Tuesday, December 8, 2009

சென்னை - சில தினங்கள் சில குறிப்புகள் – Part I

இரு வாரங்களுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். (வந்திருந்தேன்னு எழுதணுமா?). ஆபிஸ் மெயில் ஓபன் செய்தால் அரை டஜன் மின்னஞ்சல்கள் திட்டி வந்திருந்ததால் அவசரமாக மூடிவிட்டு 'மொழி விளையாட்டு' விளையாடச் சென்றால், 'இன்று சென்னையில் பதிவர் சந்திப்பு' என்றது. கிட்டத்தட்ட ஒதெல்லோ ரேஞ்சுக்கு யோசித்தேன் - 'செல்லுவதா; செல்லாமலே தப்பிவிடுவதா;' விதி (ஐ மீன், மற்ற பதிவர்களின் விதி) யாரை விட்டது? நர்சிமுக்குத் தொலைபேசினேன். கொஞ்சம் பிகு செய்து கொள்ள முயற்சிக்கையில் 'ஆமா, முடிஞ்சா வாங்க' என்ற தொனியில் அவர் பேச, நான் கலவரப்பட்டு 'இல்ல இல்ல நான் வரேன். ஆனா, என் கவிதைகளைப் பற்றி ..' என்றவுடன் 'தல, வா.மணிகண்டன், நரன் மற்றும் ஜ்யோவ் போன்ற உண்மையான கவிஞர்கள் வராங்க. போலிகளை யாரும் பொருட்படுத்துவதில்லை. வாங்க, நானு, நீங்க, ஆதி எல்லாரும் ஜோதியில் கலந்து விடுவோம்' னு சொன்னார். 'ச்சே கஷ்டப்பட்டு இலக்கியவாதி இமேஜுக்கு எவ்வளவு பில்ட் அப் கொடுத்திருக்கோம்; இரக்கமே இல்லாம நொறுக்குரானே மனுஷன்' னு வருத்தமா இருந்தாலும் போயிட்டு வந்தேன்.





பதிவர் சந்திப்பு விவாதங்களின் சாராம்சம் பற்றி நர்சிம் மற்றும் ஆதி, மோகன் குமார் அனைவரும் சுறுசுறுப்பாக எழுதி விட்டார்கள். அதனால் நான் ஒன்றும் எழுதப்போவதில்லை. (ம்ம், பெருமூச்சு சப்தம் கேட்கிறது). மணிகண்டன் மிக இளமையாக இருக்கிறார். நரன் ரொம்ப சீரியசாக இருந்தார். கவிதை என்றாலே எப்போதும் தவழும் நமட்டுச் சிரிப்பு லக்கியிடம். மற்ற எல்லோரிடமும், குடியரசு தின மிட்டாய்க்காக காத்திருக்கும் குழந்தைகளின் களைப்பு தெரிந்தது. புருனோ சிரித்துப் பேசிவிட்டு சீக்கிரம் கிளம்பினார். லேட்டா வந்த அப்துல்லா அதைச் சரிக்கட்டுவதற்காக உடனே எஸ்கேப் ஆகிவிட்டார். முதன் முறையாகப் பார்த்த நபர்கள் காவேரி கணேஷ், அதியமான், கணேஷ் (நம்ம சிஷ்யப்புள்ள), ஜெட்லி இரட்டையர், மோகன் குமார், கனகு, அசோக் மற்றும் ஒரு வாசகர். தாமதமாக வந்த கேபிள் மீசை மழித்ததில் வயது 15 முதல் 45 வரை சொல்லக் கூடிய தோற்றம். முரளி கண்ணன் 'தமிழ் சினிமாவில் இது வரை இடம் பெற்ற ஜப்பானிய ஹை கூக்கள் ' மேட்டருக்கு மணிகண்டன்/நரன் சொல்வதிலிருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். லேகா சற்று தாமதமாக வந்தவர் எனக்கு அருகாமையில் அமர்ந்தார். இந்தப் பக்கம் வா.ம.; அந்தப் பக்கம் லேகா. என்னடா இது இலக்கிய இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று பயந்திருந்தேன். நல்ல வேளை, நர்சிம் சொன்ன மாதிரியே யாரும் பொருட்படுத்தவில்லை. ஜ்யோவ் மற்றும் பைத்தியக்காரன் எங்கே நான் உரையாடல் கவிதைப் போட்டி பற்றி பேசி விடுவேனோ என்ற பயத்தில் என்னைத் தவிர்த்து விட்டனர்.




அடுத்த நாள் கிண்டி செல்வதற்கு ஒரு ஆட்டோ (ரொம்பத் தான் தைரியம்) பிடித்தேன். மீட்டரெல்லாம் கிடையாது. நூறு ரூபாயில் துவங்கிய பேரம் எண்பதில் படிந்தது. ஆதம்பாக்கத்தில் உள்ள அத்தனை குறுக்கு சந்துகள் வழியே மடுவாங்கரை அடைந்தது ஆட்டோ. பிறகு, அங்கு ஆட்டோவின் முன்-சக்கரம் மட்டும் செல்லும் அளவில் ஒற்றையடிப் பாதை. முதலில் சற்று சினேக பூர்வமாகச் சிரித்ததில் துணிவு பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வசனங்களில் சில:

மேடு பள்ளங்களில் குலுங்கியபோது - "இதேன் காட்டி மெயின் ரோட்ல போன இப்பிடி குலுங்குமா? பாரு, எத்தினி மனுசங்க!

மய வரும்னாங்க. ஒன்னியும் காணோம். மய நல்லா பென்ஜாதான் தன்னி கஸ்டம் போவும். அதுவும் ஒரு அம்பது சனங்க செத்தாதான் சரி வரும்.

நான் 'மழைல செத்துப் போவது ஏழை-பாழைங்க தானே. ரொம்ப பாவமில்லையா' என்றேன்.

'அதுக்கு என்னா பண்ருது. மீதி அஞ்சு லட்சம் பேரு சந்தோசமா இருப்பாங்கல்ல?'

'கலீஞரு போன வாரந்தான் தற்காலிகமா வீடு சான்சன் பண்ணியிருக்காரு. இன்னும் ஆறு மாசத்துல நல்லா தலம் போட்ட வீடு கொடுப்பாரு. ஏன் சொல்லு ஆறு மாசம்? '

நான் 'தெர்லபா' என்றேன்.

'இன்னாபா, அப்பத்தான் ஏலேஷன் வரும். சனங்க மனசிலியும் நிக்கும்'

இடையில், ஒரு சிகப்பு சுழல் விளக்கு சுழன்று கொண்டிருந்த காரில் மந்திரியோ, எம்.எல்.ஏ. வோ எதிர் சாரி போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு நின்றது. நம்ம ஆட்டோ காரர், அவர் கார் கதவைத் தட்டி, அந்த டிரைவர் கிட்ட 'ஏம்பா, இது என்ன மெயின் ரோடா? இங்க எல்லாரும் ஒண்ணுதான். நீ வெளக்கு போட்டுகினே வந்தா காட்டியும், எல்லாரும் வயி விடுவாங்களா? எங்கப்பா எடம் இருக்குது' என்று கெக்கலித்தார்.

கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் இறக்கி விட்டார். நூறு ரூபாய் கொடுத்தேன். இருபதை கொஞ்சம் தயக்கத்துடன் திருப்பிக் கொடுத்தார். ஓஹோ, இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறார் என்று தோன்ற, 'என்னப்பா, சரிதானே, இல்ல இன்னும் வேணுமா?' என்றேன். உடனே அவசரமாக, ' சார், எப்பவும் எலுவது தான் வாங்குவேன். இதுவே ஜாஸ்தி சார்' என்று திகைக்க வைத்தார். இந்த அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும்.

ஒரு எச்சரிக்கை: இதன் அடுத்த பகுதி ஒரு வேளை சீக்கிரத்தில் வெளிவரலாம். இல்லை வராமலே போகலாம். என்ன? வானிலை அறிக்கை மாதிரி இருக்கிறதா?

**********************************************************************

31 comments:

Ashok D said...

அப்பாடி.. என் பேரே நீங்களாவது குறிப்பிட்டீங்களா.. ரொம்ப நன்றி தலைவரே..

ராமலக்ஷ்மி said...

//எல்லோரிடமும், குடியரசு தின மிட்டாய்க்காக காத்திருக்கும் குழந்தைகளின் களைப்பு தெரிந்தது.//

:))))!

//இந்த அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும்.//

ஹூம். உண்மைதான்.

Ashok D said...

//அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும்.//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சுயிருக்கு

//கொஞ்சம் பிகு செய்து கொள்ள முயற்சிக்கையில் 'ஆமா, முடிஞ்சா வாங்க' என்ற தொனியில் அவர் பேச, நான் கலவரப்பட்டு 'இல்ல இல்ல நான் வரேன்//

இதுலயும்தான் ;)

Raju said...

போட்டோஸ் நல்லாருக்கு.

Rajan said...

//எங்கே நான் உரையாடல் கவிதைப் போட்டி பற்றி பேசி விடுவேனோ என்ற பயத்தில் என்னைத் தவிர்த்து விட்டனர்.
//
இந்த அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும்.

மண்குதிரை said...

எப்பவும் போல் சுவாரஷ்யமான நடை

கணேஷ் said...

கவிதை எழுதாமல் சென்று
கஷ்டப்படுத்தியதற்கு தளபதியின்
கண்டனங்கள்!

'சிஷ்யபுள்ள' க்கு நன்றி :)

தீபா said...

சுவாரசஸ்யமான நடை, இடையிடையே மெலிதான நகைச்சுவை :-)

Thamira said...

damaal.!

hihi.. vazukkichsellum nadai. athaan vazukki vizunthutten.!

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும்.

//

i am sorry...பட்ஜெட்டைச் சென்றடையும்...ஆனால் ஏழைகளை அடையுமான்னு சொல்ல முடியாது :(

அ.மு.செய்யது said...

சென்ஸ் ஆஃப் ஹியூமர் ஜாஸ்தி தல உங்களுக்கு..!!!

சிறுகதை எழுத ஆரம்பிச்சிங்கன்னா கல்லா கட்டலாமே !!!

தராசு said...

பயணக் கட்டுரையா, நீங்களுமா

அந்த சிவப்பு விளக்குக்கு ஆட்டோக்காரனின் பதில் .......

சூப்பரப்பூ.

முபாரக் said...

:-)))))

இப்படி ஒரு சந்திப்பு நடக்கவே இல்லன்னு நெனச்சிட்டு படிச்சாலும் உங்க எழுத்து செம சுவாரஸ்யம்.

ஐந்து லட்சமா? ஐம்பது லட்சமா?

சினேகபூர்வம்,
முபாரக்

நேசமித்ரன் said...

யப்பப்பா என்ன ஒரு நடை சும்மா வழுக்கிகிட்டு போகுது

கலக்குங்க

Karthik said...

ப்ச், நான் மிஸ் பண்ணிட்டேன். கோவைல இருந்தேன்.

அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன். :))

கார்க்கிபவா said...

//நீங்க, ஆதி எல்லாரும் ஜோதியில் கலந்து விடுவோம்' னு சொன்னார். 'ச்சே கஷ்டப்பட்டு இலக்கியவாதி இமேஜுக்கு எவ்வளவு பில்ட் அப் கொடுத்திருக்கோம்; இரக்கமே இல்லாம நொறுக்குரானே மனுஷன்' னு//

ஆதியோட கலர் கவுஜயை கண்டுக்கலையா சாமீ? இப்பலாம் ஆதியும் எலக்கியவாதிதாம்ப்பா.

//மணிகண்டன் மிக இளமையாக இருக்கிறார்//

த்தோடா. சார் பக்கத்துல யார் நின்னாலும் அப்பிதாம்ப்ப்பா தெரிவாங்க.

// எங்கே நான் உரையாடல் கவிதைப் போட்டி //

இன்னாப்பா கொயப்புற? அது உரையாடலா,இல்ல கவிதயா?

//இந்த அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும். //

செல்ஃப் டேமேஜ் பண்ற மாதிரி க்கீதே :)))


இவ்ளோ தூரம் வண்ட்டு நம்மள கண்டுக்காம விட்டுட்டுயே மவராசா!!! :)))))

Cable சங்கர் said...

தலைவரே நீஙக் எனனி பத்தி எழுத நினைச்சது 15-25ன்னுதானே. மிஸ்டேக்கை சரி பண்ணீருங்க..

அப்புறம் அருமையாய் வழுக்கி செல்லும் நடை. ஏற்கனவே ஆதி விழுந்திட்டாரு...

அது சரி என்ன இன்னும் நம்ம “கவிதை”ய பத்தி ஏதும் சொல்லக்காணோம்.. போன் பண்ணி கவித சொல்லிருவேன் சாக்கிரதை.. ஆமா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அ.மு.செய்யது said...
சென்ஸ் ஆஃப் ஹியூமர் ஜாஸ்தி தல உங்களுக்கு..!!!

சிறுகதை எழுத ஆரம்பிச்சிங்கன்னா கல்லா கட்டலாமே !!!

:))))))))))

ippadi usupeethi usupeethiyee

கமலேஷ் said...

உங்களுடைய எழுத்து நடை எல்லா காட்சிகளையும் கண் முன் kondu வருகிறது...
ரொம்ப நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்..

யாத்ரா said...

ரொம்ப ரசித்துப் படித்தேன். அப்படியே பேசற மாதிரியே எழுதறீங்க, எழுதற மாதிரியே பேசறீங்க, ரொம்ப ஸ்வாரஸ்யம்.

thamizhparavai said...

நல்லா ஷோக்காத்தான் எயுதிகீறீக்கப்பா...
அடுத்த பகுதியைப் போடவும்...(அதற்குள் அடுத்த பதிவர் சந்திப்பே வந்துவிடும்)...
வட இந்தியப் பதிவர்களுக்கு ஒரு சந்திப்பு உங்க தலைமையில வச்சா என்ன?(செலவெல்லாம் நீங்களே பாத்துக்குங்க)
//சிறுகதை எழுத ஆரம்பிச்சிங்கன்னா கல்லா கட்டலாமே !!!//

வாங்க செய்யது... உங்களைத்தான் பாத்துக்கிட்டிருக்காங்க...கல்லா கட்டுறது சரி.. ஜ்யோவ்ராம் சுந்தர்கிட்ட யார் வாங்கிக் கட்டிக்கிறது...ஏற்கெனவே அவர் மேல கிரீஸ் வாடை அடிக்குதுன்னு கேள்வி...

thamizhparavai said...

//15-25ன்னுதானே. மிஸ்டேக்கை சரி பண்ணீருங்க.. //
அது 35-45 ஆம்... மிஸ்டேக்தான்...

நர்சிம் said...

மிக நல்ல பயணக்கட்டுரை.

வெகு சுவாரஸ்யம். சில சுவாரஸ்யங்களை விட்டிருந்த பொழுதிலும்.

அடிக்கடி வரவும். அடிக்கு அடி.

பா.ராஜாராம் said...

உற்சாகமாயிட்டா கெட்ட வார்த்தை சொல்லி முதுகுல ஒரு போடு போட்டு கட்டிப்பிடிசுக்குற தோணும்.அப்பிடிதான் தோணுது அனு,இப்ப.. :-)

.யூத்து யூத்துன்னு உயிரை விட ஒரு கூட்டமே இருக்கு.சேம் பின்ச் பண்ணா தாங்காது உடம்பு.ஒன்றை இஞ்சு உடம்பு.

என்னா அழிச்சாட்டியம் பண்றீங்க நடையில!..

(போலிங் ஆக மாட்டேங்குது தமிழிசில்..இல்லை நமக்குதான் வித்தை பத்தலையா?..)

"உழவன்" "Uzhavan" said...

சே.. வர முடியாம போச்சே ஜி :-)

creativemani said...

நன்றாக இருந்தது தங்களின் பதிவு...

// நான் 'தெர்லபா' என்றேன் //

நல்லவேளை அவன்கிட்ட இலக்கியத் தமிழில் பேசலை... துட்டே.. ச்சே.. பணமே வாங்கியிருக்க மாட்டான்..

:)

Anonymous said...

நல்ல தண்ணி போல நடை சரளமா இருக்கு . இந்த கவிதை கருமாந்திரத்தை எல்லாம் விட்டுட்டு இது மாதிரி எழுதலாமே !! செய்யது சொன்னா மாதிரி கதை எழுதுவதற்கு ஏற்ற நடை இருக்கே .
கவிதை பதிவுகளில காலய்த்த அதே "நல்ல" அனானி

anujanya said...

@ அசோக்

வாங்க கவிஞர். உங்கள விட முடியுமா :)

நன்றி அசோக்

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ.

@ அசோக் (மீண்டும்)

யோவ்.

@ ராஜு

செம்ம குசும்புயா உனக்கு. நன்றி ராஜு

@ ராஜன் ராதாமணாளன்

நன்றி ராஜன்

@ மண்குதிரை

சுவாரஷ்யம்? :)))
நன்றி நண்பா.

@ கணேஷ்

தளபதிக்கு ..பொறுமை ..அமைதி... நன்றி கணேஷ்.

@ தீபா

நன்றி தீபா. நீங்கள் பதிவு எழுதுகிறீர்களா?

@ ஆதி

இந்த வயதான காலத்தில் பார்த்து வரக்கூடாதா? நன்றி ஆதி

@ அப்துல்லா

அதுவுஞ் சரிதேன். நன்றி அப்துல்

@ செய்யது

அப்பிடீன்ற? சரி அதையும் விட்டு வைப்பானேன் :)

நன்றி செய்யது.

@ தராசு

வாங்க தல. இப்ப எந்த ஊரில்? நன்றி.

@ முபாரக்

வாங்க முபாரக். ஐம்பது லட்சம் சரிதான். ஆனா, ஆட்டோ ஓட்டுனர் அஞ்சு தான் சொன்னார் :)

நம்ப மாட்டீங்க; இந்த பத்தில 'சிநேகபூர்வமாக' என்று எழுதியபோது உங்கள் நினைவு வந்தது.

நன்றி முபாரக்.

@ நேசமித்திரன்

நன்றி நேசன். உங்கள விடவா?

@ கார்த்திக்

நெக்ஸ்ட் டைம் நிச்சயம் மீட் பண்ணுவோம் கார்த்திக்.
நன்றி கார்த்திக்

@ கார்க்கி

ஆதி - எ.வாதி? உனக்கு வர வர ஆதிய வெச்சு ....
எம் பக்கத்துல யாரு நின்னாலும்...ஓஹோ, தொற்றிக் கொள்ளும் இளமையா? தேங்க்ஸ் பா.
உரையாடலா-கவிதையா? அவங்கதான்யா கொளப்பவாதிகள்.
ஸெல்ப் டேமேஜ்? செய்யுற வேலைக்கு சம்பளம் தரணுமான்னு ரெண்டு மாசமா நிறுத்தி வெச்சுட்டாங்க. இதுல நீ வேற
என்னது என்னது? நா கண்டுக்கலிய...உனக்கு இருக்கு பாரு கொழுப்பு.

@ அனுஜன்யா

anujanya said...

@ கேபிள்

உங்களுக்கு பரணி பதில் சொல்லியிருக்காரு :)

அய்யயோ, இன்னொரு கவிதையா? இல்ல இல்ல சீக்கிரம் பார்த்துடறேன்.

நன்றி சங்கர்

@ அமித்து.அம்மா

இப்படி நான் கதை எழுதும் முன்னாடியே.... ஏம்பா செய்யது. இவங்கள என்ன செய்யலாம்?

நன்றி AA

@ கமலேஷ்

நன்றி கமலேஷ்

@ யாத்ரா

அப்பிடீங்கற? ஓகே மாப்ள. நன்றி

@ தமிழ்ப்பறவை

என்னது செலவெல்லாம்.. ஹலோ, மும்பை பில்லியனர்னு அம்பானி, டாட்டா பத்தி சொன்னேம்பா.

ஜ்யோவ் - கிரிஸ் வாடை - ஏன்யா ஞாபகப் படுத்துறீங்க. இன்னமும் வலிக்குது.

கேபிளுக்கு பதில் சூப்பர்.

நன்றி பரணி

@ நர்சிம்

யோவ், சொன்னாலும் தப்பு. சொல்லாங்காட்டி விட்டுட்டேன்ற. என்னவோ போ.
அடிக்கு அடி. :)))

நன்றி நர்சிம்

@ ராஜாராம்

அன்புக்கு ரொம்ப நன்றி ராஜா. எனக்கும் அப்படிதான்.

@ உழவன்

அடுத்த முறை பார்த்துடலாம் பாஸ். உங்க இடத்திற்கு வந்திருந்தேன். நல்லா எழுதுறீங்க பாஸ்.

@ அன்புடன் மணி

ஹா ஹா ஹா. தேங்க்ஸ் மணி.

@ அனானி

நீங்க நல்லவரு தானே? அவ்வளவு மோசமாவா இருக்கு கவிதைகள்?
நன்றி பாஸ். பேரச் சொன்னா என்னவாம்?

அனுஜன்யா

Vaa.Manikandan said...

அனு,

தங்களின் சுய எள்ளலும் அங்கதமும் பல இடங்களில் சிறப்பானவை. ஆனால் கவிதை, இலக்கியம் போன்ற இடங்களில் உங்களை நீங்களே அதிகம் தாழ்த்திக் கொள்வதாகப் படுகிறது. கவிதை எழுதிவிட்டு கவிதை என்ற லேபிள் போட வேண்டிய அவசியத்தில் உங்கள் எழுத்து இல்லை. தீவிரமாக எழுத முயற்சிக்கும் பட்சத்தில் தமிழ்க்கவிதையில் உங்களுக்கென ஒரு இடத்தை நிச்சயம் உருவாக்க முடியும்.

நீங்கள் உங்களை போலி,டம்மி,நானும் கவிஞன் என்று நிரூபிக்க முயற்சிக்கிறேன் என்று எள்ளுவதும் அதை இன்னும் சிலர் திரும்பச் சொல்லி சிரிப்பதும் எனக்கு உவப்பானதாக இல்லை.

இது நான் நீண்ட நாட்களாக சொல்ல நினைத்திருந்த விஷயம்.

இதை பொதுவிடத்தில் பிரசுரிக்க வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் இந்த பின்னூட்டத்தை நீக்கிவிடலாம். நட்பின் அடிப்படையில் நான் சொன்னதை பரிசீலிக்கவும்.

anujanya said...

@ வா.மணிகண்டன்

மணி, நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். நான் கவிதை எழுதாத மற்ற நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதற்காக சீரியஸ் ஆசாமி போல் இல்லாமல் சுய எள்ளல், கலாய்ப்பு என்று இருக்கிறேன். கவிதையில் நாட்டம் குறைவாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஓரளவு சமரசம் தேவை என்று நினைத்தேன்.

கார்க்கி, தாமிரா போன்ற நண்பர்கள் என்னை அதிகம் பகடி செய்தாலும் அவர்களுக்கு என் கவிதைகள் மேல் மரியாதை உண்டு. சும்மா உறுமாமல், நட்புடன் வளைய வரும் சிங்கத்துடன் சீண்டி விளையாட ஆசை இருக்குமே - அது போலவே இதுவும். மேலும் கவிஞ்ர்களுக்கு என் கவிதைகள் பிடிக்காமல், எள்ளல் துவங்கினால் வருத்தப் படுவேன். உங்கள் குழந்தையின் குத்துக்கும், எதிரியின் குத்துக்கும் வித்தியாசம் இருப்பது போல.

தவிர, உங்கள் கவிதைகள் மேல் உஙகளுக்கிருக்கும் நியாயமான மதிப்பு, என் கவிதைகள் மேல் எனக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இவ்வளவு சால்ஜாப்பு சொன்னாலும் நீங்கள் சொல்ல வருவதை புரிந்து கொண்டேன். ஆவன செய்ய முயல்கிறேன்.

என்னிடம் ‘ரங்க ராட்டினம்’ முதல் காட்டி வரும் அன்புக்கும், ஊக்கத்துக்கும் எப்படி ஈடு செய்ய முடியும்.

அனுஜன்யா