Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Sunday, June 21, 2009

சிங்கள அரசு பிணக்குவியலின் மேல் ஈட்டிய வெற்றி (?)



ஈழத்தில் சிங்கள அரசு கையாண்ட போர்முறைகள், தமிழின மக்கள் பிணக்குவியலாக மாறுவதை இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்பே உணர்ந்த சிங்கள அரசு, குரல்வளை நெரிக்கப்பட்ட சிறிலங்காவின் ஊடகங்கள் என்று மிகக் கவலைக்கிடமான விடயங்களைப் பகிர்ந்துகொண்ட சுனிலா அபயசெகராவின் ஆங்கில நேர்காணலின் இன்னொரு பகுதி. இதன் காணொளி வளர்மதியின் பதிவில் காணலாம். நேர்காணல் செய்தவர் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிகையாளர்.

இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:

ஷார்மினி: சுனிலா, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் - எல்லோருக்கும்; விடுதலைக்குப் போராடிய பலர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் - சிங்கள இராணுவத்திடம் தோற்றுவிட்ட விடுதலைப் புலிகளை எண்ணி - உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது தற்போது?

சுனிலா: ம்ம், எம்மைப் போன்ற மனித உரிமைப் போராளிகளும், சிறி லங்கப் போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண முயன்றவர்களுக்கும் - மிக மனவழுத்தம் தரும் தருணம் இது. ஏனெனில் - இந்த போர் நிகழ்ந்த முறையும், பன்னாட்டு அரசுகள் இதை எதிர்கொண்ட விதமும் - தற்போது நடப்பவையும் - ஒரு விதமான அமானுஷ்ய அமைதி நிலவும் சூழல் - உள்நாட்டிலும், வெளியிலும்; இவற்றைத் தாங்கவே முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், நான் என் வாழ்நாளில் முப்பது வருடங்களை சிறிலங்காவில் மனித உரிமை போராட்டங்களில் செலவழித்தவள். சில தருணங்கள் கையறு நிலையை உணர்ந்திருக்கிறோம் - இதற்கு முன்பே இவ்விதம் ஒருமுறை உணர்ந்ததை நான் சொல்ல வேண்டும் - எண்பதுகளில் ஏராளமானோர் சிறிலங்காவில் காணாமல் மறைந்த போழ்தில் - இம்மாதிரியான தருணங்களில் நாம் என்ன செய்தாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை என்று உணர்ந்தது - இப்போது அப்படித்தான் உணர்கிறேன்.

ஷார்மினி: இது ஒரு நீண்ட யுத்தம். சிறிலங்கா இராணுவத்தின் புலிகளைத் தோற்கடிக்கும் திட்டம் வெகு நாட்கள் கிடப்பில் இருந்த ஒன்றுதான். 2006 ஆம் ஆண்டில் நீங்கள் இது புலிகளை வெல்வதற்கான ஒரு பாய்ச்சலின் ஆரம்பம் என்று கூறியிருந்தீர்கள். இது எவ்வாறு துவங்கியது? ஏன் துவங்கியது என்று விளக்க முடியுமா?

சுனிலா: இந்த சிறிலங்க அரசு, முந்தைய எல்லா அரசுகளைக் காட்டிலும் புலிகளை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களிலிருந்து வெளியேற்ற இராணுவத் திட்டத்தைத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை முதலில் 2006 இலும், பிறகு தற்போது முடிவடைந்திருக்கும் வன்னியிலும்.
முதலிலிருந்தே - 2006 ஆம் ஆண்டின் நடுவில் என்று எண்ணுகிறேன் - இந்த இராணுவத் தாக்குதல் குடிமக்களுக்கு நேரக்கூடிய பின்விளைவுகளையோ, குடிமக்கள் மரிப்பதைப் பற்றியோ சற்றும் பொருட்படுத்தாமல் முன்னேறப் போவதின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. வாஹரில் நடந்தேறிய 'வான் குண்டு மழை' ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். ஆனால் அரசு அதனை மறுத்தது. எப்போதும் போலவே. அரசு, நாட்டின் கிழக்குப் பகுதி ஒரு துளி இரத்தமும் சிந்தப்படாமல் விடுவிக்கப் பட்டதாகவே எப்போதும் சொல்லி வந்தது. ஆனால், குறைந்தது நூறு பேர்கள் அந்த 'வான் குண்டு மழையில்' உயிரிழந்ததை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். இவற்றைச் சரியாகக் கணிக்காமல் விட்டதும், இம்மாதிரி நிகழ்வுகள் ஒரு விதிவிலக்குகள் என்று எண்ணி வாளாயிருந்ததும் முக்கிய விடயங்களாகத் தோன்றுகிறது.

ஷார்மினி: எதனை கணிக்கத் தவறவிட்டீர்கள்?

சுனிலா: இந்த முறை அரசின் வேறுபட்ட அணுகுமுறையை. குடிமக்கள் மாள்வது போரில் முன்னேற ஒரு தடையாக இருக்காது என்ற முடிவுடன் இந்த அரசு இருந்ததாக எண்ணுகிறேன். முந்தைய அரசுகள் ஒவ்வொரு முறையும் இனிமேல் நடவடிக்கை எடுத்தால் அது குடிமக்களை வெகுவாக பாதிக்கும் என்ற நிலையை எதிர்கொண்டபோது, இராணுவம் ஒரு அளவுக்கு மேல் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தனது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டது - குடி மக்கள் மரிக்கத்தான் செய்வார்கள். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தெளிவான திட்டத்துடன்.

ஷார்மினி: இந்த அரசுக்கு இது ஒரு புதிய துணிச்சலா? பன்னாட்டு அரசுகளின் அங்கிகாரத்துடன் அவர்கள் எண்ணுவதைச் சாதிக்கலாம் என்னும் முனைப்பு.

சுனிலா: இந்த வருடம் மார்ச் மாதம் நியூ யார்க் நகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் இருக்கையில் இலங்கையில் குடிமக்களுக்கு நேரப்போகும் நட்டம் பெருமளவு இருக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது. பல்வேறு பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளிடத்தும் நான் பேசுகையில், அவர்கள் எல்லோருமே இந்த போர் இப்படித் தான் செல்லும்; மேலும் தற்போது ஒரு சாராரே வென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். இந்த ஒரு காரணம் காட்டி, பல்வேறு உலக நாடுகளும் நம் எல்லோரையும் - தமிழர், சிங்களர், சிறிலங்காவில் அமைதியை விரும்பிய ஒவ்வொரு குடிமகன் என்று எல்லோரையும் - கைவிட்டு விட்டன.

ஷார்மினி: இத்தகைய அணுகுமுறையின் விலை மிக அதிகம் ..

சுனிலா: இந்தப் போரில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானது ஜனநாயகம் தான் என்று எண்ணுகிறேன்; ஏனெனில் கடந்த 3 - 4 ஆண்டுகளில் தொடர்ந்து நடந்தேறிய இராணுவத் திட்டங்களுடன் - கூடவே நடைவேறிய அரசியல் திட்டமும் - எல்லா முடிவுகளையும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு அப்பால் வைப்பதே அந்த அரசியல் திட்டம் - இன்று நம்மிடம் உள்ள பாராளுமன்றமும், அமைச்சரவையும் நாட்டில் நடப்பது பற்றி துளியும் அறிந்திராத ஒரு நிலை. அனைத்து இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்கள் ஜனாதிபதியிடம் நேரிடையாக வேலை பார்க்கும் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் பாரளுமன்ற முறைகளுக்கு அப்பாலேயே செயல்படுகின்றனர். ஆகையினால் நிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்பது, ஜனநாயக மரபுகள் போன்ற விடயங்களே இந்தப் போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு.

ஷார்மினி: இத்தகைய ஜனநாயக மரபுகள் எவை என்று சொல்ல முடியுமா?

சுனிலா: ம்ம், ஒரு எடுத்துக்காட்டுக்கு இதைக் கூறலாம் - கடந்த மூன்றரை வருடங்களாக இராணுவ நடவடிக்கைகள் எப்போதுமே ஜனாதிபதியின் அலுவலகத்துள் உள்ள ஒரு சிறிய சிறப்புக் குழுமத்தால் எடுக்கப்பட்டன. இந்தக் குழுமத்தை வழி நடத்துவது ஜனாதிபதியின் சகோதரரும் இராணுவ அமைச்சகத்தின் செயலாளரும் ஆக இருப்பவர். பல தருணங்களில் நாங்கள் பல அமைச்சர்களிடம் - இராணுவம் இவ்வாறு செயல் படப் போகிறது; அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் தறுவாயில் உள்ளது; நீங்கள் தலையிட்டு இவற்றை நிறுத்த முடியுமா - என்றெல்லாம் சொல்கையில், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி ஒன்றும் தெரிந்து இருக்கவில்லை. அரசின் வாதம் எப்போதுமே "விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதிகளுடன் போரிடுகையில் இந்த அணுகுறை அவசியமே' என்னும் ரீதியில் இருக்கிறது. ஆனால், என் எண்ணத்தில் இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் - எதற்கும் பதில் சொல்ல அவசியமில்லாத நிலை போன்ற பின்விளைவுகள். இதன் விளைவாக, ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுள்ள பொது மக்கள் படுகொலைகளுக்கு இராணுவம் பொறுப்பு ஏற்காத நிலை என்னும் உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. உங்களுக்குத் தெரியும் - பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளால் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று - ஆயினும், அதற்குப் பொறுப்பேற்க ஒருவரும் இல்லை. மறுப்பு ஒன்றே நாம் காண்பது. ஏனெனில் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்புக்குள் இவை நடக்கவில்லை - எங்களால் எமது கேள்விகளை எங்கே, எவ்வாறு முன்வைப்பது என்று புரியாத நிலை - பாதுகாப்பு அமைச்சகம் சென்றால் அது முழுதும் மறைக்கப் பட்டு, பூசி மெழுகப் படுகிறது.

ஷார்மினி: ஜனநாயகம் பாதிப்புக்குள்ளாவது மற்றும் ஊடகத்துறையின் பங்கு இவைகளைப் பற்றிப் பேசுகையில் ஊடகத் துறையினரும் உங்கள் போன்ற களப்போராளிகளும் வெகு காலமாக அச்சுறுத்தப் பட்டும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். இத்தகைய நீண்ட வரலாற்றை அவதானித்த உங்களைப் போன்றவர்களுக்கும், மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் என்ன நடக்கிறது இங்கு?

சுனிலா: சிறிலங்க அரசு தனது இராணுவத் தாக்குதல்களுடன் கூடவே மிக வலிமையான பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளது - தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத தொலைகாட்சி, வானொலி நிலையங்கள், நாட்டு மக்களைச் சென்றடையாத நிலை - மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்தம் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இவற்றை மாசுபடுத்தி, ஊழல், பணக் கையாடல், முறைகேடுகள் என்று பலவகைகளில் இவர்களை தனிப்பட்ட முறையில் தவறாகச் சித்தரித்தல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை இவற்றை அச்சுறுத்துவதுடன் நில்லாது எந்த ஒரு அமைப்புமே சுதந்திரமாகச் செயல் பட முடியாத நிலை - பல்வேறு பொதுமக்கள் நல நிறுவனங்கள் பாராளுமன்ற உப-குழுக்கள் முன்பு தருவிக்கப் பட்டு, பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, நிதியுதவி மறுக்கப்பட்டு, பன்னாட்டு மனித நேய நிறுவங்களின் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை செய்யும் அனுமதி நிராகரிக்கப்பட்டு அல்லது தாமதப் படுத்தப்பட்டு - என்று பலவித இன்னல்கள். ஒரு திட்டமிட்ட முறையில் சமுதாயத்தின் குரலை, உரிமையை மறுப்பது என்பது நடந்திருக்கிறது. குறிவைக்கப்பட்ட தனிப்பட்டவர்களை அச்சுறுத்தல்களுக்கும், சீண்டல்களுக்கும் ஆளாக்குதல் - சிறிலங்க அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தைப் பார்த்தால் இவை நன்றாக விளங்கும் - ஏனெனில் அத்தளத்தில் பல்வேறு தனிப்பட்ட, குறிவைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி எப்போதும் கட்டுரைகள், செய்திகள் தவறான முறையில் வெளிவரும். நாங்கள் எல்லோரும் அத்தகைய தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் தாம்.

ஷார்மினி: நீங்களும் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லையா?


சுனிலா: இல்லை. நான் கடந்த வருடம் வெளியேறினேன். நான் சிறிலங்காவுக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் சற்றும் பாதுகாப்புணர்வுடன் இல்லை. சிறிலங்கா மாதிரியான நாட்டில் உள்ள சிரமம் என்னவெனில் எனக்கு அபாயமென்றால், அது மற்றவர்க்கும் அவ்வாறே ஆவதுதான். ஆகையால், நான் வெளியேறுகிறேன் என்று அறிவித்த போது என் அலுவலகத்திலும், என் வீட்டிலும் ஒவ்வொருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அது எவ்வளவு சோகம் - என் அன்னை இரவில் நன்றாகத் துயில வேண்டுமென்றால் நான் விலக வேண்டும் என்னும் நிலை.

Tuesday, June 16, 2009

சிறி லங்காவில் என்னதான் நடக்கிறது? - காணாமல் போகும் தமிழ் சிறார்கள்



ஈழத்தில் தடுப்பு முகாம்களின் நிலை குறித்து சுனிலா அபயசெகராவின் நேர்காணல்.

நேர்காணல் செய்தவர் டோரோண்டோவில் இருந்து வரும் ரியல் நியூஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியின் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிக்கையாளர்.

சுனிலா நன்கறியப்பட்ட மனித உரிமை களப்பணியாளர். Information Monitor (INFORM) என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர். இனப்போரில் பிளந்துபட்டு நிற்கும் சிங்கள மற்றும் தமிழ் என்று இவ்விரு இன மக்களின் மதிப்பைப் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் சில உச்ச விருதுகளை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் பெற்றவர்.

ஆங்கில நேர்காணலின் காணொளியை வளர்மதியின் தளத்தில் காணலாம்.

இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:

ஷார்மினி: எங்களுடன் இன்று பகிர வந்ததற்கு நன்றி

சுனிலா : இங்கு வந்ததில் மகிழ்ச்சி

ஷார்மினி : சுனிலா, ம், மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு இருக்கிறார்கள் - ஏறக்குறைய சிறைச் சாலை முகாம்கள் என்று பலராலும் வர்ணிக்கப்படும் இடங்களில்; நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்? அங்கிருக்கும் நிலைமை என்ன?

சுனிலா : இதில் பெரிய விடயம் இம்மக்கள் பல மாதங்களாக பல அடிப்படை வசதி, உரிமைகள் மறுக்கப்பட்டு இந்த முகாம்களுக்குக் கொணரப் பட்டவர்கள் என்பதே கவனிக்கப் படவில்லை. பசியில் உணவின்றி, தாகத்திற்கு நீரின்றித் தவித்து, உடலில் திரவச்சத்து இழந்து, சீழ் பிடித்த காயங்களுடன் பலமாதங்களாக அல்லலுற்றவர்கள். அதனாலேயே அவர்களை உடனடியாகக் கவனிப்பது மிக அவசியமாகிறது. தற்போது நாம் கேள்விப்படுவது என்னவெனில் பெரும்பாலான மனித நேய நிறுவனங்களுக்கு இம்மக்களை அடைவதற்கு கட்டுப்பாடற்ற தொடர்பு அனுமதிக்கப் படாததால், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிட்டாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் 27 ஆம் திகதி வவுன்னியாவின் உயர்நீதி மன்ற நீதிபதி அன்றைய தினம் 14 முதியோர்கள் பசியால் இறந்ததை பதிவு செய்து, அரசை முதியோர்களைக் கவனிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஷார்மினி : பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு உட்சென்று உதவி செய்வதை அரசாங்கத்தை எது தடுக்கிறது?

சுனிலா : இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பது அரசின் வாதம். நாமும், இது உண்மையாக இருக்கக் கூடுமென்று ஒப்புக் கொள்கிறோம். எங்களின் எதிர்ப்பு எல்லாம் அரசு முன்வைக்கும் திட்டத்திற்கு தான்: "மக்களை முதலில் சல்லடையில் சலித்து பிறகு அவர்களை பிறர் தொடர்பு கொள்ள அனுமதிப்பது"; நாங்கள் சொல்வதெல்லாம், "அவ்வாறு மக்களை பரிசோதிக்கும் போதே அவர்களைத் தொடர்பு கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று". "அத்தகைய சோதனை, சார்பில்லாத பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்"
நாங்கள் அறிவது என்னவெனில் இந்த முகாம்கள் உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக உள்ளன. ஏனெனில் இவற்றைக் கண்காணிப்பது இராணுவம்; மக்கள் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் படுகிறது; பல வேலிகளைத் தாண்டினால் ஒழிய அங்கிருந்து விலக முடியாது; அவர்களை யாரும் வந்து பார்க்கவும் கூடாது; உப ராணுவம் எனப்படும் 'முன்னர் புலிகளுடன் இருந்து பின் பிரிந்து சென்ற' குழுக்கள், முகமூடி போர்த்திய 'தகவல் சொல்பவர்'களுடன் இந்த முகாம்களுக்குள் உட்புகுந்து, சிலரை அடையாளம் காட்டி, இந்த முகாம்களிலிருந்து வெளியே கொண்டு செல்லப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 200 சிறார்கள் மணிக்வா முகாமிலிருந்து நிருங்குளம் தொழிற்கல்வி கல்லூரி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் ஒரு பட்டியலும் இல்லை. பெற்றோர்கள் பதட்ட நிலையில் காணப்படுகிறார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஒரு பட்டியல் மட்டுமே. இந்த மூன்று இலட்சம் மாந்தரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்க வேண்டும்; அப்போதுதான் இது போல யாராவது ஒருவர் இந்த முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு மாற்றப்பட்டால், அதற்கு யாரேனும் பொறுப்பேற்க முடியும். தற்போது இந்தகைய பட்டியல் பதிவில் இல்லை; ஆதலால் இது போல மக்கள் திடிரென்று காணாமல் போகும் நிகழ்வுகள் நடக்கின்றன; அது எங்களுக்கு மிகுந்த கவலையைத் தருகிறது.

ஷார்மினி :பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் இதனுட்சென்று உதவி செய்யத் தயாராக உள்ளனவா?

சுனிலா : ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகமும் (UNHCR) மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) இத்தகைய மேற்பார்வையிடுதல், பதிவு செய்தல் போன்ற பணிகளில் திறமை படைத்த நிறுவனங்கள் ஆகும். ஆனால், தற்போது அவர்களுக்கு இதில் ஈடுபட அனுமதி இல்லை.

ஷார்மினி : காணாமல் போய்விடுவோர் பற்றி - உறுதியான தகவல்கள் ஏதாவது கேள்விப் படுகிறீர்களா?

சுனிலா : இந்த முகாம்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு - காணாமல் போனவர்கள் - எங்களால் அதனைக் கனானிக்க இயலாத சூழல் - சிறி லங்கா அரசு புலிகள் என்று சொல்லப்படும் 10,000 பேர்கள் சரணடைந்து, தங்கள் தடுப்பு முகாம்களில் இருப்பதாக ஒப்புக் கொள்கிறது. அவர்கள் யாரென்று தெரியவில்லை; அவர்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் இல்லை. உங்களுக்கே தெரியும் எத்தனை பேர் இறுதி தினங்களில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டார்கள் என்று; புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் துணைவியரும், குடும்பத்தினர்களும். ஒரு உதாரணத்திற்கு சூசை அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் சிறி லங்க கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று இப்போது தெரியாது. ஆதலால், இது போன்ற குறிப்பிட்ட விடயங்களிலாவது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் அறிய முயல்கிறோம். ஆயினும், அது முடியாத காரியமாகவே உள்ளது.

ஷார்மினி : இந்தத் தடுப்பு முகாம்களில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி - அபு கரிப் (ஈராக்) சிறையில் நடந்தேறியது போல - செய்திகள் வருகின்றன. நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்?

சுனிலா : உங்களுக்கே தெரியும் - சிறி லங்கா உளவுத்துறையின் சித்திரவதை சிறப்புகள் பற்றி - ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குனர் மால்ஃபாய் டோவக் அவர்களின் 2007 இல் நடந்த சிறிலங்க விஜயத்தின் போது அளித்த அறிக்கை அப்போதிருந்த நிலைமை பற்றி மோசமாக விமர்சித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசர நிலை சட்டம் - இவற்றின் அடியில் பிடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல - சாதாரண சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கூட - அவதிப் பட்டார்கள். சித்ரவதையை விடுங்கள் - கும்பலாக அடைத்தல், மருத்துவ வசதி தராமல் இருத்தல் மற்றும் அடித்து, பானைத் தண்ணீர் சித்ரவதை - இப்படி நிறைய கேள்விப்பட்டோம். இத்தகைய சித்ரவதைக்குள்ளான ஏராளமானோர், கனடா, யு.எஸ். மற்றும் யு.கே. ஆகிய நாடுகளில் தஞ்சம் புகும்போது அளித்த ஆவணங்களில் இது பற்றி சொல்லியிருக்கிறார்கள். இந்த தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகள் பற்றி போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்றே சொல்வேன்.

ஷார்மினி : தற்போது சிறிலங்கா அரசின் மீது எத்தகைய அழுத்தம் கொடுக்க இயலும்? யாரால் தர இயலும்?

சுனிலா : தற்போதைய நிலையில் உலக நாடுகள் செய்யக்கூடியதெல்லாம் சிறி லங்கா அரசை இந்த தடுப்பு முகாம்களை அணுகுவதற்கு உள்ள தடைகளை நீக்கவும், முகாம்களில் அடைபட்டிருப்பவர்கள் விவரங்கள், முகாம்களில் இடம் பெயர்க்கப்படப் போகிறவர்களைப் பற்றிய விவரங்கள் போன்றவற்றைக் குறிப்பெடுத்துப் பதிவது - இவைகளைக் கோருவது தான்; இவைகள் மிக அடிப்படையான தேவைகள் மட்டுமே - புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவேயில்லை என்று நாங்கள் சொல்லவில்லை; அவர்களைப் போக விடுங்கள் என்று சொல்லவில்லை; நாங்கள் சொல்வதெல்லாம், ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். அதனை எல்லோரும் அறியச் செய்யுங்கள்.
இறந்த ஒவ்வொருவருக்கும் - சமீபத்தில் நடந்தேறிய ராணுவத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது - சுமார் 20,000 பேர் என்று செய்திகள் வந்தாலும், அரசு இதனை மறுக்கவே செய்கிறது - இறந்த ஒவ்வொருவருக்கும் கனடா, யு.கே., ஜெர்மனி, பிரான்ஸ் இந்த நாடுகளில் உறவினர் உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் பாட்டி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன் என்று உறவு முறைகள் காணாமல் போய்விட்ட, இறந்து விட்ட நிகழ்வுகள் உள்ளன. இந்த புலம் பெயர்ந்த தமிழின மக்களுக்காகவேனும் சிறிலங்கா அரசின் மனிதாபிமானமற்ற செயலான உண்மை நிலையை மறுத்தல் என்பது மாற வேண்டும் - இவர்கள் முகாம்களிலோ, வைத்திய சாலைகளிலோ, சிறைகளில் அடைக்கப்பட்டோ இருக்கிறார்கள் - இந்த மூன்றிலும் இல்லை என்றால் அவர்கள் இறந்தவர்கள் - என்று தெரிய வேண்டும். நமக்குத் தெரிய வேண்டும்; மக்களுக்குத் தெரிய வேண்டும்; இதுவே சிறிலங்கா தமிழர்களுக்காக பன்னாட்டு அரசுகள் செய்யக்கூடிய செயலாகும்.

ஷார்மினி : யாரந்த பன்னாட்டு சமூகம்? சிறி லங்கா அரசின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நிறுவனங்கள் அல்லது நாடுகள் எவை?

சுனிலா : சீனா, ஜப்பான், பிரேசில், தென் ஆப்பிரிக்கா. இந்த நான்கு நாடுகள் குரல் கொடுத்தால் - மனிதாபிமான கொள்கைகளுக்காக, முகாம்களுக்குத் தடையற்ற அணுகுமுறை, முகாம்களில் உள்ளோரின் மொத்தப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்கள்.

ஷார்மினி : ஏன் இந்த நாடுகள்?

சுனிலா : சிறி லங்கா அரசுடனான இவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுக்காக - அமெரிக்க, கனடா, ஐரோப்பா இந்த இடங்களிலிருந்து வரும் அழுத்தங்களை சிறி லங்கா அரசு எதிர்க்கிறது - ஏகாதிபத்திய அரசுகளின் காலனிய சதி என்ற ரீதியில் - ஆனால் - இந்த நான்கு நாடுகள் தென்பிராந்திய சக பயணிகள். நீங்கள் அறிவீர்கள் - சீனா சிறிலங்காவில் கணிசமான முதலீடு செய்திருக்கிறது; சிறிலங்கா அரசுக்கு ஏராளமான கடன் வசதிகளும், நிதியுதவி உறுதிமொழிகளும் சீனாவிடம் இருந்து கிடைத்திருக்கிறது. பிரேசில் நாட்டவர்களுக்கும் தென்பிராந்திய, அணி-சேரா நாடுகளிடையே மதிப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சிறி லங்கா - தென் பிராந்திய ஜனநாயகங்களின் ஒரு பிரதிநிதியாகவே நோக்குகிறது. ஆகையால், இந்த நாடுகளுக்கு இத்தகைய ஆளுமைகள் உள்ளன. இருப்பினும் அவர்கள் இந்த நிலையை இவ்வாறு புரிந்து கொள்ளாதது சோகமே. இவற்றைச் செய்வதால் இந்த நாடுகளுக்கு ஒன்றும் நட்டமில்லை.

பின் குறிப்பு: சில பெயர்கள்/இடங்கள் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமையால் தவறாக இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. சுட்டினால் திருத்திக் கொள்ளலாம்.

Thursday, May 28, 2009

பிரபாகரன் - நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?



(நீண்ட பதிவு. மன்னித்து விடுங்கள்)

கடந்த இரு வாரங்களாக மன உளைச்சல். புலிகளின் பின்னடைவு கடந்த ஒரு வருடமாக புரிந்தாலும், பிரபாகரன் பற்றிய செய்தி மனதை விசனமாக்கியது உண்மை. அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்று விவாதம் செய்தால், முடிவில்லாமல் போகும் அளவுக்கு சாதக பாதக அம்சங்கள் உண்டு அவரிடத்தில். யார், எங்கிருந்து பேசுகிறோம் என்பதில் இருக்கிறது அவர் நல்லவரா இல்லையா என்று.

என்னை ஒரு வருடம் முன்பு கேட்டிருந்தால், சராசரி இந்தியன் போல 'என்ன சந்தேகம். புலிகள் சரியில்லை. பயங்கரவாதிகள். மேலும், என்ன ஒரு ஆணவத் துணிச்சல் - நம்ம முன்னாள் பிரதமரைக் கொலை செய்வதற்கு?' என்ற 'பொதுப் புத்தி' என்று சிந்தனையாளர்கள் சாடும் குணம் என்னிடம் இருந்தது.

இப்ப
ஒரு வருடத்தில் என்ன நடந்து விட்டது? அவர்கள் - குறிப்பாக பிரபாகரன் - ஏன் இப்போது வேறு மாதிரி தெரியணும்? ஒரு இயக்கம் தேய்ந்து, அழிகிறது; ஒருவர் மரித்திருக்கக் கூடும் என்பதால் வரும் பச்சாதாபமா? என்றால், இல்லை என்றே சொல்வேன்.

நான் அறிந்த தமிழ் ஆர்வலர்கள், அரசியல், சமூக சிந்தனையாளர்கள் என்று பல்வேறு பிரமுகர்களின் வலைத் தளங்களைப் படிக்கும் வாய்ப்பும், முனைப்பும் கடந்த ஒரு வருடம் எனக்குக் கிடைத்தது. இதற்கு முன் என் தமிழார்வம் சராசரி தான். தமிழன் என்பதில் பெருமை. தொன்மையான மொழி மற்றும் கலாசாரம். ஆயினும், 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் கதாநாயகன் நேர்முகத் தேர்வில் சொல்லிக்கொள்ளும் 'தமிழ் பேசும் இந்தியன்' என்று சொல்லிக் கொள்ளவே விருப்பம் - இப்போதும், எப்போதும்;

நான் மதிக்கும் பலரும் இலங்கைத் தமிழர் விடயத்தில் புலிகளை ஒன்றுமே விமர்சனம் செய்யாத போது ஏன் இப்படி என்ற ஆர்வத்தில் படிக்கத் துவங்கியதில் ஈழ மக்களின் துயர நிலை, நியாயத்திற்கு அம்மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, அமைதி வழிவிட்டு ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் என்று இயக்கத்தின் பின்புலம் பற்றி ஒரு சிறிய புரிதல் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை 'அவர்கள்' ஆக இருந்தவர்களின் நியாயங்கள், தர்க்கங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கின.


எங்கே மூளைச் சலவை செய்யப் படுகிறோமோ என்ற பதட்டத்தில் சரிசமன் நிலையை நீடிக்கச் செய்ய, துக்ளக் முதல் டைம்ஸ் ஆப் இண்டியா, NDTV என்று வெகுஜன இந்திய ஊடகங்களின் கருத்துகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இவைகளின் குரலின் பின் தென்படும் வெறுமை, மேம்போக்குத் தனம் மற்றும் சில சமயங்களில் போலித்தன்மை இவற்றை இலகுவில் உணர முடிகிறது. உதாரணம்: பிரபாகரன் பற்றி செய்தி சொல்கையில் (ஹெட்லைன்ஸ் டுடே என்று நினைக்கிறேன்) 'இங்கயிருந்து போயிருக்கும் தமிழர்கள், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து தான் நடக்க வேண்டும். மாறாக, குடியுரிமை, தனி ஈழம் என்பதெல்லாம் சிறிலங்கா எப்படி ஒப்புக் கொள்ளும்?' என்ற ரீதியில் அபத்தக் களஞ்சியமாக இருந்தது. இதைத்தானே தமிழரல்லாத இந்தியர்கள் உண்மை என எண்ணுவார்கள்? இப்படித்தானே கருத்தியல் அமைக்கப் படுகிறது. CNN-IBN ஏதோ தமிழர்களுக்கு பரிந்து பேசுவது போல "முல்லைத் தீவில் துன்புறும் மக்களின் நிறைய உறவினர்கள் தமிழ் நாடெங்கும் மிக வருத்தத்தில் உள்ளனர்' என்று இலங்கைத் தமிழர்களுக்கு NRI சான்றிதழ் கொடுத்தது.

உலகெங்கும் ஆங்காங்கே விடுதலை வேண்டி பல இனங்கள் போராட்டத்தில் இருந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். பழைய சோவியத் யூனியன், திபெத், காஷ்மீர், குர்டிஷ், செசென்யா, பாலஸ்தீனம், கொலம்பியாவின் பழங்குடிகள், I.R.A., போஸ்னியா, செர்பியா என்று அண்மைக்கால இரத்த வரலாறுகள் எங்கும் பரவி இருக்கிறது. ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

பேரினத்தைச் சார்ந்த அரசாங்கம், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, இனவாத அரசியலைக் கையிலெடுக்கும் போது துவங்குகிறது இத்தகைய சிற்றின ஒழிப்பு. பிரசார உத்திகளால், பேரினத்தின் மிருக உணர்வுகள் தூண்டப்பட்டு, அவற்றுக்குத் தீனி போடப் படுகிறது.

இந்த இடத்தில் மிக முக்கியமான அம்சம் பொது பிரக்ஞை/மனச்சாட்சி போன்றவை. Collective conscience of the majority. மற்ற போராட்டங்களை உன்னிப்பாக கவனிக்கா விட்டாலும், ஹம்மாஸ் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டங்களைப் பற்றி கருத்து கூறும் அளவில் நிகழ்வுகளை கவனித்தவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுவது, யூதர்களும் சரி, சிங்களவர்களும் சரி - இந்த விடயத்தில் மனிதாபிமானம், மனசாட்சி இவைகளை முற்றிலும் துறந்து, அரசாங்கத்தின் அராஜக இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மௌன பச்சைக்கொடி காட்டி உதவி இருக்கிறார்கள்.

எப்போது ஒரு அரசே (அதிகாரம் என்று கொள்ளலாம்) தன் குடிகளின் ஒரு சாராரை விரோத மனப்பான்மையில் பார்க்கிறதோ, பேச்சு வார்த்தைகள் இந்தக் கால கட்டத்தில் பயனளிக்கும் என்று எதிர்பார்ப்பது நிராசைதான். யாருக்குமே கத்தியின்றி, இரத்தமின்றி நியாயம் கிடைக்குமெனில், ஏன் அவைகளைக் கையில் எடுக்கப் போகிறார்கள். அதனால், ஈழப் போராட்டம் அமைதி மார்க்கத்திலிருந்து, ஆயுதப் போராட்டமாக வெடித்ததற்கு புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். அந்தக் கால கட்டத்தில் TELO, PLOT, TULF (எனது புரிதல் மிகச் சிறியது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்) போன்ற இயக்கங்களும் ஆயுத போராட்டத்தில் தான் குதித்தன. இந்த இயக்கங்களுக்குள் நடைபெற்ற போராட்டங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. இவைகளுக்குள் பெரிய வித்தியாசம் இருந்திருக்க சாத்தியக்கூறுகளுமில்லை. புலிகள் கை தாழ்ந்து, ஒரு பேச்சுக்கு TELO கை ஓங்கி இருந்தால், இன்று புலிகளைச் சாடும் நாம், TELO வைத் திட்டிக் கொண்டிருப்போம்.

இப்படியெல்லாம் நான் சொல்வதால் புலிகள் பக்கம் தவறு இல்லை என்று சொல்ல வரவில்லை. நான் பார்த்த வரையில் அவர்கள் செய்த தவறுகள்:

1. மிதவாதிகள் (அமிர்தலிங்கம் போன்றோர்) அனைவரையும் கொன்றது.

2. மற்ற போராட்ட இயக்கங்களை இராஜ தந்திர முயற்சிகளால் ஒருங்கிணைக்காமல், தீர்த்துக் கட்டியது.

3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான். தார்மீக அடிப்படையிலும், strategic அடிப்படையிலும் இது மன்னிக்க முடியாத பிழைதான்.

4. பொதுவாகவே, அவ்வப்போது கிடைத்த அமைதி வாய்ப்புகளை பயன்படுத்தாமல், ஆயுதக் குவிப்புக்கு அந்தத் தருணங்களை உபயோகித்துக் கொண்டது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தை என்ற கோணத்தில் புலிகளின் நம்பகத் தன்மை முற்றிலும் இல்லாமல் போனது.

5. அவ்வப்போது கிடைத்த ராணுவ வெற்றிகளால், தன் பலத்தை மிகையாக எண்ணத் துவங்கியது.

6.சிங்களப் பொதுமக்களை தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளால் அன்னியப் படுத்திக்கொண்டது. இந்தியாவிலும் சென்னை விமான நிலைய வெடிகுண்டு போடுவது வரை வந்தது.

இதெல்லாம் சரி. இவ்வளவு தவறு செய்த இயக்கத்திற்கு எதற்கு கண்ணீர் சிந்த வேண்டும் என்றால் - புலிகளைப் போல, இப்போது இந்தியா மற்றும் அதற்குள் தமிழ் நாடு செய்த தவறுகளை அலசினால்:

1. முதலில் இந்திரா காந்தி ஆட்சியில், அவர் இலங்கையில் இன்னொரு வங்காள தேசத்தை உருவாக்க முயன்றார். இலங்கை இரண்டாப் பிரிந்து, ஈழம் மலர்வது இந்தியாவுக்கு நல்லது. இந்தியா இன்னும் பெரிய நாடாகும் என்ற கோணத்தில். அதனால், தார்மிக, ஆயுதங்கள், பயிற்சி என்று உதவிகள் எல்லா விதங்களிலும் தரப்பட்டது. தமிழகமும் உற்சாகமாகப் பங்கேற்றது.

2. அப்போதே SAARC மாநாடுகளிலும், தொடர்ந்த பேச்சு வார்த்தைகளிலும் இந்தியாவின் மீது சிறிலங்கா அரசு இந்த விடயத்தில் குற்றம் சாட்டத் துவங்கி, காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் இவற்றுடன் சேர்ந்து இந்தியாவை விமர்சிக்கத் துவங்கியது.

3. ராஜீவ் காந்தி ஒரு நம்பிக்கை அடிப்படையில் (எனக்குத் தெரிந்த வரை அவருடைய நோக்கங்கள் நல்லவையாகவே இருந்தன) இரு சாராரையும் அமைதிப் பேச்சுக்குக் கொண்டு வரவைத்து, நிரந்தரத் தீர்வுக்கு முயன்றார். ஆனால், IPKF செய்த குளறுபடிகளாலும், அத்துமீறல்களாலும் அமைதி முற்றிலும் போய், ஈழ மக்கள் மனதில் ஆறாத வடுக்களையும், வஞ்சிக்கப்பட்ட உணர்வையும் தந்தது.

4. அவர் மறைவுக்குப் பின் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்த இந்திய அரசு இப்போது திடீரென்று புலிகளை முற்றிலும் ஒழிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கு, எனக்குப் புரிந்த வரையில் இந்த காரணங்கள் இருக்கலாம்.

a) இந்தியப் பெருங்கடல் இராணுவ கோணத்தில் இப்போது மிக மிக முக்கிய இடமாகி விட்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் எல்லாமே இதில் அதிகாரக் கோலோச்ச முயல்கின்றன. இப்போது தமிழர்களைக் கைவிட்டு, சிங்கள அரசுக்கு உதவினால், அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் முற்றிலும் சாய்வதைத் தவிர்க்கலாம்.

b) இந்தியாவுக்கும், காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பிரிவினைவாதங்களை ராணுவ பலத்துடன் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம். அதற்கான தார்மிக பலம், பிரிவினை கோரும் ஈழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுதல்.

இதில் தமிழகம் செய்த தவறு இது தான்:

இந்திய அரசு உண்மையில் ஒன்றும் ஈழ மக்கள் பால் அக்கறை கொண்டிருக்க வில்லை. தமிழகம் எப்போதும் தந்த அழுத்தமான எதிர்ப்பால், இந்திய அரசு சிங்களப் பேரின வாதத்தைக் கண்டித்தும், ஈழத்தை ஆதரித்தும் வந்தது. இந்திய அமைதிப் படை வீரர்கள் சென்னை திரும்பிய போது அவர்களை கௌரவிக்க மறுத்த கலைஞரின் முடிவால் இலங்கையில் நடப்பது பற்றிய கண்ணோட்டங்களில் ஒரு பெரிய திருப்பமே ஏற்பட்டது. அந்த அளவு பொறுப்புணர்வுடனும், ராஜதந்திரத்துடனும் கலைஞர் தலைமையில் தமிழகம் ஈழப் பிரச்சனையைக் கையாண்டு வந்தது.

இப்போது என்ன காரணத்தினாலோ அந்த போர்க்குணத்தைக் காண இயலவில்லை. Mute spectator எனப்படும் ஊமைப் பார்வையாளராக மட்டுமே தமிழக அரசு செயல் படுகிறது. மாநில, மத்திய ஆட்சி, பதவி அளிக்கும் சுகங்கள், வசதிகள் என்றுதான் என்னுடைய 'பொதுப் புத்தி' சொல்கிறது.

தமிழக மக்களுக்கும் புலிகளின் பால் இருந்த உணர்வு பூர்வ உறவு, ராஜீவ் கொலையினால் பெருமளவு குறைந்தது. இது தற்போதைய தமிழ் தலைவர்களுக்கு மிக ஏதுவாகப் போய், வெறும் தேர்தல் சமய ஊறுகாய் விடயமாகிப் போனது ஒரு துன்பியல் நிகழ்வு.

ஆக, இன்றைய தமிழக ஆளுமைகள் தங்கள் சுகத்திற்காக கொள்கைகளைத் தளர்த்தியதாலும், இந்தத் தருணத்தை இந்திய மத்திய அரசு சரியாக தனது strategic காரணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாலும், ஈழ மக்களுக்கு ஒரு மாபெரும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. சிறிலங்க அரசு இந்தத் தருணங்களின் மதிப்பை மிகத் துல்லியமாக எடை போட்டுப் பயன் அடைத்திருப்பது கண்கூடு.


ஒரு இந்தியனாக மிகவும் தார்மீக உயர்வில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, எனது புரிதலின் அடிப்படையில் இந்திய, தமிழக அரசுகளின் துரோகம் தரும் வலி அதிகம். மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. ஒரு விசாரணையும் தேவை இல்லை என்று அவசரமாக அறிக்கை தந்து more loyal than the king என்று இந்தியா நிருபித்துக் கொள்ள முயல்வது பார்த்து வரும் வலி.எதிரிகளை மன்னிக்கலாம். மன்னிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளலாம். துரோகிகளை....ம்ம், அவர்களையும் புரிந்து கொள்ளலாம் - காலம் கடந்தாவது.

என்னைப் பொறுத்த வரையில் பெருங்குற்றவாளிகள் பாக் ஜலசந்திக்கு மேற்கிலும், வடக்கிலும் தான் இருக்கிறார்கள். பதிவின் துவக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தாலே, ஈழத்தை உண்ண வரும் தமிழகம் போலத் தான் தோன்றுகிறது. உங்களுக்கு?

பிரபாகரனைப் பொறுத்த வரையில், ஒரு வீரனாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பெரிய போராட்டம் செய்தவராகவே தென்படுகிறார். All is fair in Love & War எனும் அடிப்படையில், தவறு என்றாலும், புலிகளின் பயங்கரவாதத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று பி.பி.சி. தளத்தில், இலங்கையில் இருந்து வெளிவரும் Island செய்தித் தாள், பிரபாகரன் பெரிய வீரன் என்றால், ஏன் ஓட ஒளிய வேண்டும்? சயனைட் குப்பி என்ன ஆயிற்று? என்று எள்ளலாகக் கேட்டதைப் படிக்க நேர்ந்தது.

அந்த அறிவிலிகளுக்குச் சொல்லிக் கொள்வது - அவர் கோழை என்றால், எப்போதோ இலங்கையை விட்டு வெளியில் இருந்து போராட்டம் செய்திருப்பார். இத்தகைய செயல், எல்லாராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கும். ஏனென்றால், ஒரு போராட்டம் தொடர, தலைமை மறைவிடத்திலிருந்து செயல் படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும், குடும்பத்துடன், வாழ்நாள் முழுதும் வனங்களில் செலவழித்து, குண்டடி பட்டு (அதுவும் தலையில் தான், புற முதுகில் அல்ல) இறந்தாக எண்ணப்படும் ஒரு வீரனை, இவ்வளவு கேவலப் படுத்துவதில் இருந்து அவர்களின் மன வக்கிரங்கள் புரிகிறது. ஈழ மக்களின் போராட்டத்துக்கான அடிப்படை சிங்கள பேரின வாதத்தின் முகமும் தெரிகிறது.

இதை நான் எழுதியது, என்னைப் போன்ற மிகக் குறைந்த அளவில் இந்த விடயம் பற்றி புரிதல் உள்ள இந்தியர்களுக்காக. இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமலே, புலிகளைப் புரிந்து கொள்ளவும், ஈழ மக்களுக்காக கவலைப்படவும் முடியும் என்று புரிய வைப்பதற்காக மட்டுமே.

இதில் தகவல், கருத்துப் பிழைகள் இருந்தால் - ஒரு குழந்தையின் முதல் தவறை மன்னிப்பது போல விட்டு விடுங்கள்.