Friday, March 27, 2009

பெண்கள் - கண்ணாடிப் பதுமைகள் –

(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27th March 09)

பெண்கள் - கண்ணாடிப் பதுமைகள்

மும்பை எப்போதுமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் மெகா நகரம். Maximum City. நிறைய வியக்கவைக்கும் விஷயங்களும், சில நல்ல விஷயங்களும், பல கெடுதல்களும் ஒரு சேர நடந்தேறும் மிகப் பெரிய ஆடு களம் இந்த நகரம். மிகச் சமீபத்தில் வந்த செய்திகளில் நகரம் ஆடிப் போயிருப்பது உண்மை.

செய்தி ஒன்று : சொந்த மகளை சூறையாடிய தகப்பன்; துணை நின்ற 'துணை'. தந்திரத்தில் வீழ்த்திய மந்திரவாதி என்ற கொடுங்கனவு போலத் தோன்றும் நிஜம்.

செய்தி இரண்டு: ஒரு மாணவி; Very chirpy - Bubbly etc. - படிப்பில் கொஞ்சம் சுமார் ரகம் போல. தேர்வு துவங்கும் முன் காப்பி அடிக்கும் உபகரணங்கள் இருந்ததால் பிடிபட்டு, அவமானத்தில், மாடியில் இருந்து குதித்து, கீழே விழுந்து கூழாகி, தன்னை மாய்த்துக் கொண்டவள்.

செய்தி மூன்று: ஒரு அழகான விமானப் பணிப்பெண். இப்போதெல்லாம் சகஜமாகிவிட்ட 'விமானியுடன் காதல்-உறவு' இன்னபிற. வீட்டில் தெரிந்து, திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கும் வேளை. வேலை பளு, அதன் தொடர் பதட்டம் இவைகளால் முன் அனுமதியின்றி விடுப்பு. அதனால் தொடர்ந்த பதட்டம்; குடிக்கிறாள் - தோழனுடன். அவன் நண்பர்கள் முன்னிலையில். புகைப் பிடிக்க ஆரம்பிக்கிறாள் - தோழன் கண்டிக்கிறான். திட்டுகிறான். - நேராக மாடியில் இருந்து வெளியே குதித்து .....

செய்தி நான்கு : ஒரு அம்மா; ஒன்பது வயது குழந்தையின் அம்மா - அந்தக் குழந்தை சரியாகப் படிப்பதில்லை. அதனால் என்ன செய்கிறாள்? நம்புங்கள் - தற்கொலை செய்து கொள்ளுகிறாள்.

கடந்த பதினைந்து நாட்களுக்குள் நடந்தேறிய கோரங்கள் இவை. மத்திய வர்க்க வரவேற்பறைகளில் சூடாக, சோகமாக, பதட்டமாக, இன்னபிறவாக இந்த நிகழ்வுகள் விவாதிக்கப் படுகின்றன. இவைகள் ஏற்படுத்தும் பரபரப்புக்கு முன் தேர்தல் தமாஷ்கள், IPL சிக்கல், நியூசீலாந்தில் அபூர்வ வெற்றி போன்ற விஷயங்களும் ஐந்திலிருந்து இருபத்தி நான்காம் பக்கம் வரை பின்தள்ளப் படுகின்றன.

'இன்று என்ன ஆயிற்று?', 'ஜோசிய/மந்திரவாதி வசியம் செய்தது இன்னும் எத்துணை பேரை?', 'அந்தப் பெண்கள் ஏன் இவ்வளவு நாட்கள் மௌனம் காத்தனர்? இப்போது ஏன் வெளியே வந்து புகார் சொல்கின்றனர்?' போல பல கேள்விகளைக் கேட்டு, பதிலாக தமது ஊகங்களை அள்ளி வீசும் ஊடகங்கள்.

என்ன குமட்டுகிறதா? தினமும் காப்பி குடிக்கையில், முதல் பக்கத்தில் துல்லியமான விவரங்களுடன் நம்மை ஈர்க்கும் தலைப்புகளுடன் அழைக்கும் தினசரிகளைப் படிக்க நேரும் எனக்கு அப்படித் தான் இருக்கு.

என்னதான் நடக்கிறது. ஏன் நாகரீக, நகரப் பெண்கள் இப்படி ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடிப் பதுமைகளாக இருக்கிறார்கள்? Jeans-TShirt-Hi Heels-Goggles-Lipstic என்ற மாயக்கோட்டைக்குள் முற்றிலும் உருகிவிடத் தயாராக உள்ள மெழுகு பொம்மைகள் இவர்கள் என்பது பெரிய ஆச்சரியம் மற்றும் ஏமாற்றம். இது ஒரு சுலபமான பொதுப் படுத்தல் என்றாலும், இவை சொல்லும் செய்திகளை மதிக்காமல் விடக்கூடாது.

சென்னையிலும் அண்மையில், பிறந்த தன் குழந்தையைக் கிணற்றில் போட்ட அரக்கன் பற்றிப் படித்தேன். அப்போதுதானே மனைவி வேலைக்குப் போய், பணம் ஈட்டி, பைக்கிலிருந்து கார் வாங்கி, இரண்டு படுக்கை அறை (கழிவறை ஒட்டிக்கொண்டது) வீட்டில் புகுந்து, வாரக் கடைசியில் மால்களில் சோர்ந்து..அடப் போங்கையா.

நமது கல்வி முறையில் ஏதோ பெருங்கோளாறு நடக்கிறது. மனப்பாடம் செய்து, வாந்தி எடுக்கும், பணம் மட்டும் கண்ணுக்குத் தெரியும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகிவிட்டனவா நமது கல்வி நிறுவனங்கள்? வாழ்வின் மீதான தன்னம்பிக்கையும், அற உணர்வும் சிறிதளவும் போதிக்கப் படுவதில்லை என்று தோன்றுகிறது. இதுக்கு மேல் உங்கள் மூடை கெடுக்க விரும்பவில்லை. மேலும் ‘கருத்து கந்தசாமி’ பட்டம் கிடைத்துவிடும் அபாயமும் உண்டு. அதனால்... நூற்றுக்கு நாற்பது மார்க் வாங்கி பயத்துடன் progress report நீட்டும் உங்க மகளுக்கு ஒரு ரோலர் ஸ்கேட் வாங்கிக் கொடுத்து நீங்களும் கூட ஓடுங்கள். எல்லாமே ஜாலியா தெரியும்.

****************************************************************************************************



சமீபத்தில் படித்ததில் சில பிடித்தங்கள்:

பிடித்த ஜோக் : பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்தியத் தேர்தலை இங்கிலாந்தில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப் படும் என்று மத்திய அரசு குறிப்பு சொல்கிறது. (சஞ்சய், இது சும்மா ஜோக் தான்)

பிடித்த பாடல் : இன்னமும் 'மசக்கலி' தான். (தமிழ் கவிஞரின் ஹிந்தி வெறி ஒலிக!)

பிடித்த கவிதை: சரவணகுமாரின் இந்த சமீபத்திய கவிதை மிகப்பிடித்தது.

'பூனையாகுதல்'

அவன் போய்விட்டபின்பு
சுற்றும் முற்றும்
யாரும் இல்லையென்பதையும் உறுதிபடுத்திவிட்டு
அவன் எழுதிய கவிதைக்குள்
எட்டிப்பார்த்தேன்..
அது ஒரு காதல் கவிதை..
வழக்கமான
சில மரங்களும்
அவற்றின் பூக்களும்
பறவைகளும்
பச்சைப் புல்வெளிகளும்
தூரத்தில் ஒரு பெரிய கடலும் கொண்டிருந்த
அக்கவிதையில்
கூடவே சில "அன்பே", "அழகே"
வார்த்தைகளுக்கு மத்தியில்
அவன் காதலி தனியாய் அமர்ந்திருந்தாள்..
நான்
அவன் முகம் போன்றதொரு
முகமூடியோடு
அக்கவிதைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்
அவளை நோக்கி..

காதல் தோல்வி கவிதைகளை எழுதுவதால் நாங்கள் (நானும் கார்க்கியும்) மிகவும் கலாய்த்த சரவணன், தனது ஆதர்ச அய்யனார் திசையில் பயணிப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. Sara, Way to go. Dont ever look back.

கவிஞர்கள்/இலக்கியவாதிகள் பற்றி இன்னொரு இரகசியம். காதக் கொடுங்க: 'பூனைகள்' பற்றி எழுதாவிட்டால், ஒரு ஈ, காக்கா கூட உங்களை கவிஞர் என்று ஒப்புக் கொள்ளாது. சந்தேகம் இருந்தா நாகார்ஜுன், மோகன்தாஸ், அய்ஸ், ஜ்யோவ், நவீன விருட்சம் கவிதைகள் என்று சகல வலைத்தளங்களிலும் பாருங்க. பூனைகள் பற்றி இருக்க, இருந்தே தீர, வேண்டும். இப்ப சரவணனும் இந்த பட்டியலில் அடக்கம் :)

'அப்போ நீ' என்று சிறுபுள்ளத்தனமாக் கேக்கக் கூடாது. நான் அந்த பூனை பற்றிய 'பிம்பக் கட்டுடைப்பில்' ஈடுபட்டு இருக்கிறேன். ஆதலால் பூனைகள் பாக்கியம் செய்யவில்லை என் கவிதையுள் நுழைய.

Wednesday, March 25, 2009

ரொட்டியும் மீன்களும்



கரையிலிருந்து வெகுதூரம்
கடலுக்குள் சென்றேன்
படகிலிருந்து குதித்து
நீருக்குள் நுழைந்தேன்
கீழே, கீழே இன்னும் கீழே
போய்க்கொண்டே இருந்தேன்
முடிவில் காலில் தட்டுப்பட்டது
தரை என்றுதான் சொல்லவேண்டும்
நிறைய மீன்கள்.
வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள்
அவர்கள் என்னை
பார்க்கவில்லை. அல்லது
பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்
முதல் துண்டை மேலே வீசினேன்
ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன
அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம்
இப்போது என்னை சுற்றி
நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்

(நவீன விருட்சம் இதழில் வெளியானது)

Friday, March 20, 2009

(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)



அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும்

சமீபத்தில் ஜெமோ திருவட்டாறு அருகில் உள்ள திற்பரப்பு அருவி பற்றி எழுதியிருந்தார். உடனே நான் குளித்த அருவிகள் பற்றி சிந்தனை விரிந்தது. கல்லூரி நாட்களில் திருப்பதி என்றால் போக வர காசு கிடைக்கும் என்பதால் திருப்பதியும் சென்றுவிட்டு, திரும்பி வருகையில் கோனே நீர்வீழ்ச்சியில் கும்மாளமிட்டது மறக்கவே முடியாது. பிறகு வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அந்தப் பழக்கம் தொடர்ந்தது பல வருடங்கள். நாங்கள் எப்போதுமே ஆறு பேர் நண்பர்கள். அவர்களில் ஒருவனின் தங்கையிடம் மனம் நாட்டம் கொள்ளத் துவங்கி, ஒரு தருணத்தில் என் காதலியின் அண்ணனாக மட்டும் தோன்றத் துவங்கிய காலகட்டம். இன்னொரு தொடை நடுங்கி நண்பன், 'எப்படிடா இவன் கிட்ட சொல்லப் போற?' என்று நடுங்கியபோது, அருவிக் குளியலுக்கு நடுவில் 'மச்சி, உன் தங்கையை நான் கல்யாணம் செய்துகட்டுமா?' என்று சிரித்துக் கொண்டே கத்தினேன். அவனும் உற்சாகத்தில் (அருவிச் சத்தத்தில் வேறு ஒன்றுமே கேட்காது) தலையை ஆட்டினான். போன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இப்போ அவன் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறான். அவளும். நான் மட்டும் ஞே.

அடுத்த அருவி கும்பக்கரை அருவி. மிக அழகான இடம். கொடைக்கானல் மலை அடிவாரம். வத்தல குண்டு - பெரிய குளம் ரஸ்தாவில் பெரியகுளத்துக்கு மிக அருகில் (தகவல் சரி தானா முரளி/நர்சிம்?) மெயின் ரோடிலிருந்து ஒரு இரண்டு கி.மீ. சைக்கிளில் பயணித்தால் ...... கும்பக்கரை அருவி. உயரம் அதிகமில்லை. ஆனால், நல்ல அகலம். நிறைய தண்ணீர். உட்கார்ந்து ஆனந்தமாகக் குளிக்கலாம்.

கொடைக்கானலில் இருந்து இறங்கும் வழியில் 'சில்வர்' ஏதோவில் அவசரக் குளியல் செய்தது இலேசாக ஞாபகம் இருக்கு. இது தவிர்த்து, மண்டியா-மைசூர் சாலையருகில் 'பெல்மூரி' நீர்வீழ்ச்சி பிரசித்தம். காவிரி நீர். ஆனால் இடுப்பு அளவு உயரம் கூட இல்லாத இந்த செல்ல நீர்வீழ்ச்சியை, நாம் நிறைய திரைப் படங்களில் நாயகன்/நாயகி இருபது துணை நடிகைகளுடன் ஆடிப் பாடும் காட்சிகளில் நிச்சயம் பார்த்திருப்போம்.

சென்ற நவம்பர் மாதம் மங்களூர் சென்ற போது அருகில் குதரேமுக்-சிங்கேரி மலைப் பகுதியில் ஒரு திருப்பத்தில் ஒரு திடீர் அருவி. உடனே காரை நிறுத்தி குளித்தது மறக்க முடியாத அனுபவம்.

குளிக்காமல் பார்த்து, வியந்து, பயந்து வந்துவிட்ட அருவி 'சிவசமுத்திரம்' என்று நம்மவர்களாலும், 'ஷிம்ஷா' என்று செல்லமாக கன்னடர்களாலும் அழைக்கப் படும் பேரருவி. அனைவரும் ஒரு முறை கட்டாயம் பார்த்தே தீர வேண்டிய நீர் வீழ்ச்சி. காவிரி ஆற்றில் அமைந்தது.

எங்கள் அண்டை வீட்டுப் பெண், பொறியியல் கல்லூரி பிக்னிக் சென்ற போது, இந்த பிரம்மாண்ட நீர் வீழ்ச்சியில் அநியாயமாக கால் சறுக்கி மாய்ந்து போனது, இன்னமும் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும், ஒரு மௌன வலியாக நிரந்தரம் கொண்டிருக்கிறது. சம்பிரதாயதிற்க்காகச் சொல்லவில்லை. A very promising life taken away so early, so cruelly.

கவிஞர் விக்ரமாதித்யன் எழுதினர்: "அருவியை நீர் வீழ்ச்சி என்றால் வலிக்கிறது". உண்மை. குளிக்க முடிந்தால் அருவி என்றும், பயமாக ஒதுங்கி பார்க்க மட்டும் முடிந்தால் நீர்வீழ்ச்சி என்றும் கொள்ளலாமா? ஆனால், ஷிம்ஷா மட்டும் எனக்கு இன்னமும் நீர் வீழ்ச்சிதான்.

உங்களை கனமான மனதுடன் அனுப்பும் எண்ணம் இல்லை. அதனால், கடைசியாக அருவிகள் பற்றி மேலும் இரண்டு விஷயங்கள்.

அதற்கு முன், கவிஞரா இருந்துகொண்டு கவிதை போடா விட்டால் எப்படி? இதோ அருவி பற்றி எனக்குப் பிடித்தமான வா.மணிகண்டனின் கவிதை.

ஏணிக‌ளை வ‌ரிசையாக‌க் க‌ட்டி
அருவி மீது ஏற‌ முய‌ன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமான‌வ‌ன் சொன்னான்.
உச்சியை அடையும் க‌ண‌ம்
விழ‌த்துவ‌ங்கினேன்.
எப்ப‌டி
எலும்பு மிஞ்சிய‌து என்றும்
இலை
சுழ‌ன்று
விழும்
தேவ‌த‌ச்ச‌ன் க‌விதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.
இட்லி வாங்கி வ‌ர‌ச் செல்வ‌தாக‌
தாயுமான‌வ‌ன்
கிள‌ம்பிச் சென்றான்.

ம்ம், இப்ப இரண்டு விஷயங்கள்:

நயாகரா நீர் வீழ்ச்சி - அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள பிரம்மாண்டம். கனடா பக்கத்திலிருந்து இன்னும் அழகாகத் தெரியும். உனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? என்ன பாஸ், கூகிள், விக்கி, நாட் ஜியோ எவ்வளவு இருக்கு. எங்க வங்கியின் தலைமை அலுவலகம் இருப்பது டொரோண்டோ. பார்க்கலாம்..நம்ம ராசி எப்படி என்று.

நயகரா என்றதும் ஒரு துணுக்கு ஞாபகம் வந்தது:
ஒரு கைடு நிறைய சுற்றுலா பயணிகளை நயகரா நீர்வீழ்ச்சி அருகில் கொண்டு சென்று அதைப் பற்றி பேசினார். இடையில் "பெண்களே, தாங்கள் சற்று பேசுவதை நிறுத்தினால், இங்கு ஒரு நீர்வீழ்ச்சி விழும் சப்தம் கேட்கக்கூடும்' என்றார்.

கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும். நான் போக மாட்டேன் என்றா சொல்கிறேன். போயிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று தானே சொல்கிறேன். ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம். குருப்புல யாரா? வாசகர் சார் வந்தா தான் நான் வருவேன் :)

Wednesday, March 18, 2009

நிழலதிகாரம்



மலைச்சரிவின் இருமருங்கும்
உருளத் தயாராகி
நின்றுவிட்ட பாறைகள் தம்
நிழல்களைத் தொலைத்திருந்தன;
அருகாமை மரங்களிலிருந்தும்
நழுவியிருந்த நிழல்கள்;
மெல்லிய சலனத்துடன்
உரையாடிய மரங்களும்
காற்று பிடுங்கப்பட்டு
பாறைகளாகக்கூடும்;
மெல்லப் பறந்த புறாவை
துரிதப் பயணம் செய்த நிழலுடன்
துளைத்து விட்ட தோட்டா ;
மேற்பர்வையிட்ட
பலரின் இடையில்
சொருகப்பட்ட உறைவாள்கள் ;
ஒவ்வொரு உறைவாளுக்கும்
பலப்பல நிழல்கள்.


அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் பிரசுரம் ஆகியது. அவர்களுக்கு என் நன்றி.


இந்தக் கவிதையைக் ஆகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள வளர்மதி அவர்களின் இந்தப் பதிவு உதவக்கூடும். சுற்றும் தலை, மேலும் கிறுகிறுத்தால் பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது :) கவிதை அந்தத் தொடர் பதிவுகளின் சாராம்சம் அல்ல. அவற்றைப் படித்தபின் தோன்றிய உணர்வில் எழுதியது - இந்தக் கவிதை நிமித்தம் வளரை யாரும் திட்ட வேண்டாம் :)


Thursday, March 12, 2009

இடம் பிடித்தல்



விலகியிருந்த விருட்சங்களாலும்
தீண்டாத கொம்புகளாலும்
தரையிலேயே படர்ந்திருந்தன
பலகாலமாய்க் கொடிகள்;
செயற்கைப் பற்றுதலில்
கூரை ஏறிய கொடிகளில்
பளபளக்கத் துவங்கின
பரங்கியும் பூசணியும்;
மனங்குமைந்த மரஞ்செடிகள்
முறையிட்டன மேலிடத்தில்;
பின்வந்த வைபவத்தில்
மரத்தில் காய்த்த மாவும்
செடியில் பூத்த ரோஜாவும்
இலை தலை என்று இடம் பிடிக்க
கோலத்தைக் காவல்செய்த
பரங்கிப்பூ கண்டது
சாணியில் இருத்தலின் சுகம்;
காய்த்திருந்த பூசணிகட்கும்
வாய்த்ததென்னவோ வாசல்தான் -
கழிந்த திருஷ்டிக்கு
சிதறடிக்கப்பட்டு வீழ்ந்தவொன்று;
பின்வரப்போகும் திருஷ்டிக்கு
விகாரமாய்த் தொங்கிய மற்றொன்று.
மனம் நொந்த கொடிகளிடம்
அண்டை வீட்டு பழக்கொடி
திராட்சைகள் உயர்ந்தால்
நரிகளுக்கு புளிக்குமென்றது

('புதுவிசை' இதழில் பிரசுரமானது)

Thursday, March 5, 2009

விடாது ஹைகூக்கள்

*************************************************
பிரியமான அப்பாவுடந்தான்
தந்தையர் தினம் செலவழிந்தது
அந்த முதியோர் இல்லத்தில்
*************************************************
பக்தர்கள் நிரம்பிய கோயிலில்
மணியும் மத்தளமும்
இயங்கியது மின்சாரத்தில்
*************************************************
நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்
*************************************************