Friday, June 12, 2009

ஹரி அ . ரி அ. . . . ரி

டிராலியில் தள்ளியவாறே தாய்லாந்து அழகி 'உங்கள் உணவு. மகிழ்வுடன் சாப்பிடுங்கள்' என்றாள்.

"ஹாய், இது அசைவம் போலத் தெரிகிறது - நாங்க வெஜிடேரியன்ஸ்' - ஹரி.

"ஓ, வெரி சாரி. வெஜிடேரியன் தருகிறேன்" என்றவள் திரும்ப அதே பிளாஸ்டிக் புன்னைகையுடன் இரண்டு தட்டுகளை நீட்டினாள்.

இப்போது உமா 'மேம், இதுவும் அசைவம்தான். ஆயிஸ்டர், நண்டு மற்ற கடல் உணவுகள் எல்லாம் எங்களுக்கு வெஜிடேரியன் இல்லை' என்று பதட்டமானாள்.

அப்புறம் அந்த அழகி உம்மென்று வைத்த காபேஜ் இலைகளையும், பெயர் தெரியாத தழைகளையும் மென்று, அதை மறக்க ப்ளாக் காபி குடித்து கண்ணயர்ந்தனர்.

தூங்கும் அவர்களைப் பற்றி:
ஹரி - உயரன். மாநிறன். பொறியியல் படிப்பு. நீங்கள் இப்போது யூகிக்கக் கூடிய கணினி மென்பொருள் துறைதான். இந்தியாவின் ஏழாவது பெரிய நிறுவனத்தின் பல சாமர்த்திய இளைஞர்களுள் ஒருவனாக, நிறைய சம்பளம், நிறைய பயணம், நிறைய எல்லாவுடன் இருந்தவன்…ப்பவன்... க்கப் போகிறவன்?

உமா : அழகி. படிப்பில், செல்வத்தில் ஹரியைவிட கொஞ்சம் அதிகம். பொறியியலுக்குப்பின், மேலாண்மை படித்து, ஐரோப்பிய நிறுவனமொன்றின் இந்திய கிளையில் முக்கிய வேலை.

இவனுள் ஒளிந்திருந்த வடக்கும், அவளில் மறைந்திருந்த தெற்கும் ஈர்க்கப்பட்டு, பிரிக்க முடியாத காந்தமாகி, காதலாகி, கசிந்து...சரி கல்யாணமும் ஆகி விட்டது - அறுபது நாட்களுக்கு முன். சம்பிரதாய தேன்நிலவு, குலதெய்வ சமாசாரங்களை முடித்துக் கொண்டு ஒரு வழியாக ஆபிஸ் போவதே நிம்மதி என்று தோன்றத் துவங்கியது. அமெரிக்கா, யு.கே. என்று ஜொலித்துக் கொண்டிருந்தவனை ரிசஷன் புயல் கிழக்கு ஆசியாவுக்குத் தள்ளி, பள்ளி புவியியல் பாடங்களில் கூட படித்த ஞாபகம் இல்லாத தேசங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். பத்து நாட்கள் மணிலா, ஒரு வாரம் ஜாகர்த்தா, இரண்டு வாரம் பூசன் (கொரியா), ஒரு வாரம் பாங்காக் என்று தென்கிழக்கு ஆசியாவில் மையம் கொண்டான். மாத இறுதிகளில் சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொரு வார இறுதியையும் கொண்டாடினார்கள் - ஒன்றாக.

இவர்கள் உரையாடல், சுமார் பன்னிரெண்டாயிரம் அடி உயரத்தில், பாங்காக்கிலிருந்து காத்மாண்டு செல்லும் விமானத்துள் நடந்தது. ஒரு வாரம் காத்மாண்டு மற்றும் டெல்லி பார்ப்பதாகத் திட்டம். விமானம் டேக்-ஆப் ஆகி ஐம்பது நிமிடங்கள் ஆகி இருந்தது. பிசினஸ் கிளாஸ். போன வாரம் வரை உறுத்திய வள்ளியூரின் குப்பைத் தெருக்கள், மும்பையின் தாராவிச் சிறுமிகள், தேர்தல் அரசியல், பிரபாகரன் எல்லாவற்றையும் மறந்து, உயரே, உயரே...வேறு ஒரு பதப்படுத்தப்பட்ட உலகுள்.. அவனுக்குள் உமா மற்றும் உமா மட்டுமே.

திடீரென்று விமானத்தில் ஏதோ இடித்த சத்தம் மற்றும் அதிர்வு. சில நொடிகளில் விமானம் வலது பக்கமாகவும், பின்நோக்கியும் பாய்ந்து விழத் துவங்கியது. பயணிகளின் பயக்கூச்சலில் விமான ஓட்டி அறிவித்த குழப்ப ஆங்கிலம் யாருக்கும் கேட்கவில்லை. உமா, ஹரியின் கழுத்து, கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள். ஹரியும் பீதியில் கண்ணை மூடி மூடித் திறந்தான். எத்தனை வினாடிகள்? நிமிடங்கள்? மணிகளா? பல கொடூர யுகங்களுக்குப் பின் விமானம் பெரும் பாறையில் மோதி மூன்றாக உடைந்து சிதறியது. நிசப்தம் நிசப்தம்.

மீண்டும் பல யுகங்களுக்குப்பின் உமா கண் திறந்தாள். இருட்டாக இருந்தது. ஒரு குழாய் போல, அதன் முடிவில் வெளிச்சம் கசிந்தது. முழங்காலும், வலது தோளும் நகர்த்த முடியாமல் வலித்தது. கருவெளிச்சம் பழகிய பின் பார்வையால் துழாய்ந்தாள். தான் விமானத்தின் உடைந்து சிதிலமாகிவிட்ட நடுப்பகுதிக்குள் இருப்பதைக் கண்டாள். சில அடிகள் தள்ளி ஒரு கையும், மடங்கிய உடலும் தெரிந்தது. மெல்ல ஊர்ந்து அருகில் சென்று பார்த்தால்...ஹரி. கண் மூடி இருந்தது.

மூழ்கிக்கொண்டே அவளும் நினைவிழந்தாள். யாரோ உலுக்கிவிட்டபோது மெல்லக் கண் திறந்தாள். ஹரியும், இன்னும் இருவரும் அவளைத் தூக்கிக்கொண்டு, வெளிச்சம் நோக்கி நகர்ந்ததை அவளால் முற்றிலும் உணர முடியவில்லை.

'உயிரோடு இருக்கிறேனா - இல்லை இறந்து விட்டேனா? என் இவ்வளவு அமைதி? ஆனால் வலி இருக்கே? - இல்லை இது ஏதோ கொடுங்கனவு. எப்போ தூங்கினேன். விமானம் லேண்ட் ஆகிவிட்டதா' என்று கால் வினாடியில் நூறு கேள்வி-பதில்கள் தோன்றி மறைந்தன.

அவர்கள் விமானம் நொறுங்கியிருந்தது இமாலய பனிச்சிகரங்களில் ஒன்றில். நொறுங்கியது அதிகாலைப் பொழுது. இப்போது எங்கும் கண்ணைக்கூசும் ஒளி, மெல்லப் பரவாமல், திடீரென்று அடித்தது. இந்த நால்வரும் மிக அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பிழைத்திருந்ததை உணர்ந்தார்கள். அதீதக் குளிராக இருந்தது. விமானத்தின் நடுப்பாகம் இன்னும் முற்றிலும் உடையாமல், ஒரு பெரிய குழாய் வடிவில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது.

அந்த மங்கோலியர்கள் பெயர் டானி மற்றும் ஜிங் என்று ஓரளவு புரிந்து கொண்டார்கள். இப்போது பெயரா முக்கியம். டானிக்கு கணுக்காலில் உதிரம் சிந்தியது. ஜிங் முகம், மற்றும் இடுப்புப் பகுதியில் ஒரே இரத்தம். ஹரியின் தாடை, பின்னங்கால்கள், கழுத்து என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் இரத்தம் மற்றும் வலி. டானியும் ஜிங்கும் இயல்பு நிலைக்கு வந்து, விமானத்துக்குள் இருந்தவற்றைத் துழாவ ஆரம்பித்தார்கள். உமாவால் தானாக நகர முடியவே இல்லை. அவளைத் தன் மடியில் கிடத்திய போதுதான் ஹரி அவள் பின்தலையில் இரத்தம் கசிந்து பிசுபிசுப்பதைக் கவனித்தான். சிதில பாகத்துக்குள் நசுங்கிய பிளாஸ்டிக் பாட்டில்கள், போர்வைகள் இருந்தன. சீட்டுகளைக் கிழித்து அரைகுறையாகப் பனிச்சப்பாத்து (ஷூஸ்) செய்தார்கள். தாகம் இருந்ததால் பனிக்கட்டியை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் வரத் துவங்கியது.

ஜிங்கின் கைக்கடிகாரம் மட்டும் அதிசயமாக ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலை 10 மணி என்றது. அதிர்ச்சி போய், 'அடுத்து என்ன' என்ற கேள்வி உமா தவிர மற்ற மூவருக்கும் தோன்ற ஆரம்பித்திருந்தது. உமா இலேசாக முனகியபடி இருந்தாள். ஹரி அவள் பின்மண்டையில் கைவைத்து, இன்னமும் இரத்தம் கசிவதில் திகில் ஆனான். டானி ரோந்து பார்க்கும் விமானம் எப்படியும் நம்மைக் கண்டுபிடித்து, கூட்டிச் செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தான். மதியம் அடித்த வெயிலில் பாட்டில்களில் போட்டிருந்த பனிக்கட்டிகள் உருகி, ஓரளவு அவர்கள் தண்ணீர் குடித்தார்கள். சாப்பிட வேறு எதுவும் இல்லை. இப்போது உமா முற்றிலும் சுயநினைவில்லாமல், மயங்கி, ஹரியின் மடியில் படுத்திருந்தாள்.

இரவு வந்தது. விமான சிதிலத்துக்குள், போர்வைக்குள் தஞ்சமானார்கள். டானியும், ஜிங்கும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஹரி.

"ஒரே பசி. நாளை என்ன செய்வது"

"நீராகாரம்தான்"

"எத்தனை நாள்"

"சாகும்வரை"

"........."

ஹரி அயர்ச்சியில் தூங்கி விட்டான்.

மறுநாள் மதியம், சுற்றுப்புற வானம், மற்றும் பனிச்சிகரங்களில் என்னமோ சொல்லமுடியாத மாற்றம் சடுதியில் ஏற்பட்டு, இவர்களை நோக்கி ஒரு பெரிய பனிமலை அலைபோல பாய்ந்து வந்து கொண்டிருந்தது. இவர்கள் சுதாரிக்கும் முன்பே நால்வரையும் அடித்துச் சென்று எங்கெங்கோ தூக்கிப் போட்டது. அவ்வளவு சருக்கலிலும் தன் மடியிலிருந்த உமாவை வெகுநேரம் உடும்புப் பிடியாக ஹரி பிடித்திருந்தாலும், கடைசியில் இருவரும் பிரிந்து விழுந்து கிடந்தார்கள். டானி, ஜிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

வானம், மலை எல்லாம் இருட்டி விட்டிருந்தது. பின்னிரவில் ஹரி முழித்துக்கொண்டான். விலா எலும்புகள் ஒடிந்திருக்க வேண்டும். உமாவை நினைத்தான். அழுகை வந்தாலும், கண்ணீர் வரவில்லை. மிகுந்த தேக, மன வலியுடன் உறங்கி விட்டான். காலை மீண்டும் பனிமலைகள் நேற்றைய கோரத்திற்கு தாங்கள் பொறுப்பில்லை என்பதுபோல் மெளனமாக இருந்தன. எப்படி விழித்தான், எழுந்து நின்றான், நடக்கத் துவங்கினான் என்று தெரியாது. கிட்டத்தட்ட மாலைவரை மெல்ல மெல்ல நடந்து அவ்வப்போது பனிக்குள் துழாவி, மனைவியைத் தேடினான். விடாமுயற்சி வினையாக்கியது. அவளுடைய பச்சை நிற ஸ்வெட்டர் காற்றில் அசைந்ததில் கண்டுபிடித்தான். ஒரு கால் மடங்கி, மற்றொரு கால் வினோத கோணத்தில் படுத்திருந்தாள். தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று அமர்ந்தான். முகத்தின் பொலிவு அவனை பயமுறுத்தியது

மிகுந்த சிரமத்துடன் வெகு நேரம் அவள் நாசியில் கையையும், இதயத்தில் தன் வலது காதையும் வைத்து அவள் உயிரைக் கூப்பிட்டான். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவளின் வலியற்ற, சோபையான வதனம் அவள் அவனை விட்டுப் போய் விட்டதைச் சொன்னதைப் புரிந்துகொண்டான். ஏனோ அழவில்லை. திடீரென்று மிகவும் பசியும், தாகமுமாக உணர்ந்தான்..

இப்போது அவளைப் பக்கத்தில் கிடத்தி தன் உலர்ந்த உதடுகளால் அவளின் காய்ந்த அதரங்களை முத்தமிட்டான். பின்பு பக்கத்தில் படுத்துக்கொண்டான். சிறு உறக்கத்துக்குப் பிறகு மெல்ல பனித்துகள்களை அப்புறப்படுத்தி பள்ளம் தோண்டினான். உமாவுக்கு நோகாமல் மெல்ல, மிக மெல்ல, ரத்தம் உறைந்திருந்த அவள் பின்தலை படாதவாறு இலேசாக அவளைப் பள்ளத்தில் கிடத்தினான். பள்ளத்தை மூடி, நடக்கலானான். சில நூறு அடிகளில் பெரும் பாதாளம் தெரிந்தது. மற்றொரு பக்கம் செங்குத்தாக, ஒரு பெருஞ்சுவர் போல மலை எழும்பி இருந்தது. உடல், மனது எல்லாம் குறுகி, சுருங்கி, ஒரு புள்ளியாகி, மீண்டும் உமா இருந்த இடத்திற்கு வந்து, மயங்கி விழுந்தான்.

**********

ஆறு மாதம் கழித்து வீட்டுக் கதவைத் தட்டிய நேஷனல் ஜியாகிரபி ஆட்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்து அவர்கள் அவன் தப்பித்து வந்த சாகசக் கதையை அவனே சொல்வதைப் படம் பிடித்தார்கள். அவர்களின் வழக்கமான, 'ஏன், எதற்கு, எப்படி' எல்லாவற்றுக்கும் ஞாபகத்திலிருந்து பதில் கொடுத்தான். காமெரா அவனை எண்களாக்கியது.

"உங்கள் வலது கையின் சுண்டு விரலும், மோதிர விரலும் ....."

"ஹ்ம்ம்.. வேண்டாம் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை"

தொகுப்பாளினி "பனிக்கடியில் இரு விரல்கள் இழந்த கை” என்றபோது, காமெரா zoom ஆனது.

இரண்டு வாரம் கழித்து ஒரு சனி இரவில் மூடிய அவன் அறையில் இந்த உரையாடல்:

"இன்று என்ன?"

"முதலில் ஊசி போட்டுக்கொள் - பிறகு வலியில் துடித்து விடுவாய்"

சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....

மேசையில் கிடந்த தேவதச்சனின் விரிந்த ஒரு பக்கத்தை புகைப்படத்தில் சிரித்த உமா படித்துக்கொண்டிருந்தாள்.

கைலாசத்தில் புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

53 comments:

அகநாழிகை said...

ஆரம்பத்தில் சுஜாதா நெடியுடன் இருந்தது. பிறகு கதையின் சுவாரசியம் அதை மறக்கச் செய்து விட்டது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Mahesh said...

நல்ல சுவாரஸ்யமான நடை.... to the reader, more scope for imagination.....

Mahesh said...

கதையைப் படித்த பின் Trishna Expedition ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

(ஸ்வாமி... இப்பிடி ஒரு அட்டகாசமான கதையை எழுதிட்டு என்னையும் எழுதச் சொல்றீங்களே... மனசாட்சியே இல்லையா உங்களுக்கு... :))))))))))))))))

புதியவன் said...

மிக அற்புதமான நடையில் அருமையான கதை...

//கைலாசத்தில் புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்//

முத்தாய்ப்பாய் கவிதை

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

வால்பையன் said...

ஒரு முடிவோட தான் இருப்பிங்க போல!

ஆரம்பத்தில் ஆங்கிலபடம் பார்ப்பது போல இருந்தது!

முரளிகண்ணன் said...

அனுஜன்யா,

சென்னை வரும்போது எனக்கு டிரீட் உண்டுதானே?

வெண்பூ said...

அற்புதமான கதை அனுஜன்யா... போட்டியில் வெற்றி பெற்று விட்டதற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

सुREஷ் कुMAர் said...

நல்ல அருமையான எழுத்துநடை..
கதைமுழுக்க சுவாரசியம் குறையாமல் டக்கரா இருந்தது..
வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

சென்ஷி said...

:-)

கலக்கல்!

सुREஷ் कुMAர் said...

//
சாப்பிட வேறு எதுவும் இல்லை
//
விழுந்த விமானத்தில் உணவுப்பொருள் இருந்திருக்குமேபா..
பல உடைமைகள் இருக்கும்போது உணவுப்பொருள்களும் இருக்குமே..?

விஜய் ஆனந்த் said...

Brilliant!!!

ராமலக்ஷ்மி said...

விறுவிறுப்பான நடை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்![மற்றவர்கள் பிழைத்துப் போகட்டும் என இந்தக் கதையை எழுதி முடித்ததும் உங்களுக்குத் தோன்றவில்லையா:)?]

கார்க்கிபவா said...

என்ன இதெல்லாம்... எங்களுக்கு நிறைய வேலை இருக்கே... அதான் படிக்கறவங்க..

என்னமோ போங்க.. போய் பரிசை வாங்கிக்குங்க

Kumky said...

பெரிய பின்னூட்டம் போடனும்னு ஆசை/ நேரமின்மையால் பின்னர் தொடருகிறேன்.

Mahesh said...

கேக்க விட்டுப் போச்சு... ஹரி அகோரியா அர்த்தநாரியா?

நர்சிம் said...

மொதொப் பரிசாகா இருக்கூடும்...

நல்ல வேளை..அந்த விளக்கங்களைப் படித்து விட்டு வந்தேன்.. பசி நேரத்துல...

கை குலுக்கல்கள்..

மணிகண்டன் said...

அனுஜன்யா, நீங்க தேர்வுக்குழு உறுப்பினரா இருக்கலாம். போட்டியில கலந்துக்கறது எல்லாம் ஓவரு.

கதை சூப்பர். வாழ்த்துக்கள்.

அது என்ன சப்பாத்து ? ஷூன்னு எழுத வேண்டியது தான ? நீராகாரம்ன்னு எழுதி இருக்கீங்க. ஷூல மட்டும் என்ன தமிழ் பற்று ?

இராம்/Raam said...

அருமை.... :))

மாசற்ற கொடி said...

வாவ் ! ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு !

"இருந்தவன்…ப்பவன்... க்கப் போகிறவன்?" - சூப்பர்.

"உலர்ந்த உதடுகளால் அவளின் காய்ந்த அதரங்களை" - தமிழ் வளம்

வாழ்த்துக்கள் !

அன்புடன்
மாசற்ற கொடி

Unknown said...

அனுஜன்யா,

ஒரு த்ரில்லர் போல் ஆரம்பித்து
கடைசியில் “ஓம் சிவோகம் சிவோகம்
ருத்ரநாபம் பஜே..ஹம்”ன்னு

”நான் கடவுள்”?புரியது...புரியது.

நேசமித்ரன் said...

அற்புதம் !
ஆகாசம் துவங்கி பாதாளம் பாய்ந்து
பூமிக்கு திரும்பும் கதையும் நடையும் ....
தலைப்பும் இறுதிக் கவிதையும் இணைத்திருக்கும் புள்ளி அருமை

Kathir said...

யூத் சார்,

கதை நல்லா இருந்தது.

வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

சுவாரஸ்யமா போய் கடைசியில் இரண்டு வரிகளில் கதையில் டிவிஸ்ட்டை கொண்டு வந்துட்டீங்க...ஆனா ரொம்ப யோசிச்சதுக்கு பிறகு தான் புரியுது..

கலக்கல் நாரேசன்.. வாழ்த்துக்கள் அனுஜன்யா!

ஆ.சுதா said...

மிக நல்லக்கதை கடைசி வரை ஈர்ப்பு
வெற்றி பெற வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

நல்லாருக்கு கதை அனுஜன்யா -
உயரன் - மாநிறன் - அழகன் - மற்றும் ஹரியினைப் பற்றிய வர்ணனை அனைத்தும் அருமை.

நல்ல முடிவு

நல்வாழ்த்துகள் அனுஜன்யா

Sridhar V said...

வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தேவதச்சன் கவிதை மிகவும் apt.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

ச.முத்துவேல் said...

என்னதிது ! அதகளம் பண்றீங்க. வாழ்த்துகள்.

வெட்டிப்பயல் said...

//சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....//

அர்த்தனாரி அகோரி?

க.பாலாசி said...

முடிவை புரிந்துகொள்ளவே 3 முறை படித்தேன். நன்றாக இருந்தது. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

ம்ம்ம் பரிசுக்கான முத்திரைக் கதை!

அன்புடன் அருணா said...

ம்ம்ம் பரிசுக்கான முத்திரைக் கதை!

Anonymous said...

எக்ஸலண்ட்.

இதுக்குமேல சொல்லத் தெரியல.

நான் கதை எழுதும் முடிவை மாற்றிக் கொண்டேன்.

தினேஷ் ராம் said...

எனக்கு மட்டும் ஏன் புரியல? எனக்கும் புரிய வைக்க முடியும் என்று நம்புகிறவர்கள்... நம்பிக்கையை செயல் படுத்த நினைத்தால், dinesh_moto@yahoo.co.in ற்கு மின்னஞ்சல் இடுங்கள்.

சின்னப் பையன் said...

:-)

கலக்கல்!

வணங்காமுடி...! said...

கதை ரொம்ப நல்லா இருக்கு அனுஜன்யா.... எனக்கு என்ன ஆச்சரியம்னா, அது எப்படி நானும் விமான விபத்து பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன்? என்னா ஒற்றுமை, என்னா ஒற்றுமை?

சரி அதை விடுங்க... வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்

கிருத்திகா ஸ்ரீதர் said...

கலக்கீட்டீங்க ... வாழ்த்துக்கள்.

யாத்ரா said...

அருமையான கதை, நல்ல நடை, விவரணைகள், விமானக்காட்சிகள், மிக நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியளிக்கும் நடை. கடைசியில் தேவதச்சன் கவிதை, முடிவு அருமை, பனிச்சிகர காட்சிகளின் தத்ரூபம். நல்லதொரு வாசிப்பனுபவத்தை நல்கியது இந்தக் கதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல நடை..படித்து முடித்தும்...நினைவில் மறக்கமுடியாது நிலைத்துவிட்டது..கவிதையும்...முடிவும்..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

:) சமீபத்தில்தான் உங்கள் வலைப் பக்கங்களை ஒன்று விடாமல் படித்தேன்.
இன்று உரையாடலில் புது கதைகள் படிக்கலாம்னு வந்தேன். சூப்பர் ஸார்!

அ.மு.செய்யது said...

க‌தையின் நீள‌த்தை எழுத்தின் சுவார‌ஸ்ய‌ம் ம‌ழுங்க‌டித்து விட்டது.

சொற்க‌ளை எங்க‌ன‌ம் கையாள்கிறீர்க‌ள் ?? க‌தையை எப்ப‌டி ந‌க‌ர்த்துகிறீர்க‌ள் என்ற‌ பாணி
நிச்ச‌ய‌ம் சிறுக‌தை எழுத‌ ஆர‌ம்பித்திருக்கும் புதிய‌வ‌ர்க‌ளுக்கு ஒரு கையேடு போன்று வ‌ழிகாட்டும்.

அச‌த்த‌ல் ந‌டை அனுஜ‌ன்யா அவ‌ர்க‌ளே !!!

விநாயக முருகன் said...

அருமை. கதையின் நடுவிலேயே ஒரு புதிர்த்தன்மையை நோக்கி கதை நகர போவதை ஊகித்தேன். தேவதச்சன் கவிதையுடன் முத்தாய்ப்பாக முடித்தது அருமை. உங்கள் கதை படித்து முடித்ததும் எனக்குள் வரிகள் ஓடியது.


எப்பவாவது ஒரு
கொக்கு பார்க்கும் நகரத்தின்மேலே
என்
கவசமும் வாளும்
உருகி ஓடும்
ஊருக்கு வெளியே

anujanya said...

@ அகநாழிகை

உண்மைதான் வாசு. நன்றி.

@ மஹேஷ்

Trishna? I can recall now. ஆனால் எழுதும்போது உண்மையில் ஞாபகம் இல்லை. உன் கதை அட்டகாசமா இருக்கு மஹேஷ். நன்றி.

@ புதியவன்

நன்றி புதியவன். உங்களுக்குப் பிடிக்காத கவிதையா?

@ வால்பையன்

வாங்க குரு. ஆங்கிலப் படம்? கொஞ்சம் ஓவரா இல்ல. நன்றி குரு.

@ முரளிகண்ணன்

ட்ரீட்? நிச்சயமா. நீங்க, நர்சிம், லக்கி எல்லாம் தர தானே போறீங்க. நன்றி முரளி.

@ வெண்பூ

அப்பாடா, எங்க கதை புரியலன்னு சொல்லுவியோன்னு பயந்தேன். நன்றி வெண்பூ.

@ சுரேஷ்

வாங்க சுரேஷ். விமானத்தில் உணவு கிடைத்திருக்கலாம். ஆனா இந்த விமானத்தின் நடுப்பகுதி என்பதால் கிடைக்கவில்லையோ :) நன்றி சுரேஷ்.

@ சென்ஷி

நன்றி சென்ஷி.

@ விஜய் ஆனந்த்

நன்றி விஜய்

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ. உங்க கேள்விக்கு - :)))

@ கார்க்கி

நன்றி சகா. எல்லாம் முருகன் அருள் :)

@ கும்க்கி

வாங்க தல. எதோ பெருசா திட்டப் போறீங்களோன்னு பயமா இருக்கு. நன்றி.

அனுஜன்யா

anujanya said...

@ மஹேஷ்

உன் கேள்விக்கு தலைப்பில் பதில் இருக்கே மஹேஷ்.

@ நர்சிம்

வாவ், அப்படியா பாஸ்? நன்றி.

@ மணிகண்டன்

நன்றி மணி. யோவ், சப்பாத்து என்ற சொல் எனக்கும் தெரியும்னு எப்படிக் காமிக்கறது :)) நீராகாரம்? நீருணவு? என்ன விட்டு விடுப்பா.

@ இராம்

வாங்க தல. ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வருகை. நன்றி.

@ மாசற்ற கோடி

நீங்களும் தான். நன்றி மா.கொ

@ அசோக்

இந்தப் புன்னகை என்ன விலை கவிஞரே? நன்றி அசோக்.

@ ரவிசங்கர்

வாங்க சார். உங்களுக்குப் புரியாததா? நன்றி ரவி.

@ நேசமித்ரன்

உங்க பெயரே எவ்வளவு அழகா இருக்கு. நன்றி நண்பா.

@ கதிர்

நன்றி கதிர். 'யூத்' என்கிற பாரு. அது அது.

@ தமிழ் பிரியன்

வாங்க ஜின்னா. நன்றி. அறுபதாம் கல்யாணம் ஆச்சா :)

@ அப்துல்

உனக்கு இருக்கு. சென்னை வரும்போது தனியா கொடுக்குறேன். நன்றி.

@ முத்துராமலிங்கம்

நன்றி முத்து.

@ சீனா

வாவ், சீனா சார் வந்து விட்டார். நன்றி அய்யா.

@ ஸ்ரீதர்

நன்றி ஸ்ரீதர். ஆமா, உங்க கதை ரெடியா? இல்ல நான் சரியா பார்க்கலியா?

அனுஜன்யா

anujanya said...

@ முத்துவேல்

வாங்க முத்து. நன்றி. உங்க தளத்துக்கு வந்து ரொம்ப நாட்கள் ஆச்சு. கோவிச்சுக்காத.

@ வெட்டிப்பயல்

வாங்க கதாசிரியர். உனக்குத் தெரியாததா பாலாஜி? தலைப்பிலேயே இருக்கே. நன்றி.

@ பாலாஜி

ஒரு பாலாஜி வந்தவுடன் இன்னொரு பாலாஜி. நன்றி நண்பா.

@ அருணா

நன்றி ப்ரின்சி. (இரண்டு முறை பாராட்டியதுக்கும்)

@ வேலன்

நன்றி வேலன். அதெல்லாம் கிடையாது. நீங்களும் எழுதியே ஆகணும்.

@ சாம்ராஜ் பிரியன்

வாங்க தினேஷ்? உங்க கதையும் படிக்கணும். என் மின்னஞ்சல் முகவரி anujanya@gmail.com. நன்றி.

@ இச்சின்னப் பையன்

வாங்க தல. நன்றி.

@ வணங்காமுடி

இதத்தான் great men think alike என்பார்களோ! கொஞ்சம் ஓவர் இல்ல. நன்றி சுந்தர்.

@ கிருத்திகா

கவிதாயினி சொன்னால் ..சரியாத்தான் இருக்கும் நடுவர்களே. நன்றி கிருத்திகா.

@ யாத்ரா

வாங்க யாத்ரா. உங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. நீங்க எழுதலியா? நன்றி உங்கள் வருகைக்கு.

@ ராதாகிருஷ்ணன்

வாங்க சார். உங்கள மாதிரி சீனியர் சொன்னா அதோட மவுஸே தனி. நன்றி சார்.

@ விதூஷ்

வித்யாவிலிருந்து விதூஷ்? நன்றி உங்கள் முதல் வருகை மற்றும் பாராட்டுக்கு.

ஒரே அதகளம் பண்றீங்க. பக்கோடா, கவிதை, மழலைப் பாட்டு, சமையல் மற்றும் ஹிந்தியில் என்னவோ என்று. Very interesting.

@ செய்யது

வாப்பா. நீயே புகழ்ந்தால் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு செய்யது. நன்றி.

@ விநாயகமுருகன்

உங்கள் முதல் வருகை? நன்றி. (உங்க கவிதை உயிரோசையில் வந்துருக்கா? பார்த்த ஞாபகம்)

நன்றி அனைவருக்கும்.

இந்தக் கதையில் கடுமையான விமர்சனங்களும் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பார்ப்போம் :)

அனுஜன்யா

Cliffnabird said...

வணங்காமுடி கூற, உங்கள் ப்ளாகில் நான் படித்த முதல் பதிவு, மிக அருமை, தொடர்ந்து வாசிப்பேன்..

M.Rishan Shareef said...

வர்ணனைகள் வித்தியாசமாக உள்ளன !

வெற்றிக்கு வாழ்த்துக்கள் !

thamizhparavai said...

முதல் தடவை படிச்சேன்.. புரியலை..
ரெண்டாவது தடவை ...ம்ஹூம்..
மூணாவது தடவையாச்சும்... ????
சரி நாலாவது தடவை...ம்ம்ம்ம்ம் அழுதுடுவேன்...
அனுஜன்யா சார்...எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்கு...

anujanya said...

@ cliffnabird

மலை முகடும் சிறு பறவையும் என்னும் உங்கள் பதிவின் முதல் கவிதையே பெயராகி விட்டதா? வருகைக்கு நன்றி. மீண்டும் வாருங்கள் செந்தில்.

@ ரிஷான்

வாங்க ரிஷான். நன்றி.

@ தமிழ்ப்பறவை

அவ்வளவு புரியாமலா இருக்கு? பின்னூட்டங்களைப் பாருங்களேன். நன்றி பரணி.

அனுஜன்யா

Athisha said...

எங்கே அந்த ஆயிரத்து ஐநூறு பொற்காசுகள்..

☼ வெயிலான் said...

இந்தக் கதையை மொதவே படிச்சிருந்தா, நான் கதையே எழுதியிருக்கவே மாட்டேன்.

அருமையான கதைஜி!

விநாயக முருகன் said...

என் முதல் வருகை. எனக்கு இங்கு பதிவர்கள் யாரையும் தெரியாது. எல்லாம் புதுமுகங்கள்.
உயிரோசை, கீற்று தவிர நவீன விருட்சத்தில் சில (சொற்ப) கவிதைகள் எழுதியுள்ளேன்.

ஷைலஜா said...

excellent! வேறேதும் சொல்ல இயலவே இல்லை.
மிகத்தாமதமாகப்படித்து பின்னூட்டமிடுகிறேன்.ஆனாலும் என்ன உயர்ந்த கோபுரங்கள் கண்ணில்படத்தான் செய்கின்றன கண்டதும் கைகுவியத்தான் செய்கிறது! வாழ்த்துகள்!

anujanya said...

@ அதிஷா

உங்க முதல் வருகை? பொற்காசுகள் சென்னையில் தான் நிறைய இருக்குன்னு சொல்றாங்க. அதிஷா, லக்கி, நரசிம், முரளி என்று. நன்றி அதிஷா.

@ வெயிலான்

யோவ், இது எல்லாம் டூ மச். உங்க கதை எனக்கு மிகப் பிடித்து. நன்றி ரமேஷ்.

@ விநாயகமுருகன்

நன்றி வி.மு. வாங்க, வந்து ஜோதியில் கலந்து விடுங்கள் :)

@ ஷைலஜா

வாவ், வாங்க மேடம். உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன். உங்க கிட்டிருந்து இத்தனை பாராட்டு வந்ததில் பரிசு கிடைத்து விட்ட உணர்வு. Thanks a lot Shailaja.


உங்கள் நால்வருக்கும் - சாரி, உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதில் இத்தனை நாட்கள் தாமதம். Hope you dont mind.

அனுஜன்யா