Friday, March 27, 2009

பெண்கள் - கண்ணாடிப் பதுமைகள் –

(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27th March 09)

பெண்கள் - கண்ணாடிப் பதுமைகள்

மும்பை எப்போதுமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் மெகா நகரம். Maximum City. நிறைய வியக்கவைக்கும் விஷயங்களும், சில நல்ல விஷயங்களும், பல கெடுதல்களும் ஒரு சேர நடந்தேறும் மிகப் பெரிய ஆடு களம் இந்த நகரம். மிகச் சமீபத்தில் வந்த செய்திகளில் நகரம் ஆடிப் போயிருப்பது உண்மை.

செய்தி ஒன்று : சொந்த மகளை சூறையாடிய தகப்பன்; துணை நின்ற 'துணை'. தந்திரத்தில் வீழ்த்திய மந்திரவாதி என்ற கொடுங்கனவு போலத் தோன்றும் நிஜம்.

செய்தி இரண்டு: ஒரு மாணவி; Very chirpy - Bubbly etc. - படிப்பில் கொஞ்சம் சுமார் ரகம் போல. தேர்வு துவங்கும் முன் காப்பி அடிக்கும் உபகரணங்கள் இருந்ததால் பிடிபட்டு, அவமானத்தில், மாடியில் இருந்து குதித்து, கீழே விழுந்து கூழாகி, தன்னை மாய்த்துக் கொண்டவள்.

செய்தி மூன்று: ஒரு அழகான விமானப் பணிப்பெண். இப்போதெல்லாம் சகஜமாகிவிட்ட 'விமானியுடன் காதல்-உறவு' இன்னபிற. வீட்டில் தெரிந்து, திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கும் வேளை. வேலை பளு, அதன் தொடர் பதட்டம் இவைகளால் முன் அனுமதியின்றி விடுப்பு. அதனால் தொடர்ந்த பதட்டம்; குடிக்கிறாள் - தோழனுடன். அவன் நண்பர்கள் முன்னிலையில். புகைப் பிடிக்க ஆரம்பிக்கிறாள் - தோழன் கண்டிக்கிறான். திட்டுகிறான். - நேராக மாடியில் இருந்து வெளியே குதித்து .....

செய்தி நான்கு : ஒரு அம்மா; ஒன்பது வயது குழந்தையின் அம்மா - அந்தக் குழந்தை சரியாகப் படிப்பதில்லை. அதனால் என்ன செய்கிறாள்? நம்புங்கள் - தற்கொலை செய்து கொள்ளுகிறாள்.

கடந்த பதினைந்து நாட்களுக்குள் நடந்தேறிய கோரங்கள் இவை. மத்திய வர்க்க வரவேற்பறைகளில் சூடாக, சோகமாக, பதட்டமாக, இன்னபிறவாக இந்த நிகழ்வுகள் விவாதிக்கப் படுகின்றன. இவைகள் ஏற்படுத்தும் பரபரப்புக்கு முன் தேர்தல் தமாஷ்கள், IPL சிக்கல், நியூசீலாந்தில் அபூர்வ வெற்றி போன்ற விஷயங்களும் ஐந்திலிருந்து இருபத்தி நான்காம் பக்கம் வரை பின்தள்ளப் படுகின்றன.

'இன்று என்ன ஆயிற்று?', 'ஜோசிய/மந்திரவாதி வசியம் செய்தது இன்னும் எத்துணை பேரை?', 'அந்தப் பெண்கள் ஏன் இவ்வளவு நாட்கள் மௌனம் காத்தனர்? இப்போது ஏன் வெளியே வந்து புகார் சொல்கின்றனர்?' போல பல கேள்விகளைக் கேட்டு, பதிலாக தமது ஊகங்களை அள்ளி வீசும் ஊடகங்கள்.

என்ன குமட்டுகிறதா? தினமும் காப்பி குடிக்கையில், முதல் பக்கத்தில் துல்லியமான விவரங்களுடன் நம்மை ஈர்க்கும் தலைப்புகளுடன் அழைக்கும் தினசரிகளைப் படிக்க நேரும் எனக்கு அப்படித் தான் இருக்கு.

என்னதான் நடக்கிறது. ஏன் நாகரீக, நகரப் பெண்கள் இப்படி ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடிப் பதுமைகளாக இருக்கிறார்கள்? Jeans-TShirt-Hi Heels-Goggles-Lipstic என்ற மாயக்கோட்டைக்குள் முற்றிலும் உருகிவிடத் தயாராக உள்ள மெழுகு பொம்மைகள் இவர்கள் என்பது பெரிய ஆச்சரியம் மற்றும் ஏமாற்றம். இது ஒரு சுலபமான பொதுப் படுத்தல் என்றாலும், இவை சொல்லும் செய்திகளை மதிக்காமல் விடக்கூடாது.

சென்னையிலும் அண்மையில், பிறந்த தன் குழந்தையைக் கிணற்றில் போட்ட அரக்கன் பற்றிப் படித்தேன். அப்போதுதானே மனைவி வேலைக்குப் போய், பணம் ஈட்டி, பைக்கிலிருந்து கார் வாங்கி, இரண்டு படுக்கை அறை (கழிவறை ஒட்டிக்கொண்டது) வீட்டில் புகுந்து, வாரக் கடைசியில் மால்களில் சோர்ந்து..அடப் போங்கையா.

நமது கல்வி முறையில் ஏதோ பெருங்கோளாறு நடக்கிறது. மனப்பாடம் செய்து, வாந்தி எடுக்கும், பணம் மட்டும் கண்ணுக்குத் தெரியும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகிவிட்டனவா நமது கல்வி நிறுவனங்கள்? வாழ்வின் மீதான தன்னம்பிக்கையும், அற உணர்வும் சிறிதளவும் போதிக்கப் படுவதில்லை என்று தோன்றுகிறது. இதுக்கு மேல் உங்கள் மூடை கெடுக்க விரும்பவில்லை. மேலும் ‘கருத்து கந்தசாமி’ பட்டம் கிடைத்துவிடும் அபாயமும் உண்டு. அதனால்... நூற்றுக்கு நாற்பது மார்க் வாங்கி பயத்துடன் progress report நீட்டும் உங்க மகளுக்கு ஒரு ரோலர் ஸ்கேட் வாங்கிக் கொடுத்து நீங்களும் கூட ஓடுங்கள். எல்லாமே ஜாலியா தெரியும்.

****************************************************************************************************



சமீபத்தில் படித்ததில் சில பிடித்தங்கள்:

பிடித்த ஜோக் : பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்தியத் தேர்தலை இங்கிலாந்தில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப் படும் என்று மத்திய அரசு குறிப்பு சொல்கிறது. (சஞ்சய், இது சும்மா ஜோக் தான்)

பிடித்த பாடல் : இன்னமும் 'மசக்கலி' தான். (தமிழ் கவிஞரின் ஹிந்தி வெறி ஒலிக!)

பிடித்த கவிதை: சரவணகுமாரின் இந்த சமீபத்திய கவிதை மிகப்பிடித்தது.

'பூனையாகுதல்'

அவன் போய்விட்டபின்பு
சுற்றும் முற்றும்
யாரும் இல்லையென்பதையும் உறுதிபடுத்திவிட்டு
அவன் எழுதிய கவிதைக்குள்
எட்டிப்பார்த்தேன்..
அது ஒரு காதல் கவிதை..
வழக்கமான
சில மரங்களும்
அவற்றின் பூக்களும்
பறவைகளும்
பச்சைப் புல்வெளிகளும்
தூரத்தில் ஒரு பெரிய கடலும் கொண்டிருந்த
அக்கவிதையில்
கூடவே சில "அன்பே", "அழகே"
வார்த்தைகளுக்கு மத்தியில்
அவன் காதலி தனியாய் அமர்ந்திருந்தாள்..
நான்
அவன் முகம் போன்றதொரு
முகமூடியோடு
அக்கவிதைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்
அவளை நோக்கி..

காதல் தோல்வி கவிதைகளை எழுதுவதால் நாங்கள் (நானும் கார்க்கியும்) மிகவும் கலாய்த்த சரவணன், தனது ஆதர்ச அய்யனார் திசையில் பயணிப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. Sara, Way to go. Dont ever look back.

கவிஞர்கள்/இலக்கியவாதிகள் பற்றி இன்னொரு இரகசியம். காதக் கொடுங்க: 'பூனைகள்' பற்றி எழுதாவிட்டால், ஒரு ஈ, காக்கா கூட உங்களை கவிஞர் என்று ஒப்புக் கொள்ளாது. சந்தேகம் இருந்தா நாகார்ஜுன், மோகன்தாஸ், அய்ஸ், ஜ்யோவ், நவீன விருட்சம் கவிதைகள் என்று சகல வலைத்தளங்களிலும் பாருங்க. பூனைகள் பற்றி இருக்க, இருந்தே தீர, வேண்டும். இப்ப சரவணனும் இந்த பட்டியலில் அடக்கம் :)

'அப்போ நீ' என்று சிறுபுள்ளத்தனமாக் கேக்கக் கூடாது. நான் அந்த பூனை பற்றிய 'பிம்பக் கட்டுடைப்பில்' ஈடுபட்டு இருக்கிறேன். ஆதலால் பூனைகள் பாக்கியம் செய்யவில்லை என் கவிதையுள் நுழைய.

52 comments:

முரளிகண்ணன் said...

நிலா முற்றம் என்னும் தலைப்பில் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். இந்த தலைப்பும் மிக சிறப்பு.


முதல் பகுதி - ஆழ்ந்து யோசிக்க வெண்டிய ஒன்று

கே.என்.சிவராமன் said...

அனு,

பெண்கள் மட்டும்தான் இதற்கு காரணமா?

மீடியாக்களுக்கு தேவை, கவர்ச்சி, கிளுகிளுப்பு. அதனால் பெண்கள் தொடர்புடைய விஷயங்கள் மட்டுமே ஹைலைட்டாகின்றன. இதில் என்ன கொடுமை என்றால், ஆண் தொடர்பான விஷயங்களிலும், ஏதோவொரு பெண்ணை, மீடியாக்கள் இழுத்துவிடுவதுதான்.

//ஏன் நாகரீக, நகரப் பெண்கள் இப்படி ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடிப் பதுமைகளாக இருக்கிறார்கள்? Jeans-TShirt-Hi Heels-Goggles-Lipstic என்ற மாயக்கோட்டைக்குள் முற்றிலும் உருகிவிடத் தயாராக உள்ள மெழுகு பொம்மைகள் இவர்கள் என்பது பெரிய ஆச்சரியம் மற்றும் ஏமாற்றம். //

அப்படியானால், ஆண்கள் மாயக்கோட்டைகளுக்குள் உருகுவதில்லையா?


தோழமையுடன்
பைத்தியக்காரன்

ராமலக்ஷ்மி said...

(எதைப்) பற்றியும்... பற்றாமலும்...அருமை.

செய்தி 2 & 3..தொடரும் தற்கொலைகள்..:(! இன்றைய இளமை விகடனில் இது பற்றியே என் கதை ‘கரையைத் தேடி’, வழக்கம் போல “கருத்து _____” பட்டத்துக்கெல்லாம் கவலைப் படாமல்:)!

'பூனையாகுதல்' அருமை. சரவணக்குமாருக்கு பாராட்டுக்கள்.

கார்க்கிபவா said...

தலைப்பு

தலைப் பூ..

எம்.எஸ்.கே வை மாற்றியதில் என் பங்கும் உண்டா தல? சூப்பர்..

நல்லவேளை அடைப்புக்குறிக்குள் ஜோக்னு போடிங்க.. இல்லன்னா கை ய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டாரு நம்ம சகா

வால்பையன் said...

சமூகம் என்னும்
மாயக்கண்ணாடி
விரிசலுடன்.
அதுனுள் நாமும்!

சென்ஷி said...

//நமது கல்வி முறையில் ஏதோ பெருங்கோளாறு நடக்கிறது. மனப்பாடம் செய்து, வாந்தி எடுக்கும், பணம் மட்டும் கண்ணுக்குத் தெரியும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகிவிட்டனவா நமது கல்வி நிறுவனங்கள்?//

மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க. மேல தொடர்ந்திருக்கலாம்.

//'அப்போ நீ' என்று சிறுபுள்ளத்தனமாக் கேக்கக் கூடாது. நான் அந்த பூனை பற்றிய 'பிம்பக் கட்டுடைப்பில்' ஈடுபட்டு இருக்கிறேன். ஆதலால் பூனைகள் பாக்கியம் செய்யவில்லை என் கவிதையுள் நுழைய.//

:-))

சென்ஷி said...

சரவணகுமாரின் கவிதை அருமை..

இருவாரங்களுக்கு முன்பு அய்யனாரை சந்திக்க கோபி மற்றும் ஆதவனுடன் சென்றிருந்தபோதும் அய்யனாரிடம் சரவணனின் ரசிகத்தன்மையை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். :-)

எம்.எம்.அப்துல்லா said...

//தனது ஆதர்ச அய்யனார் திசையில் பயணிப்பதில் //

என் திசை நீங்கதான்!தெரியுமா??

சென்ஷி said...

//எம்.எம்.அப்துல்லா said...

//தனது ஆதர்ச அய்யனார் திசையில் பயணிப்பதில் //

என் திசை நீங்கதான்!தெரியுமா??//

அப்ப நீங்க யாரோட திசைகாட்டி அண்ணே.. :)

மணிகண்டன் said...

அனுஜன்யா, ரொம்ப ரசிச்சு படிச்சேன். பேப்பர் எடுத்தா இந்த மாதிரி நியூஸ் தான் வருது.

கவிதையும் சூப்பர். ஏற்கனவே அவர் பதிவுல படிச்சேன்.

நானும் கவிதை எழுதி இருக்கேன். படிச்சுட்டு பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

Anonymous said...

அடிப்படையில் பெண்கள் சார்ந்து இருப்பவர்கள் தான், வெறும் பொருளாதார சுதந்திரம் மட்டும் ஒரு பெண்ணை முழுமையாகாது. மனிதர்கள் யாராவது யார்மேலாவது அன்பையோ பாசமோ எதோ ஒண்ணு எதிர் பார்த்தும், வழங்கி கொண்டும் இருக்கோம். அதில் யார் முழுமையாக பெறவோ கொடுக்கவோ முடியலியோ அவர்கள் தான் நீங்கள் காட்டும் பெண்கள். எப்போதும் யாராவது ஒருவரை சார்ந்து இருக்காமல் பெண்களால் நிஜமாக இருக்க முடியாது. அது ஆணாகவோ, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தட்டி கொட்டுங்கள்,

விவேகானந்தர் சொன்னது போல் முதுகுக்கு பின் நாம் செய்யும் ஒரே வேலை தட்டி கொடுப்பதாக இருக்கட்டும்.

என் பெண்கள் படிக்கும் பள்ளியில் ப்ரோகிரஸ் வழங்கும் நாளில் பார்த்தல் தான் உண்மையான டென்சன் என்னனு தெரியும். குறைந்த மதிப்பெண் வாங்கும் குழந்தைகளின் பெற்றோர் அழுவதை கூட நான் பார்த்திருக்கேன்.

மதிப்பெண் உங்கள் பெண் குழந்தைகளை உருவாக்காது. தட்டி கொடுங்கள், தைரியமா இருக்க கத்து கொடுங்க.

அத்திரி said...

அண்ணே நீங்க சொன்ன ஜோக் நிஜமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.....

தமிழன்-கறுப்பி... said...

இந்த உலகத்தை பற்றி கதைப்பதில் எனக்கு உண்டாகுகிற சலிப்புகளை தவிர்த்துக்கொண்டு,

சரவணனின் கவிதை!
அதற்கு பிறகு MSK ன் அதே பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்
அதானே ஏன் எல்லோரும் பூனையை வச்சு பிலிம் காட்டறிங்க அதற்கு நான் பாம்புகள் அல்லது பாம்பாகுதல் என்று பெயர் வைதிருக்கிறேன்...

என்கிற சாயலில் எழுதியிருப்பேன் வெகு சீக்கரமே பாம்புகள் உங்கள் விட்டத்திலிருந்து படுக்கையில விழக்கூடும்...

தமிழன்-கறுப்பி... said...

அய்யனார்- இந்தாளைப்பற்றி விடிவிய பேசலாம் கட்டாயம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் இருக்க வேண்டும் ஏனெனில் பேசுகிற விடயம் மிகப்போதை தருவது...

selventhiran said...

மனோதைரியம் என்பது பெருநகரப் பெண்களிடம் வெகுவாகக் குறைந்து வருவதைத்தான் இத்துயரச் செய்திகள் சுட்டுகின்றன.

பாடப்புத்தகங்களில் இருந்து பெறப்படும் கல்வியால் மூளைக்கு மட்டுமே பலம். மனதிற்குப் பலம் சேர்க்க உலகத்தைப் படிக்கவேண்டும் அல்லது அப்படிப் படித்தவர்களின் எழுத்துக்களையாவது படிக்க வேண்டும். இரண்டையும் செய்வதில்லை.

பரிசல்காரன் said...

பூனைகள் பற்றி நீங்கள் கவிதை எழுதாதது குறித்து எழுதியதில் கடைசி வரி... கவிதை!

முதல் செய்தியை முழுவதும் சிகப்பில் கொடுத்த உங்கள் யோசனையை மிகப் பிரமிப்பாய் ரசித்தேன்!

தராசு said...

//நமது கல்வி முறையில் ஏதோ பெருங்கோளாறு நடக்கிறது//

சமூக அமைப்பிலும் கோளாறு உள்ளது அண்ணே. போலியான ஆன்மீக வாதிகள் மக்களை செம்மறி ஆடுகளாக்குகிறார்கள். யோசிக்க ஒரு பொழுதும் மக்களை அனுமதிப்பதில்லை. நவீனத்துவம் என்பது வாழ்வை சுலபப்படுத்துவதை விட்டுவிட்டு, அடிமைப்படுத்தி ஆட்கொள்ளும் பரிமாணத்திற்கு அடியெடுத்து வைத்துவிட்டது.

//வாழ்வின் மீதான தன்னம்பிக்கையும், அற உணர்வும் சிறிதளவும் போதிக்கப் படுவதில்லை என்று தோன்றுகிறது//

உண்மை, இவைகள் எங்கும் போதிக்கப்படுவதில்லை

யாத்ரா said...

எனக்கு ஒரு சம்பவம் நினைவு வருகிறது, என்னோட 10 த் மாஸ்டர் பையன், பரிட்சையில் காப்பியடித்து அப்பாவிடமே மாட்டி எல்லோர் முன்னாலும் வெளியேற்றப்பட்டு அவமானத்தில் தற்கொலை செய்து இறந்தான், அவருக்கு ஒரே பையன் அவன்.

சரவணா கவிதை அருமை, இவர் தளத்திலேயே படித்தேன்

இந்த பூனை மேட்டரும் அருமை.

Mythili said...

sarvanan kavithai manathai thodathu

மாசற்ற கொடி said...

இந்த பெண்கள் பற்றிய செய்திகள் ஒரே சமயத்தில் வந்ததனால் இப்படியும் எண்ணலாம். (I think it is a coincidence)

அதோடு தோழர் பைத்தியக்காரன் எழுதியது போல் பெண்களும் ( கமல்,ரஜினி போன்று) மீடியாவின் போதைக்கு ஊறுகாய். என் சொந்த அனுபவத்தில் ஆண்களே படிப்பு, வேலை விதயங்களில் கொஞ்சம் தெம்பிழந்து காணப்படுகின்றனர். (May be because of necessity - )

படித்ததில் சில பிடித்தங்கள் : நன்றாக இருக்கிறது.

அன்புடன்
மாசற்ற Kodi

மணிஜி said...

இந்த ஆடம்பர உலகில் பணத்துக்கும், பகட்டுக்கும் இயல்பை தொலைத்து வாழ்வதால் வருன் வினை இது..சென்னையில் ஒரு மீடியம் ஓட்டலில் இட்லியை கையில் பிய்த்து சாப்பிட்ட என்னை ஒரு சிறு கும்பலே பார்வையால் ரேக்கினார்கள்

மணிஜி said...

இந்த ஆடம்பர உலகில் பணத்துக்கும், பகட்டுக்கும் இயல்பை தொலைத்து வாழ்வதால் வருன் வினை இது..சென்னையில் ஒரு மீடியம் ஓட்டலில் இட்லியை கையில் பிய்த்து சாப்பிட்ட என்னை ஒரு சிறு கும்பலே பார்வையால் ரேக்கினார்கள்

ஆதவா said...

/////இவைகள் ஏற்படுத்தும் பரபரப்புக்கு முன் தேர்தல் தமாஷ்கள், IPL சிக்கல், நியூசீலாந்தில் அபூர்வ வெற்றி போன்ற விஷயங்களும் ஐந்திலிருந்து இருபத்தி நான்காம் பக்கம் வரை பின்தள்ளப் படுகின்றன./////


பத்திரிக்கைகள் சூடுகளைத்தான் கவனிக்கின்றன.. தரத்தைப் பார்ப்பதில்லை...

ஏன், நீங்கள் மிக முக்கிய, உணர்ச்சிமிக்க ஒரு பதிவை எழுதி தமிழ்மணத்தில் போடுங்கள்... சூடாகாது... ஒரு குஜால் பதிவைப் போட்டால் எல்லோரும் வருவார்கள்!!! (படிப்பவர்கள் மன்னிக்க... ஏனெனில் இதுதான் உண்மை!!)

வெண்பூ said...

அரசியலுக்கு அடுத்து அதிகம் சம்பாதிக்க முடிகிற துறையாக கல்வி மாறிப்போய் பலநாளாச்சு அனுஜன்யா... என் மகனின் ப்ளேஸ்கூலுக்கு நான் கொடுத்த பணம், நான் ஒன்றாவதிலிருந்து முதுநிலை படித்தது வரை செலவு செய்ததற்கு சமமான தொகை.. குழந்தைகளை வெறும் காந்த நாடாக்கள் ஆக்கும் கல்விமுறைதான் தவறோ எனத் தோன்றுகிறது :(

*****

ஜோக்: நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை....

*****

மூணாவது மேட்டருக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.. அதனால விட்டுக்கிறேன் அப்பீட்டு :)))

மண்குதிரை said...

ரசித்தேன் அனுஜன்யா !

நீங்கள் குறிப்பிட்ட அந்த கவிதை அருமை.

அந்த நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.

அகநாழிகை said...

அனுஜன்யா,
சிந்தனையைத் தூண்டும் பதிவு. கல்வி முறையில் மாற்றம் அவசியம் தேவை... மண்டல, மாநில அளவில் அல்ல, இந்தியா முழுமைக்கும் சேர்த்து கல்வி சீரமைப்பு அவசியம் தேவை.

சரவணகுமாரின் கவிதை அருமை.
(நானும் கூட பூனைக் கவிதை பல வருடங்களுக்கு முன்பு எழுதி வெளியாகியும் உள்ளது. ‘பூனை‘யை தேடிப் பிடித்து எனது பக்கங்களில் பதிவிடுகிறேன்.

- பொன். வாசுதேவன், மதுராந்தகம்.

தேவன் மாயம் said...

பெண்கள் பதிவு
சிந்திக்க வைக்கிறது!!

குசும்பன் said...

//நமது கல்வி முறையில் ஏதோ பெருங்கோளாறு நடக்கிறது. மனப்பாடம் செய்து, வாந்தி எடுக்கும், பணம் மட்டும் கண்ணுக்குத் தெரியும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகிவிட்டனவா நமது கல்வி நிறுவனங்கள்? //

இதில் சந்தேகம் வேறா?

ஜியா said...

பூனைக்குள்ள இம்புட்டு மேட்டரா???

மேவி... said...

:-))

ராம்.CM said...

நல்லாயிருந்தது.. எங்கு பார்த்தாலும் இந்த மாதிரி செய்திகளைக்கேட்டுகொண்டே இருக்கிறோம்.

anujanya said...

@ முரளிகண்ணன்

'நிலா முற்றம்' மிக அழகான, கவிதையான தலைப்பு. முதலில் அதை justify பண்ணும் அளவு கவிதைகளே எழுதவில்லை. மேலும் பரிசல் கொடுத்த தலைப்பைத் தவிர உருப்படியா ஒண்ணும் இதுல இல்ல என்று அவப் பெயர் வரக்கூடும். இந்தத் தலைப்பு அந்த விதத்தில் மிக சௌகர்யமான ஒன்று. நன்றி முரளி.

@ பைத்தியக்காரன்

வாங்க தலைவா. ஒரு வழியா வந்தீங்க நம்ம எடத்துக்கு.

//பெண்கள் மட்டும்தான் இதற்கு காரணமா?

மீடியாக்களுக்கு தேவை, கவர்ச்சி, கிளுகிளுப்பு. அதனால் பெண்கள் தொடர்புடைய விஷயங்கள் மட்டுமே ஹைலைட்டாகின்றன. இதில் என்ன கொடுமை என்றால், ஆண் தொடர்பான விஷயங்களிலும், ஏதோவொரு பெண்ணை, மீடியாக்கள் இழுத்துவிடுவதுதான். //

முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். ஆண்கள் போட்டுக் கொள்ளும் பேண்ட், ஷர்ட் துவங்கி மோட்டார் பைக் விளம்பரங்கள் என்று பெண்களை exploit செய்யாத விளம்பரங்களே கிடையாது. போலவே செய்திகளும். ஆதாமின் ஜீன்களுக்குள் புதைக்கப்பட்ட விதை இது என்று நினைக்கிறேன். (இதையே நம்ம குருஜி 'விதைகளுக்குள் புதைக்கப்பட்ட ஜீன்' என்பார் :) )

//அப்படியானால், ஆண்கள் மாயக்கோட்டைகளுக்குள் உருகுவதில்லையா? //

மாசற்றகொடியும் //இந்த பெண்கள் பற்றிய செய்திகள் ஒரே சமயத்தில் வந்ததனால் இப்படியும் எண்ணலாம். (I think it is a coincidence)

அதோடு தோழர் பைத்தியக்காரன் எழுதியது போல் பெண்களும் ( கமல்,ரஜினி போன்று) மீடியாவின் போதைக்கு ஊறுகாய். என் சொந்த அனுபவத்தில் ஆண்களே படிப்பு, வேலை விதயங்களில் கொஞ்சம் தெம்பிழந்து காணப்படுகின்றனர். (May be because of necessity - ) //

என்கிறார்.

ஆண்களும் ஓரளவு shaky தான். ஆனால் உடைந்து/உருகுகிறார்களா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் தங்கள் சிறிய (குழந்தை சரியாகப் படிக்காதது போன்ற) ஏமாற்றங்களை சுலபமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். பெரிய ஏமாற்றங்களில் அவர்கள் பிறர்மீது வன்முறையைக் கையாள்கிறார்கள் என்று நினைக்கிறேன். தாங்கள் உருகாமல், மற்றவரை உருக்குகிறார்கள் என்று எண்ணுகிறேன். நான் சொல்ல முனைந்தது சிறு ஏமாற்ற, சோக நிகழ்வுகள் வாழ்வைப் பறிக்கக் கூடாது என்ற விதத்தில்.

ஆயினும், நீங்கள் சொன்ன கோணத்தில் இனிமேல் இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கிறேன். எப்படியோ ஒரு 'கவன ஈர்ப்பாவது' செய்கிறதே இந்தப் பதிவு.

முடிஞ்ச போது வாங்க தல.


@ ராமலக்ஷ்மி

பெண்களுக்கு பிடிக்காத 'தலைப்பா' :)

'கரையைத் தேடி' படிக்க வேண்டும். வாழ்த்துகள் . நன்றி என் மற்றும் சரா சார்பில்.

@ கார்க்கி

உனக்கும் தலைப்பூ பிடிச்சுருக்கா?

நாம சமயத்துல (நமக்கே தெரியாம) சில நல்ல காரியங்கள் பண்ணுறோம் போல!

நன்றி கார்க்கி.

@ வால்பையன்

குறும்பா நல்லா இருக்கு குரு.

@ சென்ஷி

வாங்க சகா. எவ்வளவு நாளாச்சு! தொடர்ந்தால் 'க.க' பட்டம் கிடைக்கும் :௦

சரா பேசியது ஓகே. என்னைப் பற்றி அய்யனார் புகார் செய்ததை சபைல சொல்லிடாதீங்க :)

அப்துலுக்கு சரியான கேள்வி. (நிறைய புதுப் பதிவர்களுக்கு என்பது என் பதிலும்)

நன்றி சென்ஷி.

@ அப்துல்லா

வா தம்பி.

//என் திசை நீங்கதான்!தெரியுமா?//

அதான் நீ சுத்தி சுத்தி வரியா? போய்யா, போயி புள்ள குட்டிங்களப் படிக்க வெய்யி. வந்துட்டாரு - வேற தெசயே கிடைக்கலியா உனக்கு? இருந்தாலும், நல்ல குளிர்ச்சியா இருக்கு பா. நீ வாழ்க.

@ மணிகண்டன்

மணி, நன்றி. இன்னும் உன்னோட கவித படிக்கல. வரேன் அங்க. மன்ச்சுக்க பா.

@ மயில்

வாங்க மயில். அப்பா, நீங்களாவது நம்மள சப்போர்ட் பண்ணுறீங்களே. தேங்க்ஸ் மா.

உங்கள் பின்னூட்டம் ரொம்ப நல்லா இருக்கு. சிந்திக்க வைக்கிறது.

@ அத்திரி

யோவ், நான் ஜோக்னு போட்டும் கூட சஞ்சய் வரல இன்னும். அவர வெறுப்பேதாதப்பு :)

@ தமிழன்

உங்க பின்னூட்டம் பாத்தேன். சரிதான். ஆனா, ஏன் என் வீட்டு விட்டதில் இருந்து வர வேண்டும். சரா, அய்ஸ் என்று அவர்கள் வீட்டு விட்டத்திலிருந்து குதிக்கலாமே :)

அய்ஸ் - நிச்சயம் ஊறுகாய் தேவை தான்; ஆனால் சமயத்தில் அங்கேயே ஊறுகாய் போல 'சுர்'னு காரம் இருக்கு :)

@ செல்வேந்திரன்

ஆஹா, பை.காரன் முதலில். இப்போ செல்வா நம்ம பதிவுக்கு. ஒரு வேளை நிஜமாவே நல்ல பதிவோ? வாங்க செல்வா.

நன்றி உங்கள் கருத்துகளுக்கு.

@ பரிசல்காரன்

அடாடா - ஒரு குரூப்பாதான் வராங்க. கார்க்கி, செல்வா, பரிசல் என்று.

நன்றி கே.கே. மிக நுட்பமாக கவனிக்கிறீர்கள். இதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

@ தராசு

வாங்க தராசு. உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

@ யாத்ரா

ஆசிரியர் மகனுக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை சில விஷயங்களை - காப்பி அடிக்கக் கூடாது மற்றும் அவமானத்தில் நொறுங்கி விடக்கூடாது என்பன போல. படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

நன்றி யாத்ரா.

@ மைதிலி

நன்றி மைதிலி. சராவுக்குச் சொல்லி விடுகிறேன்.

@ மாசற்ற கொடி

உங்களுக்கு பை.காரன் பின்னூட்ட பதிலில் சொல்லி இருக்கேன்.

'பிடித்தங்கள்' பிடித்திருக்கிறதே - அந்த மட்டில் மகிழ்ச்சி :)

நன்றி.

@ தண்டோரா

//சென்னையில் ஒரு மீடியம் ஓட்டலில் இட்லியை கையில் பிய்த்து சாப்பிட்ட என்னை ஒரு சிறு கும்பலே பார்வையால் ரேக்கினார்கள்//

கவலைப் படாதீங்க தல. இன்னும் ரெண்டு கப் சாம்பாரில் முழுக்கு, முழங்கையில் சாம்பார் ஒழுகும் வரை சாப்பிடுங்க. தமாஷ் பண்ணல. நிசமாத் தான் சொல்றேன். நம்ம சாப்பாட்ட, நம்ம ஸ்டைல் லில் தான் சாப்படனும்.

@ ஆதவா

நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. அழகிய, கவன ஈர்ப்பு தலைப்பு வேறு; பரபரப்புக்காக மட்டும் இடும் தலைப்பு வேறு. ஆனால், அது பதிவர்களாகப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு. நன்றி ஆதவா.

@ வெண்பூ

பணம் உறிஞ்சுகிறார்கள். நல்ல குடிமகன்களை, வாழ்கையை எதிர்கொள்ளும் திடத்திச் சொல்லித் தரலாமில்லையா? நன்றி வெண்பூ. உன்ன கவிஞன் ஆக்கியே தீருவது!

@ மண்குதிரை

வாங்க தல. நன்றி. ஆம், சரவணன் கொஞ்சம் கூச்ச சுபாவி. அவசியம் அங்க போயி எல்லாக் கவிதைகளும் படிங்க.

@ அகநாழிகை

வாங்க வாசு. கருத்துக்கு நன்றி.

நீங்களும் 'பூனை' கட்சியா? அப்ப பெரியவங்க லிஸ்டுல உங்களுக்கும் இடம் உண்டு :)

@ தேவன்மயம்

நன்றி தேவன்.

@ குசும்பன்

இது குசும்பன் தானே. இல்ல உன்னோட பின்னூட்டத்தில் உள்ள குசும்பு எனக்குப் புரியவில்லையா :)

@ ஜி

ஆம் ஜி. நீயே வேணா செக் பண்ணிக்க. நன்றி ஜி.

@ MayVee

வாங்க 'கவிஞர்' . நன்றி.

@ ராம்

நன்றி ராம்.


அனுஜன்யா

சென்ஷி said...

க.க. = ??

anujanya said...

@ சென்ஷி

க.க.= கருத்து கந்தசாமி :)

அனுஜன்யா

Thamira said...

பணம் மட்டும் கண்ணுக்குத் தெரியும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகிவிட்டனவா நமது கல்வி நிறுவனங்கள்? வாழ்வின் மீதான தன்னம்பிக்கையும், அற உணர்வும் சிறிதளவும் போதிக்கப் படுவதில்லை என்று தோன்றுகிறது.//

வேதனை தந்த நிஜமான வரிகள்..

Thamira said...

காதல் தோல்வி கவிதைகளை எழுதுவதால் நாங்கள் (நானும் கார்க்கியும்) மிகவும் கலாய்த்த// என்ன ஒரு பெரிய நுண்ணரசியல் அராஜகம்... யூத் என்பதை வேறு வார்த்தைகளில் நிர்மாணம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Thamira said...

சரவணக்குமார் கவிதைகள்.. அவனைப்புகழ்ந்தால் இன்னைக்கெல்லாம் புகழ்ந்துகொண்டிருப்பேன். (நீங்களும்தான் இருக்கீங்க, வடகரை அண்ணாச்சியும்தான் இருக்காரு.. என்னமோ பின்னவீனக் கவிதை பண்றீங்க.. ஒண்ணுமே பிரியாம.. ஆனா இவன்..)
என்ன பிரமாதமா மேஜிக் பண்ணுகிறான்.. கொஞ்சம் மறைபொருளா இருந்தாலும் என்ன மாதிரியான விதம்விதமான அனுபவங்களைத் தருகிறான். இன்றைய நிலையில் எனது ஒரே பேவரிட் சரவணாதான்.!(குட்டிக்காதல்கவிதைகளுக்கு ஸ்ரீமதியும், ஸ்ரீயும்)

anujanya said...

@ ஆதிமூலகிருஷ்ணன்

வாங்க ஆதி. யூத்த 'யூத்' என்றாலும் கோவம். வேற வார்த்தைகளில் சொன்னாலும் 'நுண்ணரசியல்' என்றால் என் போன்ற இளைஞர்களின் கதி :)

உங்களுக்கு சரவணன் எவ்வளவு பிடிக்கும் என்று முன்னாலேயே தெரியும். இவ்வளவு பிடிக்கும் என்று இப்போ ஊருக்கே தெரியும். அதுக்காக நீங்க அண்ணாச்சிய வம்புக்கு இழுத்திருக்க வேண்டாம் :)

அனுஜன்யா

மண்குதிரை said...

வணக்கம் அனுஜன்யா !

நண்பர் சரவணகுமாரின் ப்ளாக் முகவரி கொஞ்சம் சொல்லுங்கள். அப்படியே உங்கள் மெயில் ஐடியும்.

anujanya@gmail.com?

anujanya said...

@ மண்குதிரை

சரவணகுமாரின் வலைதள முகவரி :

http://msaravanakumar.blogspot.com/

என் மின்னஞ்சல் முகவரி சரிதான் :)

அனுஜன்யா

Unknown said...

//பூனைகள் பாக்கியம் செய்யவில்லை என் கவிதையுள் நுழைய.//

Repeatuuuuuuuu... ;)))

narsim said...

தாமதிற்கு மன்னிக்கவும்..

//மனப்பாடம் செய்து, வாந்தி எடுக்கும், பணம் மட்டும் கண்ணுக்குத் தெரியும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகிவிட்டனவா நமது கல்வி நிறுவனங்கள்? வாழ்வின் மீதான தன்னம்பிக்கையும், அற உணர்வும் சிறிதளவும் போதிக்கப் படுவதில்லை என்று தோன்றுகிறது.//

உடன்படுகிறேன்

கிருத்திகா ஸ்ரீதர் said...

"Jeans-TShirt-Hi Heels-Goggles-Lipstic என்ற மாயக்கோட்டைக்குள் முற்றிலும் உருகிவிடத் தயாராக உள்ள மெழுகு பொம்மைகள் இவர்கள் என்பது பெரிய ஆச்சரியம் மற்றும் ஏமாற்றம். இது ஒரு சுலபமான பொதுப் படுத்தல் என்றாலும், இவை சொல்லும் செய்திகளை மதிக்காமல் விடக்கூடாது.
" இப்படியெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை அனுஜன்யா...

வீக்கர் மொமெண்ட்ஸ் எனப்படும் பலகீனமான நேரங்கள் இருபாலருக்கும் பொதுவான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் ஆளாளுக்கு வேறுபடுகிறது (குறித்துக்கொள்ளவும் this is only depends on individual not on the basis of sex) ஆனால் அது பெண்கள் என்று வரும்போது கவன ஈர்ப்புக்கு பெரும்பாலும் உதவுகிறது. அது மட்டுமே காரணமாகும்.

மங்களூர் பப் விவகாரத்தில் இருந்து அன்றாட செய்திவரை வியாபரம் மட்டுமே குறிக்கோள் இதற்கு அணிவிக்கும் முகமூடிகள் தான் வேறு வேறு.

கட்டுரையில் உள்ள ஒரு சின்ன முரணையும்சொல்லி விடுகிறேன்...

பொதுவில் இந்தக்கட்டுரை மெழுகு பொம்மைகள் போல் உருகும் பெண்களைக்குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது ஆனால் கடைசி பாரா பொதுவான கல்விமுறையை சாடியுள்ளது இது இருபாலருக்கும் பொதுவானது தானே இந்தக்கல்வி முறை பெண்களுக்கானது மட்டுமில்லையே...
மற்றபடி நான் அந்தப்பாராவோடு ஒப்புமைப்பட்டே போகிறேன்...

லேட்டா வந்துட்டு என்ன வம்புன்னு கேக்கறீங்களா??? சாரி கொஞ்சம் வேலயிருக்கு அதான்...!!!!!

anujanya said...

@ ஸ்ரீ

நீயும் இன்னும் பூனைகள் பற்றி எதுதவில்லையா? செம் ப்லட்.

@ நர்சிம்

நன்றி தல.

@ கிருத்திகா

அப்பாடா, சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டேன் போலும். எனக்கும், பெண்கள் அந்த ஏமாற்றங்களை வெளிப்படுத்தியதில் தான் ஏமாற்றம்/வருத்தம். Totally disproportionate.

கல்வி பற்றி சொல்வது இரு பாலாருக்கும். அதனாலேயே சென்னை நிகழ்ச்சியில் தவறான முடிவு எடுத்த ஆணைப் பற்றியும் சொன்னேன். ஆயினும், தலைப்பு குறிப்பாகப் பெண்களைப் பற்றி மட்டும் சொல்வதால் ...நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்.

நன்றி கிருத்திகா.

அனுஜன்யா

MSK / Saravana said...

பைத்தியக்காரன் அண்ணனுடன் உடன்படுகிறேன்.. அதே நேரத்தில் layoff காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞனையும் கருத்தில் கொள்ளவேண்டும்..
ஆணோ, பெண்ணோ.. சின்ன setback-களை தாங்கி கொள்பவர்கள் ரொம்ப கம்மி..

MSK / Saravana said...

@அனுஜன்யா : ஒரு பெரிய பெரிய நன்றி..
அப்பறம்.. என்னங்கண்ணா இதெல்லாம்.. என் கவிதை பிடிச்சிருக்குன்னா என் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கலாமே.. (நீங்க இப்போ சமீபத்தில் என் பதிவு பக்கம் ஒரு பின்னூட்டம் போட வில்லை என்பதை நினைவுறுத்துகிறேன்..)

//Sara, Way to go. Dont ever look back.//
போகமாட்டேன் என்றே நினைக்கிறேன்.. :)

@கார்க்கி : :)

@சென்ஷி.. அப்படி என்னங்கண்ணா பேசினீங்க, நீங்க, அய்யனார் எல்லாம் சேர்ந்து..!!!!!

@ஆதி : அண்ணா.. ரொம்ப புகழ்ந்துட்டீங்க..பயமாவும் கூச்சமாவும் இருக்கு..

அப்பறம் எல்லாருக்கும் நன்றிங்க.. :)

MSK / Saravana said...

ஆணோ, பெண்ணோ.. சின்ன setback-களை தாங்கி கொள்பவர்கள் ரொம்ப கம்மி..
நானும் ஓரிரு சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தது உண்டு..

Unknown said...

//ஸ்ரீ

நீயும் இன்னும் பூனைகள் பற்றி எதுதவில்லையா? செம் ப்லட்.//

நான் இன்னும் கவிதையே எழுத ஆரம்பிக்கல... அப்பறம் எங்கேருந்து பூனைய பத்தி எழுதறது??

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

பொதுவாகவே முதுகெலும்பில்லாத ஒட்டுண்ணிகளைத்தான் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறோம் நாம். தன்னம்பிக்கை என்பது நாகரீகத்தின் பெயரில் ஒளித்து வைக்கப்படுவது உண்மை. இந்த சமூகக் கவலைகளை மறைக்கவும் மறக்கவும் தான் நமக்கு 'மால்' களும், மல்டி ப்ளெக்ஸ்களும் தேவைப்படுகின்றன.

மும்பை என்றில்லை. சென்னையிலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்த அவலங்கள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. மாநகரங்களில் நடப்பவை இலகுவாக வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. அவ்வளவுதான்.

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

@ சரவணகுமார்

வாங்க கவிஞர்! ஆமாம், ஆண்களும் பேஸ்மெண்டு வீக் போல.

உன் கவிதைக்குப் பெரிய தலைங்க எல்லாம் (அய்ஸ், ஆதி, ஸ்ரீ) எல்லாம் pinnootam poduraangale. நீ அதை எல்லாம் தாண்டிச் சென்று விட்டாய் சரா.

தற்கொலை - விளையாட்டுக்குக் கூட சொல்லாதே அப்படி :(

@ ஸ்ரீ

என்ன கவிதாயினிக்கு இவ்வளவு அவையடக்கம்?

@ சேரல்

உங்கள் கருத்துக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி சேரல். உங்கள் முதல் வருகை? அடிக்கடி வாங்க.

@ MayVee

:))) (இல்லியா பின்ன?)

அனுஜன்யா

Tech Shankar said...

இப்படிச் சாவதைத்தான் இன்றையக் கல்விமுறை சொல்லித் தருகிறதா?
so sad!

//ஒரு மாணவி; Very chirpy - Bubbly etc. - படிப்பில் கொஞ்சம் சுமார் ரகம் போல. தேர்வு துவங்கும் முன் காப்பி அடிக்கும் உபகரணங்கள் இருந்ததால் பிடிபட்டு, அவமானத்தில், மாடியில் இருந்து குதித்து, கீழே விழுந்து கூழாகி, தன்னை மாய்த்துக் கொண்டவள்.

anujanya said...

@ தமிழ் நெஞ்சம்

சொல்லித் தருகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், சில விஷயங்களைச் சொல்லித் தரத் தவற விடுகிறது என்று நிச்சயம் தோன்றுகிறது. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் நெஞ்சம். உங்கள் முதல் வருகை? மீண்டும் வாருங்கள்.

அனுஜன்யா