Sunday, November 15, 2009

நம்ம ஊரு சிங்காரம் சிங்கப்பூரு போனானாம்





சென்ற வாரம் திடீரென்று ஆபீஸில் சிங்கப்பூர் சென்று (ஒழுங்காக வேலையை முடித்தால் மட்டும் திரும்பி) வா என்றார்கள். முன்பே சில முறை சென்றிருக்கிறேன் என்றாலும் எனக்கு அயல் நாட்டுப் பயணம் என்றாலே அடிவயிறு ஆட்டம் காணும். அதுவும் தனியாகப் போகணும்னா...ஆள விடுங்க பாஸ் என்று கெஞ்சுவேன். நம்ம இஷ்டப் படியா எல்லாம் நடக்கும். அதுவும் ஆபீஸில்? கிங் ஃபிஷர் விமானத்தில் இரவுப் பயணம். சீட் பெல்ட் எல்லாம் இறுகக் கட்டிக்கொண்டு, ரன்வேயில் ஓஓஓடி விமானம் வானம் ஏறி 'சீட் பெல்ட் சைன் ஃஆப்' வரும்வரை வயிற்றில் இருந்த பயப்பந்து மதபேதம் பாராமல் எல்லாக் கடவுள்களையும் உதட்டில் வரவழைத்தது. பெரியார் பேரைக்கூட சொன்னேன் என்றால் பாருங்களேன். என்னது? இல்லை இல்லை நித்யானந்தரைக் கூப்பிடவில்லை.





உடனே திரையில் விஜய் மல்யா தோன்றி 'உணவு என் ஆசை; குடி என் தொழில்; என்ஜாய் மாடி' என்று மந்தகாசப் புன்னகையுடன் சொன்னார். சிவப்பு ஆடையில் மிதந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகள் வெல்கம் ட்ரின்க் என்று ஒரு ட்ராலியில் மிக அழகான சீசாக்களில் பல்வேறு வண்ணங்களில், அடர்த்தியில் திரவங்களைக் கொண்டு வந்தார்கள். நான் வெறும் ஆரஞ்சுப் பழச்சாறு மட்டுமே கேட்டு வாங்கிப் பருகினேன் என்று எழுதுவதற்கு மூன்று காரணங்கள்:



1.விமானம் இறங்கி இரண்டு மணிநேரத்தில் ஒரு பவர் பாயிண்ட் சமாசாரம் செய்ய வேண்டிய கட்டாயம்.


2. என் கவிதைகள் தவிர்த்து பொதுவாக என் மற்ற இடுகைகளை என் மனைவி படிப்பாள்


3. சில நேரங்களில் நான் அப்பட்டமான உண்மையும் பேசுவேன். (கொஞ்சம் யோசித்தால் நீங்கள் 'உண்மையும்' என்பதற்குப் பதிலாக 'பொய்யும்' என்றும் மாற்றிக்கொள்ளலாம்.)



உணவு உண்டபடி திரையில் டில்லி 6 பார்த்தேன். எனக்கு அபிஷேக் பச்சன் பிடிக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ளாத பேர்வழி. இரண்டு ஐகான்களை சமாளிக்கும் மனுஷன். அனில் கபூரின் பெண் சோனல் கபூர் (இப்போது புரிகிறது சுரேஷ் கண்ணன்) டிவைன். படம் ஓகே. மசக்கலி பாட்டை மட்டும் மூன்று-நான்கு முறை ஓட விட்டேன். அப்புறம் தூங்கி விட்டேன்.




இம்மிக்ரேஷனில் சாக்லேட் கொடுத்தாலும் அழகான சீனக் கண்களில் நிறைய சந்தேகம் இருக்கிறது. நாம என்னதான் அஜித் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டாலும் தானாகவே இயல்பு நிலையில் வையாபுரி போல மாறிவிடுகிறது. ஏர்போர்ட் லாபி அவ்வளவு நேர்த்தி. சுத்தம். வெளியே டாக்ஸி (ஆஹா, இங்க ஹோண்டா அக்கார்ட் எல்லாம் டாக்சியா !) ஏறி போகவேண்டிய ஹோட்டல் (Ascott) பெயர் சொன்னேன். அப்படி ஒரு இடமே இல்லை என்றார். பிறகு முன்பதிவு பேப்பரை காண்பித்தேன். "ஓ, இதுவா!" என்று சொல்லி ஒரு சிறிய பாடலைப் பாடினார். பிறகு புரிந்தது - அவர் ஹோட்டல் பெயரைச் சொன்னார் என்று. டிராபிக் இன்று அதிகம் என்று காலியாக இருந்த சாலையைப் பார்த்து அலுத்துக் கொண்டார். இதே எட்டரை மணிக்கு இவரை இப்படியே தூக்கிக்கொண்டு போய் மும்பை அந்தேரி-சாண்டாக்ருஸ் ஹைவேயில் இறக்கி விட்டால் என்ன செய்வார் என்று யோசித்தேன்.



ஹோட்டல் இருக்கும் இடம் Central Business District என்று சொல்லப்படும் வணிக வளாகங்கள் இருக்கும் பகுதி என்று நினைக்கிறேன். Raffles Place. கேள்வி கேட்காமல் ஐம்பது-அறுபது மாடி கட்டிவிடுகிறார்கள். நான் தங்கிய ஹோட்டல் பாவம் குடிசை. வெறும் பத்து மாடி என்று நினைக்கிறேன். அந்தக் காலத்து ஹோட்டல். உள்ளே எல்லாம் சௌகரியமாக இருக்கிறது. தூக்கம் தூக்கமாக வந்தது. நிசமாலுமே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் மணி பத்து. பத்தரைக்கு பவர் பாயிண்ட். இப்போது அவ்வை ஷண்முகி கமலை கொஞ்சம் ஞாபகத்துக்கு கொண்டு வரவும். அத்தனை வேகத்தில், சரியாக இருபத்தைந்து நிமிடங்களில் ஹோட்டல் லாபியில் வந்து என் ஆபிஸ் இருக்குமிடத்தைச் சொல்லி, எப்படிப் போகவேண்டுமென்று கேட்டால், சற்று குனிந்து, கண்ணாடி வழியே எதிர்ப்பக்கம் காண்பித்தாள்.



அட, இதுதானா என்று பார்த்தால், கழுத்து வலித்தது. உள்ளே செல்ல ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகள். லிப்ட் ஒரு டீக்கடை அளவு இருக்கிறது. நிறைய சீன, கொஞ்சம் ஆங்கில ஆசாமிகளுடன் நானும் சென்றேன். ஆபீஸில் முதல் நாள் என்பதால், சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு மட்டும் இட்டுவிட்டு மாலை போடுவது எல்லாம் நாளை என்றார்கள். நாளை மறுநாள் அறுவா வரும் என்று புரிந்தது. எல்லோரும் படு ரிலக்ஸ்டா இருக்கிறார்கள். மறக்காமல் பன்னிரண்டரை மணிக்குப் பசியுடன் கீழே பாய்கிறார்கள். சிங்கப்பூர் வானம் மதியம் பசி எடுக்கும் போது மூச்சா போகிறது. மழைப் பருவம் என்றெல்லாம் கிடையாதாம். தினமும் மழை பெய்யக்கூடும் சாத்தியக்கூறுகள் (ஏதோ கவிதையின் முதல் வரி மாதிரி இல்ல?) 365 நாட்களும் உண்டு என்று பெருமையுடன் சலித்துக் கொள்கிறார்கள். நிறைய கட்டடங்கள் எழுகின்றன. துறைமுகம் சுறுசுறுப்பாக இயங்குவது கண்ணாடி வழியே தெரிந்தது. ஒரு மூன்று கோபுர கட்டிடத்தின் கீழ் தளத்தில் பெரிய காசினோ வருவதாகச் சொன்னார்கள். சிங்கை பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைவது தெரிகிறது.



ஆறு மணிக்கு ஆபிஸ் அமானுஷ்யம். என் வரவை முன்னிட்டு ஒரு ஏழெட்டு பேர் சாலை ஓர pub இல் பியர் அருந்தினார்கள்/அருந்தினோம். அட விடுங்கப்பா. பியர் அருந்தப்பட்டது. வெகு சிலரைத் தவிர, நிறைய பேர் MRT என்னும் மெட்ரோ ரயிலில் பெரிய வீடோ சின்ன வீடோ போய்ச் சேருகிறார்கள். காலையில் ஒன்றும் சாப்பிடாமல், மதியம் சாண்ட்விச் சாப்பிட்டு ஒப்பேத்தி விட்டாலும், வயிறு 'செல்லாது. செல்லாது. இட்லி, தோசை அல்லது ஒரு ரவுண்டு கட்டி சாப்பாடு தேவை' என்றது. நல்ல வேளையாக மும்பையிலிருந்து இங்கு வந்திருக்கும் ஆபிஸ் நண்பர் அருகில் தான் சாராவானா பாவான் (அப்படித்தான் சொன்னார்) இருக்கிறது என்று வழி காண்பித்து எஸ்கேப் ஆனார். மடிக்கணினியை ஹோட்டல் பெட்டில் தூர வீசி, டி-ஷர்ட் போட்டு யூத்தாகி, சா.பா. நோக்கிப் படையெடுத்தேன்.



சரவண பவனைக் கண்டுபிடிக்கச் சிரமப்படவில்லை. எல்லாம் இருந்தது. வட இந்திய உணவும். நம்ம ஊர் ஃபுல் மீல்ஸ் ஒரு பிடி பிடித்ததும் தான் மீண்டும் தமிழனான உணர்வு வந்தது. மென்பொருள் ஆண்களும், அவர்களை ஆட்டுவிக்கும் பெண்களுமாய் களையாக இருந்தது. வெளியே வந்தவுடன் மழை. கொஞ்ச நேரம் ஜாலியாக நனைந்தேன். இதற்கு முன் வேண்டுமென்றே மழையில் எப்போது நனைந்தேன் என்று யோசித்தேன். பழைய காதலிகளும் சென்னை, பெங்களூர்த் தெருக்களும் நினைவில் வந்தார்கள். மழை எல்லா ஊரையும் அழகாக மாற்றி விடுகிறது. சிங்கையும், பெங்களூரும் (தொண்ணூறுகளில்) அது இல்லாமலும் அழகு என்றாலும். பசித்துப் புசித்தபின், மெல்லிய மழையில் மொபைல் போனில் 'ஹசிலி ஃபிஸிலி ரசமணி' கேட்டுக்கொண்டே நனைந்தது புத்துணர்வூட்டிய அனுபவம்.



சிங்கையில் வேலை பார்க்கும் பல பெண்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பழச்சாறுகள் என்று சகட்டு மேனிக்கு வாங்கித் தள்ளுகிறார்கள். துரியன் ரொம்ப ஃபேமஸ் என்றாலும் யாரும் வாங்கவில்லை. கொரியா நாட்டுப் பழ வகைகள் வித்தியாசமாக, வசீகரமாக இருந்தாலும் வாங்கும் தைரியம் வரவில்லை. டிராகன் பழம் என்று ஒன்று சிகப்புக் கலரில் மிரட்டியது. பப்பாளிப் பழம் ஒரு ப்ளேட் (வெட்டி வைக்கப்பட்டது) சிங்கை டாலர் மூன்று என்றார்கள். நம்ம சிக்கன புத்தி வேகமாக இந்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் என்று கணக்குப்போட்டு, கடையை விட்டு ஓட்டம் விட்டேன்.



மூன்றாம் நாள் அரைநாளில் "பரவாயில்லை. இந்த முறை தப்பித்து விட்டாய். என்ஜாய்" என்று அனுப்பி விட்டார்கள். சிங்கையில் வேலை பார்க்கும் என்னுடைய கசின், எதேச்சையாக பிசினஸ் நிமித்தம் சிங்கை வந்த என் சகோதரி கணவர் என்று ஒன்று கூடி கசின் வீட்டுக்குச் சென்றோம். அருகில் இருந்த மாலில் மாலையைச் செலவழித்தேன். சிங்கையின் சுத்தம், நேர்த்தி, சிரித்த முக மக்கள் எல்லாம் நம்பமுடியாமல், ஏறக்குறைய அலுக்கும் அளவு இருக்கிறது. ‘மணமான அன்று இரவே ஹோட்டல் உயரத்தில் இருந்து குதித்து மாண்ட கணவன்’, பக்கத்துக்கு இந்தோனேஷியாவில் நடந்த ‘கணவனைக் கொன்ற கள்ளக்காதலனுக்கு எதிராக சாட்சி சொன்ன மனைவி/காதலி’ என்ற தலைப்புச் செய்திகள் மட்டும் இந்தியாவை நினைவுறுத்தின.



அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) திரும்ப கிங் ஃபிஷர் பிடித்து மும்பை.



கிளம்பியதில் இருந்து திரும்ப வரும்வரை உறுத்திய விஷயங்கள்:



கோவி கண்ணன், மஹேஷ், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, குழலி, அகரம் அமுதா, இராம்/Raam போன்ற நண்பர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டும், சற்றும் ஒத்து வராத பயண/அலுவல் சூழ்நிலை.



வார இறுதியாக இருந்தால் இவர்களுடன் மற்ற சிங்கை பதிவர் நண்பர்களையும் சந்தித்து இருக்கலாம். செந்தில்நாதனை இவர்களுடன் சென்று பார்க்கவேண்டும் என்று கூட கூடுதல் ஆசை இருந்தது. (எனக்குத் தெரிந்த பதிவர்கள் பெயர்கள் இவை. இன்னும் பலர் இருக்கலாம்.)



மாதங்கி என்னும் கவிதாயினி (என் ஆரம்ப கவிதைகளைப் படித்து ஊக்கமூட்டியவர்) கூட சிங்கை என்றுதான் நினைக்கிறேன். அட் லீஸ்ட் தொலைபேசியில் பேசியிருக்கலாம்.



நண்பர்களே, உள்ளுக்குள் உங்களுக்கு நிம்மதியாக இருந்தாலும், வெளியில் என்னை மன்னித்து விடுங்கள்.



47 comments:

மங்களூர் சிவா said...

/
நண்பர்களே, உள்ளுக்குள் உங்களுக்கு நிம்மதியாக இருந்தாலும், வெளியில் என்னை மன்னித்து விடுங்கள்.
/

ஹா ஹா
செம பஞ்ச்
:))))

அத்திரி said...

.//டி-ஷர்ட் போட்டு யூத்தாகி//

...:)))))))))))))

vinthaimanithan said...

மீ த ஃபர்ஸ்ட்!
//நம்ம இஷ்டப் படியா எல்லாம் நடக்கும். அதுவும் ஆபீஸில்?//
வீட்டில் மட்டும்?!
//என்னது? இல்லை இல்லை நித்யானந்தரைக் கூப்பிடவில்லை.//
சிரிச்சி சிரிச்சி வயிறு ப்ண்ணா பூடிச்சிப்பா
//வயிறு 'செல்லாது. செல்லாது. இட்லி, தோசை அல்லது ஒரு ரவுண்டு கட்டி சாப்பாடு தேவை' என்றது.//
சின்னச்சின்ன வார்த்தைகளில் மேஜிக் செய்றீங்கப்பா
ஒரு பயணப்பதிவை இவ்ளொ சுவாரஸ்யமாவும் எழுதலாமா?
ம்ம்ம். நான்லாம் பச்சப்புள்ளனு தெரியுது.
இப்போதான் புதுசா ப்ளாக் ஆரம்பிசிருக்கேன். கொஞ்சம் எட்டி பாருங்க தல.

இராம்/Raam said...

ஆகா.. இங்க வந்திருந்தீங்களா??? :( அடுத்த முறை சொல்லிட்டு வாங்க, கிடா வெட்டிறலாம்... :)

நட்புடன் ஜமால் said...

அண்ணே என்னை ஞாபகம் இருக்கா

நானும் சிங்கையில் தான் ...

பித்தன் said...

so njoyed very much.....?

Sridhar V said...

மனைவி பதிவெல்லாம் படிக்கிறாங்கன்னு சொன்னீங்களே //பழைய காதலிகள்// இவங்களும் படிப்பாங்களா?

ரொம்பவே ரொமான்சு விடறீங்களே அங்கிள் :)

Anonymous said...

:)
கு.கு

thamizhparavai said...

விமானப்பயணம் போல் வேகமான கட்டுரை..
ரசித்துப் படித்தேன்....

(ஹலோ தலை..போன ‘உரையாடல்’ போட்டிக்கு எழுதுன கதையைத்தான் வந்து படிக்கலை. இப்ப சர்வேசனுக்காக ஒரு கதை எழுதி சுடச்சுடப் போட்டிருக்கேன். வாங்க.. படிக்கலாம்.
பிடிச்சிருந்தா சொல்லுங்க.. பிடிக்காட்டியும் சொல்லுங்க...)

பி.கு: கிங் ஃபிஷர் விமானப் பணிப்பெண்கள் பற்றிய கவிதை எதிர்பார்க்கிறேன் அவர்கள் படங்களோடு...

வேதாளன் said...

:D

அப்பாவி முரு said...

அவ்வ்வ்வ்வ்
நான் உங்க இடுகைகளை சரமாரியாக படித்தாலும், பின்னூட்டம் கூட போட்டதில்லை. ஆனா என்னையையும் சந்திக்க திட்டம் "மட்டும்" இட்டீர்களா?

எங்க ராம் சொன்ன மாதிரிதான் அடுத்த முறை வரும் பொது சொல்லுங்க கிடாய் வெட்டிடலாம் அங்கிள்(அங்கிள் உபயம் ஆ. மு.கி)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Mahesh said...

இதெல்லாம் ரொம்ப அநியாயம்.... எங்க ஆபீசுக்கு எதிர்க்கவே தங்கி, எங்க டவர்ல இருக்கற உங்க ஆபீசுக்கு போய் மாலை மரியாதை எல்லாம் பண்ணிக்கிட்டு.... சாராவானா பாவன்ல மூக்கைப் பிடிச்சுட்டு.... அப்பறம் டைம் கிடைக்கல... மன்னிச்சுடுங்கப்பா அப்பிடிம்பாராம்.... நாங்க மன்னிச்சுடணுமாம்....

இந்த யூத்துக தொல்லை தாங்கலைப்பா !!!

(ம்ம்ம்... நானே நேத்து சாயங்காலம்தான் ஜெனிவால இருந்து ரிட்டர்ன்... ஹி ஹி ஹி.....)

வெண்பூ said...

நல்ல பயணக்கட்டுரை, புன்னகையுடனேயே கடைசி வரிவரை படித்தேன்.. ஆங்காங்கே உங்களை யூத்தாக காட்டிக்கொள்ளும் முயற்சிகளும் முனைப்புகளும் தெரிகிறது. :)

//
2. என் கவிதைகள் தவிர்த்து பொதுவாக என் மற்ற இடுகைகளை என் மனைவி படிப்பாள்
//
அவங்களும் எங்க சங்கத்து உறுப்பினரா?? ஹி..ஹி.. "அனுஜன்யா கவிதையால் காண்டாவோர் சங்கம்"னு கார்க்கி ஆரம்பிச்சிருக்காரு, நானெல்லாம் ஆய்கால ச்சீ ஆயுட்கால உறுப்பினருக்கு விண்ணப்பிச்சிருக்கேன்.. ஹி..ஹி..

கணேஷ் said...

Cool!

பா.ராஜாராம் said...

:-))))))))))))
அனு,ஐ லவ் யு!
(பின்னூட்டம் படிக்க மாட்டாங்கல்ல வீட்ல?)

Ashok D said...

கொஞ்சம் லெந்தாகயிருந்த்தாலும்(@#!%) சுவையாக(சுமாராக) இருந்தது.

கோவி.கண்ணன் said...

//கோவி கண்ணன், மஹேஷ், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, குழலி, அகரம் அமுதா, இராம்/Raam போன்ற நண்பர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டும், சற்றும் ஒத்து வராத பயண/அலுவல் சூழ்நிலை. //

என்ன கொடுமைங்க..... தெரிந்திருந்தால் செல்லும் போதாவது வழியனுப்ப விமான நிலையம் வந்திருப்பேன். பேருந்தில் என் வீட்டில் இருந்து 25 நிமிட தொலைவுதான்

:(

கன்டனம் !

Jawahar said...

படு சுவாரஸ்யம். படிக்கிறவர்களை கடைசி வரி வரை பிடித்து வைக்கிற எழுத்துக்கள். வாழ்த்துக்கள் மற்றும் பொறாமைகள்.

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

த்ரீ டேய்ஸ் இருந்து ஒண்டேய் கூடப் மீட் பண்ண முடியாத ரேண்ஜுக்கு பிஸிங்கிறத நாஙக் பிலீவ் பண்ணுறோம் அங்கிள்.

விஜய் ஆனந்த் said...

ஹூம்ம்ம்...

சரவணபவன் பக்கத்து பில்டிங் மாடியிலதான் நான் உக்காந்திருக்கேன் யூத் அங்கிள்..

தராசு said...

ஒரு T shirt தான் உங்களை யூத் என்று தீர்மானிக்கிறதா????

ம்ஹூம், I don't think so.

கார்க்கிபவா said...

// "அனுஜன்யா கவிதையால் காண்டாவோர் சங்கம்"னு கார்க்கி ஆரம்பிச்சிருக்காரு//

அவங்க அனுஜன்யாவால் காண்டாவோர் சங்கம்ன்னு பேர் மாத்த சொலறாங்க வெண்பூ..

தல, அந்த சிங்கை ஏர்போர்ட் எம்.ஆர்.டி போனீங்களா? 2001ல் ஆறு மாத பயிற்சிக்கு சிங்கைக்கு முதலில் சென்ற போது அங்கேதான் உழைச்சு தேய்ஞ்சேன்.. ஒவ்வொரு முறை அங்கே போகும்போது இந்த அட்டகாசமான இடத்தில் என் பங்கும் உண்டென்ற பெருமை வரும்..

Veliyoorkaran said...

மொதலாளி பின்னிடீங்க...மறுக்கா இங்க வந்தீகன்னா சாலையோர "பப்"கள்ள,நம்ம ரெண்டு பேர் டேபிள்ல இருக்க பீர்கள் அருமையாக அருந்தப்படும்..(நாங்களும் வேலாடுவோம்ள வார்த்தைகள்ல..)...சூப்பர் வாத்யாரே...நச்சுன்னு இருக்கு...(amam,kingfisherla sarakku epdinga irukku...Air india sema mokkaya irukunga...)

Unknown said...

வெகு சுவாரஸ்யம் அண்ணா.. :))

கமெண்டுக்கெல்லாம் பதில் சொல்லலாம்... நாந்தான் வந்துட்டேனே? ;))))

நர்சிம் said...

மிக அற்புதமான மொழி நடை.மிக ரசித்தேன்.

//சிங்கையில் வேலை பார்க்கும் பல பெண்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், //

இரண்டாவது ,(கால்புள்ளிக்கு)வுக்கு பதில் முற்றுப்புள்ளி வந்திருக்க வேண்டும்.வந்திருக்கும்.வீட்டில் படிப்பதால் அப்பிடியே கால் புள்ளி போட்டு இழுத்திருக்கிறீர்கள்..செய்ங்க.

பித்தனின் வாக்கு said...

பதிவு மிக அருமையாக உள்ளது, ஆனால் சிங்கை வந்து விட்டு எங்களை சந்திக்காமல் சென்றது வருத்தம் தான். மறுமுறை வந்தால் தெரியப் படுத்தவும். நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்படியே வழுக்கிக் கொண்டோடும் நடை!

☼ வெயிலான் said...

சே! நானும் பயணப்பதிவுகள் எழுதுறேன். இது மாதிரி எழுத் முடியறதில்லியே....

அமிர்தவர்ஷினி அம்மா said...

2. என் கவிதைகள் தவிர்த்து பொதுவாக என் மற்ற இடுகைகளை என் மனைவி படிப்பாள் //

ஏன் என்று இப்போது புரிந்தது.

வழமை போல மண்டையைப் பிராண்டிக்கொள்ளாமல், நகைச்சுவை இழையோட படிக்க படு சுவாரஸ்யமாக இருந்தது இந்த இடுகை.

மாதங்கி said...

அனுஜன்யா, சிங்கப்பூரில்தான்
இருக்கிறேன்,
அடுத்த முறை வரும்போது சொல்லவும்

நேசமித்ரன் said...

கலக்குரீஙக தலைவரே

ஒரு பயணக் கட்டுரைக்கு முழுமையை கொடுக்கும்
பென்ச் மார்க் நடை


அருமை

யாத்ரா said...

நானும் உங்க கூட சிங்கப்பூர் வந்த மாதிரி இருந்தது, இதை வாசித்தது. புன்னகைத்துக் கொண்டே படித்தேன்.

வினோத் கெளதம் said...

அருமையான மொழி நடை தல..சுவாரஸ்யமாக இருந்தது..

ஜோதிஜி said...

வரைபடம் இல்லை. தெருபெயர் இடப்பெயர் ஏன் வலப்பெயர் ஏதும்இல்லை. ஆனால் இது போன்ற ஒரு வார்த்தைகள் (ஜாலங்கள்) இதற்கு முன் தொடக்க கால சுஜாதா தவிர இன்று வரை இத்தனை ஆளுமை பார்த்ததாக நிணைவில் இல்லை.

சிங்கப்பூர் தங்கப்பூர் உங்கள் எழுத்துக்களைப் போலவே.

"உழவன்" "Uzhavan" said...

//பெரிய வீடோ சின்ன வீடோ போய்ச் சேருகிறார்கள்//
 
அப்படியே போகிற போக்குல, கிச்சு கிச்சு மூட்டுறீங்களே :-)

Sanjai Gandhi said...

ஏகப் பட்ட பொருட்பிழைகள்.. :))

.. அய்யா சாமி.. உண்மைத் தமிழன் ஒருவர் போதும்.. இன்னொருவர் வேணாம்.. மூச்சு முட்டுது மாமா.. :)

Bee'morgan said...

ெராம்பவும் சுவாரஸ்யம்.. கொஞ்சமும் சலிப்புத்தட்டாத மாதிரி நடை.. :)

anujanya said...

@ சிவா

நன்றி சிவா

@ அத்திரி

:))). நன்றி அத்திரி

@ விந்தைமனிதன்

உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் தளத்திற்கு வந்தேன். கவிதைகள் நல்லா இருக்கு. நிறைய வாசியுங்கள். நிறைய எழுதவும் செய்யுங்கள். வாழ்த்துகள் ராஜாராமன்.

@ இராம்

நிச்சயமா இராம். இப்ப உடல்நலம் பரவாயில்லையா? நன்றி இராம்.

@ ஜமால்

ச்சே, எப்படி மறந்தேன் உங்கள. ரொம்ப சாரி தல. நன்றி

@ பித்தன்

not really. not a nice feeling to be alone in a foreign land. but not complaining though. thx.

@ ஸ்ரீதர்

பழைய காதலிகளில் ஒருத்தி மனைவி. மற்றவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. I mean தமிழில் :).

36 நடுவயது ஆசாமிகளுக்கு எல்லாம் நான் அங்கிளா? என்னக் கொடும இது ... :)))

நன்றி ஸ்ரீதர்.

@ அனானி

கு.கு. ? குரும்பூர் குப்புசாமி? குசும்பு-குறும்பு? சிரிப்பான் இருப்பதால் திட்டவில்லை என்று கொள்கிறேன். நன்றி பாஸ்.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி. வந்தாச்சு. படிச்சாச்சு. நல்லா இருக்குன்னு சொல்லியாச்சு. ஆல் த பெஸ்ட்.

//பி.கு: கிங் ஃபிஷர் விமானப் பணிப்பெண்கள் பற்றிய கவிதை எதிர்பார்க்கிறேன் அவர்கள் படங்களோடு...//

இந்த யூத்தாக இருப்பதில் எத்தனை விதமான சோதனைகள்? வேண்டுகோள்கள்? ஹ்ம்ம்.

@ சாம்ராஜ் பிரியன்

நன்றி

@ அப்பாவி முரு

இப்பவாவது பின்னூட்டம் போட்டியே :)

அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம். அங்கிளா? உன்னைச் சொல்லி குற்றமில்லை. எல்லாம் அந்த ஆ.மூ.கி. அங்கிளால் வந்த வினை.

நன்றி பாஸ்

@ T.V.Radhakrishnan

நன்றி TVR.

@ மஹேஷ்

இவரே ஊரில் இல்லை. அதுக்கு இவ்வளவு சவுண்டா? சரி சரி ஒழுங்க மும்பை வந்து சேர். நன்றி மஹேஷ்.

@ வெண்பூ

சங்கம் - அதுவும் கார்க்கியோட சேர்ந்து. உருப்படும் வழியைப் பாருங்கையா.

நன்றி வெண்பூ.

@ கணேஷ்

Thanks

@ ராஜாராம்

I too raja. நன்றி ராஜா.

@ அசோக்

ஹ்ம்ம். சரிதான். நன்றி அசோக்

@ கோவி.கண்ணன்

சந்தித்து இருக்கலாம். பேசியிருக்கலாம். சொல்லியிருக்கலாம். நிறைய 'லாம்'கள். ஆனால் எல்'லாம்' நொண்டிச் சாக்குகள். மன்னிச்சுருங்க கோவி. அடுத்த முறை கட்டாயம்.

@ ஜவஹர்

நன்றி பாஸ். உங்கள் முதல் வருகை? உங்கள் இடுகைகள் நிறைய தமிழ்மண முகப்பில் பார்க்கிறேன். எச்சரிக்கை: ஒரு நாள் அங்க வருவேன்.

@ வேலன்

அவங்களா சமாதானம் ஆனாலும், போட்டுக் கொடுப்பதே தொழிலாக.... ஓகே ஓகே.

அது சரி, என்னது முதுபெரும் கிழார்கள் எல்லாம் நம்மள அங்கிள் என்பதா? இல்லை அங்கிள் என்றால் இருபத்தைந்து வயது என்று அர்த்தமா?

@ விஜய் ஆனந்த்

அடப்பாவி. தெரியாம போச்சே. அடுத்த முறை மாட்டின நீ. நன்றி விஜய்.

அனுஜன்யா

anujanya said...

@ தராசு

அப்படி சொல்லுங்க. எப்படி இருந்தாலும் யூத் யூத்தானே.

@ கார்க்கி

சங்கம் வேற துவக்கமா? நல்லா இருங்க.

ஏர்போர்ட் M.R.T. பார்த்தேன். பயணிக்கவில்லை. அங்கங்க கொஞ்சம் சுமாரா இருந்தது. உன் வேலைதானா அது?

@ வெளியூர்க்காரன்

நன்றி பாஸ். நிச்சயம் செய்வோம்.

@ ஸ்ரீமதி

//கமெண்டுக்கெல்லாம் பதில் சொல்லலாம்... நாந்தான் வந்துட்டேனே? ;))))//

உனக்கு அப்புறமும் பெரிய தலைங்க எல்லாம் வந்திருக்காங்க. நீ தான் வழக்கத்துக்கு மாறாக சீக்கிரம் வந்திருக்க :)

நன்றி ஸ்ரீ

@ நர்சிம்

//சிங்கையில் வேலை பார்க்கும் பல பெண்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், //

இரண்டாவது ,(கால்புள்ளிக்கு)வுக்கு பதில் முற்றுப்புள்ளி வந்திருக்க வேண்டும்.வந்திருக்கும்.வீட்டில் படிப்பதால் அப்பிடியே கால் புள்ளி போட்டு இழுத்திருக்கிறீர்கள்..செய்ங்க.//

யோவ், உன் குசும்புக்கு அளவே கிடையாதா? என் மனைவி இன்னமும் சிரிச்சிக்கிட்டே இருக்கா.
நன்றி பாஸ்.

@ பித்தனின் வாக்கு

oh , நீங்களும் சிங்கையா தல. அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம். நன்றி.

@ ஜ்யோவ்

நன்றி ஜ்யோவ்

@ வெயிலான்

யோவ், அடர் கானக பயணக் குறிப்புகள் எழுதிட்டு இப்படி சொன்னா? நன்றி தல.

@ அமித்து.அம்மா

//வழமை போல மண்டையைப் பிராண்டிக்கொள்ளாமல்//

ஏன் இந்த மர்டர் வெறி? 'ஸ்ரீ'யோட சேர்ந்து நீங்க கெட்டுப் போகாதீங்க :)

நன்றி AA

@ மாதங்கி

வாவ், ஒரு வழியாக இங்க வந்தீங்களா? நிச்சயம் அடுத்தமுறை சொல்கிறேன். நன்றி மாதங்கி.

@ நேசமித்திரன்

நன்றி நேசன்.

@ யாத்ரா

கவிஞர்கள் எல்லாரும் சொல்லி வெச்சுகிட்டு வரிசையா வருவீங்களா? நன்றி யாத்ரா.

@ வினோத்கௌதம்

நன்றி வினோத்.

@ ஜோதிஜி

உங்களுக்குப் பிடித்திருந்ததில் ரொம்ப மகிழ்ச்சி நண்பா. நன்றி.

@ உழவன்

அதெல்லாம் ச்சும்மா.. நன்றி தல.

@ சஞ்சய்

டேய்... சரி சரி.

நன்றி சஞ்சய்

@ Bee'morgan

வா, பாலா. ரொம்ப நாட்களுக்குப் பின் வருகை. தேங்க்ஸ் பாலா.

அனுஜன்யா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

\\நண்பர்களே, உள்ளுக்குள் உங்களுக்கு நிம்மதியாக இருந்தாலும், \\

எப்படிங்க கரெக்டா கண்டு பிடிச்சீங்க??

(சும்மா கலாய்ப்புக்கு),சிங்கை பதிவர் குழாம் ரொம்ப ஆக்டிவ்(நான் ஆக்டிவ்ஆ இல்லைன்னாலும்!) ஆன குழுங்க.சும்மா கலக்குவாங்க..

\\தல, அந்த சிங்கை ஏர்போர்ட் எம்.ஆர்.டி போனீங்களா? 2001ல் ஆறு மாத பயிற்சிக்கு சிங்கைக்கு முதலில் சென்ற போது அங்கேதான் உழைச்சு தேய்ஞ்சேன்.. ஒவ்வொரு முறை அங்கே போகும்போது இந்த அட்டகாசமான இடத்தில் என் பங்கும் உண்டென்ற பெருமை வரும்.\\

கார்க்கி,இது என்ன சூப்பர் நியூஸ்? கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்க..

Cable சங்கர் said...

அருமையான நடை தலைவரே.. அருமை.

மண்குதிரை said...

சுவாரஷ்யமான நடை.

ரொம்பவே ரசித்து வாசித்தேன்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக சுவரஸ்யமான எழுத்து நடை..!! சுஜாதா எல்லாருக்கும் குருவாகி விடுகிறார் பதிவர் உலகில்.!! :-)

CS. Mohan Kumar said...

தலைவா நல்ல நடை. ரசித்து, சிரித்து படித்தேன்

anujanya said...

@ அறிவன்

நன்றி அறிவன். தாராளமாகக் கலாய்க்கலாம் :)

@ கேபிள்

தேங்க்ஸ் பாஸ்.

@ மண்குதிரை

நன்றி நண்பா.

@ முத்துக்குமார் கோபாலகிருஷ்ணன் (அடுத்த முறை வரும்போது, மு.கோ. என்றுதான் போடுவேன். ஓகே?)

கரெக்டா புடிச்சுட்டீங்களே தலைவா? உண்மைதான். நன்றி உங்கள் முதல் வருகைக்கு.

@ மோகன் குமார்

நன்றி தல.

அனுஜன்யா

Karthik said...

லீவில் இருந்தபோதே மொபைல்ல படிச்சிட்டேன்.. கமெண்ட் போட ப்ளாக்கர் திறக்கலை.. அட்டகாசம்!! :))