டிராலியில் தள்ளியவாறே தாய்லாந்து அழகி 'உங்கள் உணவு. மகிழ்வுடன் சாப்பிடுங்கள்' என்றாள்.
"ஹாய், இது அசைவம் போலத் தெரிகிறது - நாங்க வெஜிடேரியன்ஸ்' - ஹரி.
"ஓ, வெரி சாரி. வெஜிடேரியன் தருகிறேன்" என்றவள் திரும்ப அதே பிளாஸ்டிக் புன்னைகையுடன் இரண்டு தட்டுகளை நீட்டினாள்.
இப்போது உமா 'மேம், இதுவும் அசைவம்தான். ஆயிஸ்டர், நண்டு மற்ற கடல் உணவுகள் எல்லாம் எங்களுக்கு வெஜிடேரியன் இல்லை' என்று பதட்டமானாள்.
அப்புறம் அந்த அழகி உம்மென்று வைத்த காபேஜ் இலைகளையும், பெயர் தெரியாத தழைகளையும் மென்று, அதை மறக்க ப்ளாக் காபி குடித்து கண்ணயர்ந்தனர்.
தூங்கும் அவர்களைப் பற்றி:
ஹரி - உயரன். மாநிறன். பொறியியல் படிப்பு. நீங்கள் இப்போது யூகிக்கக் கூடிய கணினி மென்பொருள் துறைதான். இந்தியாவின் ஏழாவது பெரிய நிறுவனத்தின் பல சாமர்த்திய இளைஞர்களுள் ஒருவனாக, நிறைய சம்பளம், நிறைய பயணம், நிறைய எல்லாவுடன் இருந்தவன்…ப்பவன்... க்கப் போகிறவன்?
உமா : அழகி. படிப்பில், செல்வத்தில் ஹரியைவிட கொஞ்சம் அதிகம். பொறியியலுக்குப்பின், மேலாண்மை படித்து, ஐரோப்பிய நிறுவனமொன்றின் இந்திய கிளையில் முக்கிய வேலை.
இவனுள் ஒளிந்திருந்த வடக்கும், அவளில் மறைந்திருந்த தெற்கும் ஈர்க்கப்பட்டு, பிரிக்க முடியாத காந்தமாகி, காதலாகி, கசிந்து...சரி கல்யாணமும் ஆகி விட்டது - அறுபது நாட்களுக்கு முன். சம்பிரதாய தேன்நிலவு, குலதெய்வ சமாசாரங்களை முடித்துக் கொண்டு ஒரு வழியாக ஆபிஸ் போவதே நிம்மதி என்று தோன்றத் துவங்கியது. அமெரிக்கா, யு.கே. என்று ஜொலித்துக் கொண்டிருந்தவனை ரிசஷன் புயல் கிழக்கு ஆசியாவுக்குத் தள்ளி, பள்ளி புவியியல் பாடங்களில் கூட படித்த ஞாபகம் இல்லாத தேசங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். பத்து நாட்கள் மணிலா, ஒரு வாரம் ஜாகர்த்தா, இரண்டு வாரம் பூசன் (கொரியா), ஒரு வாரம் பாங்காக் என்று தென்கிழக்கு ஆசியாவில் மையம் கொண்டான். மாத இறுதிகளில் சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொரு வார இறுதியையும் கொண்டாடினார்கள் - ஒன்றாக.
இவர்கள் உரையாடல், சுமார் பன்னிரெண்டாயிரம் அடி உயரத்தில், பாங்காக்கிலிருந்து காத்மாண்டு செல்லும் விமானத்துள் நடந்தது. ஒரு வாரம் காத்மாண்டு மற்றும் டெல்லி பார்ப்பதாகத் திட்டம். விமானம் டேக்-ஆப் ஆகி ஐம்பது நிமிடங்கள் ஆகி இருந்தது. பிசினஸ் கிளாஸ். போன வாரம் வரை உறுத்திய வள்ளியூரின் குப்பைத் தெருக்கள், மும்பையின் தாராவிச் சிறுமிகள், தேர்தல் அரசியல், பிரபாகரன் எல்லாவற்றையும் மறந்து, உயரே, உயரே...வேறு ஒரு பதப்படுத்தப்பட்ட உலகுள்.. அவனுக்குள் உமா மற்றும் உமா மட்டுமே.
திடீரென்று விமானத்தில் ஏதோ இடித்த சத்தம் மற்றும் அதிர்வு. சில நொடிகளில் விமானம் வலது பக்கமாகவும், பின்நோக்கியும் பாய்ந்து விழத் துவங்கியது. பயணிகளின் பயக்கூச்சலில் விமான ஓட்டி அறிவித்த குழப்ப ஆங்கிலம் யாருக்கும் கேட்கவில்லை. உமா, ஹரியின் கழுத்து, கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள். ஹரியும் பீதியில் கண்ணை மூடி மூடித் திறந்தான். எத்தனை வினாடிகள்? நிமிடங்கள்? மணிகளா? பல கொடூர யுகங்களுக்குப் பின் விமானம் பெரும் பாறையில் மோதி மூன்றாக உடைந்து சிதறியது. நிசப்தம் நிசப்தம்.
மீண்டும் பல யுகங்களுக்குப்பின் உமா கண் திறந்தாள். இருட்டாக இருந்தது. ஒரு குழாய் போல, அதன் முடிவில் வெளிச்சம் கசிந்தது. முழங்காலும், வலது தோளும் நகர்த்த முடியாமல் வலித்தது. கருவெளிச்சம் பழகிய பின் பார்வையால் துழாய்ந்தாள். தான் விமானத்தின் உடைந்து சிதிலமாகிவிட்ட நடுப்பகுதிக்குள் இருப்பதைக் கண்டாள். சில அடிகள் தள்ளி ஒரு கையும், மடங்கிய உடலும் தெரிந்தது. மெல்ல ஊர்ந்து அருகில் சென்று பார்த்தால்...ஹரி. கண் மூடி இருந்தது.
மூழ்கிக்கொண்டே அவளும் நினைவிழந்தாள். யாரோ உலுக்கிவிட்டபோது மெல்லக் கண் திறந்தாள். ஹரியும், இன்னும் இருவரும் அவளைத் தூக்கிக்கொண்டு, வெளிச்சம் நோக்கி நகர்ந்ததை அவளால் முற்றிலும் உணர முடியவில்லை.
'உயிரோடு இருக்கிறேனா - இல்லை இறந்து விட்டேனா? என் இவ்வளவு அமைதி? ஆனால் வலி இருக்கே? - இல்லை இது ஏதோ கொடுங்கனவு. எப்போ தூங்கினேன். விமானம் லேண்ட் ஆகிவிட்டதா' என்று கால் வினாடியில் நூறு கேள்வி-பதில்கள் தோன்றி மறைந்தன.
அவர்கள் விமானம் நொறுங்கியிருந்தது இமாலய பனிச்சிகரங்களில் ஒன்றில். நொறுங்கியது அதிகாலைப் பொழுது. இப்போது எங்கும் கண்ணைக்கூசும் ஒளி, மெல்லப் பரவாமல், திடீரென்று அடித்தது. இந்த நால்வரும் மிக அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பிழைத்திருந்ததை உணர்ந்தார்கள். அதீதக் குளிராக இருந்தது. விமானத்தின் நடுப்பாகம் இன்னும் முற்றிலும் உடையாமல், ஒரு பெரிய குழாய் வடிவில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது.
அந்த மங்கோலியர்கள் பெயர் டானி மற்றும் ஜிங் என்று ஓரளவு புரிந்து கொண்டார்கள். இப்போது பெயரா முக்கியம். டானிக்கு கணுக்காலில் உதிரம் சிந்தியது. ஜிங் முகம், மற்றும் இடுப்புப் பகுதியில் ஒரே இரத்தம். ஹரியின் தாடை, பின்னங்கால்கள், கழுத்து என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் இரத்தம் மற்றும் வலி. டானியும் ஜிங்கும் இயல்பு நிலைக்கு வந்து, விமானத்துக்குள் இருந்தவற்றைத் துழாவ ஆரம்பித்தார்கள். உமாவால் தானாக நகர முடியவே இல்லை. அவளைத் தன் மடியில் கிடத்திய போதுதான் ஹரி அவள் பின்தலையில் இரத்தம் கசிந்து பிசுபிசுப்பதைக் கவனித்தான். சிதில பாகத்துக்குள் நசுங்கிய பிளாஸ்டிக் பாட்டில்கள், போர்வைகள் இருந்தன. சீட்டுகளைக் கிழித்து அரைகுறையாகப் பனிச்சப்பாத்து (ஷூஸ்) செய்தார்கள். தாகம் இருந்ததால் பனிக்கட்டியை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் வரத் துவங்கியது.
ஜிங்கின் கைக்கடிகாரம் மட்டும் அதிசயமாக ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலை 10 மணி என்றது. அதிர்ச்சி போய், 'அடுத்து என்ன' என்ற கேள்வி உமா தவிர மற்ற மூவருக்கும் தோன்ற ஆரம்பித்திருந்தது. உமா இலேசாக முனகியபடி இருந்தாள். ஹரி அவள் பின்மண்டையில் கைவைத்து, இன்னமும் இரத்தம் கசிவதில் திகில் ஆனான். டானி ரோந்து பார்க்கும் விமானம் எப்படியும் நம்மைக் கண்டுபிடித்து, கூட்டிச் செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தான். மதியம் அடித்த வெயிலில் பாட்டில்களில் போட்டிருந்த பனிக்கட்டிகள் உருகி, ஓரளவு அவர்கள் தண்ணீர் குடித்தார்கள். சாப்பிட வேறு எதுவும் இல்லை. இப்போது உமா முற்றிலும் சுயநினைவில்லாமல், மயங்கி, ஹரியின் மடியில் படுத்திருந்தாள்.
இரவு வந்தது. விமான சிதிலத்துக்குள், போர்வைக்குள் தஞ்சமானார்கள். டானியும், ஜிங்கும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஹரி.
"ஒரே பசி. நாளை என்ன செய்வது"
"நீராகாரம்தான்"
"எத்தனை நாள்"
"சாகும்வரை"
"........."
ஹரி அயர்ச்சியில் தூங்கி விட்டான்.
மறுநாள் மதியம், சுற்றுப்புற வானம், மற்றும் பனிச்சிகரங்களில் என்னமோ சொல்லமுடியாத மாற்றம் சடுதியில் ஏற்பட்டு, இவர்களை நோக்கி ஒரு பெரிய பனிமலை அலைபோல பாய்ந்து வந்து கொண்டிருந்தது. இவர்கள் சுதாரிக்கும் முன்பே நால்வரையும் அடித்துச் சென்று எங்கெங்கோ தூக்கிப் போட்டது. அவ்வளவு சருக்கலிலும் தன் மடியிலிருந்த உமாவை வெகுநேரம் உடும்புப் பிடியாக ஹரி பிடித்திருந்தாலும், கடைசியில் இருவரும் பிரிந்து விழுந்து கிடந்தார்கள். டானி, ஜிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
வானம், மலை எல்லாம் இருட்டி விட்டிருந்தது. பின்னிரவில் ஹரி முழித்துக்கொண்டான். விலா எலும்புகள் ஒடிந்திருக்க வேண்டும். உமாவை நினைத்தான். அழுகை வந்தாலும், கண்ணீர் வரவில்லை. மிகுந்த தேக, மன வலியுடன் உறங்கி விட்டான். காலை மீண்டும் பனிமலைகள் நேற்றைய கோரத்திற்கு தாங்கள் பொறுப்பில்லை என்பதுபோல் மெளனமாக இருந்தன. எப்படி விழித்தான், எழுந்து நின்றான், நடக்கத் துவங்கினான் என்று தெரியாது. கிட்டத்தட்ட மாலைவரை மெல்ல மெல்ல நடந்து அவ்வப்போது பனிக்குள் துழாவி, மனைவியைத் தேடினான். விடாமுயற்சி வினையாக்கியது. அவளுடைய பச்சை நிற ஸ்வெட்டர் காற்றில் அசைந்ததில் கண்டுபிடித்தான். ஒரு கால் மடங்கி, மற்றொரு கால் வினோத கோணத்தில் படுத்திருந்தாள். தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று அமர்ந்தான். முகத்தின் பொலிவு அவனை பயமுறுத்தியது
மிகுந்த சிரமத்துடன் வெகு நேரம் அவள் நாசியில் கையையும், இதயத்தில் தன் வலது காதையும் வைத்து அவள் உயிரைக் கூப்பிட்டான். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவளின் வலியற்ற, சோபையான வதனம் அவள் அவனை விட்டுப் போய் விட்டதைச் சொன்னதைப் புரிந்துகொண்டான். ஏனோ அழவில்லை. திடீரென்று மிகவும் பசியும், தாகமுமாக உணர்ந்தான்..
இப்போது அவளைப் பக்கத்தில் கிடத்தி தன் உலர்ந்த உதடுகளால் அவளின் காய்ந்த அதரங்களை முத்தமிட்டான். பின்பு பக்கத்தில் படுத்துக்கொண்டான். சிறு உறக்கத்துக்குப் பிறகு மெல்ல பனித்துகள்களை அப்புறப்படுத்தி பள்ளம் தோண்டினான். உமாவுக்கு நோகாமல் மெல்ல, மிக மெல்ல, ரத்தம் உறைந்திருந்த அவள் பின்தலை படாதவாறு இலேசாக அவளைப் பள்ளத்தில் கிடத்தினான். பள்ளத்தை மூடி, நடக்கலானான். சில நூறு அடிகளில் பெரும் பாதாளம் தெரிந்தது. மற்றொரு பக்கம் செங்குத்தாக, ஒரு பெருஞ்சுவர் போல மலை எழும்பி இருந்தது. உடல், மனது எல்லாம் குறுகி, சுருங்கி, ஒரு புள்ளியாகி, மீண்டும் உமா இருந்த இடத்திற்கு வந்து, மயங்கி விழுந்தான்.
**********
ஆறு மாதம் கழித்து வீட்டுக் கதவைத் தட்டிய நேஷனல் ஜியாகிரபி ஆட்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்து அவர்கள் அவன் தப்பித்து வந்த சாகசக் கதையை அவனே சொல்வதைப் படம் பிடித்தார்கள். அவர்களின் வழக்கமான, 'ஏன், எதற்கு, எப்படி' எல்லாவற்றுக்கும் ஞாபகத்திலிருந்து பதில் கொடுத்தான். காமெரா அவனை எண்களாக்கியது.
"உங்கள் வலது கையின் சுண்டு விரலும், மோதிர விரலும் ....."
"ஹ்ம்ம்.. வேண்டாம் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை"
தொகுப்பாளினி "பனிக்கடியில் இரு விரல்கள் இழந்த கை” என்றபோது, காமெரா zoom ஆனது.
இரண்டு வாரம் கழித்து ஒரு சனி இரவில் மூடிய அவன் அறையில் இந்த உரையாடல்:
"இன்று என்ன?"
"முதலில் ஊசி போட்டுக்கொள் - பிறகு வலியில் துடித்து விடுவாய்"
சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....
மேசையில் கிடந்த தேவதச்சனின் விரிந்த ஒரு பக்கத்தை புகைப்படத்தில் சிரித்த உமா படித்துக்கொண்டிருந்தாள்.
கைலாசத்தில் புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்
(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)