாகவும் சொல்லிக்கொள்ளுங்கள்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

வார்த்தைகளில்லை மனதில் தோன்றுவதை எழுதுவதற்கு. எதையும் படிக்க முடியாமல், சாப்பிடமுடியாமல், பேசக்கூடமுடியாமல் டைம்ஸ் நவ், என்.டி.டி.வி.க்கும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்த வீட்டின் இருக்கம் இன்னும் குறைய மறுக்கிறது. இன்று அதை மறக்க, மறைக்க சென்னையின் ஒரு ஷாப்பிங் மாலுக்குச்சென்று விட்டு அதன் அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் இருந்து வெளிவருவதற்குள் மனது எதையெதையோ யோசித்து ஆயாசித்துவிட்டது. அப்போது கூறினேன் என் கணவரிடம் பாதிப்புக்களை கண்ணால் கண்ட நமக்கே இந்த தாக்கம் என்றால் அதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் மனது எப்படி இருக்கும் என்று...முதலில் சிறுகதை என்று எண்ணினாலும் பின்னூட்டங்கள் அனுபவம் என்று புரியவைக்கிறது.. பார்த்துக்கொள்ளுங்கள்.. உங்கள் மனநிலையையும் உங்கள் குடும்பத்தையும்...அன்புடன்
கிருத்திகா ஸ்ரீதர்.

☼ வெயிலான் said...

// வெயிலானுக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள். //

மிக்க நன்றி!

// வேலனுக்கும், உங்களுக்கும் மட்டுமே அவள் பற்றிய விஷயங்கள் தெரியும். //

உங்களுக்கு போன் செய்து விசாரிக்கச்சொல்லி நான் வேலன் அண்ணாச்சியை மிகவும் தொந்தரவு செய்து விட்டேன். பரிசலிடம் நீங்கள் பேசும் போது அருகில் தான் இருந்தேன். விசயங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என உங்களிடம் பேசவில்லை.

உயிரோடை said...

அருமையாக‌ எழுதி இருக்கின்றீர்க‌ள். அதிலும் 80% நிஜ‌மென்ற‌து என்ற‌ என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌வில்லை. Take care

narsim said...

உங்கள் நடையின் ஆழத்தை சொல்வதா?? நிகழ்ந்த அபத்தத்தை சொல்வதா?? மிகவும் வேதனையான விசயம்..

anujanya said...

@ தமிழன்-கறுப்பி

உங்கள் முதல் வருகை. வித்தியாசமான பெயர். நன்றி தமிழன்.

@ கிருத்திகா

நன்றி கிருத்திகா. 'இறுக்கத்தைக் குறைக்க மால் செல்வதுகூட அபாயகரமானது' என்கிறார்கள். அடுத்த இலக்கு பல்வேறு நகரங்களின் 'மால்'களாக இருக்கலாம் இன்று சொல்கிறார்கள். :(((

@ வெயிலான்

நன்றி வெயிலான். வேலன் பேசும்போதும் சொன்னார்.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

அனுஜன்யா,
பதிவைப் படித்துக் கொண்டே வருகையில் நீங்கள் அனுபவித்த அத்தனை பதட்டத்தையும் பரிதவிப்பையும் அணுஅணுவாய் உணர முடிந்தது. சர்வேசன் பதிவில் நீங்கள் சொல்லியிருந்ததைப் பார்த்த பின் வாசித்ததால் கதையாக நானும் நினைக்கவில்லை. பின்னர் இங்குள்ள பின்னூட்டங்களும் இது நிஜக் கதை என்பதை ஊர்ஜிதப் படுத்தி விட்டன. உங்கள் பிரார்த்தனையே அவரைக் காப்பாற்றியதாக நானும் நம்புகிறேன்.

Unknown said...

யூ ஆர் ரியலி கிரேட் அண்ணா...

ச.முத்துவேல் said...

அதிர்ச்சியோடும்,வருத்தத்தோடும் படித்துமுடித்தேன். முடிவில் சுபம்.
சுஜாதாவின் தாக்கம் என்று நினைக்கிறேன். அருமையான ,சுவாரசியமான நடை.
(வலைப்பூவின் பெயர்க்காரணம் இப்போது புரிகிறது. பிடித்த நடை,வரிகள் என நிறைய வரிகளை மேற்கோள் காட்ட வேண்டியிருப்பதால் அதை விட்டுவிடுகிறேன்)

anujanya said...

@ smile

புன்னகை! நன்றி. உங்கள் பின்னூட்டத்தை முதலில் மறந்துவிட்டேன். இன்னும் பதிவு எழுதத் துவங்கவில்லையா?

@ மின்னல்

நன்றி. I will take care.

@ நர்சிம்

வாங்க தல. கொஞ்ச நாளா இங்க வரவேயில்ல. ஆம், மிகப் பதட்டமான நாட்கள். 'நடை'க்கு நன்றி.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோதரி.

//உங்கள் பிரார்த்தனையே அவரைக் காப்பாற்றியதாக நானும் நம்புகிறேன்.// உங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சி தருகிறது.

@ ஸ்ரீ

ரியலி? பதிவில் 'தங்கையை' என்று சொன்னது உன்னைத்தான். :))). நன்றி ஸ்ரீ.

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்.

//சுஜாதாவின் தாக்கம் என்று நினைக்கிறேன். அருமையான, சுவாரசியமான நடை.// தவிர்க்க வேண்டியது; முடியவில்லை. Succumbed to temptation.

அனுஜன்யா

Anonymous said...

படிக்கும்போது இது உண்மைன்னே நம்பலங்க, கமெண்ட்ஸ் பாத்ததுக்கப்பறம்தான் புரிஞ்சது. கோவை குண்டு வெடிப்பின்போது அங்கிருந்ததால் இந்த பதட்டத்தை அனுபவித்திருக்கிறேன்; terrible.

Hope Susan is getting better now.

anujanya said...

@ காந்தி

சுவாரஸ்யம் கருதி, கொஞ்சம் கற்பனை சேர்த்து புனைவு போல எழுதினேன். நன்றி.

அனுஜன்யா

Unknown said...

//மீண்டும் ஆரத்தழுவிய சூசன் என் தங்கையை நினைவு படுத்தினாள்.//

ஹை இது நானா?? :)))))

MSK / Saravana said...

//70-80% நிஜம்//

ஐயோ.. இப்போது சூசன் எப்படி இருக்காங்க..

MSK / Saravana said...

யப்பா.. படிக்கும் போதே திக்கென்று இருந்தது..

anujanya said...

@ ஸ்ரீ

ஆம், நீயேதான்.

@ சரவணன்

நன்றி சரா. She is better.

அனுஜன்யா

கணினி தேசம் said...

//NDTV, TIMES NOW, CNN IBN என்று எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பில் TRP ஏற்றிக்கொண்டிருந்தன. //

எவ்வளவு உண்மை. இந்த துயரமான நேரத்திலும்கூட வியாபார சிந்தனையே மேலோங்கி இருந்ததை காண முடிந்தது.

ஒரு பக்கம் என்னவென்றால் "தீவரவாதிகளின் படம்.. "Exclusively on Time now only No where else" என ஒரு தெளிவில்லாத, CCTV படத்தை திரும்பத்திரும்ப ஒட்டிகொண்டிருந்தார்கள். இதில் யாரும் Copy அடிக்காதிருக்க நடுவில் விளம்பரப்பட்டை வேறு.! கொடுமை.

இன்னொருபக்கம், மிகப் பிரபலமான பெண் நிருபர். Kargil போரின்போது வீரதீர செயல்களில் இறங்கியவர். (தேவை இல்லாத இடத்தில் மூக்கை நுழைத்து ராணுவத்திற்கு இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தது வேறு விஷயம் ) .

இவர் புதன் இரவு துவங்கி இரண்டு நாட்கள் Oberoi முன் முகாமிட்டுவிட்டார். மக்கள் சேவைக்காக உறக்கமின்றி ஓய்வின்றி எவ்வளவு பாடுபடுகிறார் என தோன்றுமளவு "உச்சஸ்தாயில்" பேசிக்கொண்டே இருந்தார். "Creating Sensitivity to gain TRP "
என்பது தான் அவரின் குறிக்கோளாக இருந்தது.



மற்ற ஹிந்தி செய்தி channels, செய்திகளை வாசிக்காமல் கத்திக்கொண்டு இருந்தார்கள்.

டீவியில் பார்த்துகொண்டிருந்த எங்களுக்கே அந்த மூன்று நாட்களும் இதயம் படபடத்துகொண்டே இருந்தது என்றால் நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி என நினைக்கவே முடியவில்லை.


உங்கள் தோழியும், மற்றவர்களும் விரைவில் குணம்பெற்று வீடுதிரும்ப பிரார்த்திக்கிறேன்.

நன்றி!

anujanya said...

எவ்வளவு நீண்ட பின்னூட்டம்! நன்றி உங்கள் கருத்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும். கணினி தேசம்! நல்ல பெயர்.

அனுஜன்யா

சென்ஷி said...

அசர வைத்துவிட்டது கதை.. நிச்சயம் கதைதானே.. ஆறுதல் படுத்தும் முடிவுகள் தான் நம்மை ஆசுவாசப்பட வைக்கிறது எப்போதும்..

நன்றி

சென்ஷி said...

மீண்டுவந்த சூசனுக்கு எனது நல்வாழ்த்துக்கள் நண்பரே..

anujanya said...

@ சென்ஷீ

அப்பா, எவ்வளவு நாட்களுக்குப் பிறகு? கூகிள் ரீடர் ஒழிக. நன்றி சென்ஷீ.

அனுஜன்யா

KARTHIK said...

அனு இப்போதாங்க உங்க பதிவ முதல் தடவையா படிக்குரேன் (அதுவும் பரிசல் பதிவுல கொடுத்த சுட்டினால)
//சூசன் உயிர் பிழைத்தது குறித்து மகிழ்ச்சி.//
எனக்கும் தாங்க.

anujanya said...

@ கார்த்திக்

உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன் கார்த்திக். பரிசலின் ரீச் பிரமிக்க வைக்கும் ஒன்றுதான். நன்றி. முடிந்தபோது வாருங்கள்.

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

அனுஜன்யா said...
@ தமிழன்-கறுப்பி

உங்கள் முதல் வருகை. வித்தியாசமான பெயர். நன்றி தமிழன்.
\\
அண்ணன் இது நான்தான் 'தமிழன்...' அப்படின்னு அய்யனார் பதிவுகளில் அடிக்கடி சந்தித்திருக்கிறோம்...
உங்களுடைய மெயிக்கல் ரியலிசம் பற்றிய பதிவென்று நினைக்கிறேன் அதிலும் பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

கவிதைக்கு நன்றி...

அன்புடன் அருணா said...

கொஞ்சம் லேட் என்ட்ரிதான்...படபடப்பையும் பதட்டத்தையும் கொடுத்தது படிக்கும்போது....இப்போ சூசன் நலமா?
அன்புடன் அருணா

anujanya said...

@ தமிழன்

சாரி, நீங்க தானா அது. ஆமாம், என் பேர கொஞ்சம் மாத்திட்டீங்க?

@ அருணா

நன்றி அருணா. இப்போது நலம்.

அனுஜன்யா